“சார் ரொம்ப அர்ஜென்ட் அதனால தான் லீவ் எடுத்திருக்கேன் ரெண்டு நாள், நான் ஆண்ட்டி கிட்ட சொன்னேனே” என்றவள் பேச்சு சத்தத்தில் அறையிலிருந்து வெளியில் வந்தான் பாரிவேந்தன்.
“என்னமா சாதாரணமா சொல்ற? போன மாசம் இப்படித்தான் பத்து நாள் உடம்பு சரி இல்லனு வரல இப்போ என்னனா ரெண்டு நாள் லீவ் சொல்ற”.
“தொடைக்கிறது கழுவறதுனு நாங்க பண்ண உனக்கு எதுக்கு சம்பளம் குடுக்கணும்” என்று அந்தப் பக்கம் இறைந்து கொண்டிருந்தார் அவள் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர்.
“சார் நான் தேவை இல்லாம லீவ் எடுக்குறதில்ல, அதோட வேலைக்கு வராத நாள் சம்பளமும் வாங்கறதில்லயே” என்று அவள் கூற.
“என்னமோ ஆபீஸ் வேல பாக்குற மாதிரி லீவ் சொல்லிட்டு அசால்ட்டா இருக்க, நாங்க வேற நல்ல ஆளா பாத்துக்குறோம்” என்று அவர் வார்த்தைகளைவிட அலக்நந்தாவின் பொறுமை பறந்தது.
“போதும் நிறுத்துங்க, உங்க வீட்ல வந்து ஓசி சாப்பாடு சாப்பிடற மாதிரி பேசுறீங்க, நான் செய்யுற வேலைக்கு என் உழைப்புக்கு தான் நீங்கச் சம்பளம் தரீங்க”.
“இனிமே உங்க வீட்ல வேலை செய்ய முடியாது இந்த மாசம் பதினாறு நாள் வேலை செஞ்சுருக்கேன், சம்பளம் எடுத்து வைங்க வந்து வாங்கிக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவள் அங்கிருந்த சேரில் அமர்ந்தாள் கோபத்தோடு.
“உங்க அண்ணனோட காதலியா இருந்து மனைவியா மாறின என் அக்காவால இன்னும் உங்க வீட்டுக்குள்ள நுழையக்கூட முடியல”.
“முதல் எதிர்ப்பு எங்க தகுதியை வெச்சுத்தானே வந்துச்சு, அப்போ இருந்தத விட நாங்க இன்னும் வசதில ரொம்ப கீழா இருக்கோம், தப்புகள் எதுவும் திருத்தப்படல, திருத்தப்பட வாய்ப்பும் இல்ல”.
“ஏற்கனவே ஒரு பையன் வீட்டை விட்டு வெளில போயாச்சு, உங்களையும் அவங்க இழக்க விருப்புவாங்களா? இல்ல என்னை அந்த வீட்டு வாசப்படியாவது மிதிக்க விடுவாங்களா”.
“இது எதுவுமே நடக்க வாய்ப்பில்லை, என் குடும்பம் மறுபடியும் வேதனை அனுபவிக்கறத என்னால அனுமதிக்க முடியாது, நீங்க இனிமே என்கிட்டே பேச வேண்டிய அவசியம் இல்லை” என்றவளை ஆழ்ந்து பார்த்தான் அவன்.
அவனிடம் இதைப் பற்றி எதற்க்காகப் பேசுகிறோம் என்று அவள் யோசிக்கவில்லை, ஆழ்மனதில் “இவனோடு ஒரு வாழ்வு சாத்தியமாகுமா” என்று யோசித்ததின் விளைவு என்பதையும் அவள் உணரவில்லை.
“விருபுற பொண்ண எல்லா எதிர்ப்பையும் மீறிக் கட்டிக்குற அளவுக்குத் தைரியம் இல்லாத கோழைனு நினைச்சியா என்னை” என்றான் ரோஷமாக.
“உங்களப்பத்தி எனக்குத் தெரியாது எனக்கு விருப்பம் இல்லை”.
“அது எப்படி அண்ணன் தம்பி ரெண்டுபேருமே மனசுக்கு பிடிச்ச பொண்ண ரெண்டாம் தாரமாத்தான் கட்டுவீங்களா” என்றவள் கேள்வியில் விழிமூடி தன்னை சமன் செய்தவன் அவள் கைபிடித்து அருகில் இறுத்தினான்.
அவனிடமிருந்து கையை உறுவிக்கொள்ள முயற்சிக்க விடாமல் இறுக பற்றினான், அவள் அவனை முறைக்க “முதல்ல இந்தப் பார்வையை மாத்து என்கூட வாழ ஆரம்பிச்ச அப்புறமும் பழக்கத் தோஷத்துல இப்படியே பாத்துவெக்க போற” என்றவனை குத்தவா வெட்டவா என்று அவள் பார்க்க.
“பாரு மறுபடியும் அப்படியே பாக்குற” என்றவனை ஒன்றும் செய்ய முடியாமல் தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டாள்.
சில நொடிகள் கழிந்து எந்தச் சத்தமும் இல்லாமல் இருக்க திரும்பிப் பார்த்தாள், அப்படியே அமர்ந்து அவளை மட்டுமே பார்த்திருந்தான்.
“என்ன வேணும் உங்களுக்கு”
“நீதான் வேணும் அழகி….. எனக்கே எனக்காக”.
அவள் ஏதோ கூற வரக் கை உயர்த்தி தடுத்தவன் “உன்கிட்ட முழுசா என் மனச திறந்து சொல்லத் தடையா இருந்தது ஒண்ணுதான், ஏற்கனவே எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கற ஒரு காரணம்”.
“இப்போ நீயே அத தெரிஞ்சுக்கிட்ட” என்றவன் அவள் கைகளைப் பற்றித் தன் கைகளுக்குள் பொதிந்து விழியோடு விழிப்பார்த்து “என்னோட கடந்த காலத்தைப் பத்தி எதுவும் சொல்லப் போறதில்ல, என்கூட வாழ்ந்து தெரிஞ்சுக்கோ” என்று புன்னகைத்தவனை தவிப்போடு பார்த்தாள் அலக்நந்தா.
“அழகி…” என்றவன் ஒரு கையால் தன் இதயத்தைத் தொட்டுக்காட்டி “இங்க முதல் முதல்ல சலனத்தை ஏற்படுத்தினவ நீ, உள்ள ரொம்ப ஆழமா இறங்கிட்ட அழிக்கவோ மறக்கவோ முடியாது, நா அதுக்கு முயற்சியும் பண்ண மாட்டேன், என்னைக்காவது அழகிக்கு இந்தப் பாரிவேந்தன பிடிச்சுருக்குனு ஒத்துக்க மனசுவரும்” என்க விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.
“அது எவ்ளோ காலம் ஆனாலும் காத்திருப்பேன்” என்றவன் விலகி நடந்தான்.
அலக்நந்தாவால் அங்கிருந்து அசையவே முடியவில்லை மனதின் ஆழத்தில் புதைந்து கிடப்பதை எப்படி அறிந்துகொண்டான், ஏன் என்னைச் சலப்படுத்துகிறாய் என்று கண்ணீர் வடித்தது மனது.
அதிகாலை உறக்கம் வராமல் மெல்ல ஹாஸ்பிடல் வராண்டாவில் நடந்து கொண்டிருந்தாள் மித்ரா, நீண்டு கிடந்த சேரில் சுவற்றில் தலை சாய்த்து கால் நீட்டி உறங்கிக் கொண்டிருந்த பாரிவேந்தன பார்த்து நின்றாள் சிறிது நேரம்.
தனியாக ஒரு அறை எடுத்துத் தங்கிக்கொள்ளலாம், ஆனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டான் அவனைப் பார்த்துவிட்டு அறைக்குள் வந்தவள் நந்தாவிடம் பேசத் தொடங்கினாள்.
மித்ரா கூறிய எதற்கும் மறுமொழி கூறாமல் அமைதியாக இருந்தாள் அலக்நந்தா, ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவள் பாரிவேந்தனை பற்றிப் பேசத்தொடங்கினாள்.
இத்தனை நேரம் பெரிதாக ஆர்வம் காட்டாதவள் செவியும் மனதும் அக்காவின் வார்த்தைகளில் கவனம் வைத்தது, தானும் சச்சியும் திருமணம் செய்து கொண்டதால் வானதியும் அவள் குடும்பமும் அதிகம் பாதிக்கப்பட்டது என்றும்.
அதற்க்கு பிராயச்சித்தம் என்று கூறி வீணாவை பாரிவேந்தனுக்கு மனம் முடித்து வைத்தார்கள் என்றும் கூறினாள்.
அனால் இருவராலும் மூன்று மாதத்தைக் கூட ஒன்றாகக் கழிக்க முடியாமல் பிரிந்துவிட்டதாக மித்ரா கூற, நந்தாவிற்கு அது அதிர்ச்சியே…
அவனுக்குத் திருமணம் ஆனது எப்பொழுது? எப்படி? ஒன்றும் அவளுக்குத் தெரியாது, அதை ஒரு காரணமாக வைத்து அவனிடமிருந்து விலக நினைத்தாள் அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது.
அந்த எண்ணத்தையே அடியோடு மாற்றி விட்டுச் செல்கிறானே, அவன் பின்னால் செல்லாதே என்று மனதிற்கு கடிவாளம் இட முயன்றாள்.
அதன்பிறகு அங்கிருந்த இரண்டு நாட்களும் அவன் அவளை நெருங்கவில்லை தள்ளி நின்று அவள் தேவைகளைக் கவனித்துக்கொண்டான்.
மூன்றாம் நாள் காலைச் சச்சிதானந்தன் வந்து சேர்ந்தான், இருவரும் அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை, அன்று அத்துவை டிஸ்சார்ஜ் செய்வதாக டாக்டர் கூறிவிட்டார்.
அதோடு சச்சி மற்றும் மித்ராவிடம் “குழந்தைக்கு அதிகமா சளி பிடிக்குதுனு தெரிஞ்சும் ஏன் ஜில்லுனு சாப்பிட குடுக்குறீங்க” என்க மித்ரா குழப்பமாக அவரைப் பார்த்தாள்.
“இல்ல டாக்டர் அவனுக்கு நாங்க ஜில்லுனு எதுவும் குடுக்கறதில்லை”.
“அப்போ உங்களுக்குத் தெரியாம சாப்பிட்டிருக்கான் இனிமே கவனமா பாருங்க” என்க, அவளுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.
அத்துவுக்கு குளிரான எதுவும் ஒத்துக்கொள்ளாது ஆகையால் பிரிட்ஜில் தண்ணீர்கூட வைப்பதில்லை பிறகு எப்படி என்று மூளை யோசித்து கொண்டே இருந்தது.
“மித்ரா இப்போதான் சரி ஆயிருக்கு வீனா யோசிச்சு டென்ஷன் ஆகாத, அவன்கிட்டயே கேக்கலாம் அவன் கொஞ்சம் நார்மல் ஆகட்டும்” என்றான் சச்சி.
சச்சிதானந்தனிடம் அவன் மனைவி மற்றும் மகனை ஒப்படைத்து அலக்நந்தாவும் பாரிவேந்தனும் அவர் அவர் பாதையில் பிரிந்து சென்றனர்.
குழந்தையின் சிரிப்பொலி சத்தம் கேட்டு ஹாலிற்கு வந்த சுமதி பார்த்தது டீ.வி திரையில் ஓடி விளையாடும் அத்வைதின் விடியோவை, சச்சியை சிறுவயதில் பார்த்ததை போல இருந்தான்.
ஹால் சோபாவில் அமர்ந்திருந்த பாரிவேந்தனை பார்த்தார், கால்மேல் கால் போட்டு அமைதியாக அமர்ந்திருந்தான், பின்னால் மகேந்திரன் மற்றும் வானதி வந்து நிற்பது தெரிந்தது, மிகவும் கோபமாக இருந்தான்.
அன்னையை பார்த்தவன் “டீ.வியை காண்பித்து இது யாருனு தெரியுதாமா” என்றான் குரலில் கோபத்தை சுமந்து முகம் சாதாரணமாக இருந்தது.
“பேரு அத்வைத் இந்தக் குடும்பத்தோட முதல் பேரக்குழந்தை” என்க சுமதி வானதியை ஏறிட்டு பார்த்தார் அவள் முகம் கடினமாக இருந்தது.
“உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்லவா, நீங்க மறுபடியும் பாட்டி ஆகப்போறீங்க” என்றவன் எழுந்து நின்று வானதியை பார்த்தான்.
“உங்களுக்குப் புரியுதா? அவனுக்கு என்ன வேணும்னு அவன் ரொம்ப தெளிவா இருக்கான், அடுத்து அடுத்துனு அவன் லைப் மூவ் ஆயிடுச்சு, ஆனா நீங்க இன்னும் அங்கேயே நிக்குறீங்க”.
“உங்க பிரச்னை இப்போ என்ன தெரியுமா? சச்சி இல்ல ! இந்த வீட்டோட மூத்த மருமக அப்டீங்கற அடையாளம், தப்பு செஞ்சுட்டோம்னு உங்கள பாக்கும்போதெல்லாம் மத்தவங்க வருத்தப்படணும்”.
“என்ன பண்ற பாரி யார்கிட்ட எப்படி பேசுற” என்ற சுமதியை பார்த்தவன்.
“தெரியும்மா நல்லா தெரியும் தெரிஞ்சுதான் பேசுறேன்” என்றான் அதே எரிச்சலோடு.
“அவர் சொன்னதுல எந்தத் தப்பும் இல்லையே அண்ணி” என்று உள்ளே வந்தார் வானதியின் தாய் ராதா.
“சரியாதான சொல்லியிருக்கார், இப்போ உனக்குச் சந்தோஷமா… அப்பா தப்பு பண்ணினார்னு வீட்டுக்கு வராம இருக்கியே ஏன் உன் மாமனார் தப்பு பண்ணல? உன் புருஷன் தப்பு பண்ணல? அதெல்லாம் உனக்குத் தெரியலையா”.
“அப்படிப்பாத்தா நீ இந்த வீட்ல கூட இருக்க கூடாது, நீ இங்க இருந்து என்ன பண்ற, நீங்கத் தப்பு பண்ணிடீங்க தப்பு பண்ணிடீங்கனு எல்லாரையும் குத்தி காமிக்குறியா”.
“வேண்டாம்னு விட்டுட்டு போன ஒருதர்க்காக இத்தனை பேரைத் தண்டிக்குற, நீ நம்ம வீட்டுக்கு வர வேண்டாம் ஆனா ஏன் இங்க இருக்க உனக்கு இங்க என்ன உரிமை இருக்கு, நீ யாரு இங்க??” என்றார் உரத்த குரலில்.
தாங்கள் இத்தனை நாட்களாக அவளிடம் கடுமை காட்டாமல் இருந்தது தவறு என்று இப்பொழுது தோன்றியது, அவளை இங்கிருந்து முன்பே அழைத்துச் சென்று இருக்க வேண்டும்.
“உனக்காக நம்ம குடும்பத்துக்காகன்னு சொல்லி விருப்பம் இல்லாம இவங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துல இணைச்சோம், முழுசா மூணு மாசம் கூட நிலைச்சு நிக்குல இங்க பாரு வானதி, வீனா வேற கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா அவ லைப் சரி ஆயிடும்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு, நீ என்ன பண்ண போற” என்றவரை தடுக்க வந்த சுமதியை பார்வையாலே அடக்கினான் பாரி.
“சீக்கிரம் முடிவு எடுங்க” என்றவன் அவன் அறைக்குச் செல்ல படி ஏறினான்.
ராதிகாவை அவனே வரச் சொல்லி இருந்தான், சச்சி இனி அவள் வாழ்வில் வரப்போவதில்லை, வானதியை இனிமேலும் இங்கேயே விட்டு வைப்பது சரி இல்லை.
அவளுடைய வாழ்க்கையை பற்றியும் யோசித்தான் அதைவிட அலக்நந்தாவை பற்றி யோசித்தான், வானதி இங்கிருக்கும் வரை அலக்நந்தா தன் வீட்டில் நிம்மதியாக இருக்க இயலாது, இங்கிருந்து வெளியில் போனால் மட்டுமே மற்ற எதையும் பற்றி வானதி யோசிப்பாள்.
பிள்ளைகள்மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் அதைப் பேரப்பிள்ளைகள் மேல் காண்பிப்பதில்லை பெரும்பாலும், அதேதான் இங்கேயும் முதலில் சச்சியின் மீது கோபம் இருந்தபோதும் பேரக்குழந்தையை பார்க்கத் தொடங்கிய மகேந்திரனுக்கு பேரனைத் தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
அனால் மித்ராவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பேரக்குழந்தை இருக்கிறான் என்று தெரிந்ததிலிருந்து சுமதிக்கு அவனை ஒருமுறையாவது நேரில் பார்த்து அள்ளிக்கொள்ள வேண்டும் என்று ஏக்கம் இருந்தது.
வானதியை எண்ணி மட்டுமே அவர் தன் ஆசையை மறைத்தார்.
நமக்கான மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருக்க கூடாது என்று புரிந்தாலும் தன்னுடைய கோபத்தை யாரிடம் காண்பிக்க என்று தெரியாமல் இங்கேயே இருந்து அனைவரையும் ஆட்டிப்படைத்தாள் வானதி.
ஒரு கட்டத்தில் சுமதி மஹேந்திரனுடன் வெளியில் செல்வதை கூட விழிகளில் நீரை தேக்கி வைத்து அனுதாபத்தை ஏற்படுத்தித் தடுத்தாள்.
வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்கள் முன் சோக சித்திரமாக நின்று சச்சியையும் மித்ராவையும் அவர்கள் வசைபாடுவதை காது குளிர கேட்டாள்.
விவாகரத்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று பலமுறை பாரி கூறியும் மறுத்துவிட்டாள், முதல் மனைவி இருக்க அவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டான் என்று வழக்கு கொடுங்கள் நாங்கள் உடன் நிற்கிறோம் என்றதற்கு மறுத்துவிட்டாள்.
தன்னை அனைவரும் மிகவும் நல்ல பெண் பெருமைசாலி தங்கமான பெண் இவளுடன் வாழாமல் போனானே என்று கூறும்போது அவள் முகம் பிரகாசமாக ஆகும் உடனே அதை மாற்றிக்கொள்வாள்.