Advertisement
அத்தியாயம் — 21
அபர்ணாவின் திருமணம் முடிந்த மூன்றாம்நாள்.. வெற்றியின் குடும்பம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாக.. ‘அண்ணி.. இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு போங்களேன்..” என்றார் சந்திரமதி.
‘இன்னும் கொஞ்சநாள்க்கப்புறம் எல்லாரும் ஒன்னாத்தான இருக்கப்போறோம்.. அங்க எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கும் சந்திரா.. நாங்க கிளம்பறோம்..” என்ற மாலாவின் முகம் முற்றிலும் இயல்பை தொலைத்திருந்தது.
‘ஏண்ணி ஒரு மாதிரியிருக்கிங்க..?” என கவலையாய் கேட்க..
‘இந்த காயத்ரி என்னை சாகடிக்காம விடமாட்டா போல..” என கண்கலங்கினார் மணிமாலா.
‘ஏன்..? என்னாச்சி.. எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்க..?” என பதற..
‘அங்க ஊர்ல சதீசுன்னு ஒரு பையன்..” என ஆரம்பித்து சதீசின் குடும்பம்பற்றி விளக்கி.. ‘அந்த வக்கத்த பையலுக்குபோய் எப்படி சந்திரா அவளை கட்டிகொடுக்கிறது..? பெத்து.. பாராட்டி சீராட்டி வளர்த்து.. ஒரு பஞ்சப்பரதேசி கையிலபோய் எப்படி ஒப்படைக்கிறது..?” என்று ஆதங்கப்பட..
அங்கு வந்த காயத்ரி.. ‘வக்கத்தவன்.. பஞ்சப்பரதேசி.. என்ன பேச்சுமா இது..?” என்று சற்று உயர்த்திய குரலில் அழுத்தமாக கேட்ட காயத்ரியின் குரல்கேட்டு வெற்றி அங்கே வந்திருந்தான். வெற்றியின் பதட்டமுகத்தை பார்த்த ஆனந்தியும் வெற்றிபின்னோடே வந்திருந்தாள்.
‘என்னடி குரலெல்லாம் உசருது..?” என மாலா முறைக்க..
‘எதுன்னாலும் என்னை கேளுங்க.. இல்ல கொன்னுபோடுங்க.. சதீசை மரியாதையில்லாத பேசறதுக்கு நீங்க யாரு..?” என்றாள் கோபமாகவே.
‘நான் கேக்காம.. வேறயார் கேப்பா..? ஒன்றதுக்குகூட வீடில்லாத நாய்ங்களுக்கு மாளிகைவீட்டு பொண்ணு கேக்குதா..? இதுக்குத்தான் உன்னை பெத்து வளர்த்தேனா..?” என கத்த..
‘யாரை நாய்ங்கிறிங்க..? உங்ககிட்டயிருந்து சொத்துபத்து.. நகைநட்டெல்லாம் வாங்கிட்டு.. என் கழுத்தில தாலிகட்ட நினைக்கிறவன்தான் பிச்சக்காரநாய்.. சதீஸ் மானஸ்த்தன்..” என்றாள் ஆத்திரத்தோடு.
‘ப்ச்.. வா காயு…”என தங்கையை அதட்டி.. அவளின் கையைப்பிடித்து இழுக்க.. அண்ணனின் பிடியிலிருந்து தன் கையை உருவியவள்..
‘அண்ணா.. சதீசுக்கு என்னை கட்டிகொடுக்கமாட்டனுட்டாங்கல்ல..? அப்புறம் எதுக்கு அவனை தேவையில்லாம பேசுறாங்க..?” என பொங்கினாள் அழுகையோடு.
மாலா.. ‘நாங்க பார்க்கிற மாப்பிளையை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லு.. நான் அவனைப்பத்தி நினைக்ககூட மாட்டேன்..”
‘அதுக்கு நான் செத்தே போய்டலாம் ..” என்றாள் தாமதமின்றி.
‘இந்த பூச்சாண்டி காட்ற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. அத்தனை ஈசியா உன்னை சாகவிட்ருவேனா..?” என்றார் எள்ளலாக.
‘ஓ.. கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துவைக்கிற ஐடியால இருக்கிங்களா..? இன்னும்தான் உங்களுக்கு அது அசிங்கமாகும்..” என காயத்ரி எச்சரிப்பதுபோல் பேச..
‘என்னடி செய்திடுவ..?”என மாலா எகிற..
‘சதீஸ் வீட்டைத்தவிர.. வேற யார்வீட்டுக்கு என்னை அனுப்பிவச்சிங்க.. அதுக்கப்புறம் அந்தவீட்லயிருந்து என் பொணம்தான் வெளிலவரும்.. கல்யாணத்துக்கு முன்னாடிதான சாகமுடியாது.. கல்யாணத்துக்கப்புறம் செத்தா என்ன செய்விங்க..?” என்றாள் உறுதியோடு..
சற்றே பயந்த மாலா.. ‘பார்த்தியாடா உன் தங்கச்சி பேசுறதை..?” என வெற்றியிடம் கண்ணீர் வடித்தார்.
‘ம்மா.. சதீஸ் ரொம்ப நல் லபையன்.. அவவிருப்பப்படிதான் வாழட்டுமேமா.. வசதிபத்தலன்னா நாம சரிசெய்யலாம்..” என்றான் வெற்றி.
வெற்றி தங்கைக்காக பேசவும்.. ‘அவன்தான் மானஸ்த்தனாச்சே.. அவனுக்கு எதுக்கு நாம செய்யனும்..?” என்றார் கடுப்போடு.
‘மானமுள்ள மச்சானுக்குத்தான்மா நிறைய செய்யனும்..” என்றான் சிரிப்போடு.
‘அவனை கட் டிகிட்டு இவ எப்படிடா சந்தோசமா வாழ்வா..? அவதான் புரியாம பேசுறானா.. நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ற..” என்றார் ஆதங்கத்தோடு.
‘சதீஸ் நம்ம காயுவை நல்லா பார்த்துப்பான்மா.. என் செல்ல அம்மால்ல.? அப்பாகூட ஓ.கே சொல்லிட்டார்..” என்றான் கெஞ்சலாக.
‘என்ன..? உங்கப்பா ஒத்துக்கிட்டாரா..? என்கிட்ட கேக்காமலே அவர் எப்படி முடிவெடுத்தார்..?” என கோபிக்க..
சந்திரவாணனும் நீலகண்டனும் உள்ளே வர.. ‘அந்த பையனுக்குத்தான் இவளை கட்டிகொடுக்க போறிங்களா..?” என தளர்வாய் கேட்க..
‘அதான..? எங்கம்மாவாவது எங்கப்பாவை எதிர்த்து பேசறதாவது..? இப்போ கொஞ்சம் முன்ன.. அப்பாமேல எதோ கோபப்பட்டிங்க போல..?” என வெற்றி சிரிக்க..
வெற்றியை முறைத்த கண்கள்.. தன் கணவனை கேள்வியாய் பார்க்க.. ‘ஆனந்தியை நான் லவ் பண்றேன்னு சொல்லும்போது ஒத்துக்காம.. உங்க தங்கை பொண்ணுன்னதும் ஒத்துக்கிட்டிங்க.. சொந்தத்தில லவ் பண்ணினா தப்பில்ல.. பிறத்தின்னா மட்டும் தப்பான்னு.. உன் பையன் கேக்குறான்..” என்றார் சந்திரவாணன்.
‘ஏங்க.. சொந்தம் பிறத்தின்னு இல்ல.. உங்கபொண்ணு ஒரு நாள் போடுற டிரெஸ்சை மூனு நாலு மாசம் கழிச்சிதான் மறுபடி போடுவா.. தலைக்கு போடுற சாம்ப்பு ல இருந்து காலுக்கு போடுற நைல்பாலிஸ் வரைக்கும் எல்லாமே அதிக விலைபோட்டுத்தான் வாங்குவா.. அவங்க ரொம்ப ஏழப்பட்டவங்க.. நான் சொன்னா கேளுங்க.. இது சரிவராது..” என்றார் மன்றாடலாக.
‘அம்மா..” என ஏதோ காயத்ரி சொல்ல வரவும்.. ‘காயு.. பெரியவங்க பேசிட்டிருக்காங்கல்ல.. அமைதியா இரு..” என வெற்றி அதட்ட..
‘சரிண்ணா எல்லாம் நீ பார்த்துக்கோ.. நான் மாடிக்கு போறேன்..” என நம்பிக்கையோடு வெற்றியிடம் பொறுப்பை ஒப்படைத்து அவ்விடம்விட்டு நகர்ந்தாள் தங்கை.
‘நம்மகிட்ட சொல்லாம ஓடிப்போய் கல்யாணம் செய்துகிட்டாங்கனா.. என்ன செய்யமுடியும்..? அடிச்சி மிரட்டி இன்னொருத்தனுக்கு கட்டிகொடுத்து.. வாழமாட்டேன்னு வந்து நின்னாளா.. அதுக்கப்புறம் நம்மால நிம்மதியா இருக்கமுடியுமா..?
ஒரு காதலை எதிர்த்து இத்தனை வருசம் என் தங்கையை பிரிஞ்சியிருந்தது போதும் மாலா.. என் பொண்ணை பிரிஞ்சிருக்க என்னால முடியாது..
நாமளா மாப்பிள்ளை பார்த்தாலும்.. சீர் சினத்தின்னு செய்யாமலா இருக்கப்போறோம்..? நம்மகிட்ட இருக்கிற சொத்தெல்லாம் நம்ம இரண்டு பிள்ளைகளுக்குத்தான..? பையன் வீட்ல வசதியில்லன்னா என்ன..? நம்ம பொண்ணை நாம பார்த்துக்கலாம்.. குழந்தைங்க சந்தோசம்தான் நமக்கு முக்கியம்..” என்றார் தன்மையாக.
வெற்றியை முறைத்து.. ‘இப்படியெல்லாம் யோசிக்கசொல்லி இவன்தான சொல்லிகொடுத்தான்..? என்னவோ பண்ணுங்க..” என்றார் கணவனிடம்.
‘ம்மா.. உன் மருமகனைப் பார்த்தன்னு வை.. நீயே அசந்திடுவ.. நல்ல எக்சைஸ்பாடி.. நம்ம காயு கலருக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருப்பான்.. திறமையானவன்.. அன்பானவன்..” என வெற்றி அடுக்கிக்கொண்டே போக..
மாலா..‘பார்த்திருக்கேன்.. பார்த்திருக்கேன்.. நம்ம வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளியிருக்கிற அந்த காலியிடத்திலதான சின்னபசங்களுக்கு தினமும் சிலம்பம் கத்துகொடுத்திட்டிருக்கான்..” என்றார் அசால்ட்டாக.
வெற்றி சிரிக்க.. ‘உன் தங்கைக்கு நீ கொடுக்கிற செல்லம்தான்.. இதெல்லாத்துக்கும் காரணம்..” என கடிந்தார்.
ஆனந்தியை உயிரற்ற பார்வை பார்த்தவன்.. ‘நான் கொடுக்கிற செல்லமில்லமா.. சதீஸ் நல்லா பார்த்துப்பான்னு.. காயு அவ காதலன்மேல நம்பிக்கை வச்சிருக்கா..” என்றான்.
எதுக்கு இந்த ஜாடைப் பேச்சு..? என்ற கடுப்போடும் வாடிய முகத்தோடும் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் ஆனந்தி.
எவ்ளோ கோபமிருந்தாலும் இவமுகம் வாடினா மட்டும் நம்மால தாங்கமுடியமாட்டுது ஆள்மயக்கி.. என மனதில் கடிந்தவன்.. மனைவியை எதிர்பார்த்து ஹாலில் வந்தமர்ந்தமர.. அவள் அங்கில்லையென்றதும்..
‘காயு..” என்று சத்தமாக அழைத்தான்.
அப்பாம்மா என்ன சொன்னார்களோ என்ற எதிர்பார்ப்பில்.. மாடியிலிருந்து சிட்டாக பறந்துவந்தாள் காயத்ரி.
ஆனந்தியின் நினைவில் தங்கையிடம் என்ன பேசுவதென புரியாமல்..
‘அபர்ணா இல்லாம போரடிக்குது..” என்றான் முகம்சுருக்கி.
‘ப்ச் ண்ணா.. அம்மா என்ன சொன்னாங்க..?” என்றாள் ஆவலாக.
‘அம்மா ஒத்துக்கலன்னா விட்றவாபோற..?” என்றான் சிரிப்போடு.
‘அண்ணா.. சொல்லுங்க..” என கெஞ்ச..
‘ம்ம்..” என்றான் தன் கட்டைவிரலை உயர்த்தி.
‘ஹே..” என வெற்றியை கட்டிக்கொண்டாள் சந்தோசமாக.
‘உங்கண்ணிகிட்ட நான் டீ கேட்டேன்னு சொல்லு..” என்றனுப்பினான்.
டீ வைப்பதற்காக ரூமிலிருந்து வெளியே வந்தவளை பார்க்க.. முகம் கலங்கி சிவந்திருக்கவும்.. எழுந்து ஆனந்தியின் அறைக்குள் போனான்.
பத்துநிமிடம் கழித்து.. ஆனந்தி டீயோடு அறைக்குள் வர.. வெற்றி பாத்ரூமில் இருக்கும் அரவம் கேட்டு.. அவன் வெளியே வரும்வரை காத்திருந்தவள்.. வெற்றி வந்ததும் தலைகுனிந்தபடி அவன்முன் டீயை நீட்ட.. டீயை வாங்கியவன் அதை டேபிளில் வைத்து திரும்ப.. அதற்குள் அவ்விடம்விட்டு சென்றிருந்தாள்.
ஆனந்தி கிளம்பியது அப்படியொரு கோபத்தை கிளம்ப.. கொஞ்சநேரம் இங்கயிருக்க முடியாதா இவளால..? என மனதில் கடுகடுத்தான்.
மதியம்போல் ஊருக்கு கிளம்பும் போது.. ஆனந்தி அருகிலிருக்கவே.. அபர்ணாவிற்கு அழைத்து.. அவளோடு சற்றுநேரம் மலர்ந்த முகத்தோடு சிரித்து பேசியவன்.. ‘டைம் கிடைக்கும்போது சிவாவை கூட்டிட்டு வீட்டுக்கு வா அபர்ணா..” என்று முடித்து மனைவியை பார்க்க..
நீ யாரோடு பேசினால் எனக்கென்ன..? என்பதுபோல் முகத்தை வைத்திருந்தாள். எதுவாகினும் வெற்றி நேரடியாக தன்னை திட்டும்போது பொறுத்துக்கொண்ட மனம்.. தற்போதெல்லாம் காயத்ரியிடம் பேசுவதுபோல் தன்னிம் ஜாடைபேசுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை ஆனந்தியால்.
தன் அத்தைமாமாவை மதியஉணவு சாப்பிட அழைத்தவள்.. ‘காயு.. சாப்பிடவா..” என குரல் கொடுத்து.. வெற்றியையும் சாப்பிடவா.. என கண்களால் அழைப்புவிடுத்து.. அனைவருக்கும் பரிமாறிய ஆனந்தியின் முகம் வெகுவாய் வாடியிருந்தது.
Advertisement