Advertisement

                       “இல்ல.. நான் அங்கே..” என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, “அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு..” என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..

                        இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன் எதிர்பார்ப்பு என்னவென்று கூடவா விளங்காமல் போகும் அவளுக்கு..

                        அவன் நெஞ்சில் விழுந்தவள் சட்டென நகர்ந்து தலையணையில் முகத்தை அழுத்திக் கொண்டு மகன் புறமாக திரும்பிக் கொண்டாள். அதற்குமேல் எதுவுமே பேச முற்படவில்லை அவள்.

                        ஆனால், அவன் விடுவதாக இல்லை போல… தானும் சரியாக படுத்தவன் பின்னிருந்து அவள் வயிற்றில் கைகொடுத்து அணைத்து கொள்ள, சட்டென எழுந்து அமர்ந்தே விட்டாள்…

                       இன்பன் அவளை புரியாமல் பார்க்க, என்னவென்று சொல்ல முடியும் அவளால்.. இதில் இன்பன் கேள்வியாக புருவம் வேறு உயர்த்த, கண்கள் கூட கலங்கி விடும் போல் இருந்தது…

                       இன்பன் அவளின் அந்த முகவாட்டத்தை காண முடியாமல் மீண்டும் அவளை தன்னிடம் இழுத்து அணைத்து கொள்ள,  இம்முறை அவளின் கண்ணீர் அவன் மார்பை நனைத்தது…

                       “நிச்சயமா.. இதுக்குமேல எந்த ஐடியாவும் இல்ல.. அதுவும் இனியன் நம்மோட இருக்கும்போது அந்த நினைப்பெல்லாம் வராது.. என்மேல நம்பிக்கை இருந்தா, அமைதியா படு… ” என்று அவன் மெல்ல அவள் காதில் உரைக்க

                        அப்போதுதான் தேம்பி அழுதாள் அவள்.. கட்டுப்படுத்தவே முடியாமல் கண்ணீர் வர, “சாரி.. ” என்று திக்கி திணறியது வார்த்தைகள்..

                        “எதுக்கு இந்த சாரி… நீ என்ன மீன் பண்ற சிபி.. என்ன பேசுறோம் ன்னு புரியுதா உனக்கு.. என்கிட்டே சாரி சொல்வியா….” என்று அவன் கடிந்து கொள்ள, பதில் வராமல் அழுகை மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது அங்கே…

                          “இப்போ எதுக்காக அழற சிபி..” என்று அவன் அதட்ட,

                     

                        “உங்களால தான்.. என்னை தனியா விட்டுட்டு எங்கே போனீங்க..” என்று ஒருவழியாக அவள் கேட்டுவிட

                       “ஹப்பா… எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்ட.. இதை கேட்க தெரியாம, மூஞ்சியை தூக்கி வச்சுட்டு, அழுது, சாரி சொல்லி, என்னென்ன பண்ற சிபி நீ…” என்று அவன் பட்டியலிட

                       “அப்போ வேணும் ன்னு தான் செஞ்சீங்களா.. “என்று அவள் விலக

                      அவளை தன் கைவளைவில் அமர்த்தியவன் “ஏன்… செஞ்சா என்ன.. மனசுல நினைக்கிறத வெளியே சொல்ல என்ன தயக்கம் உனக்கு.. “என்று அவள் காதை திருக

                      “அதுவும் உங்களால தான்.. நீங்க அப்படியே பழக்கி வச்சிருக்கீங்க என்னை.. உங்களுக்கு தெரியுமா… இப்போ நீங்க கேட்கிற மாதிரி எதையுமே நான் சொல்ல தேவை இருக்காது.. என் கண்ணை பார்த்தே எனக்கு என்ன வேணும் ன்னு கண்டுபிடிச்சுடுவீங்க நீங்க… அதனால தான் இன்னும் இன்னும் உங்களுக்குள்ள இருக்க என் இனியனை தேடிட்டே இருக்கேன் நான்..” என்று அவள் உண்மையாக உணர்ந்து கூறிக் கொண்டிருக்க, கண்களில் அப்பட்டமான காதல்…

                          இன்பனுக்குதான் அவஸ்தையாக இருந்தது. இப்படி காதலிப்பவளை எப்படி தள்ளி வைப்பேன் நான்… என்று அவன் தன்னையே நொந்து கொள்ள, “இங்கே முதல் நாள் இல்லையா… இனியனும் இன்னைக்கு நிறைய நேரம் தூங்கிட்டே தான் இருந்தான்.. அதுல கொஞ்சம் லோன்லி பீல்.. அவ்வளவு தான்..” என்று சிபி முழுதாக தன் நிலையை சொல்லி முடிக்க, அவளை அனைத்திருந்த தன் கைகளில் லேசாக ஒரு அழுத்தம் கொடுத்தான் இன்பன்.

                             சிபி அமைதியாகவே இருக்க, அவள் நெற்றியில் லேசாக தன் இதழை பதித்தவன், மீள முடியாமல் வெகு நேரம் அங்கேயே தங்கி விட்டான்.. மெல்ல அவளின் கண்கள், கன்னங்கள் என்று அவன் கீழிறங்க, இந்த முறை கண்களை மூடிக் கொண்டிருந்தான்…

                      சிபியும் அவனை தடுக்கும் வழியறியாமல் தவிக்க, கண்களை திறந்து அவள் முகம் பார்த்தவன் மீண்டும் அவளை நெருங்க, இந்த முறை சிபி வேகமாக கண்களை மூடிக் கொண்டாள். அவன் கண்களை சந்தித்தால் தானே தன் மனம் காதலை தேடும்… வேண்டாம்… என்பது அவளின் எண்ணம்…

                         அவளின் அந்த வேகத்தில் சிரித்துக் கொண்டவன் அதற்கு மேலும் அவளை சோதிக்க விரும்பாமல் அவள் இதழ்களுக்கு கீழாக அவள் தாடையில் அழுத்தமாக தன் இதழை பதித்து மீண்டு, அதே இடத்தில லேசாக கடித்தும் வைக்க, சிபி உடல் மெல்லியதாக அதிர்ந்து பின் அடங்கியது..

                   இந்த முத்தமும், இந்த மெல்லிய தீண்டலும் அவளவனுடையது.. இது நிஜம்தானா?? நான் உணர்வது சரிதானே..” என்ற குழப்பத்தில் அவள் மெல்ல தன் கண்களை திறக்க, அங்கே கண்களில் காதலுடன் அவளை வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தான் இன்பன்..

                    சிபி அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவராமல் கண்களில் திரண்டு விட்ட நீரோடு அவனையே பார்த்திருக்க, கேள்வியாக மெல்ல தன் புருவங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஒருமுறை ஏற்றி இறக்கினான் இன்பன்.. இல்லை அவளின் இனியன்…

                     சிபி தன் கையை மெல்ல உயர்த்தி அவன் கன்னத்தை தொட முயல, அவள் கையை பற்றியவன் அவளது உள்ளங்கையில் மெல்ல தன் முத்திரையை பதித்து எழ, அவள் பார்வை மாறாதிருக்கவும் “இன்னும் ஆதாரம் காட்டவா ரசிம்மா..” என்று இனிமையாக இனித்தது அவன் குரல்..

                    அவன் ரசிம்மா விலேயே முழுதாக உடைந்து போனாள் அவள். அவள் கண்கள் நிற்காமல் கண்ணீரை பொழிய, அவளை தன் நெஞ்சில் தாங்கி கொண்டவன் “போதுண்டி பொண்ணே… அதான் உன்கிட்ட வந்துட்டேனே… இன்னும் எதுக்காக இந்த அழுகை…” என்று மீண்டும் அவள் தாடையில் முத்தம் வைக்க, ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ஒவ்வொரு முத்தம் என்று நீண்டது அந்த முத்தம்…

                      மெல்ல மெல்ல தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் “ஏன்.. அப்படி பண்ணீங்க இனியா… நான் செத்தே போயிருக்கலாம்… ஏன் என்னை காப்பாத்தி விட்டிங்க.. இப்படி என்னை மறந்து போகவா…” என்று அவள் கதறி துடிக்க, அவளின் வலி புரிந்தவனாக அவளை அணைத்து கொண்டு மெல்ல தட்டி கொடுத்துக் கொண்டிருந்தான் இன்பன்…

                        அவனின் மனம் அவனின் கடந்தகாலத்தை மெல்ல அசைபோட தொடங்கி இருந்தது தன்னவளின் அருகில் …

Advertisement