19

“கார்ட் எதுவும் கொடுக்கலையே டாக்டர்” என்றாள் கீர்த்தி.

“வெளில கார்ட் இருக்கும் நீங்க போய் வாங்கிட்டு வந்துடுங்க சார்” என்றார் டாக்டர்.

அரவிந்த் கார்ட் போடுவதற்காக வெளியே போக, அந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் கீர்த்தி.

“டாக்டர் இந்தக் குழந்தை எய்ட் மந்த்ஸ்ல பொறந்த ப்ரீ மெச்சூர்ட் பேபியா டாக்டர்” என்று கேட்டாள்.

“இல்லையேம்மா, அப்படிப் பார்த்தா தெரியலையே” என்று குழந்தையை ஆராய்ந்து பார்த்தவர் கூறினார்.

“எனக்கு அந்த மாதிரி தெரியலை, இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்பி” என்றார்.

அதற்குள் அரவிந்த் வந்துவிட கீர்த்தி சாமர்த்தியமாக பேச்சை மாற்றி விட்டாள்.

இது ஏதுவும் அறியாதவனாக அரவிந்த், டாக்டரிடம் கார்ட் கொடுத்து, என்ன? ஏது? என்று தடுப்பூசியைப் பற்றிய விவரம் கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அரவிந்த் பொய் சொல்லுகிறானா. இது அவன் குழந்தை இல்லையா இல்லை இந்தியாவில் இருக்குமபோதே அந்தக் குழந்தை உருவாகி விட்டதா. அந்தப் பெண் இந்தியாவில் இருந்தாளா.

அவளுடன் இருந்து கொண்டே தன்னிடம் காதல் சொன்னானா? எப்படி இது சாத்தியம். கீர்த்தியின் உள்ளுணர்வு சொல்லியது. அரவிந்த் பொய் சொல்லுகிறான். இது அவன் குழந்தை அல்ல என்றே அவளுக்குத் தோன்றியது.

ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பும்போது அரவிந்த் கீர்த்தியிடம், “சாரி கீர்த்தி நான் உன்கிட்ட ரொம்ப கத்திட்டேன். அது அம்மு மேல அவ்வளவு ரேஷஸ் திடீர்னு பார்த்ததும் என்னால கோபத்தைக் கன்ட்ரோல் பண்ண முடியலை” என்றான்.

“நீங்க என்னை ஏமாத்தினதை விடவும், இந்தக் கத்தல் ஒண்ணும் பெருசில்லை.”

“ப்ளீஸ் கீர்த்தி, அதை மறந்துடு, அதை விட்டுடு.”

“அதை எப்படி விட முடியும், உயிரோட என் கைல இவ அசஞ்சிட்டு நான் இருக்கேன்னு சொல்றாளே”

“உனக்கு என்ன கோபம் வந்தாலும் எம் மேல மட்டும் காட்டு கீர்த்தி, அம்மு கிட்ட எப்பவும் காட்டாத” என்றான்.

“ஓ, என்னைப் பார்த்தா உங்களுக்கு சின்னக் குழந்தைய கொடுமை பண்றவ மாதிரி தெரியுதா.”

“நான் அப்படிச் சொல்லலை கீர்த்தி, புரிஞ்சுக்கோ.”

“அதெல்லாம் புரியாம என்ன, என்னை நீங்க ஏமாத்திட்டீங்கன்னு நல்லா புரியுது” என்றாள்.

“இன்னும் எவ்வளவு கேட்கவேண்டி வருமோ” என்று மனதிற்குள்ளேயே வருத்தப்பட்டுக் கொண்டான் அரவிந்த்.

கீர்த்திக்கு அவன் பொய் சொல்லுகிறான் என்று உள்மனது சொல்லியதால், அதிகமாக அவன் மேல் கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை. அதற்காக அவன் செய்ததை மறக்கவும் முடியவில்லை. ஒரு மாதிரியான எரிச்சலில் இருந்தாள். அவனை அப்படியே நாலு அறை விட வேண்டும் போல எண்ணம் ஓங்கியது.

அதற்குப் பிறகு பேச்சில்லா மௌனத்தோடு வீடு வந்து சேர… வந்ததும் குழந்தையை கவனிக்கவே கீர்த்திக்கு நேரம் சரியாக இருந்தது. அரவிந்தும் உதவினான்.

கீர்த்தியின் அம்மா அதற்குள் குழந்தைக்குத் தூளி கட்டி இருந்தார். அதில் போட்டு குழந்தையைத் தூங்க வைத்தாள் கீர்த்தி.

பின்பு வெளியே வந்து பார்க்க, அப்போதும் ஹாலிலேயே அமர்ந்திருந்தான் அரவிந்த். “என்ன” என்பது போல் கீர்த்தி பார்க்க…

“சொல்லிட்டு கிளம்பலாம்னு வெயிட் பண்ணினேன்” என்றான்.

“சொல்லியாச்சுள்ள கிளம்பு” என்று ஒரு பார்வை பார்த்தபடி கீர்த்தி நிற்க… அங்கே வந்த ராஜேந்திரன், “என்ன கீர்த்தி இவ்வளவு நேரமாயிடுச்சு. ஹாஸ்பிடல் வேற போய் அலைஞ்சிட்டு வந்திருக்கீங்க. மாப்பிள்ளைய சாப்பிட்டுப் போகச் சொல்லு கீர்த்தி” என்று அவளை கடிந்தார்.

“இன்னும் இது வேறயா” என்றபடி கீர்த்தி ஒரு பார்வை பார்க்க… “இல்லை மாமா நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கறேன்” என்று அரவிந்த் கிளம்ப…

“நீங்க இருங்க மாப்பிள்ளை” என்றவர் கீர்த்தியை பார்க்க…

“வாங்க” என்று அவளை ஒற்றை சொல்லாய் அழைத்தாள். “இந்த அப்பா என் உயிரை எடுக்கிறார்” என்று அவனிடம் பார்வையால் பேசியபடி.

“போங்க மாப்பிள்ளை” என்று மறுபடியும் ராஜேந்திரன் கட்டாயப்படுத்த வேற வழி இல்லாமல் போனான் அரவிந்த் அவன் அழகு மனைவியின் பின்னே.

ஆமாம்! அவள் மிக அழகாக அரவிந்தின் கண்களுக்குத் தோன்றினாள். அதுவும் கண்களால் அவள் அரவிந்திடம் கதை பேசும்போது, அரவிந்திற்கு அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றியது.

இப்போதைய சூழலில் அவளைப் பார்க்க விடுவதே மேல் என்று மனதைத் தேற்றிக் கொண்டான். பரவாயில்லை, தான் ராஜேந்திரனிடம் உண்மையைச் சொன்னதால், அவர் கொஞ்சம் சமாளித்து விட்டதால் தப்பித்துக் கொண்டோம். இல்லையென்றால் கோபத்தில் இவள் நம்மை விட்டுப் போயிருப்பாள் போல என்று அவனையறியாமல் ஒரு பெருமூச்சு எழ, அதன் உஷ்ணக் காத்து, முன்னால் சென்று கொண்டிருந்த கீர்த்தி மேல் பட்டு அவளைக் கூச வைக்க, திரும்பிப் பார்த்து அவனை முறைத்தாள்.

அவள் எதற்கு தன்னை முறைக்கிறாள் என்று தெரியாதவனாக் அரவிந்த் தடுமாற, “செய்யறத எல்லாம் செஞ்சிட்டு எப்படி ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி முகத்தை வச்சிருக்கான் பாரு முகத்தை” என்று மனதிற்குள்ளேயே நொடித்தாள்.

சூடாக இட்லி, சட்னி, சாம்பார் என்று இருக்க, இருந்த பசியில் ஒரு வெட்டு வெட்டி விட்டு தான் நிமிர்ந்தே பார்த்தான். ஒரு வேளை இடையில் நிமிர்ந்து பார்த்திருந்தால், கீர்த்தி தன்னையே விடாமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரியும். அவன் தான் சாப்பிடுவதிலேயே குறியாய் இருந்தானே, நிமிரவேயில்லையே.

அவனுக்கு கீர்த்தியோட இருந்துவிட வேண்டும் என்று ஏக்கமாக இருந்தது. வீட்டிற்குப் போகவே மனமில்லை. ஒருவாறாக “நான் கிளம்பவா கீர்த்தி” என… “கிளம்பேன்டா இன்னும் ஏன் நிக்கற” என்பது போல் கீர்த்தி ஒரு பார்வை பார்க்க… வேறு வழியில்லாமல் கிளம்பினான். அவன் மனது கீர்த்தியையே அதிகமாக நாடியது. “எப்போது வீட்டுக்கு வர்ற” என்று கேட்கத் துடித்த மனதை அடக்கி ஒரு வழியாக வீட்டிற்குச் சென்றான்.

இவ்வளவு நாட்களாக குழந்தை ஞாபகமாகவே இருந்த அரவிந்திற்கு, குழந்தையை கீர்த்தியிடம் ஒப்படைத்த பிறகு கீர்த்தி ஞாபகமாகவே இருந்தது. மிகவம் பெரியதாக எதுவும் பிரச்சனை பண்ணாமல், முகம் கொடுத்துப் பேசா விட்டாலும், பார்க்கவாவது செய்கிறாளே என்று அவனை அவனே சமாதானப்படுத்திக் கொண்டான்.

வீட்டிற்கு வந்தால் இவனுக்காகவே அவன் அன்னையும், தந்தையும் காத்திருந்தனர்.

“நாளைக்கு எவளாவது அந்தக் குழந்தையோட அம்மான்னு உன் வாழ்க்கைக்குள்ள வந்தா, என்னடா பண்ணுவ” என்று அவர் கோபமாகக் கேட்க…

“கட்டாயம் வரமாட்டாப்பா, அவளும் நானும் பிரிஞ்சிட்டோம். குழந்தையே வேண்டாம்னு என்கிட்டக் குடுத்துட்டா. இனி எங்க வரப்போறா, வரமாட்டாப்பா” என்றான்.

“எப்படி அரவிந்த் எனக்கு பையனாப் பொறந்து இப்படி ஒரு காரியத்தைப் பண்ணின… அதை மறைச்சு இன்னொரு பொண்னை வேற கல்யாணம் பண்ணியிருக்க… நாங்க உன்னi இப்படியா வளர்த்தோம்.”

“ஏதோ அந்தப் பொண்ணோட அப்பா ரொம்ப நல்லவனா இருக்கவும், உன்னை மன்னிச்சு, கீர்த்தியை வேற உன்னோட வாழறதுக்கு சமாதானப்படுத்தறார். இதே வேற யாராவது இருந்தா உன்னை மட்டும் இல்லை, எங்களையும் சேர்த்து இன்னேரம் கம்பி எண்ண வச்சிருப்பார்.”

“அந்தப் பொண்ணை நீ ஏமாத்திப் பெரிய கொடுமை பண்ணியிருக்க, அந்தக் குழந்தைய என்ன பண்ணப் போற” என்றார் மறுபடியும்.

“எங்குழந்தைப்பா, என்னோடதான் இருப்பா. வேற பேச்சே கிடையாது.”

“யாரோ பெத்த குழந்தைய வளர்க்கணும்னு அந்தப் பொண்ணுக்கு என்ன தலையெழுத்தாடா…”

“யாரோ பெத்த குழந்தையில்லைப்பா, என் குழந்தை, மறுபடியும் நீங்க இதைப்பத்தி பேசாதீங்க… கீர்த்தி வளர்ப்பா நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க பேரப்பிள்ளையா மட்டும் அவளைப் பாருங்கப்பா. அவகிட்ட எந்த பாரபட்சமும் காட்டாதீங்க. அவ என் குழந்தை, உங்க பேரக் குழந்தை” என்றான் வேண்டிய குரலில்…

“எப்படிடா எவளோடயோ நீ பெத்த குழந்தை, எங்க பேரக் குழந்தையா?”

“தப்பா பேசாதீங்கப்பா… அவளும் ரொம்ப கௌரவமான சூழ்நிலைல இருக்கிற பொண்ணுதான். அவங்க கலாச்சாரம் அப்படி, அதைத் தப்புன்னு சொல்ல முடியாது. அவங்க வளர்ந்த விதமே அப்படிதான்.”

“என் குழந்தையை நீங்க பேரக் குழந்தையா பார்க்கலைன்னா நான் இங்க இருக்கிறதுல அர்த்தமே இல்லைப்பா… நீங்க அவகிட்ட சின்ன முகச் சுணக்கம் காட்டினா கூட என்னால பொறுக்க முடியாதுப்பா, என் பொண்ணு உங்களுக்கு வேண்டாம்னா, அப்ப நானும் உங்களுக்கு வேண்டாம்னு தான் அர்த்தம். அப்புறம் நம்ம பிரியறத தவிர வேற வழியில்லை” என்று தீர்மானமாகச் சொல்லிச் செல்ல, விக்கித்து அமர்ந்திருந்தனர் பெற்றோர் இருவரும்.

நேற்று பிறந்த பெண்ணுக்காக தங்களைத் தூக்கி எறியத் தயாராகி விட்டானே மகன் என்று அவர்களின் மகனை நினைத்து வருத்தப்படுவதா இல்லை சந்தோஷப் படுவதா என்று அந்த பெற்றோருக்குத் தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் அந்தக் குழந்தையை அவன் மிகவும் நேசிக்கிறான் என்பது புரிய, தாங்களும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். கீர்த்தியை நினைத்து தான் பயமாக இருந்தது. அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று.

ஆனால் அந்த பயம் அவசியமில்லாதது என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஏனென்றால் எல்லோரையும் வசியப்படுத்தும் சக்தி அம்முவிற்கு இருந்தது.

இவ்வளவு நாட்களாக அரவிந்த் பார்த்துக் கொண்டபோது, கிடைக்காத ஒரு சுகம், குழந்தைக்குக் கீர்த்தியினிடத்தில் கிடைக்க, ஒரே நாளில் கீர்த்தியிடம் நன்கு ஒட்டிக் கொண்டது.

தூங்கிக் கண் விழித்ததுமே கீர்த்தியை தேடி அழுதது. அவள் வந்து கையில் தூக்கியதுமே அழுகையை நிறுத்தியது. கீர்த்தியே சிறிது சிறிதாக அம்முவிடம் தன் மனதைத் தொலைத்தாள். அவளுக்குமே குழந்தை மிகவும் பிடித்து விட்டது.

தினமும் காலை ஒரு முறை ஒரு ஐந்து நிமிடம் வந்து அம்முவைப் பார்த்துச் செல்லும் அரவிந்த், இரவும் ஒரு ஐந்து நிமிடம் வந்து அம்முவைப் பார்த்துச் சென்றான்.

அதற்கு மேல் இருக்கவில்லை. ஏன் இருப்பானேன். பிறகு கீர்த்தியைப் பார்த்து ஏங்குவானேன் என்று நினைத்தவன், தினமும் இதே முறையைப் பின்பற்றினான்.

கீர்த்திக்கு அரவிந்த் மேல் இருந்த சந்தேகங்கள் அப்படியே இருந்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அதிகம் அவனிடம் பேசவும் இல்லை. நான்கு நாட்கள் இப்படியே கழிய, ஐந்தாவது நாள் அரவிந்தின் பெற்றோர்களே கிளம்பி வந்தனர். தன் மருமகள் எப்போது வீடு வருகிறாள் என்று கேட்க…

சிதம்பரமும், ராணியும் வர… “வாங்க மாமா, வாங்க அத்தை” என்றாள். “ஏன்மா ஷோரூம் வரவேயில்லை” என்று சிதம்பரம் கேட்க…

“அம்முவை விட்டுட்டு எப்படி மாமா வர்றது. கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம் தான் தூங்கறா, எழுந்ததுமே என்னைத் தேடுறா” என்றாள் குழந்தையின் அம்மா போல் பெருமையாக…

கீர்த்திக்கு குழந்தையிடம் சற்று பிடிப்பு வந்துவிட்டது என்று சிதம்பரமும், ராணியும் உணர்ந்து கொண்டனர்.

அப்போது சரியாக குழந்தை விழித்துக் கொண்டு சிணுங்க, கீர்த்தி தூக்கியதும் அம்மு சிணுங்களை நிறுத்தி விட்டாள்.

கீர்த்தி குழந்தையைக் கொண்டு வந்து ராணியிடம் கொடுக்க… கைமாறியவுடன் சிணுங்க ஆரம்பித்துவிட்டது.

“அம்மும்மா, அழக்கூடாது, அழக்கூடாது, யார் வந்திருக்காங்க பாரு, தாத்தா வந்திருக்காங்க… நீங்க பாட்டி கைல இருக்கீங்க” என்று உறவுகளுக்கு பழக்கப்படுத்த ஆரம்பித்தாள் கீர்த்தி.

அவள் அந்தக் குழந்தைக்கு பழக்கப்படுத்துவதைப் பார்த்து, அரவிந்தின் பெற்றோர் இருவருக்கும் தன் மகனின் செய்கையை நினைத்து குற்றவுணர்ச்சியாக இருந்தது.

இதையெல்லாம் கீர்த்தியின் அம்மா மௌனமாக பார்த்திருந்தார்.

பிறகு சிதம்பரம் கீர்த்தியிடம், “அரவிந்த் பண்ணினது சரி கிடையாதும்மா, பெரிய மன்னிக்க முடியாத தப்பு தான், இருந்தாலும் எங்களுக்காக மன்னிச்சு வீட்டுக்கு வாம்மா” என்றார்.

“அவர் பண்ணினதுக்கு நீங்க என்ன மாமா பண்ணுவீங்க… நீங்க போய் எதுக்குப் பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க விட்டுடுங்க” என்றாள் அவரிடம் சமாதானமாக.

பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க… ராணி மறுபடியும் கீர்த்தியிடம், “எப்போம்மா வர்ற” என்று கேட்டார்.

அதற்கு ராஜேந்திரன், “இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல நான் அனுப்பி வைக்கிறேன் சம்மந்தி” என்றவர்… “என்னம்மா நான் சொல்றது சரிதானே” என்று கீர்த்தியையும் துணைக்கு அழைக்க… “சரி” என்பதை போல தலையை தலையை ஆட்டி வைத்தாள் கீர்த்தி.

அவர்கள் கிளம்பும் சமயம் அரவிந்த் வர… அவர்களை அங்கே பார்த்ததும் முகம் மலர்ந்தான். “அம்முவைப் பார்க்க வந்தீங்களாப்பா” என்று உற்சாகமாகக் கேட்க…

“கீர்த்தியைப் பார்க்க வந்தோம்” என்றார் ராணி பட்டென்று… நிமிடத்தில் உற்சாகம் அரவிந்திற்கு வடிய… அதைப் பார்த்த சிதம்பரம் தன் மகனை சமாதானப்படுத்தும் பொருட்டு, “ரெண்டு பேரையும் தான்டா பார்க்க வந்தோம்” என்றார்.

அவர் தனக்காகச் சொல்கிறார் என்று அவ்வளவு கூடவா அரவிந்திற்குப் புரியாது. அவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் புரிந்தது.

அதற்குள், “அம்மும்மா என்ன பண்றீங்க” என்று குழந்தையிடம் கவனத்தை திருப்பினான். அவன் குரலைக் கேட்டதும் அம்மு உற்சாகத்தில் கையைக் காலை வேகமாக அசைத்தாள்.

குழந்தையை அவன் கையில் கொடுத்த கீர்த்திக்கு, தந்தை மகள் உற்சாகத்தைப் பார்த்து, இது தங்களுக்கு பிறந்த குழந்தையாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. அரவிந்தின் செய்கைக்கு அவனை வெறுக்க வேண்டும். வெறுக்க வேண்டும் என்று மனம் நினைத்தாலும், கீர்த்தியால் அது முடியவில்லை.

அவன் பொய் சொல்லுகிறான், பொய் சொல்லுகிறான் என்று தனக்குத் தானே கூறி மனதை தேற்றிக் கொண்டாள்.

முழுமையாக பொய் சொல்லுகிறான் என்றும் நம்ப முடியவில்லை, அவன் கூறுவது உண்மை என்றும் நம்ப முடியவில்லை. இருதலைக் கொல்லி எறும்பாகத் தவித்தாள். அரவிந்தின் மீது காதல் கொண்ட கீர்த்தியின் மனம் அவனை நல்லவனாக்க ஏதாவது காரணம் கிடைக்காதா என்று தேடியது.

அவர்கள் எல்லோரும் சென்றதும், தினமையை நாடிச் செல்ல மனம் விழைய, அதற்குள் அவளை அழைத்த அவள் தந்தை, “எப்போம்மா போற?” என்றார்.

அவர் அவள் அரவிந்தின் வீட்டிற்கு எப்போது போகிறாள் என்று கேட்கிறார் என்று தெரிந்தாலும், புரியாத மாதிரி, “எங்கேப்பா” என்றாள்.

“உங்க வீட்டுக்கும்மா, அரவிந்த் வீடுதான் உன் வீடு” என்றார் அழுத்தத்துடன்.

“ஏன்பா நீங்க அரவிந்த்துக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணறீங்க, அவர் பண்ணினது உங்களுக்கு தப்பாத் தெரியலையா.”

“தெரியுதும்மா, இருந்தாலும் அவர் இந்த விஷயத்தை நம்மகிட்ட மறைச்சிருந்தா, நாம என்ன செஞ்சிருப்போம் சொல்லு.”

அவள் அவரையே பார்த்திருக்க, இன்னும் பேசிக் கொண்டே போனார்… “தப்பு செய்யறது மனித இயல்பு. மன்னிக்கறது தேவ குணம். நான் என் பொண்ணை அப்படிதான் வளர்த்திருக்கேன். இப்போ தப்பு செய்யறது பெரிய விஷயமில்லை. ஆனா செஞ்ச தப்பை ஒத்துக்கறது, ரொம்ப பெரிய விஷயம். நீ அங்க போய் அவரோட வாழறதை தான்மா நான் விரும்புவேன்” என்று சொல்லிச் சென்று விட்டார்.

ராஜேந்திரனுக்குப் பேசாமல் கீர்;த்தியிடம் உண்மையைச் சொல்லி விடலாமா என்றிருந்தது. ஆனால் ஏனோ அரவிந்த் பிடிவாதமாக வேண்டான் என்றான். அதனால் சமாதானத்திற்கு எத்தனை காரணங்கள் சொல் வேண்டியிருக்கிறது என்று தன்னைத் தானே நொந்து கொண்டார்.

யோசித்து யோசித்த கீர்த்திக்கும் மூளை குழம்பியது தான் மிச்சம். பேசாமல் இப்போதைக்கு எதையும் யோசிக்க வேண்டாம் வாழ்க்கை போகிறபடி போவோம் என்று நினைத்தவள்…

மறுநாள் மதியம் போல் வீட்டிற்குப் போகலாம் என்று முடிவு செய்தாள். அரவிந்த் காலையில் அம்முவைப் பார்க்க வந்தபோது கூட எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்து விட்டாள்.

மதியம் இவள் குழந்தையை தூக்கிக்கொண்டு அரவிந்தின் வீட்டிற்குச் சென்று விட்டாள், இது எதுவும் அறியாத அரவிந்த் எப்பொழுதும் போல் மாலையில் வீட்டிற்கு வர… அங்கே அவர்கள் இருக்கவில்லை.

“கீர்த்தி உங்ககிட்ட சொல்லலையா மாப்பிள்ளை” என்று ராஜேந்திரன் கேட்க…

“சொன்னா மாமா நான்தான் மறந்துட்டேன்” என்று சமாளித்து வீடு வந்தான். வந்து அம்முவை பார்த்து விட்டே மறுபடியும் ஷோ-ரூம் கிளம்பினான். ஏன் ஒரு வார்த்தை என்னிடம் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தால் என்ன குறைந்திருக்கும் என்று கீர்த்தி மேல் பயங்கர கோபம்… இருந்தாலும் அடக்கி அவளை தவிர்த்து குழந்தையை மட்டும் பார்த்துச் சென்றான்.

கீர்த்திக்குப் புரிந்தது, அரவிந்திற்கு பயங்கர கோபம் என்று… அவனைக் கோபப்படுத்தியதற்கு சந்தோஷம் எதுவும் எழவில்லை. மாறாக ஒரு வெறுமையே சூழ்ந்தது.

அவன் தனக்கு இவ்வளவு பெரிய கொடுமை செய்தும், தன் மனம் அவன் பின்னே சுற்றுகிறதா என்று தன்னையே வெறுத்தாள்.

கீர்த்தியை அரவிந்தின் மனம் மிகவும் தேடினாலும், தன்னை பைத்தியக்காரன் மாதிரி அலைய விட்ட கீர்த்தியின் செயல் அரவிந்திற்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்தது.

தன் மீது தவறை அவனாகவே தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தாலும், இயற்கையிலேயே தவறு செய்யாத அவன் மனதிற்கு கீர்த்திக்கு அது அவன் அண்ணன் குழந்தை என்று தெரியாது என்பது மறந்து போனது. அவள் அண்ணன் குழந்தையை நாம் பார்த்துக் கொண்டால், இவள் என்ன இந்த முருக்கு முருக்குகிறாள் என்று கோபம் வந்தது.

வந்த கோபத்தை யார் மேல் காட்டுவது என்று தெரியாமல் உணவு மேல் காண்பித்தான். அன்று ஏழு மணி போலயே வீட்டிற்கு வந்தவன், இரவு உணவை உண்ணவேயில்லை. ராணி, “ஏன்டா, சாப்பிடலை, வாடா, வாடா…” என்று பலமுறை கூப்பிட்டும், டி.வி. முன் அமர்ந்தவன் எழவேயில்லை.

“என்னவோ பண்ணு போடா, நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு” என்று சொல்லி கீர்த்தியை அனுப்பினார்.

“அவன் சாப்பிட்டா எனக்கென்ன, சாப்பிடடாட்டி எனக்கென்ன” என்று அவள் மனம் நினைத்தாலும், கால்கள் தானாக அவனிடம் சென்றது.

“டிபன் எடுத்து வைக்கவா” என்றாள்.

“தேவையில்லை” என்றான் அரவிந்த்.

“ஏன் தேவையில்லை, வெளில சாப்பிட்டிட்டு வந்துட்டீங்களா.”

அவளை திரும்பிப் பார்த்து ஒரு முறை முறைத்தான். அது சொன்னது அவன் வெளியே சாப்பிடவில்லை என்று.

“அப்புறம் என்ன சாப்பிட வாங்க” என்றாள்.

அரவிந்த் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

சிறிது நேரம் அதே இடத்திலேயே அவனை முறைத்து பார்த்துக்கொண்டு நின்றாள். பின்னர் வேகமாக அவள் மாமியாரிடம் இருந்த அம்முவை வாங்கி, உள்ளே சென்று விட்டாள்.

இதைப் பார்த்த ராணி, கோபமாக அரவிந்திடம் வந்து கத்தினார். “ஏன்டா, ஏற்கனவே அவ கோபமா இருக்கா… அவ கூப்பிட்டா நீ போய் சாப்பிட வேண்டியது தானே. ஏன் பிரச்சனையை பெருசாக்குற. பாரு, இப்போ சாப்பிடாம போயிட்டா.”

அப்போதும் இருந்த இடத்தை விட்டு அசைய வில்லை அரவிந்த். “அரவிந்த் பண்ற தப்பையெல்லாம் பண்ணிட்டு இப்போ பிடிவாதம் வேற பிடிக்காத, நீயும் சாப்பிடலை, அவளும் சாப்பிடலை… ஒழுங்கா ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு தூங்குங்க… நான் தூங்கப் போறேன்” என்று சொல்லிச் சென்றார்.

அரவிந்திற்கும் பசித்தது. அவள் வேறு சாப்பிடாமல் இருக்கிறாள் என்ற எண்ணம் உந்த… எழுந்து ரூமிற்குள் சென்று பார்த்தான். அம்முவை பக்கத்தில் போட்டு, அவள் படுத்துக் கொண்டிருந்தாள். அம்மு கை காலை வேகமாக அசைத்துக் கொண்டிருந்தாள். கீர்த்தி அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சென்று அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றான் அரவிந்த் பார்ப்பது தெரிந்தாலும், கீர்த்தி அவனைப் பார்க்கவில்லை. மெதுவாக தன் மகளின் புறம் சென்று அமர்ந்தவன், “அம்மும்மா என்ன பண்றீங்க, அப்பாக்கு பசிக்குது, உங்க அம்மா கிட்ட சொல்லுங்க பார்ப்போம்” என்றான்.

அரவிந்தின் குரலைக் கேட்டதும், கையைக் காலை வேகமாக அசைத்தது குழந்தை.

“நீங்களும் உங்கம்மாவும் எதுக்கு தாத்தா வீட்ல இருந்து என்கிட்ட சொல்லாம வந்தீங்க… நான் சாயந்தரம் அங்கே போய் உங்களைத் தேடுனேனே” என்றான்.

“ஓ அதுதான் இப்படி முருக்கிக் கொண்டிருக்கிறானா. இவன் என்னிடம் சொல்லிவிட்டு தான் எல்லாவற்றையும் செய்தானா, நான் மட்டும் எதற்கு சொல்ல வேண்டும்” என்று அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“ஓகே. செல்லம் முதல் தடைவ பண்ணனதால அப்பா விட்டுடறேன். இனிமே எங்க போனாலும் அம்மாவும், பொண்ணும் சொல்லிட்டுப் போங்க… திடீர்னு நீங்க இல்லைன்னா அப்பா ரொம்ப ரொம்ப டென்ஷனாயிடறேன்” என்றான்.

‘அய்யோ, ரொம்ப தான் அக்கறை வழியுது’ என்று மனதிற்கள் அவனை சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருந்தாள்.

“பசிக்குதுடி செல்லம்” என்றான் பாவமாக அம்முவைப் பார்த்து…

“போய் கொட்டிக்க வேண்டியது தானே, இவனை யார் கையைப் பிடிச்சி நிறுத்தினா” என்பதை அவள் பார்வையால் காட்ட…

“நான் மட்டும் கொட்டிக்கிட்டா எனக்கு வயிறு வலிக்கும் செல்லம். அம்மாவையும் வரச் சொல்லுங்க” என்றான் இந்த முறை கீர்த்தியைப் பார்த்துக் கொண்டே…

இப்போது கீர்த்தியும் அவனைப் பார்த்து நேரடியாக முறைத்தாள். “அதெல்லாம் வரமுடியாது” என்பது போல…

அவள் நேரடியாக முறைக்கவும், அவனும் நேரடியாக “பசிக்குது கீர்த்தி” என்றான் அவளைப் பார்த்து பாவம் போல முகத்தை வைத்து.

பதில் பேசாமல் எழுந்தவள், டைனிங் ஹால் நோக்கிப் போக, குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரவிந்த் பின்னாலேயே போனான்.

மௌனமாக அவனுக்கு டிபனை பரிமாறி, குழந்தையை அவள் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

“நீயும் உட்கார்ந்து சாப்பிடேன் கீர்த்தி” என்று அவன் சொல்ல, அவனை நோக்கி ஒரு அனல் பார்வையை வீசினாள், வேறு வழியில்லாமல், அவன் உண்டு முடித்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு ரூம் போன பிறகே, அவள் உண்ண அமர்ந்தாள்.