Advertisement
ரம்யாவிற்கும் அவள் அம்மாவிற்கும் அதில் வருத்தம் தான். ஆனால் ஜெய் இதுவரை அவர்களிடம் முகம் காட்டாமல் நின்றதே போதும் என்று இருந்தது. சாந்தியும் வள்ளியும் எதுவும் பேசாமல் இருந்தாலும் அவரின் மாமியார் ராகவை ஆரத்தி சுற்றி அழைக்கும் போது ‘நீ எங்க இங்க…” என்று அன்னத்தை கேட்க “மீண்டுமா” என்று இருந்தது. ஜெய் அங்கு இல்லாமல் போக அதை சமாளிக்க மற்றவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
அன்னத்திடம் ரம்யாவின் அம்மா மன்னிப்பை கேட்டவர், மீண்டும் எங்கே அவர்கள் பேசி விடுவார்களே என்று அன்னதின் அருகில் தான் இருந்தார் அப்போதும். ராகவ்வின் பாட்டி முனுமுனுத்த படி தான் இருந்தார்.
மண்டபத்தில் அனைவரும் இருந்ததால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது வீட்டில் நிச்சயம் ஏதாவது பேச்சு வரும் என்பதாலேயே ஜெய் போகிறோம் என்றதும் அனைவரும் சரி என்று விட்டனர்.
அன்னம் வந்தவள் குளித்து வர ஜெய் தலையணையில் முகம் புதைத்து படுத்து இருந்தான். “என்னங்க தலை வலிக்குதா??” கேட்டவள் தலையை தடவி விட “இல்லை” என்றான்.
“அப்பறம் முகம் எதுக்கு ஒரு மாதிரி இருக்கு??”
“உனக்கு ரம்யா வீட்டுக்கு போகததுல வருத்தம் இருக்கா அனு??” “இல்லையே” என்றாள் தலையை அசைத்து புரியாத பார்வையில்.
“இல்ல மண்டபத்துல அங்க வேண்டாம் சொன்னதும் உன் முகம் சுருங்கி போச்சு அது தான் கேட்டேன்” என்றான் அவள் முகம் பார்த்து.
அவனை பார்த்தவள் “இல்ல… நாங்க அங்க போகலையின்னு நீங்க சொன்னதும் ரம்யா முகமும் பெரியம்மா முகமும் வாடி போச்சு. இன்னும் அவங்க பேசுனதை மனசுல வச்சுகிட்டு தான் நாம போகலையின்னு நினைச்சுட்டா… அது தான் ரம்யாவுக்காக விசாகாவ கொண்டு போய் விட்டு வந்து இருக்கலாமோன்னு தோனிச்சு அவ்வளவு தான்” என்றாள்.
சிரித்தவன் “நீ அங்க போயிருந்தா காலையில இருந்து அடக்கி வச்சதை எல்லாம் அப்படியே உன் மேல கொட்டி இருப்பாங்க அத்தைங்க… அதுவும் மாங்கல்ய தட்டை ஆசிர்வாதம் வாங்க உன்கிட்ட கொடுத்தப்ப நீ பாக்கலை நான் பாத்தேன் அவங்க முகம் எப்படி இருந்துச்சு தெரியுமா??? அங்க போனா நிச்சயம் அவங்க பேசுவாங்க”
“அவங்க எல்லை எதுன்னு அவங்களுக்கு தெரியாது…. தெரிய போறதும் இல்லை… உறவை தக்க வைக்க நாம மட்டும் நினைச்சா போதாது உறவா இருக்குறவங்களும் அதை நினைக்கனும். அது இல்லாதப்ப நமக்குன்னு உள்ள கோட்டுக்குள்ள இருக்குறது தான் நல்லது” என்றவன் குரல் இனி அவர்களை பற்றி பேச்சு இருக்க கூடாது என்றது.
மங்களம் பூஜை முடித்து வர ஹாலில் யாரு இல்லை. மங்களம் “ரம்யா” குரல் கொடுக்க சமையல்கட்டில் இருந்து வெளியில் வந்தாள். கல்யாணம் முடிந்து மறுநாள் ரம்யாவின் அம்மா கல்யாண பலகாரம் தர வந்தவர் மங்களத்திடமே சொல்லிவிட்டார் “அண்ணி இனி சமையல் கட்டை ரம்யாவுக்கும் பழக்கி விடுங்க” என்று. அதில் இருந்து மத்தியம் சமையல் வேலை ரம்யாவினது ஆனது. “எங்க சத்தியா… மில்லுல இருந்து வந்துட்டானா?? வரலையின்னா சாப்பாடு குடுத்து விடு” என்றவர் “உங்க அம்மாகிட்ட கேட்டியா??” என்றார்.
“இல்ல அத்தை” ரம்யா சொல்ல,
“கல்யாணம் முடிஞ்சு எத்தனை நாள் ஆச்சு!! ராகவுக்கு விருந்து வைக்க வேணாமா..??” ரம்யாவிடம் கேட்க “அண்ணா ஊருக்கு போயிருக்காங்க அத்தை. வந்ததும் எப்ப தோது படுத்துன்னு கேட்டுட்டு வைச்சுக்கலாம்”
வீராசாமி அறையில் இருந்து வந்தவர் காதில் இவர்களின் பேச்சு விழ“என்ன மங்களம் யாருக்கு விருந்து??”
மங்களம் “ராகவ்கு தாங்க இன்னும் வீட்டுக்கு கூப்பிடவே இல்லையே..”
“சரி என்னைக்கு” வீராசாமி.
“தெரியலை பெரியவன் வந்ததும் வைச்சுக்கலாமா..” மங்களம் கேட்க “சரி” என்றார் வீராசாமி.
ஜெய் படபிடிப்பிற்காக வெளிநாடு சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவன் உடனே சென்றது அன்னதிற்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது..
அன்னம் “நீங்க வர்ற எத்தனை நாள் ஆகும்??” “அது அங்க போன பின்னாடி தான் சொல்ல முடியும்… கூடவும் செய்யலாம்… முன்னாடியே முடிஞ்சுட்டா வேகமாவும் வரலாம்” என்றதில் அவள் முகம் வாடி விட்டது.
அவள் முகம் வாடவும் அவளை அவன் மீது விழ வைக்க அவளின் இரவு உடை நகர்ந்து அவனுக்கு காட்சியானது. “என்ன செய்றீங்க நீங்க..!!” என அவசரமா உடையை சரி செய்ய..
“மணி இப்ப பத்து இதுக்கு மேல இது தேவையா” அவன் உடையை கேட்க அவள் முகம் அழுவதை போல மாறிவிட்டது. “ஏய் என்ன ஆச்சு அனு??” ஜெய்
“இன்னும் ரெண்டு நாள் இருக்க கூடாதா…” என்னும் போதே அவளின் குரல் உள்ளே போய்விட்டது.
“அனு” ஜெய் அழைக்க அவளின் கண்ணனீர் அவன் மீது விழுந்தது. “அனு” என்று அவளை இன்னும் இறுக்கியவன் “எதுக்குடி அழுகுற… நான் உன்ன விட்டுட்டு போறது என்ன புதுசா..” என்றவனை அன்னம் முறைக்க.,
“எதுக்குடி இந்த முறைப்பு… உண்மைய தான் சொன்னேன்..” என்றவன் வாயில் அடி கொடுத்தவள் “உண்மையா இருந்தாலும் நீங்க சொல்ல கூடாது”
“மத்தவங்களும் அதை தான சொல்லுறாங்க… அதை இப்ப எனக்கு நானே சொல்லிகிட்டேன்” என்றவனை பலம் கொண்ட மட்டும் தள்ளவிட,
“அடிக்கிறத இப்படி கட்டிக்கிட்டே அடி நல்லா இருக்கு..” என்றவன் அவள் தள்ள முடியாத படி இன்னும் அணைக்க, “நீங்க இல்லை இனி யாரும் சொல்ல கூடாது..”
“அது ஒன்னும் நீங்க வேணும்னு செஞ்சது இல்ல… மாமா உங்க கிட்ட கேட்டு இருந்தா நிச்சயம் நீங்க போயிருக்க மாட்டீங்க… அது மாமா மேல தான் தப்பு உங்க மேல இல்லை..”
“சரி… கட்டிக்கிட்டது என் தப்பு இல்ல.. கல்யாணத்துக்கு பின்ன உன்னைய பாத்துட்டும் நான் போனேன் தான அது தப்பு இல்லையா?? அதுக்கு பின்னாடி உன்ன பாக்காம இருந்தது தப்பு இல்லையா?? எத்தனை பேர் பேசி இருப்பாங்க… வீட்டுல அத்தைங்க கூட எப்படி பேசுனாங்க… உனக்கு என் மேல கோபம், வருத்தம் இல்லையா??”
“இல்லை” என்றாள் அன்னம். “என்ன சொல்லுற…” என்று அவள் முகம் நிமிர்த்தி பார்த்தான்.
“கல்யாணம் முடிஞ்சு நீங்க எங்க என்னைய பாத்தீங்க??? பாக்கவே இல்லையே… நான் தான் உங்கள பாத்துட்டே இருந்தேனே… மாடியில இருந்து இறங்கி வரும் போது புளூ ஜீன்ஸ், ஸ்கைபுளூ டீசர்ட் போட்டு குடிம்மியோட… நீங்க மாமா கூட சண்டை போட்டுட்டு அப்படியே போயிட்டீங்க… அப்பறம் உங்க வேலை அப்படி… எங்க என்னைய பாத்தா அத விட்டுவேமோன்னு நினைச்சு கூட நீங்க வராம இருந்து இருக்கலாம்… இதுல உங்க மேல என்ன தப்பு இருக்கு… சும்மா எல்லாத்துக்கும் நான் தான் காரணம் அப்படின்னு சொல்ல கூடாது” என்றவளை ஆச்சர்யமாக தான் பார்த்து இருந்தான்.
“என்னங்க’ அன்னம் ஜெய்யை பார்க்க வார்த்தைகளே இல்லை அவனிடம். அமைதி மட்டுமே. ‘எப்படி நான் செய்த அனைத்தையும் தவறே இல்லை என்று என்னிடமோ சொல்லுறா… அதுல பேசுனா அடிப்பாலாமா… நான் போட்ட டிரஸ நானே மறந்துட்டேன் இவ இன்னும் நியாபகம் வைச்சு இருக்கா’ நினைத்தவன் முகத்தில் சின்ன புன்னகை.
“அனும்மா” அவன் அழைக்க கேள்வியாக அவன் முகம் பார்த்தாள்.
“தேங்ஸ்” என்றான் அவள் உச்சியில் முத்தம் பதித்து.
அவனின் முத்தில் அன்னத்தின் உடல் சிலிர்த்து தான் அடங்கியது. அவளின் சிலிர்ப்பை உணர்ந்தவன் முன்னேற முயல, அவளுக்கு அதற்கு மேல் செல்ல எண்ணம் இல்லை.
“என்ன” அவன் அவள் முகம் பார்க்க “இப்படியே பேசிகிட்டு இருக்கலாம் நாளைக்கு காலையில நீங்க கிளம்பிடுவீங்க..” என்றவள் இன்னும் இறுக்கி கொண்டாள் அவனை குழந்தையாக.
அவள் இப்படியான நிமிடங்களை ஒரு போதும் எதிர்பார்த்து இல்லை. ஜெய் வருவான் அவன் வந்த பின் அவனின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்று கொள்ளும் மன நிலையை தான் அன்னம் வளர்த்து கொண்டு இருந்தாள்…
அவன் திடீர் என்று அவள் முன் வந்து நின்றதும் அவன் பார்வையில் இருந்தது என்ன?? அவள் ஆராய்ச்சியில் இருக்கும் போதே அவனின் சகஜமான பேச்சு, திருமணத்தில் அவள் சொன்னால் என்பதற்காக யாரிடமும் எந்த கேள்வியும் கேட்காதது… அவர்களையே தானக்கானா மரியாதையை கொடுத்து அழைக்க வைத்து… இப்போது குழந்தையாய் தன்னை தாங்கி நிற்பது அவன் வந்த இந்த பத்து நாளில் எத்தனை மாற்றம் தன் வாழ்வில் அதியசத்து தான் நின்றாள் அன்னம்.
வெளியில் இருக்கும் ஜெய்க்கும் இந்த அறைக்குள் இருக்கும் ஜெய்க்கும் அத்தனை வித்தியாசங்கள். வெளியில் பார்வை மட்டுமே… அதிக பேச்சுக்கள் இருக்காது… இங்கு பேச்சுக்குள் மட்டுமே…. ‘இத்தனை நாள் பேசாததை எல்லாம் பேசுறாரா என்ன…!!’ சந்தேகம் தான் அன்னத்திற்கு. அவளின் வேலைகள் அனைத்தும் அவனே செய்தான் இந்த அறைக்குள். அன்னம் “விடுங்க நான் பாத்துக்குறேன்” என்றாலும் “நான் ஊருக்கு போன நீதானா செஞ்சுக்கனும் இருக்குற வரைக்கும் நான் செய்றேன்” என்றவன் வினாடியும் அவளை விட்டு இருக்க வில்லை. இப்போது மீண்டும் அவன் இல்லாத இந்த அறை அன்னத்தின் கண்களில் கண்ணீர் துளிர்க்க…
ஹாஸ்டலுக்கு போகும் போது இப்படிதான் மங்களத்தை பிடித்து கொள்வான் ஜெய். “ம்மா… நாளையில இருந்து அந்த சாப்பாடு தான் சாப்பிடனும் எனக்கு பிடிக்கலை” என்றதும் “அப்ப இங்கயே வேற காலேஜில சேந்துகிறயா??” மங்களம் கேட்டால் “வேண்டாம் போ… நான் அந்த சாப்பாட சகிச்சுகிட்டே படிக்குறேன்” என்பான் ஜெய்.
இப்போது அன்னத்தை பார்த்தால் அப்படிதான் இருந்தது ஜெய்க்கு. “நீயும் என்னோட வான்னு சொன்னாலும் மில்ல பாக்கனும் சொல்லுற… பின்ன இப்படி கட்டி பிடிச்சு அழுதா நான் என்ன செய்ய??” ஜெய்
வேகமாக கண்களை துடைத்தவள் “இல்லை நான் அழல… நீங்க வேகமா வந்துடுங்க” என்றாள்.
“அனு நான் போனதும் உனக்கு கால் பண்றேன். அப்பறம் எப்ப டைம் கிடைக்குதோ அப்ப எல்லாம் கால் பண்றேன் ஃபோன் வரலையின்னா பயந்துக்காத… அங்க தீவுக்குள்ள போயிட்டா சில சமயம் சிக்னல் கிடைக்காது வந்ததும் பேசுறேன்… இன்னும் ரெண்டு நாள் விட்டு பாஸ்போர்ட்க்கு அப்பளை பண்ணிடு சத்தியன் கூட வருவான் நீயா போகதா” என பல புத்திகள் சொன்ன பின் தான் சென்றான்.
காலையில் ஜெய் ஊருக்கு போக தயாராக ஏர்போர்ட்க்கு அன்னதை வேண்டாம் என்று விட்டான். சத்தியன் கூட கேட்டான் “டேய் அண்ணி வரட்டும்மே…” என
‘நேத்து நைட் ஆரம்பிச்சது இப்பதான் முடிச்சு இருக்குறா… கூட வந்தா அங்கயும் அழுகை சீன் ஓடும்’ மனதில் நினைத்தவன் வெளியில் “வேண்டாம் நீ வா” என்றான் முறைப்புடன். சத்தியன் கார் எடுக்க அன்னத்திடம் “வர்றேன்” என தலை அசைத்த ஜெய்யை சிரித்த முகத்துடன் வழி அனுப்பி வைத்தவள் அவன் வரும் போது இப்படியே இருப்பாளா……….”
Advertisement