Advertisement
அத்தியாயம் –19
தனது தாய்தந்தையிடம்.. ‘ஆனந்திக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கிற வரைக்கும் கோயமுத்தூர்ல இருக்கட்டும்..” என சொல்ல..
சந்திரவாணனுக்கு இது புது செய்தியாக இருக்க.. ‘ஏன்ப்பா.. மருமக வேலைக்கு போயே ஆகனுமா..? வேலையை ரிசைன் பண்ண சொல்லிடேன்..” என்றார்.
‘ஆனந்தியோட திறமைக்கு கிடைச்ச வேலைப்பா அது.. ரொம்ப பிடிச்சி அந்த வேலைக்கு போய்ட்டிருக்கா.. அவங்க காலேஜ்லயும் இவளுக்கு நல்லபேர் இருக்கு.. வேலைக்கு போனாதான் அவ சந்தோசமா இருப்பா..” என்றான் மனைவியின் மனமறிந்து.
‘என்னடா இது..?” என சலித்தவர்.. ‘சரி ஒரு மாசத்துக்காவது லீவ் போட சொல்லு..” என்றார்.
‘அத்தைக்கும் உடம்பு சரியில்லாத நேரமா இருக்கு.. அதோட அபர்ணா கல்யாணத்தை இன்னும் நாலு மாசத்துக்குள்ள வச்சிடுவாங்கப்பா.. அபர்ணா கல்யாணம் முடிஞ்சதும் அத்தையும் மாமாவும் இங்கையே வந்திடறேன்னு சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள ஆனந்திக்கும் டிரான்ஸ்ஃபர் கிடைச்சிடும்.. அதுக்கப்புறம் உங்க மருமக உங்களோடவேதான் இருப்பா..” என முடிவாக வெற்றிமாறன் சொல்ல..
சந்திரவாணனும் தன் தங்கைக்காக வேறுவழியின்றி இதனை ஒப்புக்கொண்டிருந்தார். பதினைந்துநாள் திருமண விடுமுறை முடிந்ததும்.. ஆனந்தியை அவளின் அம்மாவீட்டிற்க்கு அழைத்துவந்தவன்.. தன் அத்தைமாமா மனம்கோளாமல்..
‘டிரான்ஸ்பர் கிடைக்க இன்னும் நாலஞ்சி மாசமாவது ஆகுமாம்.. நான் சனி ஞாயிறுகளில் வந்து பார்த்துக்கிறேன்..” என தன்மையாகவே சொன்னான்.
எனினும் நீலகண்டனுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை.. ‘மூனு மாசத்துக்கு மெடிக்கல் லீவ் போடட்டும் வெற்றி.. அதுக்குள்ள டிரான்ஸ்ஃபர் கிடைச்சிடும்.. இல்லன்னாலும் பணம் கொடுத்து ஏற்பாடு செய்ய முடியுமான்னு பார்க்கலாம்..” என எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்.
‘இப்போதைக்கு மெடிக்கல் லீவெல்லாம் போடவேணாம் மாமா.. அப்புறம் கன்சீவானாளா லீவ் போடமுடியாம ஆகிடும்.. அப்பாவேற காயத்திரிக்கும் வரன் பார்த்திட்டிருக்கார்.. அவளுக்கு கல்யாணம் முடிவானதும்.. அதுக்கு லீவ் போடறமாதிரி வரும்..” என்பதுபோன்ற காரணங்களை சொல்லி நீலகண்டனையும் சம்மதிக்கவைத்திருந்தான்.
முதல் இரண்டு வாரங்கள் தொடர்ந்து வந்தவன்.. பிறகுவந்த நாட்களில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வர ஆரம்பித்திருந்தான். வெற்றி இங்கு வந்தாலும்.. அபர்ணாவோடும்.. தன் அத்தை மாமாவோடும்தான் அதிக நேரம் செலவிடுவான்.. சிவமுகிலனோடு சிறிதுநேரம் செலவிடுவான்.. ஆனந்தியோடு நீண்டநேரம் செலவிடுவது.. இரவில் மட்டுமே.. அங்கும் தன் இளமைக்கான செயல்கள்தானே அன்றி.. வார்த்தைகள் சொற்பமே..
இதோ.. இதுபோலவே இரண்டுமாதங்கள் முடிந்திருந்தது. இம்முறை வரும்போது.. தன் அத்தை மாமாவின் வேண்டுகோளுக்கிணங்கியும் அதோடு காயத்திரியும் ஆனந்தியை காண விருப்பம் தெரிவிக்கவும்.. தங்கையை அழைத்து வந்திருந்தான்.
வெற்றி வரும்போதெல்லாம் அபர்ணா.. அத்தான் அத்தான்.. என்று வெற்றிமாறனையே சுற்றிக்கொண்டிருந்தாள். அதோடு காயத்ரியும் அபர்ணாக்கு நல்ல தோழியாக மாற.. அபர்ணாவிற்கு பொழுதுகள் மிக சந்தோசமாக கழிந்தது.
காயத்திரி ஒருமாதத்திற்கு இங்கேயே இருக்கட்டும் என்று சந்திரா சொல்ல.. வெற்றியும் சில காரணங்களுக்காக அதற்கு சம்மதம் தெரிவித்து.. தான் மட்டும் கிருஷ்ணகிரிக்கு சென்றான்.
காயத்ரி இங்கு வந்து பதினைந்து நாள் முடிந்திருக்க.. ஆனந்தி வெற்றியை போனில் அழைத்தாள்.
‘பரவால்லயே.. போனெல்லாம் பண்ற..” என்றான் நக்கலாக.
ஆனந்திக்கு இருந்த பயத்தில் வெற்றியின் நக்கலெல்லாம் புரியவில்லை.. ‘உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசனும்.. இந்தவாரம் வாங்க..” என்றாள் சீரியசாக.
என்னவென்று ஃபோனில் அத் தனைமுறை கேட்டும்.. ‘நீங்க இங்க வாங்க நேர்ல பேசிக்கலாம்..” என்று ஆனந்தி சொல்ல.. காயத்ரி விசயம் ஆனந்திக்கு தெரிந்துவிட்டதென்று வெற்றிக்கு புரிந்தது..
‘சரி.. நான் வரேன்..” என்று சொன்னதுபோலவே வந்தவன்.. தனது அத்தையையும் மாமாவையும் நலம் விசாரிக்க அவர்களின் அறைக்கு செல்ல.. அவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்ததால்.. அமைதியாக வெளியே வந்தான்.
‘அபர்ணா வேலைக்கு போய்ட்டாளா..?” என ஆனந்தியிடம் கேட்க.. ஆம் என தலையசைத்த ஆனந்தின் முகம் வாட்டமாக இருக்க..
எத்தனை கோபமிருந்தாலும் மனைவியின் சோர்ந்த முகத்தை காண சகியாமல்.. ‘காயு சதீசை லவ் பண்றது எனக்கு தெரியும் ஆனந்தி.. அதுக்கெதுக்கு நீ இவ்ளோ பதட்டமா இருக்க..?” என்று கேட்க..
ஆனந்தி அதிர்ச்சியோடு வெற்றியை பார்க்க.. காயத்ரியின் உடல் நடுக்கமெடுக்க.. ஆனந்தியின் பின் ஒளிந்தாள்.
காயத்ரியை பார்த்தவன்.. ‘இங்க வா காயு..” என்றான்.
மெல்ல வெற்றியருகே வந்தாள். சிறுபிள்ளைபோல் தங்கையை தன்மடிமீது அமரவைத்தவன்.. ‘அப்பாகிட்ட சதீசைப் பத்தி பேசியிருக்கேன்..” என்று சொல்ல.. முகம் அதிர்ச்சியைக் காட்டினாலும்.. கண்கலங்கியது காயத்ரிக்கு.
தங்கையின் கண்களை துடைத்துவிட்டவன்.. ‘அப்பா ஒத்துக்கலதான்.. ஆனா அப்பாவை நான் கன்வீனியன்ஸ் செய்துக்குவேன்.. என் பயமெல்லாம் உன்மேலதான்..” என்று காயத்தியை யோசனையோடு பார்க்க..
‘சதீஸ் நல்லவன்ணா.. என்னை நல்லா பார்த்துப்பான்..” என்றாள் சன்னக்குரலில்..
‘சதீசை வேணாம்னு சொல்ற அளவுக்கு.. அவன்கிட்ட குறைன்னு ஒன்னுமே இல்ல.. எந்த கெட்டபழக்கமும் இல்லாத நல்லபையன்தான்.. வீட்டுக்கு ஒரே பையன்.. சதீசோட அப்பாம்மாவும் ரொம்ப நல்லமாதிரிதான்.
ஆனா.. சதீசோட கடைசி வரைக்கும் நீ சந்தோசமா இருப்பியா..? நம்மவீட்ல எந்த குறையுமில்லாம செல்லமா வளர்ந்திட்ட.. சதீஸ் வீட்ல வசதி கம்மின்னு சொல்லமுடியாது.. வசதியே இல்லன்னுதான் சொல்லனும்.. இங்க இருக்கிற மாதிரியே அங்கயும் எதிர்பார்க்கக்கூடாது.. வாடகை வீட்லதான் இருக்காங்க.. அதுவும் ரொம்ப சின்னவீடுதான்.. அவங்களோட பொருளாதாரத்துக்கு ஏத்தமாதிரி உன்னால வாழமுடியும்னா சொல்லு.. அப்பாகிட்ட நான் பேசுறேன்..” என்றான் வாஞ்சையாக.
‘அவங்களோட வசதிக்கேத்த மாதிரி என்னால வாழமுடியுமா தெரியாது.. ஆனா.. சதீசைத் தவிர வேற யாரோடவும் என்னால வாழமுடியாது ண்ணா..” என்றாள் உறுதியோடு.
காயத்ரியின் பதிலில் திருப்தியில்லாதவன்.. ‘தெரியாதுனா என்ன அர்த்தம்..? எல்லாம் இப்போ நல்லாத்தான் இருக்கும்.. பணப்பிரச்சனைதான் பின்னால பெரிய பெரிய பிரச்சனையை உருவாக்கும்.. எதுவாயிருந்தாலும் கான்ஃபிடன்ட்டா சொல்லு..” என்று கோபமாக மிரட்ட..
‘ஆடம்பர செலவை குறைச்சிக்குவேன்.. அன்றாட தேவைக்கே பணம் பத்தலன்னா.. சம்பாதிக்கிறதுக்கு எதாவது செய்னு சண்டை போடுவேன்.. நானும் படிச்சிருக்கேன்.. தேவைன்னா வேலைக்கு போவேன்.. அதுக்காக சதீசை விட்டுட்டெல்லாம் வரமாட்டேன்..” என்றாள் சின்ன சிரிப்போடு.
தங்கையை பெருமையாய் நினைத்தவன்.. ‘ஏன்.. என்கிட்டல்லாம் பணம் கேக்கமாட்டியா..?” என்றான் செல்ல முறைப்போடு.
‘ஏன்.. நாங்கல்லாம் சம்பாதிக்கமாட்டமா..?” என்றாள் கெத்தாக.
இம்முறை கோபத்தோடே வெற்றி முறைக்க.. ‘தேவைப்பட்டா கேட்பேன் ண்ணா.. ஆனா.. நம்ம பணபலத்தை சதீஸ்கிட்ட காண்பிச்சி.. அவரை அசிங்கப்படுத்தமாட்டேன்.. எனக்கு அது பிடிக்காது..” என்று சொல்ல.. பெருமையாய் சேர்த்தணைத்தான் தன் தங்கையை.
‘வாலிபால் கோச்கிட்ட அப்படி என்னதான் ஸ்பெசல்..?” என்றான் குறும்பு சிரிப்போடு.
‘இவ்ளோ ஏழ்மையிலயும்.. நிறைய குழந்தைகளுக்கு இலவசமா சிலம்பம் கத்துகொடுக்கிறான்.. வெள்ளிகிழமையானா.. அவங்கம்மா தலைமுடிக்கு சாம்பிராணி கொடுப்பான்.. சன்டே ல அவங்கம்மாக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு.. அவன்தான் சமைப்பானாம்.. அவங்கப்பாவை வேலைக்கு போக விடறதில்ல.. அப்பாம்மா மேல உயிரையே வச்சிருக்கான்.. அவன்கிட்ட எனக்கு பிடிச்சதே இதெல்லாம்தான்..
ஹிஸ்ட்ரி டீச்சர் ண்ணா அவன்.. நான் வேணாம்னு சொல்லியும்.. அவனுக்கு பிடிச்ச டீச்சிங் வேலையை விட்டுட்டு.. இப்போ நாலு மாசமா.. எனக்காக ஒரு ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு போய்ட்டிருக்கான்..” என்றாள் மிகுந்த பெருமையோடு.
‘பார்டா.. வாலிபால் கோச்சுக்கு.. சிலம்பம்ல இருந்து.. கம்ப்யூட்டர் வரைக்கும் எல்லாம் அத்துபடியா..? பரவால்லையே.. அப்போ என் தங்கையை நல்லாதான் பார்த்துப்பான்.. நான் அப்பாட்ட பேசுறேன்..” என்றான்.
என்ன பிரச்சனை வருமோ என பயந்திருந்த ஆனந்தி.. இன்ப அதிர்ச்சியோடு தன் கணவனை பார்த்திருக்க..
ஆனந்தியை பார்த்தவன்.. ‘சிலபேருக்கு கல்யாணம் ஆனாலும்.. காதல்னா என்னன்னே புரியறதில்ல காயு.. ம்ம்.. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்..” என ஏக்கத்தோடு பெருமூச்சிழுத்தான்.
‘ஏன் ணா அப்படி சொல்றிங்க..?” என காயத்ரி தவிப்போடு கேட்க..
‘ப்ச்.. ஒன்னுமில்ல..” என்று சலிப்பாக சொன்னவன்.. ஆனந்தியின் அறைக்குள் போக.. பின்னோடு ஆனந்தியும் போனாள்.
முகம் கழுவி வந்தவனிடம் டவலோடு லுங்கியும் கொடுத்தாள். வெற்றி அமைதியாக உடைமாற்றிக்கொண்டிருக்க.. ‘சிவா வீட்லயிருந்து அடுத்தவாரம் அபர்ணாவை உறுதி பண்ண வராங்கலாம்..” என்றாள்.
‘ம்ம்.. மாமா சொன்னார்.. சிவாவும் சொன்னான்..” என்றான் அவளின் முகம் பாராமல்.
வெற்றியின் பாராமுகம் ஆனந்தியை தாக்க.. வெகுவாய் கலங்கிப்போனவள்.. ‘நான் போய் டீ எடுத்து வரேன்..” என கரகரப்பான குரலில் சொல்லவும்..
‘எனக்கு டீ வேணாம்..” என்றான் கடுப்பாக. வெற்றியின் கோபத்தில் பெருகிய கண்ணீரோடு வெளியே போக எத்தணிக்க.. அவளின் நீண்ட பின்னலைப் பிடித்தவன்..
‘நான் வந்ததும் இப்படி அழுதுட்டே டீ வைக்க போனினா.. அத்தையும் மாமாவும் என்னை என்ன நினைப்பாங்க..? அதோட காயத்ரியும் ஹால்லதான் உக்கார்ந்திருக்கா.. இப்படி அழுது வடிஞ்சிட்டு அவமுன்ன போனினா.. என்னை பிடிக்காம நீ கல்யாணம் செய்துகிட்டது அவளுக்கும் தெரிஞ்சிடும்..” என்றான் எரிச்சலாக.
‘நான் ஒன்னும் பிடிக்காத கல்யாணம் செய்துக்கல.. பிடிச்சிதான் செய்துகிட்டேன்..” என்றாள் கண்ணீரோடே வீராப்பாக.
‘ம்ம்.. பிடிச்சிதான் கல்யாணம் செய்துகிட்ட.. ஆனா என்னை இல்ல.. உங்கம்மாக்காக.. அவங்களோட அண்ணன் மகனை கல்யாணம் செய்துகிட்ட.. என் இடத்தில உன் தாய்மாமனுக்கு மகனா.. ஒரு பைத்தியக்காரன் இருந்திருந்தாலும் அவனைத்தான கல்யாணம் செய்திருப்ப..?” என முறைக்க..
வேறு ஒருவனோடு திருமணமா..? ச்ச.. என மனதினுள் அறுவறுத்து முகம் சுழித்தவள்.. ‘இல்ல.. அன்னைக்கு காபிடேல வச்சி.. எங்கம்மாகிட்ட வந்து பேசுறேன்னு நீங்க என்னை மிரட்டுனதிலயிருந்தே எனக்கு உங்களை பிடிச்சிருச்சி..” என தன்னை புரியவைக்க முயல..
விரக்தியாய் ஆனந்தியை பார்த்தவன்.. ‘என்னது..? என்னை பிடிச்சிருக்கா..? அப்படி ஒன்னும் எனக்கு உன்கிட்ட தெரியலையே.. சிவாவைப் பத்தி அபர்ணாகிட்ட பேசிப்பாரு.. சிவாவுக்கான அபர்ணாவோட காதல்.. அவ கண்ல தெரியும்..
கொஞ்சம் முன்ன காயத்ரி சதீசுக்காக எப்படி பேசினா பார்த்தல்ல..? இதுக்கும் சதீஸ் குடும்பம் ரொம்ப ஏழ்மையானவங்க.. நம்ம வசதியை காட்டி சதீசை கேவலப்படுத்தமாட்டேன்னு.. என்கிட்ட கூட சதீசை விட்டுக்கொடுக்காம எப்படி பேசுறா பார்த்தியா..? அதுக்குப்பேர்தாண்டி காதல்.. கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி.. இப்பவும் சரி.. இப்படி எதுவுமே உன் கண்ல நான் பார்த்ததில்ல..
உன் கண்ல எனக்கு தெரியறதெல்லாம் உன் கண்ணீரும்.. பயமும்தான்.. என்னை பார்த்து பயந்துக்கிற அளவுக்கு நான் என்ன பண்றேன் உன்னை..?” என்றான் ஆற்றாமையாக.
ஆனந்தி அமைதியாக இருக்க.. அதில் மேலும் கடுப்பானவன்.. ‘சரி விடு.. இனி நைட்லயும் உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்..” என்று கையில் இருந்த டவலை கடுப்போடு பெட்டில் போட்டு.. அறையிலிருந்து வெளியேற.. பெருகிய கண்ணீரோடு தளர்வாய் கட்டிலில் சரிந்தாள் ஆனந்தி.
நீலகண்டன் அறையில் அவரின் குரல் கேட்டவன்.. ‘நல்ல தூக்கமா மாமா..” என்றபடி உள்ளே போனான்.
‘வா வெற்றி.. எப்போ வந்த..?” என்றார் சந்திரமதி.
‘நான் வந்து ஒருமணி நேரமாகுது அத்தை.. நல்ல தூக்கத்தில இருந்திங்க.. அதான் டிஸ்டர்ப் பண்ணல..” என்றான்.
பிறகு மூவரும் அபர்ணாவின் நிச்சயதார்த்தத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் ஒரு மணிநேரமாக..
மாலை ஆறுமணிபோல் அபர்ணா வீட்டுக்குள் நுழைய.. வெற்றியின் குரல் கேட்டவள்.. ‘அத்தாhhhன்… நான் வந்திட்டேன்…” என உற்சாகத்தோடு கத்த..
அபர்ணாவின் குரல் கேட்டு எழுந்த ஆனந்தி.. முகம் கழுவி வெளியே வந்தாள்.
‘ஹேய் வாங்க வாங்க.. கல்யாணப் பொண்ணு..” என்றான் வாஞ்சையாக.
முகம் சிவந்தவள்.. ‘ஊர்ல அத்தைமாமா எப்படியிருக்காங்கத்தான்..? மாமா செக்கப் போனாரா..?” என்றாள் அக்கறையாக.
ஆனந்தி அருகில் நின்றிருக்க.. ‘அத்தை மாமாவை விசாரிக்கிறதுக்கு கூட அபர்ணாக்கு முகம் சிவக்குமா..?” என கேட்டு மனைவியை குற்றப் பார்வை பார்த்தவன்..
‘ம்ம் உன் மாமாக்கென்ன..? அவர் தங்கச்சி பொண்ணை மருமகளாக்கிட்டோம்ங்கிற பெருமையில இருக்கார்.. முன்னைவிட இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கார்..” என்றான் சந்தோசமாகவே.
கணவனின் பார்வையை உணர்ந்தவள்.. ஆமாமா.. காதலில்லாமத்தான் நீ பேசுற பேச்சுக்கெல்லாம் அமைதியா இருக்கேன் பாரு.. என மருகி அவ்விடம் விட்டு அகன்றாள்.
இரவுவரை ஹாலிலேயே அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தவன்.. இரவு ஒன்பதுமணிபோல் சாப்பிட்டு அறைக்குள் போனான்.
எப்பொழுது ஊருக்கு வந்தாலும்.. பகலில் மனைவியிடம் சரிவர பேசாவிடினும்.. இரவினில் கூடிக்களித்தபிறகே உறங்குபவன்.. இன்று ஆனந்தி வருத்தத்தில் இருக்கிறாள் என தெரிந்தும்.. சற்றுமுன் சொன்னதுபோல் ஆனந்தியை இரவினிலும் விலக்கிவைக்கும் முடிவோடு கட்டிலில் விட்டத்தை பார் த்தபடி படுத்திருந்தான்.
பால் டம்ளரோடு உள்ளே வந்தவள்.. ‘பால் குடிங்க..” என நீட்ட..
‘இத்தனை நாள் இல்லாம.. இதென்ன புதுசா..? எனக்கு பால் பிடிக்காதுன்னு நம்ம பர்ஸ்நைட் அன்னைக்கே சொன்னேன்ல..?” என கடுகடுக்க..
‘இல்ல.. நைட்ல பால்குடிக்காம நீங்க தூங்கமாட்டிங்கன்னு காயு சொன்னா.. எழுந்து குடிங்க..” என்றாள் கெஞ்சலாகவே.
சட்டென எழுந்தவன்.. ‘நீ இல்லாம கூடத்தான் என்னால நைட்ல அங்க தூங்க முடியல.. அதுக்கு என்ன செய்யலாம்..?” என்றான் துளைக்கும் பார்வையோடு.
‘இன்னும் கொஞ்சநாள் தானே..?” என ஆரம்பிக்க..
‘ப்ச்.. என்னை டென்சன் பண்ணாம பேசாம படு..” என கர்ஜித்து கண்மூடினான். பதினைந்து நாளுக்கொருமுறை வந்தானென்றாலும்.. பகலில் சிறு தொடுகை.. அன்பான பேச்சு என எதுவும் கிடையாது.. பார்வையுமே தேவையின்றி பார்க்கமாட்டான்.. இரவினில் மட்டுமே கணவனின் ஸ்பரிசம் கிடைக்கும் மனைவிக்கு.. இன்று அதுவும் கிடைக்காமல் போகவும்.. வெற்றியின் ஒதுக்கத்தை ஆனந்தியால் தாளமுடியாமல் சத்தமாகவே விம்மினாள்.
ஆனந்தி அழுவது தெரிந்தும்.. மௌனத்தை கலைக்காமல் தானும் வெகுநேரம் விழித்திருந்து.. ஆனந்தி தூங்கியதை உறுதிசெய்தபின் பிறகு கண்ணயர்ந்தான்.
அடுத்தநாளும் ஆனந்தியை தவிர் த்து.. அனைவரிடமும் கலகலப்பாக பேசியவன்.. ‘மாமா அடுத்தவாரம் அபர்ணாவோட நிச்சயத்துக்கு அப்பாம்மாவோட வரேன்.. வந்திட்டு போகும்போது காயுவை கூட்டிட்டு போறேன்..” என கிளம்பினான்.
ஒரவாரம் கழித்து.. அபர்ணாவின் நிச்சயத்திற்க்காக குடும்பத்தோடு வந்திருந்தான் வெற்றிமாறன். ஆசையாக காயத்ரி தன் அம்மாவிடம் செல்ல.. மகளின் காதல் பிடிவாதத்தில் கடுமையான முகத்தோடு முகம் திருப்பினார் மணிமாலா.
அம்மாவின் ஒதுக்கத் தில் அதிர்ச்சியான காயத்ரிக்கு கண்ணீர் பெருக்கெடுக்க.. வெற்றி காயத்ரியை தனியாக மாடிக்கு அழைத்து செல்ல.. விடுவேனா என அபர்ணாவும் பின்னோடு சென்றிருந்தாள்.
ஆனந்தி தன் அத்தைமாமாவிடம் நலம் விசாரித்து.. அவர்களோடு பேசிக்கொண்டிருந்தாள்.
‘அண்ணா.. என்னன்னு சொல்லுங்க.. அப்பாகிட்ட சதீசைப் பத்தி பேசிட்டிங்களா..? அவர் ஒத்துக்கலயா..? அம்மா என்ன சொன்னாங்க..?” என பதைப்போடு விசாரிக்க..
‘அப்பாகிட்ட சொன்னேன் காயு.. அப்பா ஒத்துக்கவே மாட்றார்.. அம்மா அப்பாக்கும்மேல இருக்காங்க..” என்றான் முகவாட்டமாக.
‘அம்மா என்ன சொன்னாங்க ணா.?” என்றாள் கலக்கத்தோடு.
‘உன்னை கொன்னாலும் கொன்னுபோடுவாங்களாம்.. சதீசுக்கு கட்டிகொடுக்க சம்மதிக்கமாட்டாங்களாம்..” என்றான் பாவமாக.
‘ஓ..” என்ற ஒற்றை எழுத்தோடு முடித்துக்கொண்டாள் காயத்ரி.
எதுவும் விளங்கமால் அபர்ணா திருதிருவென விழிக்க.. காயத்ரி விசயத்தை அபர்ணாவிடம் விளக்கினான் வெற்றி.
முதலில் வியந்தவள்.. ‘ஏன்த்தான் அத்தை ஒத்துக்கமாட்றாங்க..?” என்றாள் பாவமாக.
‘ச்சு.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அபர்ணா..” என அபர்ணாவோடு சேர்த்து.. தன் தங்கையையும் தேற்றினான் வெற்றிமாறன்.
இரண்டு நாள் கழித்து.. அபர்ணா சிவமுகிலன் விசேசமும் வர.. அபர்ணா சிவமுகிலனையே வெக்கத்தோடு பார்த்திருப்பதையும்.. காயத்ரி தன் காதல் கவலையில் சோர்ந்த முகத்தோடு இருப்பதையும் பார்த்திருந்த ஆனந்திக்கு.. திருமணத்திற்கு முன் அபர்ணாவை போல்.. நாம் வெற்றியிடம் ஒருநாளும் பேசியதில்லையே.. என நினைத்து ஏங்கியவள்..
காயத்ரிபோல் வெற்றியின் தம்மீதான காதலுக்கு நாம் என்னசெய்தோம்..? என யோசிக்க.. வெற்றி தன்னை தனிமையில் சந்திக்க நினைக்கும் போதெல்லாம்.. தம் தாய் தந்தையர் என்ன நினைப்பார்கள் என நினைத்து.. வெற்றியை விலக்கியது மட்டும்தான் நினைவில் வந்தது.. எத்தனைமுறை தம்மோடு தனிமையில் பேச கேட்டிருக்கிறார்.. என முதன்முறையாக கணவன் பக்கமிருந்து யோசிக்க ஆரம்பித்தாள்.
அபர்ணாவின் நிச்சயம் முடிந்து மேலும் இரண்டு நாள்வரை வெற்றியின் குடும்பம் இங்குதான் இருந்தார்கள். இங்கிருந்த நான்கு நாட்களிலும் பகலில் சகஜமாக இருந்தாலும் இரவினில் ஆனந்தியின் முகத்தைகூட பாராமல் தவிர் திருந்தான்.
Advertisement