உள்ளே பெரிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது , காயம் பட்ட கையில் ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவன் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் எரிமலையாகத் தகித்துக்கொண்டிருந்தான்.
அவனை நெருங்க அஞ்சி அனைவரும் தள்ளி நின்றனர், வீணாவின் மாமனார் கோபமாகப் பேசும் சத்தம் இங்கு வரை கேட்டது.
“எங்க வீட்டுக்கு வந்து என் பையன் மேல கை வெச்சிருக்கான் சும்மா விட முடியாது” என்றவரின் பேச்சுக்குப் பதிலாகச் சச்சியின் குரல் உயர்ந்து கேட்டது.
“நீங்க என்ன சும்மா விடறது , உங்க பிள்ளை பேசினத்துக்கு பல்லைப் பேத்ததோட விட்டானேன்னு சந்தோஷப்படுங்க வாய் இருக்குணுனா என்ன வேணா பேசுவானா?”.
“போன உயிர் எங்க வீட்டு பொன்னோடது உண்மை என்னனு போலீஸ் விசாரிக்கட்டும் அதுக்கு முன்னாடி வார்த்தையை விடக்கூடாதுனு உங்க மகன் கிட்ட சொல்லி வைங்க , அதோட இங்க பேச்சு வீணாவை பத்தி மட்டும்தான் என் தம்பியோட தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி பேச உங்க யாருக்கும் அதிகாரம் கிடையாது” என்றான் குரல் உயர்த்தி.
வீணாவின் தாய் ராதிகா சுமதியின் மடியில் உணர்வின்றி கிடக்க தந்தை மாதவன் மூத்த மகள் வானதியின் கையை இறுக்கமாகப் பற்றி அமர்ந்திருந்தார்.
வீணாவின் கணவன் ராகேஷை கொன்று புதைக்கும் ஆத்திரம் பாரிவேந்தனுக்கு , வீனாவிற்காக அல்ல… அவனின் உயிரானவளுக்காக….
“என்ன வார்த்தை சொல்லிவிட்டான் தன்னவளை , தன்னிடம் அவள் பேசிய வார்த்தைகளைக் கூட எண்ணிவிடலாம் அப்படிப்பட்டவளை, இன்னும் தன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்த்ததில்லை அவளைப் போய் என்ன வார்த்தை சொல்லிவிட்டான்” நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் எரிந்தது.
வீணாவின் மரண செய்தி பெரிய அதிர்ச்சியே , இரவு அவள் பேசியதிலிருந்து சில விஷயங்கள் புரிந்தது அவள் நிம்மதியாக இல்லை சந்தோஷத்தைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறாள்.
தன்னிடம் இறுதியாக அவள் கேட்ட கேள்வி அவன் செவிகளில் முழங்கிக்கொண்டிருந்தது , பாரிவேந்தன் உடனே புறப்பட அவனுடன் சம்பத்தும் சூர்யப்பிரியாவும் சென்றனர்.
நந்தா காலையிலே வந்து வேலைகளை முடித்துவிட்டு கல்லூரி சென்றுவிட்டாள்.
பாரி சென்றபோது அனைவரும் அங்குக் கூடி இருந்தனர், சச்சிதானந்தன் கூட வந்திருந்தான்.
பாரிவேந்தனின் முன்னாள் மனைவி என்பது அவளின் அடையாளம் அல்ல , இரு குடும்பமும் பல வருடங்களளாக நட்ப்பாக இருப்பவர்கள் ஆண் பிள்ளைகள் ஒரு வயதிற்கு மேல் கொஞ்சம் விலகி நின்றாலும் வானதியும் வீணாவும் சுமதிக்கும் மஹேந்திரனுக்கும் நெருக்கமானவர்களே.
இந்த இழப்பை யாராலும் ஏற்கமுடியவில்லை , என்ன காரணம் என்பது சரியாகத் தெரியவில்லை ஆனாலும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை என்று வானதி யூகித்திருந்தாள், அது இப்படி முடியும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
இவர்கள் சென்றபோது போலீஸ் முதல் கட்ட விசாரணை முடித்து நின்றிருந்தனர் , பாரிவேந்தனை பார்த்தவுடன் ராகேஷ் இன்ஸ்பெக்டரிடம் ஏதோ கூற அவர் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தார்.
“உங்ககிட்ட பேசணும்” என்றவரை பார்த்து “உள்ள போய்ப் பாத்துட்டு வந்து பேசுனா போதுமா” என்க ஒன்றும் சொல்லமுடியாமல் “சரி” என்றார் அவர்.
உள்ளே சென்றவன் பார்வையில் முதலில் விழுந்தது அவன் அண்ணி வானதி , தாயை அணைத்துக்கொண்டு வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள்.
மகேந்திரனும் மாதவனும் மருத்துவமனை சென்றிருந்தனர், யாருடனும் பேச விரும்பாதவன் மீண்டும் வெளியில் வரச் சூர்யப்பிரியா சுமதியுடன் அமர்ந்து கொண்டாள்.
வெளியில் வந்தவன் இன்ஸ்பெக்டர் அருகில் நெருங்கி “சொல்லுங்க” என்க.
“அவங்க தற்கொலைக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்கிறதா இவர் சொல்றார் அதைப் பத்தி உங்ககிட்ட பேசணும்” என்றார் அந்தக் காவலர்.
ஏதோ கூறவந்த சம்பத்தை தடுத்த பாரிவேந்தன் “நான் தான் காரணம்னு சொல்றாரா இல்ல இருக்கலாம்னு சொல்றாரா” என்க.
“இவன் என்ன நம்மையே குறுக்கு விசாரணை பண்றான்” என்று அவனைக் கேள்வியாகப் பார்த்தவர் “சந்தேகம் சொல்லி இருக்கார்” என்றார்.
“ஓஹ் , அந்தச் சந்தேகம் எங்களுக்கு இவர் மேலயும் வரலாமே….” என்றான் ராகேஷை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே.
சடங்குகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தது , மருமகனுக்கு கொடுக்காமல் மகளுக்குத் தானே அனைத்தையும் செய்து முடித்தார் மாதவன்.
போலீஸ் விசாரணையில் மகளுக்குக் கணவனுடன் பிரச்சனை இருந்ததாக வீனா தரப்பு கூற, வீணாவிற்கு முதல் கணவன் பாரிவேந்தனின் மீது காதல் என்றும் அவனுடன் திருமணத்திற்கு பிறகும் அவள் தொடர்பில் இருந்தாள் அதைத் தட்டிக் கேட்டதால் தங்களுக்குள் பிரச்சனை என்று விஷயத்தைத் திசை திருப்பினான் ராகேஷ்.
இரண்டு குடும்பத்திற்கும் அங்கே பிரச்சனை மூண்டது , உயிரோடு இல்லாத மகளை நடத்தைக் கெட்டவள் என்று ஒருவன் கூற அதைக் கேட்டு நிற்கும் அவலநிலையில் மனம் வலித்தது மாதவனுக்கு.
அவள் அப்படிப்பட்ட பெண் அல்லவே , ஒரு பெண்ணை ஒழுக்கம் கெட்டவள் என்றால் எந்த விசாரணையுமின்றி இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளும் , அதே விஷயம் இங்கேயும் நடந்தது.
வீணா பலமுறை பாரிவேந்தனுடன் வெளியில் சென்று வந்ததாகவும் அலைப்பேசியில் இரவெல்லாம் பேசியதாகவும் ராகேஷ் குற்றம் சாற்றினான்.
அவளின் அலைபேசி காணாமல் போய் இருந்தது , விசாரணை என்று அனைவரையும் அழைத்திருந்தனர்.
பூட்டிய அறைக்குள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாள் , அவள் இறுதியாகப் பேசிய நபர் பாரிவேந்தன் அதுவும் பதினைந்து நிமிடங்கள் பேசி இருந்தனர்.
அவர்கள் பேசியதை அவன் மேலோட்டமாகக் கூற அதை ஏற்க மறுத்தான் ராகேஷ் , இது முதல்முறை அல்ல…. அவர்கள் பேசுவது வேறு போனாக இருக்கலாம் அவனை நன்றாக விசாரிக்க வேண்டும் என்றான்.
வீணாவின் போனை தேடிக்கொண்டிருந்தனர் , அதில் மிக ஆர்வமாக இருந்தது ராகேஷ் , தனக்கு எதிராக ஏதேனும் ஆதாரம் சிக்கினால் அதை உடனே அழிக்கவேண்டுமே.
பேச்சுவார்த்தை விசாரணை என்று நடந்துகொண்டிருக்க தான் மிகவும் நல்லவன் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆர்வம் கொண்ட ராகேஷ் பாரிவேந்தனை காட்டி “இவர் பாரின் கண்ட்ரி லைப்ஸ்டைல் இங்க வாழறார்”.
“டிவோர்ஸுக்கு அப்புறமும் அவங்களுக்கு இடையில தொடர்பிருக்கு , அதோட வீட்டு வேலை செய்யற காலேஜ் பொண்ணுகூட லிவ் இன் ரிலேஷன்ல இருக்கார் , ராத்திரிக்கு அந்தப் பொண்ணு பகல்ல…” என்றவன் முடிக்கும் முன் அவன் தாடி கிழிந்து தொங்கியது.
ஒரே அடியில் அவன் சித்தம் கலங்க வைத்தவன் கோபம் குறையாமல் சுவற்றில் ஓங்கி அடிக்க வலக்கை கிழிந்து ரத்தம் தெறித்தது சம்பத் அவனை அவனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
கைக்கு மருந்தும் போடவில்லை யாருடனும் பேசவும் இல்லை காரை எடுத்துக்கொண்டு வண்டலூர் வந்துவிட்டான்.
சூர்யப்பிரியா நந்தாவிற்கு அழைத்து நடந்ததை சுருக்கமாகக் கூறி பாரிவேந்தனை சற்று கவனித்துக்கொள்ள சொன்னாள் , அவன் கோபம் அவளிடம் கொஞ்சம் அடங்கிப்போகும் என்று அவளுக்குத் தெரியும்.
விவரம் அறிந்தவுடன் அவனைத் தேடி ஓடினாள் அலக்நந்தா , வீடு திறந்தே கிடக்க லிப்ட்டில் தொடங்கி ஹால் அறை என்று அவன் நடந்த இடம் எல்லாம் ரத்த துளிகள்.
வேகமாக அறைக்குள் நுழைய அங்குச் சிகரெட்டோடு அறையில் நடந்து கொண்டிருந்தான் , அவனுக்குப் பின்னால் சென்றவள் அவனை இறுக்கமாகப் பின்னிலிருந்து அணைத்துக்கொண்டாள்.
அவள் அணைப்பில் கட்டுண்டு நின்றவன் அவளைப் பிடித்துத் தள்ளி நிறுத்தி “போ” என்க அவள் மீண்டும் அவனை நெருங்கி அணைத்தாள்.
“போ அலக் , இங்க இருந்து போ” என்றான் கர்ஜனையாக.
அவள் அப்படியே நிற்க “போடி… நான் என் கண்ட்ரோல்ல இல்ல போ” என்றான் இப்பொழுது கொஞ்சம் கோபம் குறைந்து.
மீண்டும் அவனை நெருங்கியவள் அவன் கையிலிருந்து சிகரெட்டை வாங்கி டாய்லெட்டில் போட்டுவிட்டு அவனிடம் வந்தாள் , அவனைக் கட்டிலில் அமரவைத்து பஸ்ட் எயிட் பாக்ஸ் தேடி எடுத்துக் கையைச் சுத்தம் செய்ய அசையாமல் அவளில் பார்வை பதித்து அமர்ந்திருந்தான்.
தெரிந்த வகையில் கட்டிட்டவள் “ஹாஸ்பிடல் போலாம் ப்ளீஸ்” என்க , அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தினான் “அழகி நான்….” என்றவனின் இதழில் விரல் வைத்தவள்.
“ஹாஸ்பிடல் போலாம் காயம் ரொம்ப ஆழமா இருக்கு எனக்குப் பயமா இருக்கு” என்றவள் கழுத்தில் முகம் புதைத்தவன் “ஐம் சாரி” என்றான் உளமார.
“எதுக்கு?? நீங்க எந்தத் தப்பும் செய்யல” என்றவள் அவன் தலைமுடியை மெல்ல கோதிக்கொண்டே “இந்த உறவை எல்லாராலும் புரிஞ்சுக்க முடியாது” என்றவள் விழிகள் நிறைந்து அவன் கண்ணத்தை நனைத்தது.
அவள் விழிநீர் கண்ணம் தொட கை முஷ்டி இறுகியது , அதில் ஏற்பட்ட சிறிய எரிச்சலில் அவன் “ஸ்ஸ்” என்க.
அவனிடமிருந்து உடனே விலகிக் கையை ஆராய கட்டியைத் துணியையும் மீறி ரத்தம் வடிந்தது “வாங்க போலாம்” என்றவள் கெஞ்ச , அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் எழுந்து “நான் குளிச்சுட்டுவரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான்.
ஹாலிற்கு செல்வதை பற்றி எந்தச் சிந்தனையுமின்றி அங்கேயே அமர்ந்திருந்தாள் அலக்நந்தா , சிந்தனை முழுதுமாக வீணாவின் மேல் இருந்தது “எதற்க்காக இப்படி செய்திருப்பாள் அதனால் இவருக்கு எதுவும் பிரச்சனை வருமோ” என்று மனம் அடித்துக்கொண்டது.
அவன் வந்ததை கூடக் கவனிக்காமல் குழப்பங்களில் மூழ்கி இருந்தாள் அலக்நந்தா , அவளையே பார்த்திருந்தவன் உடை மாற்றினான்.
ஷர்ட் அணிந்தால் பட்டன் இட முடியாது என்று டி ஷர்ட் எடுத்தான் ஆனால் கையை உயர்த்த முடியாமல் வலி உயிர் போனது.
உள்ளுணர்வு உந்த திரும்பிப்பார்த்தவள் வேகமாக அவன் அருகில் சென்றாள் , பேண்ட் மட்டுமே அணிந்து நிற்க அது எதுவும் அவள் கவனத்தில் இல்லை.
“இது வேண்டாம்” என்றவள் திறந்திருந்த அவன் கபோர்டிலிருந்து ஒரு ஷர்ட் எடுத்து அவனை நெருங்கி மெல்ல அணிவித்து பட்டன் இட்டுவிட.
அவள் கைகளைப் பற்றியவன் “நாளைக்கு யார் இதெல்லாம் எனக்குச் செய்வா” என்றான் அவள் விழிகளைப் பார்த்து.
“நான்……” என்றவளுக்கு வார்த்தை வர மறுத்தது விழிநீர் மீண்டும் கரையுடைக்க “ஷ்ஷ்” என்று அவள் நெற்றி முட்டி விழிமூடியவன்.
“ஐ டோன்ட் வாண்ட் டு சி டியர்ஸ் இன் யுவர் ஐஸ் , இட்ஸ் ஹர்டிங்… என்கிட்டே வந்துடு அழகி வேற ஏதும் வேண்டாம் எனக்கு , ஐ நீட் யு” என்றான் ஆழ்ந்த குரலில்.
இருவரும் தயாராகி வெளியில் வர அவர்களைக் காத்து ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான் சம்பத்.
பாரிவேந்தனை பார்த்தவன் கோபமாக முகம் திருப்பினான் பிறகு நந்தாவை பார்த்து “என்னமா ஹாஸ்பிடல் வருவாரா மாட்டாரா இந்த மகாபிரபு” என்றான் ஆத்திரத்தோடு.
“அப்படி என்னடா கோபம் , அவன் மண்டையை உடைச்சா ஒரு நியாயம் இருக்கு , உன் கையை எதுக்கு கிழிச்சுகிட்ட அதும் நான் வரதுக்குள்ள வந்துட்ட, இந்தக் கையை வெச்சுட்டு எப்படி வண்டி ஓட்டுன” என்று அவனைக் கடித்து துப்பினான்.
பாரிவேந்தனின் பார்வை நந்தாவை தழுவியது, குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள் அவள் “வீணாவின் கணவனுடன் பிரச்சனை தவறான வார்த்தைகளை ராகேஷ் கூறியதால் கோபம் கொண்டான்” என்று மட்டுமே கூறியிருந்தாள் சூர்யப்பிரியா.
மொத்தத்தில் விஷயம் தன்னைப்பற்றியது என்பதை அவள் அறியவில்லை, அதை அவளுக்குக் கூறவும் அவன் விரும்பவில்லை மீண்டும் மீண்டும் அவள் விழிகள் நிறைவதை அவனால் காண இயலாது.
மெலிதாகச் சிரித்துக்கொண்டே சம்பத்தின் அருகில் நெருங்கியவன் “வரும்போது தெரியல மச்சான் இப்போ ரொம்ப வலிக்குது கார் ஓட்ட முடியாது” என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்த சம்பத்.
“நந்தா நீ வீட்டுக்குப் போமா நாங்க போயிட்டு வரோம்” என்க கலக்கமாகச் சம்பத்தை பார்த்தவள் வேண்டுதலாகப் பாரிவேந்தனை பார்த்தாள் “என்னையும் அழைத்துச் செல்லேன்” என்று.
அவளுக்கு நேரே நீண்ட அவனின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் “போலாம்” என்று பாரிவேந்தன் கூற அவர்களைப் பின்னே விட்டு முன்னே நடந்தான் சம்பத்.
மருத்துவமனை சென்று சிகிச்சை முடிந்து கையில் கட்டுடன் வெளியில் வந்தவனை அவள் முழுதாக ஆராய “ஒன்னும் இல்லடா ஐ ஆம் ஆல் ரைட்” என்று அவளுடன் இணைந்து நடக்க, அந்தத் தளத்தின் இறுதியில் அலைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் சம்பத்.
பிரபலங்கள் அதிகமாக வந்துசெல்லும் மருத்துவமனை பாதுகாப்பும் அவர்களுக்கான ப்ரைவசியும் காக்கப்படும், அந்தத் தைரியத்தில் கொஞ்சம் இலகுவாக அவளுடன் பேசிக்கொண்டே வந்தவன் தன் மீது விழுந்த வெளிச்ச கீற்றில் திரும்பிப் பார்த்தான்.
நடப்பதை உடனே ஊகித்து நந்தாவை இழுத்து இறுக்கி அனைத்தவன் அவள் முகத்தைத் தன் மார்பில் மறைத்து “சம்பத்” என்று உரக்க கர்ஜிக்க , சம்பத்தோடு அங்குப் பணியில் இருக்கும் செக்யூரிட்டி இருவரும் ஓடி வந்தனர்.
“யார்ரா நீ” என்று சம்பத் அவன் சட்டையைப் பிடிக்க.
“நாங்க உண்மையை உலகத்துக்கு உரக்க சொல்றவங்க” என்றான் அவன்.
அவன் ஒரு சிறிய சேனலிலிருந்து வந்திருக்கிறான் என்பதை கண்டுகொண்டான் சம்பத் , “கேமராவை குடுத்துட்டு ஒழுங்கா போய்டு இங்க என்ன உண்மைய கண்டுபிடிக்க வந்த” என்ற சம்பத்தின் கேள்விக்கு.
“என்ன மிஸ்டர் பாரிவேந்தன் உங்க முதல் மனைவி தற்கொலை பண்ணிகிட்டாங்களாம் , நீங்கதான் காரணம்னு பேசிக்கிறாங்க… அதோட சொல்லப்பட்ட விஷயமும் உண்மைதான் போலயே”.
“உங்க புது காதலி தான இது , இல்ல கள்ளக்காதலியா? அபோர்ஷன் பண்ணதான கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றவன் கூற்றில் மொத்தமாகத் தளர்ந்துபோனாள் நந்தா.
அவளோடு மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தவன் அவளைத் தன்னுள் இன்னும் அழுத்தமாகப் புதைத்தான் , அவள் மொத்தமாகச் செயல் இழந்த நிலையில் இருந்தாள்.
அவன் எடுத்த புகைப்படங்களை அழித்துவிட்டு அவனை மிரட்டி அனுப்பினான் சம்பத் , ஆனால் இது இங்கே நிற்காது என்று தெரியும்.
அறைக்குள் வந்தவன் பாரியை பார்க்க அவன் விழிகளில் கொலைவெறி “ராகேஷ்” என்று அழுத்தமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.