Advertisement
அத்தியாயம்–7
ஆனந்தி சமயலறையில் இருந்தாள். நேராக அங்கு சென்றான். அவள் மட்டும் இருந்தாள். எல்லாம் டைனிங்டேபிளில் வைத்து.. கடைசியாக யோசனையோடு ஜக்கில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தாள். தனியாக வெற்றிக்கு பரிமாற பயந்து.. அபர்ணாவைக் கூப்பிடலாம் என நினைத்து..
‘அபர்…” என்ற சத்தம் முழுதாய் முடிக்கும் முன்னே.. அதற்க்குள் வெற்றி.. தன் கை கொண்டு அவள் வாயை மூடி.. ‘ஆனந்தி… கத்தாத..” என்றான்.
அதிர்ச்சியில் தன் கண்களை அகல விரித்தாள் ஆனந்தி.. மெதுவாக தன் கையை எடுத்தான்.
‘எதுக்கு இங்க வந்திங்க..? எங்க அப்பா வந்தா என்னை என்ன நினைப்பார்…? அதுவுமில்லாம.. என்னை எப்..படி நீங்க இப்படி தொட்டு பேசலாம்..?”
‘உங்க அப்பா இப்ப இங்க வரமாட்டார்.. அவர் அத்தைக்கு இப்பதான் சாப்பிடவைக்க ஆரம்பிச்சார். அத்தை சாப்பிட லேட் ஆகும். அதையும் மாமாதான் என்கிட்ட சொன்னார். அப்புறம் என்ன சொன்ன..? நான் எப்படி உன்னை தொடலாம்ன்னா..? உன்னைத் தொடாம எப்படி உன் கூட நான் குடும்பம் நடத்த முடியும்…?” என்றான் மையலாக.
‘நீங்க.. என்ன சொல்றிங்க..? எதுவாயிருந்தாலும் மொதல்ல ஹாலுக்கு வாங்க. அங்க போலாம்..” என நடக்க ஆரம்பித்தாள். அவளின் நீண்ட ஜடையை பிடித்துகொண்டு.. ‘எங்க ஓடற..? நில்லு போலாம். உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி.. என்னை உனக்கு பிடிச்சிருக்கா..?” என்றான். அவள் அமைதியாக நிற்க்கவும்..
‘நீ பதில் சொன்னா.. நான் உன்னை ஒன்னுமே பண்ணமாட்டேன். எப்படியும் நான் கிளம்பினதும் உன்கிட்ட உங்கப்பாம்மா இதைத்தான் கேட்பாங்க.. அவங்களுக்கு முன்ன எனக்கு இப்பவே தெரியனும் சொல்லு…” என்றான் அதிகாரமாக.
ஆனந்தி தலைகுனிய.. பிடிக்கலன்னு சொல்லாததே சற்று நிம்மதியை கொடுக்க.. ’ஏதாவது பேசு ஆனந்தி.. அபர்ணா வந்திடப்போறா..” என்றான் கெஞ்சலாகவும் அவசரமாகவும்.
‘எங்க அப்பாவே உங்ககிட்ட நல்லா பேசறார். அவர் சொன்னா எனக்கு சம்மதம்தான்..” என்றாள் முனுமுனுப்பாக.
‘உங்க அப்பாக்காகத்தானா..?” என சோர்வாக கேட்டான். அவள் அமைதியாகவும்..
‘ஆனா.. நான் உன்னை உனக்காக மட்டும் தான் கல்யாணம் செய்துக்கம்னு நினைக்கிறேன். இவ்ளோ பேசியும் எனக்காக நீ என்னை ஏத்துக்கலன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஆனா என்னால உன்னைத்தவிர வேற யாரையும் உன் இடத்தில நினைச்சிப் பார்க்கமுடியல..” என்றான் தோல்விஅடைந்தவனாய்.
தவிப்போடு வெற்றியைப் பார்க்க.. ‘எப்படியோ உங்கப் பாக்காகவாவது என்னைக் கல்யாணம் பண்றன்னு சொன்னதுக்கு தேஙக்ஸ்… எது எப்படி இருந்தாலும்.. நீ எனக்கு வேணும். உங்கப்பாகிட்ட நாளைக்கு நீ என்ன சொல்வன்னு நான் பயப்படாம இருக்கணும்னா…” என சொல்லி சட்டென்று ஒரு கையால் அவள் இடையை வளைத்து.. மறுகையால் அவள் பின்னந்தலையை பிடித்துக்கொண்டு.. அவள் இதழ் மீது தன் இதழைப்பதித்தான்.
வெற்றிக்கு ஆனந்தியை முத்தமிடும் எண்ணமெல்லாம் இல்லை.. ஆனால் அவளின் மனதை தொடமுடியாத தவிப்பில்.. அவளின் உயிரில் கலக்கும் எண்ணம் தோன்றிட.. அதன் காரணமே இந்த இதழொற்றலை செய்தான்.. சில நொடிகள்தான்.. உடனே அவளைவிட்டு விலகினான். அவள் நின்ற இடத்திலேயே தலைகுனிந்து உட்கார்ந்துகொண்டாள். முகத்தை தன் கைகளால் மூடியிருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
‘யார் என்ன சொன்னாலும் நீ மாறாம இருக்கிறதுக்காக நான் உன்னை பர்சனலா எனக்கு நிச்சயம் பண்ணியிருக்கேன் அவ்ளோதான்.. இதுக்கு எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க..? நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. ஒரு காலேஜ் லெக்சரர். நான் டைனிங்டேபிள்க்கு போறேன்.. நீ சீக்கிரம் வா… இல்லைன்னா அப்புறம் அங்கயிருந்தே கூப்பிடுவேன்..” என்று சட்டமாக சொன்னான்.
சற்று நேரத்தில் அபர்ணா சாப்பிடுவதற்க்காக அவள் ரூமில் இருந்து வெளியே வந்தாள். சாப்பிட அமர்ந்தவன்.. அபர்ணாவைப் பார்த்ததும்..
‘ஆனந்தி….” என சத்தமாக கூப்பிட்டான். அவன் அழைத்தது ரூமில் இருக்கும் சந்திரமதிக்கே கேட்டிருக்கும். அடுத்தநொடியே… ஆனந்தி பயந்துபோய் ஓடி வந்தாள்.
‘ஹேய்.. மிஸ்டர்..” என்று இன்னும் என்ன சொல்ல வந்தாளோ… அதற்க்குள் வெற்றி இடைமறித்து.. ‘முதல்ல உன் வாயை மூடு.. இந்த மிஸ்டர் கிஸ்டர்ன்னு பேசற வேலை வைச்சிக்கிட்டன்னு வை.. அவ்ளோதான்.. மரியாதையா மாமான்னு கூப்பிடு. என்ன.. நான் சொல்றது புரியுதா.?” என அதிகாரமாக சொல்லி முறைத்தான்.
‘ஓஹோ… அப்படியா..? நான்.. மாமா சொல்லனுமா..? அதுவும் உங்களை…” என நக்கலாக அபர்ணா சொல்ல.. நீலகண்டன் வெளியே வந்தார்.
‘என்ன வெற்றி…? இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலையா..?” என்றார்.
‘எங்க.. மாமா…” என சலித்தவன்.. ‘ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க வீட்ல. ஆனா ஒருத்தர் கூட எனக்கு இன்னும் சாப்பாடு போடலை.. உங்க சின்ன பொண்ணு என்னை மிஸ்டர்ன்னு கூப்பிடுறா.. அவளை என்னை மாமான்னு கூப்பிடசொல்லுங்க..” எனும்போதே..
எத்தனை தைரியமா நம்ம அப்பாக்கே ஆர்டர் போடுறான்.. என மனதில் அர்ச்சணையிட்டு.. ‘அப்பா.. இவர் எதுக்கு முதல்ல இங்க உக்கார்ந்திருக்கார்..? நான் எதுக்கு அவரை மாமான்னு கூப்பிடனும்..?” என்றாள் வெறுப்பாக.
‘என்னம்மா… நீ… பெரியவங்கள அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. அவர் உனக்கு மாமாமுறைதான் ஆகுது..” என நீலகண்டன் சொல்ல..
‘அப்பா உங்களையும் மிரட்டினாரா..? நீங்க ஏம்ப்பா இப்படி பேசிறிங்க?”
ஆனந்தியிடம்.. ‘நான் அவள அப்புறம் பேசிக்கிறேன். நீ எனக்கு டிபன் வை..” என்றான் அதிகாரமாக.
‘என்ன ஒரு அதிகாரம்..” என்று அபர்ணா முனுமுனுத்தாள்.
நீலகண்டன்.. ‘நம்ம வீடு தேடி வந்திருக்கவங்ககிட்ட இப்படி பேசக்கூடாதுமா..” என அபர்ணாவை கண்டித்து..
‘வெற்றி தப்பா எடுத்துக்காத.. அவளுக்கு உன்னபத்தி தெரியாது.. ஆனந்தி வெற்றிக்கு முதல்ல டிபன் வை..” என்றார்.
‘மூஞ்சைப்பார்.. எங்கப்பாவையே மிரட்டிட்டல்ல..?” என அபர்ணா முனுமுனுக்க..
‘நான்தான் சொல்றேன்ல அபர்ணா.. வெற்றி நமக்கு முக்கியமான உறவுன்னு.. அவர்கிட்ட நீ சாரி கேளு..” என்றதும்.. தன் தந்தையை பரிதாபமாக பார்த்தாள்.
‘அப்பா சொல்றேன்ல..?” என்றார்.
வெற்றி.. ‘சாரியெல்லாம் எனக்கு வேணாம் மாமா… என்னை மாமான்னு கூப்பிட சொல்லுங்க..” என்றான் சிரித்துக்கொண்டே..
‘நான் மாட்டேன்.” என்று முகத்தை திருப்பினாள்.
’சரி.. மாமா வேணாம்னா.. அத்தான் பரவாயில்லையா..?” என்றான்.
’தயவுசெய்து சாப்பிடுங்க. அபர்ணா வந்து உட்காருடி ப்ளீஸ்..” என்றாள். பிறகுதான் அபர்ணா சாப்பிட்டாள்.
‘வெற்றி.. உங்கத்தை இன்னைக்கி நைட் உன்னை இங்கையே தங்க சொன்னா..” என நீலகண்டன் சொல்ல.. கரும்பு திண்ண கூலிகிடைத்த சந்தோசத்தில் வெற்றியின் முகம் ஜொலிக்க..
தவிப்புடன்.. ‘நான் போய் அம்மாக்கு மாத்திரை கொடுத்திட்டு வரேன்..” என்று ஆனந்தி கிளம்ப..
‘வெற்றி இன்னைக்கு இங்கதான் தங்க போறார். மாடில இருக்க ரூமை கொஞ்சம் க்ளீன் பண்ணிகொடுத்திடுமா..” என்றார் சங்கடமாக.
வெற்றி மாமன் மகனாக வந்திருந்தால்.. நீலகண்டனுக்கு சங்கடம் இருந்திருக்காது.. அவன் ஆனந்தியை காதலிக்கிறான் எனத் தெரிந்ததும் பழைய பகையை மனதில் வைத்து சந்திரவாணன் என்ன சொல்வாரோ என்ற எண்ணமிருக்க.. எதுவும் தீர அறியாமல் தன் மகளின் மனதை கெடுக்கிறோமோ என்ற தவிப்புமிருக்க.. அவருக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. எனினும் நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு இரத்த பந்தமாக உரிமையோடு வந்து நிற்கும் வெற்றியை விட்டுவிடவும் முடியவில்லை.
‘மாமா.. ஆனந்திகிட்ட நான் கொஞ்சம் பேசனும்..” என்றான் மீண்டும்.. கெஞ்சும் தோரணையில்.
சமையலறையில் வெற்றி நடந்து கொண்டதிலேயே அதிர்வுற்றிருந்தவள்.. ‘வேண்டாம்..” என்றாள் சன்னக்குரலில்.
வெற்றியின் முகம் சட்டென வாட.. ‘நீ போய் ரூமை க்ளீன் செய்டா..” என ஆனந்தியை அனுப்பி வைத்தவர்..
‘நான் சொன்னா ஆனந்தி கேட்டுக்குவா.. சொந்தங்களோடு இருந்து வளர்ந்திருந்தான்னா.. இதெல்லாம் அவ சகஜமா எடுத்துக்குவா. எங்க கைக்குள்ளையே வளர்ந்திட்டா.. அதில்லாம இந்த கல்யாணத்துக்கு உங்கப்பா ஒத்துக்கிறாரோ இல்லையோ.. எதுவும் முடிவாகாம ஆனந்தி மனசை கஷ்டப்படுத்திடாத.. நான் சொல்லவரது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. என்ன பேசனுமோ சீக்கிரம் பேசிட்டு.. ஆனந்தியை கீழ அனுப்பிடு.. குட் நைட்..” என சொல்லி சந்திரமதியிடம் சென்றார்.
நீலகண்டன் பின்னோடே வந்த வெற்றி.. ‘மாமா ஆனந்தி மனசு கஷ்டபடுற மாதிரி நான் நடந்துக்கனும்னு என்னைக்குமே நினைச்சதில்ல… அவதான் அதைப் புரிஞ்சிக்க மாட்றானா… நீங்களும் இப்படி என்னை தப்பா நினைக்கிறது.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. எனக்காக என்னை அவளுக்கு பிடிக்குதான்னு தெரிஞ்சிக்கதான் நான் அவகிட்ட பேசப்போறேன்.. வேற ஒன்னும் இல்ல..“ என்றான் அசிங்கப்பட்ட முகவாட்டத்துடன்.
‘உன்னை தப்பா சொல்லனும்னு எனக்கில்ல வெற்றி.. வளர்ந்திட்டாலே தவிர.. ஆனந்தி இன்னும் சின்ன பொண்ணுதான். உன்கிட்டன்னு இல்லை.. என்கிட்ட உங்கத்தைகிட்ட கூட அளவாதான் பேசுவா.. அபர்ணாகிட்ட மட்டும் தான் நல்லா பேசுவா.. அதனால தான் சொல்றேன்..” என்றார் சமாதானமாக.
‘ஆனந்தி மனசு தெரிஞ்சாதான் எங்கப்பாகிட்ட இதுபத்தி பேசமுடியும்.. எனக்கும் ஒரு தங்கை இருக்கா.. பொண்ணுகிட்ட கேவலமா நடந்துக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல..” என்றான் மன்றாடலாக.
வெற்றியின் பேச்சில் நிம்மதியடைந்த நீலகண்டன் சரி என்பதாய் இன்முகத்தோடு தலையசைக்க..
‘தேங்க்ஸ் மாமா…” என்று சந்தோசத்துடன் வெளியே வந்தான்.
மாடியறையை சுத்தம் செய்து.. அப்பொழுதுதான் ஆனந்தி வீட்டினுள் வர.. ‘எனக்கு வந்து.. மாடில ரூமைக் காட்டு..” என்றான்.
‘இந்த பக்கமாதான் படி இருக்கு.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.” என்று தன் கையால் மாடிப்படியின் திசையை காட்டினாள் தலைகுனிந்தபடியே.
‘இந்த பக்கமா…தான் படி இருக்குன்னு எனக்கும் தெரியுது. நான் உன்கிட்ட பேசனும்.. மேல வா..” என்றான் அதிகாரமாக.
‘இல்லைல்ல இங்கையே பேசலாம். “ என்றாள் அவசரமாக.
‘உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன். மேல வா..” என்றான் கனிவாக.
‘இங்கையே பேசலாமே ப்ளீஸ்..” என்றாள் மீண்டும்.
‘நீ வரலைன்னா.. நான் மாடியிலிருந்து சத்தமா கூப்பிடுவேன்.”
‘சரி.. அப்பாகிட்ட சொல்லிட்டு வரேன்…” என்று கலக்கமாக பார்க்க..
‘அதெல்லாம் நான் சொல்லிட்டேன் வா..” என சொல்லி மேலே போனான்.
சற்று நேர யோசனைக்குப் பிறகு.. ஆனந்தி மேலே வந்து அமைதியாக நின்று கொண்டிருந்தாள். ‘இது உங்க வீடுதானே.. நான் சொல்லனுமா உள்ளேவான்னு…?” என்றான் கட்டிலில் அமர்ந்தபடி.
முந்தானையின் நுனியை கையால் சுருட்டியபடியே உள்ளே வந்து நின்றாள் ஆனந்தி.
‘சாரி.. நான் அப்படி பண்ணிருக்கக் கூடாதுதான். ஆனா நீ என்னை ரொம்ப டென்சன் பண்ற தெரியுமா…? இப்பக்கூட உனக்காகத்தான் சாரி கேட்டேன். நான் செய்தது எனக்கு தப்பாப்படல. ஏன்னா.. நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன் நம்ம கல்யாண விசயத்தில..” என்றான். அதற்கும் அவள் அமைதியாகவே இருக்கவும்..
‘நானே எவ்ளோ நேரம்தான் பேசறது..?” என்றான்.
‘நீங்க எங்க சொந்தம்னு நினைக்கிறேன். அதான் எங்கப்பா உங்ககிட்ட நல்லா பேசுறார்.. உங்களை இங்க தங்கவும் சொல்லியிருக்கார்.. ஏதோ என்கிட்ட மறைக்கிறிங்க.. நீங்களும் வேற எதுக்காகவோதான் என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறிங்க.. ஆனா என்னை மட்டும் அப்பாக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிறாயான்னு.. கேள்வி கேட்கிறிங்க..“ என்றாள்.
‘ம்ம்… பரவாயில்லை. மனசுவந்து கொஞ்சம் பேசிட்ட.. பர்சனலா உனக்கு என்னை பிடிக்காத அளவுக்கு என்கிட்ட என்ன குறையிருக்கு..?” என்று ஆனந்தியையே பார்த்திருந்தான்.
‘எங்கப்பாம்மா லவ் மேரேஜ் செய்ததாலதான் எங்கம்மாவோட அண்ணன் உறவே இல்லாம போய்டுச்சி.. எனக்கு எங்கப்பாம்மா முக்கியம்.. அதனால லவ் மேரேஜ்ல எனக்கு விருப்பமில்ல.. மத்தபடி உங்ககிட்ட குறை நிறைன்னு நான் எதுவுமே யோசிக்கல..” என்றாள்.
Advertisement