யாரு என்று எடுத்து பார்த்தவர் புருவம் உயர்த்தினார்.
“யாரு பா போன் பண்றா?”, என்று கேட்டாள் அன்னம்.
“வில்லங்கம்”
“என்னது வில்லங்கமா? புரியலையேப்பா”
“வதனியா? எதுக்கு? சரி என்ன பிரச்சனையோ அவளுக்கு? என்னனு கேளுங்க”
“நீயே கேளு”, என்று கொடுத்து விட்டு சென்றார்.
தனக்கும் மகள் மேல் கோபம் இருந்தாலும் சரி எப்படி இருக்கா என்று விசாரிப்போம் என்று நினைத்து எடுத்தாள்.
“அம்மா எப்படி இருக்கீங்க?”, என்று சந்தோசமாக ஒலித்தது வதனியின் குரல்.
“எந்த குற்றவுணர்வும் இல்லாம பேசுறா பாரு. இவ எப்ப தான் மாற போறாளோ?”, என்று நினைத்து கொண்டு “நாங்க நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க?”, என்று கேட்டாள் அன்னம்.
“நானும் நல்லா இருக்கேன் மா. நான் தான் இத்தனை நான் என் மேல கோபமா இருப்பீங்கன்னு பயத்துல போன் பண்ணாம இருந்தேன். நீங்களாவது பண்ணிருக்கலாம்ல?”
“சுயநலமா யோசிச்சிட்டு போனவ கிட்ட என்ன பேச?”
“இன்னும் என் மேல கோபம் போகலையாம்மா?”
“அது போகுமான்னு தெரியலை. சரி இப்ப எதுக்கு போன் பண்ண?”
“எப்படி இருக்கீங்கன்னு கேக்க தான் போன் பண்ணேன். அப்பா எப்படி இருக்காங்க? மது எப்படி இருக்கா?”
“எல்லாருமே நல்லா இருக்கோம்”
“அப்பா கிட்ட கொடுங்களேன், நான் பேசணும்”
“அவர் குளிச்சிட்டு இருக்கார்”
“ஓ மதுகிட்டயாவது கொடுங்க மா”
“அவ அவ வீட்ல இருக்கா”
“அவ வீடா? என்ன மா சொல்றீங்க?”
“என்ன நொண்ண மா? ஆமா அவ வீட்ல தான் இருக்கா. அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு இருபது நாள் மேல ஆகிட்டு. இப்ப அவங்க வீட்ல இருக்கா”
“என்னது கல்யாணம் முடிஞ்சிட்டா? என்கிட்ட சொல்லவே இல்லை. சரி யாரு மாப்பிள்ளை?”
“வேற யாரு நீ வேண்டாம்னு சொன்ன தேவா தம்பி தான்”
“அம்மா உங்களுக்கு பைத்தியமா புடிச்சிருக்கு? நான் தப்பிச்சிட்டேன்னு நினைச்சேன். நீங்க செண்டிமெண்ட் பேசி அவளை மாட்டி விட்டுடீங்களா? அந்த குருடனை எதுக்கு கட்டி வச்சீங்க?”