Advertisement
அத்தியாயம்–6
ஆனந்தியும்.. அபர்ணாவும் ஒரே நேரத்தில் வீட்டிற்க்குள் நுழையவும்.. நீலகண்டன்.. ‘என்னம்மா? அதுவும் ஒரே டைம்ல வந்திருக்கிங்க.. என்றார்.
‘ஆமாம்ப்பா.. நாங்க இன்னைக்கு வெளில போய்ட்டு வந்தோம்.” என்றாள் அபர்ணா.
‘என்னம்மா விசயம்..? என்கிட்டக்கூட சொல்லலையே..? அம்மாகிட்ட சொன்னிங்களா..?” என்றார்.
‘இல்லப்பா இனிமே தான் உங்க ரெண்டு பேர்கிட்டையுமே சொல்லனும்.. நாம அம்மா ரூம்ல உட்கார்ந்து பேசலாமாப்பா..?” என்றாள் ஆனந்தி.
‘சரிம்மா வாங்க…” என்றார்.
தயக்கத்துடன் உள்ளே சென்ற ஆனந்தி ‘அம்மா..” என்றாள் சன்னக்குரலில்.
‘வந்துட்டிங்களா ஆனந்தி.. ஏன் இரண்டு பேரும் டல்லா இருக்கிங்க…? உடம்பு சரியில்லையா…?” என்றார்.
‘நல்லாதான்மா இருக்கோம்.. நான் உங்க இரண்டு பேர் கிட்டையும் ஒரு விஷயம் சொல்லப்போறேன் கொஞ்சம் பதட்டப்படாம பொறுமையா கேளுங்க ப்ளீஸ்..” என்றாள்.
சந்திரமதியும்.. நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
‘என்னம்மா? எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லும்மா.. அது எதுவா இருந்தாலும்.. நான் உங்க ரெண்டு பேரையும் ஒன்னும் தப்பா நினைக்கமாட்டோம்.. ” என்றார் நீலகண்டன்.
ஆனந்தி கொஞ்சம் தைரியம் வரப்பெற்றவளாய் ‘அம்மா.. ஒருத்தர் என்கிட்ட.. நான் உன்னைத்தான் கல்யாணம் செய்வேன்னு சொல்றாருமா. நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்திட்டேன்.. என் பேச்சை கேக்கவேமாட்டுக்கிறார்.. உங்க வீட்ல நீ பேசிறியா…? இல்ல நான் வந்து பேசட்டுமான்னு மிரட்டுறார்மா..” என பயந்து பயந்து சொல்லிமுடித்தாள்.
கோபமாக.. ‘இது எப்பயிருந்து நடக்குது…?”என்றார் சந்திரமதி.
‘இரண்டு வருசமா என்கிட்ட சொல்றார்மா. ஆனா நான் அவரை இன்னைக்கோட சேர்த்து இரண்டுமுறைதான் பார்த்திருக்கேன். அவர் வேற ஒருத்தர் மூலமாதான் என்கிட்ட பேசுவார்.. இன்னைக்கும் அவர் முன்னாடிதான் என்கிட்ட பேசினார். அபர்ணாகிட்டயும் இன்னைக்குதான் இதுபத்தி சொன்னேன்..” என்றாள்.
‘ஓ.. அதனாலதான் அவ சொல்லித்தான் எங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சா உனக்கு..? யார் அவன்..? பேர் என்னன்னு அவனைப் பத்தி ஏதாவது தெரியுமா…? அவன் மிரட்டலுக்கு பயந்து அவன்கிட்ட ஏதாவது பதில் சொல்லியிருக்கியா…?” என முறைத்தார் சந்திரமதி.
‘இல்லம்மா.. ஒரு பதிலும் நான் சொல்லலை.. ஊர் கிருஷ்ணகிரியாம்.. அம்மா பேரு மணிமாலாவாம்.. அப்பா பேரு சந்திரவாணனாம். இத மட்டும் உங்க அம்மாகிட்டையும் அப்பாகிட்டையும் சொல்லு.. அது போதும்.. அப்புறம் உங்க அம்மா.. என்ன சொல்றாங்கன்னு மறைக்காம என்கிட்ட சொல்லனும்.. நான் உனக்கு போன் பண்னுவேன்னு சொன்னார்மா..”
‘உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னானே.. அவன் பேரை முதல்ல சொல்லு..?” என்று பதட்டமாக கேட்டார் சந்திரமதி. நீலகண்டன் அப்படியே உறைந்துவிட்டார் என்றே சொல்லலாம்.
‘அவர் கூட வந்தவர்தான் வெற்றி.. வெற்றின்னு சொன்னார்மா.. அவரோட முழு பேர் என்கிட்ட சொன்னார்.. ஆனா.. எனக்கு மறந்திடுச்சி.” என்றாள்.
அவன் நெம்பர் உன்கிட்ட இருக்கா..?” என்றனர் இருவரும்.
‘இல்லைம்மா…. என் நெம்பர் கூட நான் அவர்கிட்ட கொடுக்கல.. என் நம்பர் அவருக்கு எப்படி தெரிம்ன்னு எனக்கு தெரியாது.”
‘அவன்கூட ஒருத்தன் வருவான்னு சொன்னியே.. அவன் நெம்பராவது தெரியுமா..? என்றார் பதட்டத்தோடே.
’அவர் என்னோட எம்.டி. தான் மா. ஆனா.. இன்னைக்கு அங்க நாங்க போனதுக்கப்புறம்தான் ஆனந்தியை டார்ச்சர் பண்றவர் இவர்ன்னு எனக்குத்தெரியும்.” என்றாள் அபர்ணா.
‘சரி .. உங்க எம்.டி.கிட்ட அவன் நெம்பர் வாங்கு முதல்ல..” என அவசரப்படுத்தினார் சந்திரமதி.
ஆனந்தி சிவமுகிலனுக்கு அழைக்க.. ‘சொல்லுங்க ஆனந்தி.. வீட்டிற்க்கு பத்திரமா போய்டிங்கதானே..?” என்றான்.
‘ம்ம்.. போய்ட்டோம்.. அவரோட நெம்பர் கொஞ்சம் கொடுக்கறிங்களா..? எங்க அம்மா கேட்டாங்க.” என்றாள் சிறுமியாய்.
‘அதுக்குள்ள பேசிட்டிங்களா..?” என வியந்து.. ‘சரி வெற்றி நெம்பரை சொல்றேன்..” என சொன்னதும் குறித்துக்கொண்டவள்.. ’சரி… நான் வைச்சிடறேன்.” அவன் பதிலைக்கூட எதிர்பாராமல் கட் செய்தாள்.
சிவமுகிலன் வெற்றிக்கு கால் செய்து.. ‘வெற்றி… ஆனந்தி போன் செய்தாங்கடா… உன் நெம்பரை கேட்டாங்க.. கொடுத்திருக்கேன் பார்த்துக்க..” என்றான்.
‘சரி நான் பார்த்துக்கறேன்.. வெச்சிடவா?” என கேட்க..
‘வெற்றி.. கொஞ்சம் பொறுமையாப் பேசு..” என கட் செய்தான்.
‘நான் பேசறேன் சந்திரா…” என்றார் நீலகண்டன்.
‘இல்லைங்க.. அவன் என்ன பேசுவான்னு தெரியாது.. உங்ககிட்ட ஏதாவது தப்பா பேசிட்டான்னா.. என்னால அதை தாங்கிக்க முடியாது. நானே பேசறேன்..
ஆனந்தி.. அவனுக்கு போன்செய்து என்கிட்ட கொடுத்திட்டு.. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில இருங்க..” என்று சொல்ல.. ஆனந்தியும்.. அபர்ணாவும்.. ரூமிற்கு வெளியே ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனந்தி நம்பரைப் பார்த்ததும்.. ‘எப்படி இருக்கிங்க அத்தை..?” என்றான் வெற்றிமாறன்.
அத்தை என்ற வார்த்தையில் பேச்சற்றுப் போனார் சந்திரமதி.
‘அத்தை.. அத்தை .. ஹலோ… லைன்ல இருக்கிங்களா…?” என்றான்.
‘வெற்றி…” என்றார் உணர்ச்சிப்பெருக..
‘வெற்றிமாறன் தான் பேசறேன். நீங்க என்னோட சந்திரா அத்தைதான பேசிறிங்க..?” என கேட்க.. போனை கட் செய்துவிட்டார் சந்திரா.
‘என்னாச்சி… என்ன சொன்னான்..? ஏன் போனை கட் பண்ண சந்திரா?” என்றார் நீலகண்டன்.
‘இல்லைங்க.. அவன் பிரச்சனைப் பண்ண வந்த மாதிரி தெரியலை.. எவ்ளோ உரிமையா… சின்ன வயசில என்கூட பேசினமாதிரியே பேசறான். என்னாலதான் பேசமுடியலை.. அதான் நானே கட் பண்ணிட்டேன்.”
‘ஏன் சந்திரா கட் பண்ன..? எதுவாயிருந்தாலும் நாம சந்திச்சிதான ஆகனும்..?” என நீலகண்டன் வருந்த..
‘அவன் ரொம்ப உரிமையா பேசறான். என்னவோ தெரியலை.. எனக்கு அவனைப் பார்க்கனும்போல இருக்கு. உங்களுக்கு சம்மதம்னா… நான் அவனை நம்ம வீட்டிற்க்கு கூப்பிடட்டுமா…?” என்றார் தயக்கத்தோடு.
நீலகண்டன் அமைதியாக இருக்க.. ‘எங்கண்ணனால.. நீங்கதான் ரொம்ப அவமானப்பட்டுட்டிங்க.. உங்களுக்கு பிடிக்கலன்னா வேணாம்..”
‘நான் அதப்பத்தியெல்லாம் இப்ப யோசிக்கலை.. அப்படியேன்னாலும்.. உங்க அண்ணன் பேசினதுக்கு.. இவன் என்ன பண்னுவான்..? இன்னும் சொல்லப்போனா…. நமக்கு கல்யாணம் நடக்கும்போது.. இவனுக்கு ஒரு நாலுவயசு இருக்குமா..? இவ்ளோ நாள் கழிச்சி நம்மகிட்ட பேசறான்னா.. எப்படியும் நம்மளைப் பத்தி அவனுக்கு உங்க அண்ணன் தான் சொல்லியிருப்பார்.
இல்லைன்னா இவன் எப்படி நம்ம ஆனந்திகிட்ட.. இந்த விசயத்தை உன் வீட்ல.. நீ பேசலைன்னா.. நானே பேசுவேன்னு மிரட்டியிருப்பான்..? இது சின்ன பசங்க விசயம் இல்ல.. நீ வீட்டுக்கே கூப்பிட்டு பேசு.. ஆனா எல்லாரையும் விட.. நமக்கு நம்ம பொண்ணுதான் முக்கியம்.. ஆனந்தியோட விருப்பம் முக்கியம்.. அதையும் மனசில வைச்சிக்கிட்டு பேசு..” என்றார்.
அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும்..
‘அட்டன் செய்து.. ஸ்பீக்கர் ஆன் பண்ணு..” என்றார் நீலகண்டன்.
‘அத்தை ஏன் போனை கட் பண்ணிங்க…? உங்க பொண்ணை விடுங்க.. என்னை நாலு வருசமா.. நீங்கதான் வளர்த்திங்கலாம்..? அதுக்காக கூட என்கிட்ட பேசமாட்டிங்களா…? என்கிட்ட பேசாம போனை கட் பண்ற அளவுக்கு நான் உங்களை என்ன பண்ணினேன்…?” என்றான் உரிமையாக.
‘என்னமோ… ஆனந்திகிட்ட இன்னைக்கு நீ பேசலைன்னா.. என் அத்தைகிட்ட நாளைக்கு நானே வந்து பேசுவேன்னு சொன்னியாமே…? தைரியம் இருந்தா.. என்கிட்ட நேர்ல வந்து பேசு..” என்றார் சந்திரமதி.
‘அத்தை.. நிஜமாவா சொல்றிங்க..? தைரியமெல்லாம் நம்ம குடும்பத்துக்கு பரம்பரை சொத்துமாதிரி.. அதிலும் எனக்கு ரொம்ப அதிகம்.. இப்பவே உங்க வீட்டுக்கு வந்து நிரூபிக்கட்டுமா…?” என்றான் சந்தோசமாக.
‘சரி வா.” என்றார்.
‘ஒரு அரைமணி நேரத்தில நான் வந்திடறேன்.” என்றான்.
வெளியே வந்த நீலகண்டன்.. ‘ஆனந்தி.. அந்த பையன் இன்னும் கொஞ்ச நேரத்தில இங்க வரப்போறான்.. நான் உன்னை கூப்பிடும்போது இங்க வந்தாப் போதும். நீங்க உங்க ரூம்க்கு போங்க. நான் அம்மாகிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றார்.
இருவரும் உள்ளே சென்றதும்.. கணவரிடம்.. ’இங்க வந்து நான் ஆனந்தியைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு கேட்டான்னா.. என்ன பண்ணலாம்?” என்றார் சந்திரமதி.
‘ஒன்னுமட்டும் புரிஞ்சிக்கோ.. உன் சந்தோஷத்தைவிட நம்ம பகை முக்கியமில்லை. நமக்கும் வயசாகுது. எங்க சைடுன்னு பார்த்தின்னா.. நான் சின்ன வயசா இருக்கும்போதே எனக்காகன்னு யாருமில்லை. நம்ம குழந்தைகளுக்கு நம்ம காலத்துக்கு அப்புறம் யாருமே இல்லையேங்கிற வருத்தம் எனக்கு எப்பவுமே இருக்கும்.. உங்கண்ணன் மகன்தான் நம்ம மருமகன்தான்னா.. ரொம்ப சந்தோஷம்தான். ஆனாலும்.. ஆனந்தியோட முடிவு இதுல ரொம்ப முக்கியம். வெற்றி கம்ப்பல் பண்றமாதிரி நாமளும் பண்ணக்கூடாது புரிஞ்சதா..? அதோட உங்கண்ணனும் அவர் மகனுக்காக பகையை மறந்து நம்மவீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கனும்..” என பேசிக்கொண்டிருக்க..
வாசலில்.. காலிங்பெல் அடித்தது. நீலகண்டன் வெற்றியை அடையாளம் காண ஆனந்தியை அழைக்க.. ஆனந்தி தயக்கத்துடன் வெளியே வந்தாள்.
‘நீ பயப்படுற அளவுக்கு அவன் ஒன்னும் பண்ண மாட்டான். நாங்க இருக்கோம்ல… பயப்படாம வா… அவன்தான் வெற்றியான்னு மட்டும் பார்த்து சொல்லிட்டு நீ உன் ரூம்க்கு போயிரு..” என ஆனந்தியோடு கதவைத்திறந்தும்..
ஆனந்தி சொல்லாமலே வெற்றியை இனம் கண்டார் நீலகண்டன். வெற்றி அவனது அப்பாவின் சாயலை அப்படியே உரித்திருந்தான். நல்ல நிறம். ஆறடி உயரம்.. ஸ்டைலாக டிரிம் செய்த மீசை.. தாடி.. என்று வெற்றியின் வடிவில்… புதிய சந்திரவாணனைப் பார்த்து மெய் மறந்து நின்றார் நீலகண்டன்.
‘இவர்தான்ப்பா..“ என்ற ஆனந்தியிடம் உள்ளே போ என கண்ணசைத்து.. ‘உள்ள வாப்பா…” என்றார் வெற்றியை.
அவன் அமைதியாக நின்றுகொண்டே இருக்க.. ’என்னப்பா.. ? வா..”
‘இல்ல மாமா…” என இழுத்தவன்.. ‘முதன்முதலா இங்க வரேன்.. அதனால ஆரத்தி ஏது.. எடுப்பிங்களோ..ன்னு நினைச்சேன்..” என்று சிரித்தான். நீலகண்டன் வெற்றியை முறைக்க..
‘ம்ம்… அது இல்லைன்னாலும் பரவாயில்லை மாமா.. அதுக்கு பதிலா நான் வலதுகாலை எடுத்து வச்சி உள்ளே வந்திடுறேன்..” என்றபடி உள்ளே வந்தான்.
நேராக சந்திரமதியிடம் வெற்றியை அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும்.. ’மாமா… அத்தையால தானாக எழ முடியாதுன்னு எனக்கு தெரியும். அத்தை பக்கத்தில வந்து ஒரு நிமிசம் உட்காருங்க…“
எதற்க்கென்று தெரியவில்லையென்றாலும்.. எப்படியும் உட்கார்ந்து பேசித்தான ஆகனும் என நினைத்து.. சந்திரமதியிடம் சென்று அமர…
‘என்னை இரண்டு பேரும் ஆசிர்வாதம் பண்ணுங்க..“ என காலில் விழுந்தான்.
‘என்னப்பா இது..? முதல்ல எழுந்திரு.” என்றார் நீலகண்டன்.
ஆனால்.. ‘சந்தோஷமா நூறு ஆயுசுக்கு இருப்பா.. “ என்ற சந்திரமதிக்கு சந்தோசத்தில் அழுகை வந்தது.
‘என்னங்க அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணிட்டு இப்படி அழறிங்களே…” என்றான் கிண்டலாக.
‘முதல்ல உட்காரு.. அண்ணன் அண்ணி எப்படி இருக்காங்க?” என்றார்.
‘அம்மா நல்லா இருக்காங்க.. அப்பாக்கு தான் ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி.. இப்ப நல்லா இருக்கார்..”
‘ஹார்ட் அட்டாக்கா..” என பதறிய சந்திரா.. தன் அண்ணனின் நலனையே மீண்டும் மீண்டும் கேட்டு.. பிறகு அமைதியாகிட..
‘இப்ப உடம்பு எப்படி அத்தையிருக்கு?” என்றான் வெற்றி.
‘உன் அத்தைக்காகவா இங்க வந்த..? ஆனந்திக்காகதான வந்த..?” என முறுக்கினார் சந்திரமதி.
‘முதல்ல உங்களைத் தேடித்தான் இந்த ஊருக்கு வந்தேன்.. அன்னைக்கு உங்களோட சேர்த்து ஆனந்தியைப் பார்த்ததும்.. அவதாண்டா உன் பொண்டாட்டின்னு என் உள்மனசு சொல்லிடுச்சி..” என தன்மனதையும் சொல்லி தன் அத்தை மாமாவையே மாறிமாறி பார்த்திருந்தான்.
‘உன் உள்மனசை எங்கண்ணாக்கிட்ட சொல்லிட்டியா..?” என்றார் நக்கலாக.
போச்சிடா… என நினைத்து.. ‘அப்பகிட்ட நான் கல்யாணம் செய்தா.. ஆனந்தியை மட்டும்தான் பண்ணுவேன்னு சொல்லியிருக்கேன்.. ஆனா.. ஆனந்தி யாருன்னு அப்பாக்கு தெரியாது..” என்றான்.
‘அதுக்கு அப்பா என்ன சொன்னார்?” என்றாள் சந்திரமதி
‘இப்போதைக்கு ஒத்துக்கல.. ஆனந்தி உங்க பொண்ணுதான்னு தெரிஞ்சா ஒத்துக்குவார்ன்னு நினைக்கிறேன்த்த..” என்று சங்கடமாய் இருவரையும் பார்த்தான்.
சந்திரமதி நீலகண்டனைப் பார்க்கவும்.. ‘சரி .. நீ என்ன சாப்பிடுற..?” என்றார் நீலகண்டன்..
‘சாரிடா வெற்றி.. உன்னைப் பார்த்த சந்தோசத்தில.. சாப்பிடக்கூட சொல்லனும்னு எனக்கு தோணவேயில்லை.. ஏங்க ஆனந்திகிட்ட சொல்லி ஏதாவது ஸ்வீட் எடுத்திட்டு வர சொல்லுங்க..” என்றார் சந்தோசமாக.
‘ஒரு நிமிசம் மாமா.. ஆனந்திகிட்ட நான் அவளோட மாமா பையன்னு சொல்லாதிங்க.. என்னை எனக்காக பிடிச்சவளைத்தான் கல்யாணம் செய்துக்கனும்னு நினைச்சிருந்தேன்.. எல்லாம் உங்க பொண்ணை பார்க்காதவரைதான்.. இனி ஆனந்திக்கே என்னை பிடிக்கலன்னாலும்.. அவளை கட்டாய கல்யாணமாவது செய்துக்கனும்ங்கிற முடிவுக்கு வந்திட்டேன்.. எங்கப்பா உங்களை திட்டினதெல்லாம் எங்கம்மா என்கிட்ட சொல்லியிருக்காங்க.. எங்கப்பா உங்களை திட்டினதையெல்லாம் மன்னிச்சி.. என்னை ஏத்துக்குவிங்களா மாமா..?” என்றான் கெஞ்சலாக.
‘அதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம் வெற்றி.. முதல்முறையா உங்கத்தையை தேடி வந்திருக்க.. எதாவது சாப்பிடு..” என முடித்து..
ஆனந்தியை அழைத்து.. ‘தம்பிக்கு ஏதாவது ஸ்வீட் இருந்தா எடுத்திட்டுவா.” என்றார்.
ஆனந்தி ஆச்சரியமாக பார்க்க.. ’போம்மா..” என்றார் சிரித்தபடியே..
சற்று நேரத்தில் ஜாங்கரியோடு வந்தவள்.. நீலகண்டனிடம் கொடுத்தாள்.
‘ஆனந்தி.. தம்பிக்கும் சேர்த்து டிபன் பண்ணிடுமா.. வெற்றி இன்னைக்கு இங்கதான் சாப்பிடுவார்..” என்றார். அதிர்ச்சியோடு வெற்றியைப் பார்த்தாள். அவன்தான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தானே.. இரண்டு கண்களையும் மந்தகாசமாய் சிமிட்டிட.. இனம்புரியாத அவஸ்த்தையோடு வெளியேறினாள் ஆனந்தி.
ஜாங்கிரி சாப்பிட்டதும்.. அந்த ரூமில் தண்ணீர் இல்லை என்பதை உறுதிசெய்து.. ‘அத்தை தண்ணிவேணும்..” என்றான்.
‘ஆனந்தி.. கொஞ்சம் தண்ணி கொண்டுவாம்மா.” என்றார்.
ஆனந்தி தண்ணீரோடு வர.. ’நான்தான் கேட்டேன்.. என்கிட்ட கொடு..” என்று அவள் கையில் இருந்த தண்ணீரை வாங்க.. இம்முறை படபடப்போடு வெளியேறினாள் ஆனந்தி.
‘மாமா.. பழசை மனசுல வச்சிக்காம.. ஆனந்தியை எனக்கு கல்யாணம் பண்ணி குடுப்பிங்களா..?” என்று விட்ட இடத்திலேயே தொடர்ந்தான்.
‘உங்க அப்பாக்கு இதுல சம்மதம்னா எங்களுக்கு சம்மதம். ஆனா.. ஆனந்தி சம்மதமும் முக்கியம்..” என்றார் நீலகண்டன்.
‘அப்பாக்கு முன்ன உங்கமேல இருந்த கோபம் எல்லாம் இப்ப இல்ல. இப்ப இருக்கிறது ஈகோதான். ஹார்ட் சர்ஜரிக்கப்புறம் எனக்கு சந்திராவைப் பார்க்கனும்னு அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு அழுதார்.. யார்ப்பா சந்திரா..? எங்கயிருக்காங்கன்னு சொல்லுங்க.. நான் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்.. உங்களைப்பத்தி சொல்லிட்டு.. நம்மஊர்ல யாரோ பத்து வருசத்துக்கு முன்ன உங்களை இந்த ஊர்ல பார்த்ததா சொன்னாங்கனும்.. இப்பவும் இதே ஊர்லதான் இருக்கிங்களான்னு தெரியலைன்னும் சொன்னார்.. அதுக்கப்புறம்தான் உங்களை தீவிரமா தேட ஆரம்பிச்சேன்..
இரண்டு வருசத்துக்கு முன்ன அத்தையையும் ஆனந்தியையும் பார்த்தேன்.. அப்பவே ஆனந்தியைத்தான் கல்யாணம் செய்துக்கனும்னு முடிவுசெய்திட்டேன்.. அப்பாக்கு உடம்பு சரில்லாம ஆனதிலயிருந்து எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. மூனுமாசத்துக்கு முன்ன.. திரும்பவும் அப்பாக்கு நெஞ்சுவலி வரவும்.. உடனே எனக்கு கல்யாணம் பண்ணணும் ரொம்ப படுத்துறாங்க.. ஆனந்தியை தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் செய்துக்க முடியாது.. உங்க பொண்ணு.. என்னைப் பார்த்தாலே.. வில்லனைப் போல பார்க்கிறா.. அதனாலதான் எனக்கே கஷ்டமா இருந்தாலும் அவகிட்ட காட்டிக்காம மிரட்ட ஆரம்பிச்சிட்டேன்..” என்றான் சங்கடமாக.
‘எப்படியோ.. என்னென்னவோ செய்து.. கடைசியில.. இங்க வந்து பேசிட்டயில்ல…?” என்றார் சந்திரா.
‘ம்க்கூம்.. நான் என்ன செய்தும்.. ஒரு பதில் கூட உங்க பொண்ணு சொல்லவேயில்லை. உங்க வீட்டுக்கே வந்துட்டேன்.. எப்படி நீங்க இரண்டுபேரும் என்கிட்ட இயல்பா இருக்கிங்கன்னு இந்நேரம் யோசிச்சிட்டிருப்பா.. இப்போவாவது என்னை பிடிக்குதான்னு கேட்கனும்.. அப்புறம் மிரட்டினதுக்கு சாரி கேட்கனும்.. நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா அவகிட்ட கொஞ்சம் தனியா பேசனும் மாமா..” என்றான் தயக்கத்தோடு.
வெளியிலிருந்து.. ‘அப்பா.. டிபன் ரெடிப்பா..” என்றாள் ஆனந்தி.
‘மத்ததை அப்புறம் பேசிக்கலாம்.. முதல்ல சாப்பிடு..” என வெற்றியோடு வெளியே வந்து..
ஆனந்தியிடம்.. ‘அம்மாவை சாப்பிட வச்சிட்டு நான் சாப்டுக்கிறேன்.. நீயும் அபர்ணாவும் வெற்றியோட உக்கார்ந்து சாப்பிடுங்கமா..” என்றார்.
‘அம்மா சாப்பிட்ட வச்சிட்டு.. நீங்களும் வாங்கப்பா.. நாம சேர்ந்தே சாப்பிடலாம்.. எனக்கு இப்ப பசியில்லை… “ என்றாள்.
‘நம்ம வீடுதேடி வந்திருக்கவங்களை பசியோட காக்க வைக்ககூடாது.. வெற்றிக்கு டிபன் எடுத்துவை.. அவர் சாப்பிட்டபிறகு நாம சாப்பிடலாம்.” என சந்திராவிடம் சென்றார்.
வெற்றியோடு தனித்து அவ்விடம் நிற்க முடியாமல்.. ஆனந்தி சமையலறைக்கு சென்றாள். நீலகண்டன் பின்னோடே வெற்றியும் சென்றான்.
‘வெற்றி நீ போய் சாப்பிடுப்பா… என்றார் சந்திரா.
‘அத்தை நீங்க சாப்பிடுங்க.. நான் அப்புறம சாப்பிடுறேன்.” என்றான்.
‘இல்லப்பா.. அவளுக்கு நான்தான் ஊட்டிவிடுவேன்.. நீ இருந்தா சங்கடப்படுவா.. நீ போய் சாப்பிடு..” என்றார் சந்திரவாணன்.
‘உங்க கையால ஒரே ஒரு வாய் அத்தை சாப்பிடட்டும்.. பார்த்திட்டு போய் நான் சாப்பிடறேன்..” என்றான் ஆசையாக.
நீலகண்டன் ஒருவாய் ஊட்டிவிட்டதும்.. ‘ம்ம்… இப்பப் போறேன்.” என்று ஹாலுக்கு வந்தான். அங்கு ஆனந்தி இல்லையென்றவுடன் கண்களை சுழற்றினான்.
Advertisement