Advertisement

“என்னங்க அத்தை?”, என்று கேட்டாள் கலைமதி.
அம்மா அழைத்ததும் திரும்பி பார்த்தவன் அவர்கள் பேச்சில் மட்டும் காதை கொடுத்து விட்டு டிவி புறம் திரும்பி கொண்டான்.
“ஒன்னும் இல்ல மா. வர ரெண்டு நாள் ஆகும். சமாளிச்சுக்குவ தான?”
“கண்டிப்பா அத்தை. நீங்க கவலை படாதீங்க”
“மாவு மதியமே அரைச்சு வச்சிட்டேன் டா. காலைல, நைட்டுக்கு அதை வச்சு எதாவது செஞ்சிக்கோ. மதியம் மட்டும் உன் புருசனுக்கு எதாவது செஞ்சி கொடு சரியா?”
“அம்மா. அவ அவளோட படிப்பை பாப்பாளா? எனக்கு சமைச்சு கொடுப்பாளா? ரெண்டு நாள் தான? நான் வெளிய சாப்பிட்டுக்குவேன்”, என்று இடையில் புகுந்து பேசினான் சூர்யா.
“உங்களுக்கு கடை சாப்பாடு ஒத்துக்காது அத்தான். நானே செய்றேன். அப்புறம் இப்ப எந்த பரிட்சையுமே இல்லை. சும்மா தான இருக்கேன். சாப்பாடு வச்சு ஒரு காய் வைக்கிறதுல என்ன குறைய போகுது. அப்புறம் எனக்கும் வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு போக பிடிச்சிருக்கு”, என்றாள் கலைமதி.
“இவ்வளவு நீளமா  பேசுவாளா இவ?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான் சூர்யா.
“அப்புறம் என்ன டா? அவளே சொல்லிட்டா. ரெண்டு நாள் தான? என் மருமக சமாளிச்சிக்குவா. நீ ஹோட்டல்ல தின்னா அப்புறம் வயிறு வலின்னு என்னை உயிரை வாங்குவ. வா மதி. இப்ப நைட்டுக்கு சப்பாத்தி போடலாம்”, என்று அவளை அழைத்து கொண்டு போனாள் மங்களம்.
அம்மாவும், மனைவியும் போறதை பார்த்து கொண்டிருந்தவன் சிரித்து விட்டு டிவி பார்க்க ஆரம்பித்தான்.
வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு சிறிது நேரம் கழித்து கிளம்புவதுக்கு எழுந்தார்கள்.
“போய்ட்டு வறோம் மதி”, என்று சொன்னாள் மங்களம்.
“சரிங்க அத்தை”
“மதி, தம்பி சொல்ற படி கேக்கணும் சரியா?”, என்றார் சண்முகம்.
“சரிப்பா”
“அவளுக்கே எல்லாம் தெரியும் மாப்பிள்ளை. நீ வா. கிளம்புறோம் மா”, என்றார் சுப்ரமணியம்.
“சரிங்க மாமா, பத்திரமா போயிட்டு வாங்க”, என்று சிரித்தாள் மதி.
“இப்பவே அவ கிட்ட சொல்றீங்க. அவளும் பஸ் ஏத்தி விட நம்ம கூட தான் வாரா. உங்களை விட்டுட்டு நாங்க வருவோம்”, என்ற படியே அங்கு வந்தான் சூர்யா.
“நான் வேணும்னா வீட்லயே இருக்கேன் அத்தான்”, என்றாள் மதி.
“அவன் தான் சொல்றான்ல மா. கிளம்பு”, என்று கிளம்ப வைத்தாள் மங்களம். அவன் அருகில் அமர கார் கதவை திறந்தாள் மதி.
“மதி, மாமா முன்னாடி இருக்கட்டும். நீ பின்னாடி அம்மா கூட உக்காரு”, என்று சொன்னான் சூர்யா.
அதில் முகம் வாடினாள் மதி. அதை யாரிடமும் காட்டாமல் மறைத்தவள் மங்களம், சுப்ரமணியம் அருகே அமர்ந்தாள்.
அவன் அருகே சண்முகம் ஏறி அமர்ந்ததும் கார் கிளம்பியது.
“அத்தானுக்கும் என்னை பிடிக்கலை போல? அதான் பக்கத்துல உக்கார விடலை. காலைல கேட்ட பிடிச்சிருக்கா அப்படிங்குற கேள்வியையும் கேக்கலை”, என்று நினைத்து மனம் வருந்தினாள்.
பஸ் ஸ்டாண்டில் வண்டியை விட்டவன் அவர்களை பஸ் ஏற்றி விட்டு, பஸ் கிளம்பியவுடன் மதி அருகில் சென்றான்.
என்ன என்பதாய் அவனை பார்த்தாள் கலைமதி.
“கிளம்பலாமா கலை?”
“ம்ம்”
கார் அருகே சென்றதும் பின் பக்கம் அமர பார்த்தவளை “ஏய் அங்க எங்க போற? முன்னாடி வா”, என்றான் சூர்யா.
“அப்ப பின்னாடி உக்கார சொல்லிட்டு இப்ப முன்னாடி கூப்புடுறதை பாரு?”, என்று நினைத்தவள் “நான் அப்ப மாதிரி பின்னாடியே உக்காருறேன்”, என்றாள்.
அப்போது தான் அவள் முகத்தையே பார்த்தான்.
“அட பாரு டா. இவளுக்கு கோபம் எல்லாம் வருதா?”, என்று நினைத்து சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தான்.
“உன்னை பின்னாடி உக்கார சொன்னேன்னு கோபமா கலை?”
“ம்ம்….ஆமா… இல்லை”
“ஹா ஹா, பொய் சொல்லாத. உன் முகத்தை பாத்தாலே தெரியுது. ஆனா ஏன் சொன்னேன்னு யோசிக்க மாட்டியா? அம்மா கொஞ்சம் குண்டு. அப்பாவும், மாமாவும் பெரிய ஆள்கள். அவங்க மூணு பேரும் பின்னாடி உக்கார கஷ்ட படமாட்டாங்களா?”
“இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கோ?”, என்ற சிந்தனையை கண்களில் தேக்கி அவனை பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்து சிரித்தவன், “நீ ரொம்பவே ஒள்ளி. நீ உக்காந்தா, அங்க இடைஞ்சல் இருக்காதுன்னு தான் சொன்னேன். உன்னை கஷ்ட படுத்த சொல்லலை மா. இப்ப கலைக்கு கோபம் போயிருச்சு போல? வா உள்ள உக்காரு”, என்று சொல்லி அவள் கையை பிடித்து முன்னே அமர வைத்து விட்டே அந்த பக்கம் போய் காரை எடுத்தான்.
விழி விரித்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவன் மனைவி.
அவள் பார்வையை உணர்த்து அவளை பார்த்தான். ஆனால் அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.
சிரிப்புடன் காரை எடுத்தவன், காரை ஓட்ட ஆரம்பித்தான். வீட்டருகே இருந்த பார்க் முன்னாள் காரை நிறுத்தியவன் “இறங்கு கலை”, என்றான்.
“வீட்டுக்கு போகலையா அத்தான்?”
“மணி எட்டு தான ஆகுது? ஒன்பது  வரைக்கும் பார்க் இருக்கும். உனக்கு தான் ரொம்ப படிக்க வேண்டியது இல்லையே. கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்”
அரை மனதுடன் சரி என்றாள் மதி.
“எதுக்கு கலை, என்கூட வரது பிடிக்கலையா? உன் கூட பேசலாம்னு நினைச்சேன்”
“அப்படி எல்லாம் இல்லை அத்தான். நீங்க இங்க நிப்பாட்டின உடனே எதோ பேச போறீங்கன்னு தான் நினைச்சேன். அதை நம்ம வீட்டு மொட்டை மாடில பேசுனா என்னனு தோணுச்சு. அதனால தான் யோசிச்சேன்”
“நல்ல ஐடியா தான். ஆனா எப்படி நான் பேச போறேன்னு யோசிச்ச?”
“பின்ன இந்த வயசில் நம்ம பார்க் வந்து விளையாடவா போறோம்?”
“சரி தான். ஆனா மொட்டை மாடில பேசணும்னு நினைச்ச தான கலை? அதை என்கிட்ட சொல்லலாம்ல? ஏன் மனசுக்குள்ளே வச்சிருக்க?”
“நீங்க எதாவது நினைப்பீங்களோன்னு தயக்கமா இருந்தது”
“இது தான் வேண்டாம்னு சொன்னேன். நீ என்கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லலாம். கேக்கலாம் சரியா?”
“ம்ம்”
“சரி வா. நம்ம வீட்டுக்கே போகலாம்”, என்று காரை கிளப்பி விட்டான்.
வீட்டுக்கு போனதும் அவன் காரை உள்ளே விட, கேட்டை திறந்து வைத்தவள் அவன் காரை உள்ளே பார்க் செய்யும் போது, கேட்டை பூட்டை  வைத்து பூட்டி விட்டு உள்ளே சென்றாள்.
அவனும் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்றான்.
தன்னுடைய அறையில் போய் நின்றவள் தயக்கமாய் அவனை பார்த்தாள்.
“பேசணும்னு தான் சொன்னேன். உடனே பேசணும்னு ஒன்னும் இல்லை. நீ டிரஸ் மாத்திட்டு வா”, என்றான் சூர்யா.
அவனை பார்த்து சிரித்து விட்டு தன்னுடைய சுடிதாரை எடுத்தாள் கலைமதி.
“இந்த சுடிதார் மாத்துறதுக்கு நீ மாத்தாமலே இருக்கலாம் கலை. நைட்டி எதாவது போட மாட்டியா? ஆனா உன்கிட்ட இருக்கிறதை பாத்தேனே”, என்றான் சூர்யா.
“என்ன இதை பத்தி பேசுறான்?”, என்று நினைத்து கொண்டு “அது அது..”, என்று இழுத்தாள் மதி.
அவள் தயக்கத்தை ஊகித்தவன் “ஏன் கலை? என்னை பாத்தா உனக்கு தப்பானவனா தெரியுதா? எனக்கு பயந்துட்டு தான் சுடிதார் போடுறியா?”, என்று வறண்ட குரலில் கேட்டான்.
“சித்திக்கு நான் நைட்டி போட்டா பிடிக்காது”, என்று வேகமாக ஆரம்பித்தவள் குரல் கம்ம “நைட்டி போட்டா.. போட்டா…. எவனை மயக்க போட்டுருக்கேன்னு கேப்பாங்க. அதுல இருந்து வீட்டு ஆள் முன்னாடி போட மாட்டேன். ஹாஸ்டல்ல மட்டும் தான்”, என்று சொன்னாள்.
அவள் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன் “அத்தை இவ்வளவு மோசமா பேசுவாங்கன்னு எனக்கு தெரியாது கலை. ஆனா இது உன் வீடு. யாரை பத்தியும் யோசிக்க வேண்டாம். உனக்கு பிடிச்சதை செய்யலாம். ஒரு வேளை என்னை நினைச்சு தயங்குனா வேண்டாம்”, என்றான்.
“அப்படி எல்லாம் இல்லை. நைட்டியே போடுறேன்”, என்று முகம் சிவக்க சொல்லி விட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.
சிறு சிரிப்பு சிரித்து விட்டு வெளியே வந்தான். அவள் குளித்து முடித்து வந்ததும் அவள் உடையை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றான் சூர்யா.
“ஐயோ குளிச்சிட்டு துண்டோடு வருவான். அதுக்குள்ள ஓடிறனும்”, என்று நினைத்து மொட்டை மாடிக்கு சென்று அவனுக்காக காத்திருந்தாள் கலைமதி.
சிறிது நேரம் கழித்து அவனுடைய காலடி ஓசை கேட்டது. திரும்பி பார்த்தவள் அதிர்ந்தே போனாள்.
அங்கே முக்கா பேண்ட்டும், உள் பனியனும் அணிந்து நடந்து வந்தான் சூர்யா.
கவர்ச்சியாக அவள் கண்களுக்கு தெரிந்தான் சூர்யா. பெண்கள் மட்டும் அரை குறையாக உடலை காட்டினால் மட்டும் தான்   கவர்ச்சி வருமா? ஆண்களும் அப்படி இருந்தால் பெண்கள் மனதிலும்  சலனம் வர தான் செய்யும்.
“இவன் ஒரு சட்டை போட்டுட்டு வந்தா நல்லா இருந்திருக்கும்”, என்று நினைத்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
அந்த இருளில் அவள் முக சிவப்பு அவன் கண்களுக்கு தெரியவே இல்லை.
தித்திப்பு தொடரும்……

Advertisement