Advertisement
அதனிமித்தம் வேக நடை நடந்து அவளைத் தன் வண்டியின் அருகே சென்று தொப்பென்று இறக்கி விட்டவன், மீண்டும் தனது வண்டியில் ஏறி அதனை உயிர்பித்து அவள் ஏறி அமர்வதற்காய் காத்திருந்தான்.
அவள் அப்போதும் அவனை நேருக்கு நேர் முறைத்தபடி, வண்டியில் ஏறாமல் சிலை போல் நின்றிருக்கவும்,
“வண்டியில ஏர்றயா? இல்லை வீடு வரைக்கும் தோள் மேலயே தூக்கிட்டுப் போகவா?!” என்றான் உறுமலாய்.
“ஹும்!” என்று கோபத்தில் அவன் வண்டியை ஓங்கி ஒரு உதை உதைத்தவள், வண்டிக் குலுங்கும்படி வேகமாய் ஏறி அமர, வண்டி சீறிப் பாய்ந்தது.
‘என்ன ஒரு பொசசிவ்னஸ் டா உனக்கு?!’ என்று அந்த மழையிலும் இவர்கள் செய்யும் அலும்பலைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தபடி தனது வண்டியையும் கிளப்பிக் கொண்டு சென்றான் கார்த்திக்.
கார்த்திக்குடன் வீடு வந்து சேருவாளா என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்திருந்தவர்களுக்கு அவள் அவனுடன் வந்தது எண்ணிப் பெரும் சந்தோஷம்.
“என்ன பொண்ணுடி நீயி?! இப்படி மழையும் காத்துமா அடிச்சு வெளுக்குது! இவ்ளோ நேரம் காட்டுல உட்கார்ந்துகிட்டு வம்பு பண்ணுற?!” என்று பாட்டி அவளைக் கடிய, அவள் பதிலே சொல்லாமல் தனது அறைக்குச் சென்றுக் கதவை அடைத்துக் கொண்டாள்.
“என்ன கொழுப்புப் பாருங்க?! பெரியவங்க கேட்குறாங்களேன்னு பதிலாவது சொல்லிட்டுப் போறாளா பாருங்க! எல்லாத்துக்கும் நீங்க ரெண்டு பேரும் கொடுத்து வச்சிருக்கச் செல்லம்தான் காரணம்!” என்று அண்ணனையும், கணவனையும் கடிந்து கொண்டவர்,
“அடியே சாப்பிட வாடி” என்று மகளின் அறைக் கதவைத் தட்டிச் சாப்பிட அழைக்க,
“எனக்கு வேணாம்” என்றாள் ஒற்றை வரியில்.
“கொழுப்புக் கூடிப் போச்சாடி உனக்கு?! என்னமோ, கல்யாணம் ஆனதுல இருந்து மிதப்பாத்தான் திரியுற நீயி?!” என்று வைரம் அவன் மீதிருக்கும் கோபத்தில் அவளையும் சேர்த்து வார்த்தைகளை விட,
“ஆமா! என் புருஷன் என்னைத் தங்கத் தட்டுல வச்சுத் தாங்குறான் பாரு! அந்த மிதப்புல திரியுறேன்!” என்று பட்டெனக் கதவைத் திறந்து கொண்டு வந்தவள்,
“இதுக்குத்தான் நான் வீட்டுக்கு வராம காட்டுலேயே கெடந்தேன்!” என்றவள்,
“என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியா, அமைதியா இருக்க விடுறீங்களா? இல்லை மறுபடியும் காட்டுக்கே போயிடவா?!” என்றாள் கோபம் ஏற.
இதை எல்லாம் தனது அறைக்குச் சென்று உடை மாற்றித் தலை துவட்டிக் கொண்டிருந்தவனும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.
ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் ஊற்றியதைப் போல் இருந்த அவளது பேச்சில், வேகமாய் தனது அறையை விட்டு வெளியே வந்தவன்,
“இப்போ எதுக்குடி வீட்டுல இருக்குறவங்களைக் குதறிட்டு இருக்க?! என்ன?! எல்லாம் உன் இஷ்டப்படிதான் நடக்கணுமா?! மரியாதையா துணியை மாத்திட்டுப் போய் சாப்பிட்டு வந்துப் படு.” என்று அவன் மிரட்டலாய் மொழிய,
‘ஐயோ! நாம சாப்பிடக் கூப்பிடப் போய் இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் மறுபடியும் பிரச்சனையைக் கூட்ட வேண்டாம்!” வைரம் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
ஆனால் அவளோ, அப்போதும் நீயென்னச் சொல்வது நான் என்னக் கேட்பது என்பது போல் மீண்டும் கதவை அடைக்கப் போக, படீரென கதவைத் திறந்தவன், அவளைத் தரதரவென இழுத்துச் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுடன் அமர வைத்துவிட்டு தானும் அவள் அருகே அமர்ந்து கொள்ள, அவள் மீண்டும் வேகமாய் எழப் போனாள். ஆனால் எழத்தான் முடியவில்லை! அவன் அத்தனை இறுக்கமாய் அவள் கையைப் பற்றி இருந்தான்.
“ம்!” என்று தனது கையை விடுவித்துக் கொள்ளப் போராடியவளைக் கண்டு வீட்டில் இருக்கும் அனைவரும்,
“சாப்பிடதான ம்மா சொல்றான். சாப்பிட்டுப் போயிடேன்.” என்று கூட்டு சேர்ந்து கொள்ள,
“நீயா சாப்பிடறியா?! இல்லை நான் ஊட்டிவிடணுமா?!” என்றான் அவன் அன்பைக் கூட மிரட்டலாகவே.
அவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் மனதில் மகிழ்வே எழ அவளுக்கு மட்டும் அத்தனைக் கோபம் எழுந்தது.
‘காலையில வேற ஒருத்தர் கூட என்னைச் சம்மந்தப் படுத்திப் பேசிட்டு, இப்போ வண்டியில கூட்டி வர்றது என்ன, ஊட்டி விடணுமான்னு கேட்கிறது என்ன?!’ என்று அவனை எரித்து விடும் பார்வை பார்த்தவள், வேகமாய் சோற்றுப் பருக்கைகளை அள்ளி விழுங்கத் துவங்கினாள்.
ஈரத் துணியுடனேயே வேகவேகமாய்ச் சாப்பிட்டு முடித்தவள், விறுவிறுவென எழுந்து சென்று கை கழுவிக் கொண்டு அவன் அறையை விடுத்து மீண்டும் தனது அறைக்கே செல்ல,
“அடியே ஈரத்துணியை மாத்துடி மொதல்ல!” என்று கத்தினார் வைரம். ஆனால் கதவை அடைத்துக் கொண்டவளோ, ஆவேசமாய் தனது அலமாரியில் இருந்த அவனது சட்டைகளை எல்லாம் எடுத்துக் கீழே விட்டெறிந்துவிட்டு, அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அதை எல்லாம் வெறித்தபடி…
சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கி விட, அவனும் அவளும் மட்டும் உறக்கமின்றி தவித்திருந்தனர்.
‘அவ்ளோ கர்வம்! ரூமுக்குக் கூட வந்துப் படுக்கலை இல்லை அவ?!’ என்று எண்ணியவன்,
‘அவன் கூட வர முடியாம நாம கூட்டிட்டு வந்ததுல தான் இவ்வளவு கோபமா?!’ என்று எண்ணிக் கொண்டான் மீண்டும் தவறாகவே.
அந்த யோசனை அவனைத் தூங்க விடாமல் செய்ய, மெல்ல எழுந்து வெளியே வந்தவன், அனைவரும் தூங்குவது கண்டு மீண்டும் அறைக்குள்ளேயே செல்லப் பார்க்க, மெலிதாய் தெரிந்த கதவிடுக்கின் வழியே அவளின் அறையில் மட்டும் இன்னமும் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு, அவள் அறையை நோக்கி நடந்தான்.
வெறுமென சாற்றி இருந்த அவளது அறைக்கதவைத் மெல்லத் திறந்தவனுக்கு அத்தனைக் கோபம் எழுந்தது.
அவனது சட்டைகள் அனைத்தும் கீழே இறைக்கப்பட்டிருக்க, அவள் இன்னமும் நனைந்திருந்த உடையைக் கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவள் அருகே சென்று அவள் கையை வலுக்கட்டாயமாய் பிடித்துத் தூக்கி நிறுத்தியவன்,
“என்னடி அவன் கூட வரமுடியாமப் போயிடுச்சேங்கிற ஆத்திரமா?!” என்று அவனது சட்டைகளை அவள் தூக்கி வீசி எறிந்திருந்ததை வைத்து மீண்டும் எக்குத்தப்பாய் அவன் கேள்வி எழுப்ப,
“சீ!?” என்று அவள் அவனது கையைத் தன்னிலிருந்து வேகமாய்த் தட்டிவிட,
“என்னடி சீ?! அவன் உன் கைபிடிச்சு நடந்து வந்தா மட்டும்தான் இனிக்குமோ?!” என்று அவன் மேலும் மேலும் தவறாய் வார்த்தைகளை விட, இதுவரை மாமன் மாமன் என்று உருகிக் கொண்டிருந்தவளுக்கு எங்கிருந்து வந்ததோ அத்தனைக் கோபம், பளாரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் அவன் கன்னம் காந்தும்படி.
அந்த ஒற்றை அடியிலேயே அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும் அவள் எவ்வளவு மானஸ்தி என்று! ஆனால் இவனுக்குத்தான் மூளை எப்போதும் ஏறுக்கு மாறாய்ச் சிந்திக்குமாயிற்றே!
“என்னத் திமிருடி உனக்கு?!” என்றவன், அவள் தலை மூடியைக் கொத்தாய்ப் பற்றித் தன்னருகே இழுத்து மூர்க்கமாய் அவளைக் கட்டியணைக்க, அவள் தன் பலம் முழுதும் ஒன்று திரட்டி அவனை ஆவேசமாக தன்னிலிருந்துப் பிரித்து தூரத் தள்ள முயன்றாள்.
அவளின் ஒதுக்கமும் உதாசீனமும் அவனது தன்மானத்தை மேலும் சீண்ட, அவளை மீண்டும் தன்னருகே பற்றி இழுத்து வெகு இறுக்கமாய் அவள் உடல் நோகும்படி நெருக்கினான்.
அவனது கோபத்திலும் நெருக்கத்திலும் அவள் வெகுவைத் திணற, தனது ஒற்றைக் கையால் அவளை அணைத்தபடியே கதவைத் தாழிட்டுவிட்டு, அவளைத் தரையில் சாய்த்தான் அவளை ஆட்கொள்ளும் விதமாய். அவன் புத்தியும், செய்கையும் அவளுக்கு வீபரீதமாய்ப் பட,
“வேணாம் வேணாம் மாமா! அப்படி மட்டும் செஞ்சிடாத! அப்புறம், உன்னை உன்னை நான் மொத்தமா வெறுத்துடுவேன்” என்று அவள் திமிறிக் கொண்டு சொல்லச் சொல்ல, அவனது கோபமும் ஆவேசமும் அதிகரித்ததே ஒழியக் கொஞ்சமும் குறைந்த பாடாயில்லை!
ஆனால் அவளது கதறலும் எச்சரிக்கையும் எப்படித் தவறான புரிதலில் இருந்த அவன் காதுகளில் விழவில்லையோ, அதே போல் சோவேன்று கொட்டும் மழைச் சப்தத்தில் அந்தக் கூடத்தில் படுத்திருந்த அவளின் அன்புக்குரிய உறவுகளின் காதுகளிலும் விழவே இல்லை!
எல்லாம் முடிந்துவிட்டது. அவன் அவளை ஆட்கொண்டதோடு மட்டும் விட்டிருந்தால் கூட இன்றில்லை எனில் என்றேனும் ஒருநாள் அவள் அவனை மன்னித்திருக்கக் கூடும்!
ஆனால் அந்தக் கூடல் முடிந்த பின்பு அவன் உதிர்த்த வார்த்தைகள் அவளை உயிரோடு கொன்று போட்டது!
“இனி அவன் தொட்டா உனக்கு இனிக்காதுடி!” என்றக் கேவலமான வார்த்தைகளே அது!
கட்டிய கணவனே என்றாலும், தான் உயிருக்கு உயிராய் நேசித்திருந்தவனே என்றாலும், இன்னொருவனைக் காரணம் காட்டி தன் மீது பழி சுமத்தித், தன்னைக் கொச்சைப் படுத்திவிட்டுத் அவள் அவனைத் தவிர வேறோருவனை இனி யோசிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு அவன் அப்படி நடந்து கொண்டது அவளைக் கத்தியின்றி ரத்தமின்றிக் அடியோடு கொன்று புதைத்திருந்தது.
-உள்ளம் ஊஞ்சலாடும்…
Advertisement