Advertisement
‘ஒருத்தன் இரண்டு வருமா கெஞ்சுறானேன்னு கூட பாவமாயில்லையா..?” என்றான் பாவமாக.
‘எங்கப்பாம்மாக்கு நீங்க ஓ.கேன்னாலும் என் விருப்பத்தையும் கண்டிப்பா என்கிட்ட கேட்பாங்க.. அப்போ பிடிச்சிருக்குன்னு அப்பாகிட்ட சொல்றேன்..” அவன் முகம் காண முடியாமல் தலைகுனிந்தாள்.
ஆனந்தியின் பதிலில் திருப்தியில்லாமல்.. ஆனந்தியையே ஆழமாக பார்த்திருந்தான்..
‘நான் தான் பதில்செல்லிட்டனே.. தூங்க போகட்டுமா..“ என்றாள்.
‘இங்கயிருந்து போறதுக்காகத்தான் இந்த பதிலைக்கூட சொன்னியா?” என்றான் கடுப்பாக.
‘இல்லையில்லை.. உண்மையாத்தான் சொன்னேன்.. நீங்க நேத்து நேரடியா உங்களைப் பத்தி எங்க அப்பாம்மாகிட்ட சொல்லுன்னு சொன்னதுமே.. எனக்கு உங்கமேல ஒரு மரியாதை வந்திடுச்சி.. எதுன்னாலும் காலைல பேசிக்கலாம். நான் இங்க ரொம்ப நேரம் இருந்தா.. அப்பா என்ன நினைப்பார்..? அவர் நினைக்கலைன்னாலும்.. எனக்கு ஒருமாதிரி கில்டியா இருக்கு…” என்று சங்கடமாய் உரைத்தாள்.
‘நான் மாமாகிட்ட உன்கூட பேசனும்னு சொல்லி பர்மிசன் வாங்கிட்டுதான் உன்னை இங்க வரசொன்னேன்.. இந்த கில்டி பீல் தேவையில்லாதது..” என்றான் உரிமைக்கோபத்தோடு.
‘அபர்ணா என் மேல கோபமா இருக்கா.. நான் போய் அவளை சமாதானம் பண்ணனும்.. இல்லைன்னா.. நைட் சரியா தூங்கக்கூட மாட்டா..” என்றாள்.
‘பரவால்ல.. ஒருநாள் தூங்கலன்னா.. உன் தங்கை ஒன்னும் குறைஞ்சிடமாட்டா.. இன்னும் இரண்டே மாசத்தில எனக்கு கல்யாணம் செய்தாகனும்னு எங்கப்பா முடிவுசெய்திட்டார்.. உன் சம்மதம் தெரிஞ்சாதான் எங்கப்பாம்மாகிட்ட நம்ம கல்யாணத்தைப்பத்தி பேசமுடியும்.. கொஞ்சம் என்னை புரிஞ்சிக்கோ ஆனந்தி..” என்றான்.
‘சொன்னது சொன்னதுபோலவே.. தைரியமா எங்கப்பாகிட்ட வந்து பேசின உங்களை எனக்கு பிடிக்காம போகுமா..?” என சொல்லி சட்டென வெளியேற.. எட்டிப்பிடித்தான் ஆனந்தியின் கையை.
‘அச்சோ ப்ளீஸ் என் கையை விடுங்க.” என்றாள் அவஸ்த்தையாய்.
‘உனக்கு என்னை பிடிச்சிருக்குங்கிறதை.. எனக்கு நிரூபிச்சிட்டு போ..” என்றான் இலகுவான பாவனையில்.
ஆனந்தி புரியாமல் பார்க்க.. தன் கன்னத்தை காண்பித்து.. உதட்டை குவிக்க.. பேரதிர்ச்சியைக் காட்டினாள் தன் முகத்தில்.
‘நான் இப்போ உன்வீட்ல.. உங்கப்பாம்மா அனுமதியோட இருக்கேன்.. இப்பவும் என்னை வில்லனைப் போலத்தான் பார்ப்பியா..? என்னை நம்பவே மாட்டியா..?” என்றான் ஏமாற்றமாக.
‘அப்பா.. அம்மா..” என ஏதோ சொல்லவந்தவள் திணற..
‘அப்போ உங்க வீட்ல ஒத்துக்கலன்னா.. நான் முத்தம் கொடுத்ததை மறந்து.. வேற ஒருத்தனை கல்யாணம் செய்துக்குவியா..?” என்று பார்வையால் துளைத்தெடுத்தான்.
ஆனந்தியின் கண்கள் கண்ணீரை வெளியனுப்ப.. ‘அப்பவும் பதில் சொல்லமாட்டல்ல..? கிளம்புடி இங்கயிருந்து..” என்றான் கோபமாக.
ஆனந்தி பயத்தில் நின்றுகொண்டே இருக்க.. ‘என்னை டென்சன் பண்ணாம தயவு செய்து போ ஆனந்தி.. “ என்றான் எரிச்சலாக.
வாடிய முகத்தோடு ஆனந்தி கீழிறங்கினாள்.
அபர்ணா தூங்காமல் அழுத முகத்தோடு படுத்திருந்தாள். ஆனந்தியைப் பார்த்ததும்.. அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்தாள்.
’என் செல்லம் இல்ல.. சாரி..” என்றாள்.
‘அந்தாளுமட்டும் நம்ம ரெண்டுபேரையும் அவ.. இவ.. அப்படின்னு சொல்றார். அதுக்கு நீயும் அப்பாவும் ஏன் அவரை மட்டும் எதுவுமே சொல்லலை..? என்னை மட்டும் சாரி கேட்க சொல்றார்.. என்னைவிட அப்பாக்கு அந்தாள்தான் முக்கியமா போய்ட்டாரு..” என்றாள் கோபமாக.
‘ம்ம்… அவரைத்திட்டத்தான் நான் அங்க இருந்தேன்.. நீதான் நான் திட்டியதை பார்க்காம.. இங்க ஓடி வந்திட்ட..” என்றாள்.
‘அவரை திட்டுனியா..? ஏய்.. சூப்பர் ஆனந்தி..” என்று சந்தோசித்தவள்..
‘ஓ.கே. தான்…. ஆனா நான் இங்க வந்து அரை மணி நேரமாகுது. நீ இவ்ளோ நேரம் இங்க வராம என்ன பன்னுன..?” என்றாள்.
‘அதுவா… உன்னை நான் கோபமா.. பேசிட்டேனா.. நீ என்மேல கோபமா இருப்பன்னு நினைச்சி வெளிய ஸ்டெப்சில போய் உட்கார்ந்திருந்தேன். நீ என்னைத் தேடுவன்னு பார்த்தேன்.. ஆனா நீதான் என்னை கண்டுக்கவேயில்லை..” என்று செல்லமாக கோபித்தாள்.
‘சாரிக்கா… நீ… இப்படி நினைப்பன்னு நான் நினைக்கல..” என்றாள் அபர்ணா.
‘எனக்கு தூக்கம் வருது. நான் போய் தூங்கட்டுமா…? நீயும் தூங்கறியா…?” என்றாள் சமாதானமாக.
‘ம்ம்… குட்நைட்.” என்றாள் சிரித்த முகத்தோடு. அபர்ணாவின் ரூம்கதவை சாத்தி.. வெளியே வந்து.. பெரியதாக மூச்சை இழுத்துவிட்டாள்.
தனதறைக்கு வந்து படுத்த ஆனந்திக்கு தூக்கமே வரவில்லை.. அழகாத்தான் இருக்கான்.. அடுத்தவனுக்கு நம்மளை விட்டுக்கொடுக்காம இருக்கத்தான் முத்தம் கொடுத்தான் போல.. என யோசித்தவளுக்கு வெற்றியின் இதழொற்றல் நியாபகம் வர.. தானாய் முகம் சிவந்தது.
முட்டாள்.. இத்தனையும் செய்துட்டு.. வேறொருவனை கல்யாணம் செய்துக்குவியான்னு கேக்குறான்.. என உரிமையோடு மனதில் திட்டி வெற்றியின் நினைவோடே உறங்கினாள்.
இன்றைய காலைப்பொழுது வெகு நாட்களுக்குப் பிறகு ஆனந்திக்கு அழகாக விடிந்தது. எப்பொழுதும் போல அனைத்து வேலைகளையும் வழக்கம்போல் செய்து.. இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள் பூஜையறையில்.
‘ஆனந்தி..” என்ற தன் அப்பாவின் குரலுக்கு.. ‘இதோ வந்திட்டேன்பா..” என தந்தையிடம் வந்தாள்.
‘எனக்கும் அம்மாக்கும் டீ கொடும்மா..” என்றார்.
சந்தோசமான மனநிலையில் ஆனந்தி தன் பெற்றோருடம் டீ குடித்து கொண்டிருக்க.. ‘இன்னைக்கு உனக்கு காலேஜ் இருக்காம்மா?” என்றார் நீலகண்டன்.
‘இல்லைப்பா..” என்றாள்.
‘அபர்ணாக்கு ஆபிஸ் இருக்கா..?” என்றார்.
‘தெரியலைப்பா நான் கேட்கலை..” என்றாள்.
‘மணி எட்டாகிடுச்சிமா.. நீ போய் அபர்ணாவை எழுப்பி இன்னைக்கு ஆபிஸ் இருக்கான்னு கேளு…” என்றார்.
‘சரிங்கப்பா…” என ஆனந்தி எழ..
’அப்படியே வெற்றி வந்தா.. அவரை கொஞ்சம் கவனிச்சிக்கோடா… அம்மா நல்லாயிருந்தா நான் இதை உன்கிட்ட சொல்லமாட்டேன்.. துவைக்க.. க்ளீன் பண்ண ஆள் வரமாதிரி.. சமையலுக்கும் ஆள் போடலாம்னு சொன்னா நீ கேட்கமாட்ற.. உனக்கு கொஞ்சம் சிரமம்தான். ஆனா என்னப்பண்றது..? நம்ம வீட்டுக்கு வந்தவரை நாம தான நல்லபடியா பார்த்துக்கணும்..? அதுவும் வெற்றி நமக்கு ரொம்ப வேண்டியவரா வேற போய்ட்டாரு..” என்றார்.
‘சரிங்கப்பா.. நீங்க ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காதிங்க.. நான் பார்த்துக்கிறேன். நான் போய் அபர்ணாவை எழுப்பறேன்..” என சொல்லி அபர்ணாவிடம் சென்றாள்.
‘அபர்ணா.. எழுந்திரு..” என எழுப்ப.. அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போக சற்று கோபம் வந்தவளாய்.. ‘இவளோட இதே தொல்லையாப் போச்சி.. ஏய் அபர்ணா.. “ என அவளை நன்றாக ஒரு உலுக்கினாள்.
‘என்னக்கா…” என்றாள் சலிப்பாக.
‘மணி எட்டு.. இன்னைக்கு நீ ஆபிஸ் போகனுமா..? இல்லையா…? உன் போன் வேற அடிச்சிட்டே இருக்கு..” என்றாள்.
‘என்ன மணி எட்டா..? ‘அச்சோ..” என்று அடித்துப்பிடித்து எழுந்து போனை எடுத்துப்பார்த்தாள். நான்கு மிஸ்டு கால் இருந்தது. சிவமுகிலன்தான் செய்திருந்தான்.. அவளுக்கு பயத்தில் வேர்த்துக்கொட்டியது.
‘அக்கா.. எங்க எம்.டி. தான் பண்ணியிருக்கிறார். நேத்து பர்மிசன் போடும்போதே நாளைக்கு எட்டு மணிக்கு ஆபிஸ்க்கு வந்தாகனும்.. அப்படின்னாதான் நீ போலாம்னு சொன்னார்க்கா.. இப்பவே மணி எட்டு.. நான் என்னக்கா பண்றது..? எனக்கு பயமா இருக்கு.. உண்மையாவே நிறைய வேலை பெண்டிங்… சரி நான் குளிக்கபோறேன்.. எனக்கு இப்ப எதுவும் சாப்பிடவேண்டாம்.. லன்ச் மட்டும் பேக் பண்ணி வைக்கா ப்ளீஸ்…” எனும்போதே மீண்டும் அழைப்பு வந்தது.
நடுங்கிப்போய் போனை பார்த்தாள். சிவமுகிலன்தான் லைனில் இருந்தான். ‘ஹலோ…” என்றாள் மெதுவாக..
‘உன் சிஸ்டம் பாஸ்வேர்ட் என்னன்னு சொல்லு.” என்று அந்த கத்து கத்தினான். ‘அது… ஆ..ன..ந்தி..” என்றாள். இன்னும் பத்து நிமிசத்தில நீ இங்க இருக்கற..” என கர்ஜித்து.. இணைப்பை துண்டித்தான்.
ஐந்தே நிமிடத்தில் ரெடியாகி.. அபர்ணா வெளியே வருவதற்க்கும்.. வெற்றி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.
ஆனந்தியிடம்.. ‘நான் கிளம்பறேன்க்கா இன்னும் ஐந்து நிமிசத்தில நான் அங்க போகலைன்னா எங்க எம்.டி என்னை கொன்னே போட்டுறுவார். இப்ப போனாலே டிராபிக்ல அரைமணி நேரமாகும்.” என்று கிளம்பினாள்.
வெற்றி.. நேற்று நடந்ததை மறந்தவனாய் ‘ஒரு நிமிசம் நில்லு அபர்ணா..” என்றான் கனிவாக. அவள் அவனை ஆச்சரியமாக பார்க்க..
‘நான் சிவாகிட்ட சொல்றேன்.. நான் சொன்னா சிவா உன்னை ஒன்னும் சொல்லமாட்டான்..” என்று சிவாவிற்க்கு போன் செய்தான்.
‘சொல்லு வெற்றி…” என்றான்.
‘சிவா.. அபர்ணா என்னாலதான் லேட்டா வரா.. அதனால நீ அவளை ஒன்னும் சொல்லக்கூடாது..” என்றான் கட்டளையாக.
‘இதப்பார்றா… இது எப்பயிருந்து வெற்றி…? என்றான்.
‘அது இப்பயிருந்துதான்.. ஆனா இனி எப்பவுமே இப்படிதான்..” என்றான்.
‘நேத்தே சொன்னேன் வெற்றி.. இன்னைக்கு சீக்கிரம் வரனும்னு.. சரி நம்மளாவது அவ வேளையை முடிக்கலாம்னு நினைச்சி அவ சிஸ்டம் ஓபன் செய்தா பாஸ்வேர்டு போட்டிருக்கா… பாஸ்வேர்டு என்னன்னு கேட்கலாம்னு அத்தனைமுறை போன் பண்ணிட்டேன்.. எடுக்கவே மாட்றா.. இவ இப்படி செய்தா.. ஆபிஸ்ல என்னை என்ன நினைப்பாங்க..? கொஞ்சமாச்சம் அறிவு வேணாமா..?”
‘சரி.. சரி.. எதுவாயிருந்தாலும் இன்னைக்கு ஒரு நாள் அவளை விட்ரு.. இப்ப வந்துருவா…” என்றான்.
‘நீ என்ன அவளுக்கு ரெக்கமண்டா..? அதெல்லாம் அவ என்கிட்ட நடந்துக்கிறது பொறுத்துதான்.. இதவெச்சே நான் அவளை என்ன பண்றேன்னு பாரு..” என்றான்.
பேசிக் கொண்டிருக்கும் போதே அபர்ணா கிளம்பியிருந்தாள். ‘டேய் நீ இப்படி வரியா..? சரி.. நடத்து.. நடத்து.. அவ சாப்பிடாம கூட கிளம்பிட்டாடா… பார்த்துக்க..” என்று கட் பண்ணினான்.
‘வெற்றிக்கு டீ கொடுத்தியாமா..? என்றபடி வந்தார் நீலகண்டன்.
‘எனக்கு டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன் மாமா..” என்றான்.
அவசரமாக.. ‘டீயாவது குடிக்கசொல்லுங்கப்பா…” என்றாள் ஆனந்தி.
ஆச்சர்யமாய் தன் மகளை பார்த்த நீலகண்டன்.. ஆனாலும் நேரடியாக ஒருவார்த்தை வெற்றியை பிடிச்சிருக்கான்னு கேட்டிடனும்.. என நினைத்திருக்க.. உள்ளிருந்து சந்திரா நீலகண்டனை அழைக்கும் சத்தம் வரவும்.. ‘ஒரு நிமிசம் வெற்றி..” என உள்ளே போனார்.
நீலகண்டன் சென்றதும்.. ‘டீ குடிங்கன்னு என்கிட்ட சொல்ல மாட்டியா..?” என கடுகடுத்தான்.
‘அப்பா பக்கத்தில இருந்தார்ன்னுதான்…” என்று இழுத்தாள்.
‘உன் டீயை நீயே குடி…” என கடுப்பாக சொல்லி தனது அத்தையிடமும் மாமாவிடமும் தான் ஊருக்கு கிளம்புவதை சொல்லி ஆனந்தியை அவளறியாமல் ஒருமுறை பார்வையால் மட்டும் வருடி.. கிளம்பினான்.
Advertisement