Advertisement

அத்தியாயம் 4
உன் செல்ல சிணுங்கல்களில்
நான் என் சித்தத்தையே
தொலைக்கிறேன் அன்பே!!!
அன்று கடைசி பீரியட் வரை படித்து படித்து மதியிடம் சொன்னாள் காவ்யா.
“இங்க பாரு மதி, சாயங்காலம் அண்ணா, என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டா, ஒழுங்கா ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்ற. அப்புறம் அந்த ஓடி போன பொண்ணை விரும்புறீங்களான்னு  கேட்டுரு சரியா?”, என்றாள் காவ்யா.
“அவளை பத்தி  எதுக்கு டி கேக்கணும்?”, என்று அப்பாவியாய் கேட்டாள் கலைமதி.
“லூசு லூசு அது தெரிஞ்சா தான், உன்மேல  அவங்களுக்கு எப்ப காதல் வரும்னு கண்டு பிடிக்க முடியும்”
“நான் எப்படி காவ்யா அதை கேக்க முடியும்? எனக்கு பயமா இருக்கு டி”
“நல்லவங்க, நல்லா பேசுறாங்கன்னு  தான சொன்ன? அப்புறம்  என்ன பயம்? ஒழுங்கா கேளு”
“ம்ம்”
“உனக்கு பிடிச்சிருக்குறதையும்  சொல்லிரு. பிடிச்சிருக்கு தான?”
“பிடிச்சிருக்கு”
“மவளே ஏதாவது சொதப்புன்னேன்னு  வச்சிக்கோ, நாளைக்கு உன்னை பொலி போட்டுருவேன்”
“ரவுடி  மாதிரி பேசாத காவ்யா”, என்று சிரித்தாள் கலைமதி.
அன்று மாலை அவன் எப்போது வருவான் என்று தெரியாததால், “எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் காவ்யா. நீ கிளம்பு”, என்று சொல்லி விட்டாள் மதி.
“இருந்தா அவங்க கூட காரில் கூப்பிடுவாங்க”, என்று நினைத்து காவ்யாவும் கிளம்பி விட்டாள்.
மதியும் அதை யோசித்தாள் தான். ஆனால் “அவன் என்ன சொல்லுவானோ?”, என்று நினைத்து அவளை அனுப்பி விட்டாள்.
“எப்ப வருவான்?”, என்று எதிர் பார்த்து கொண்டிருந்தவளின் கண்ணுக்கு அவன் கார் தெரிந்தது.
கார் அருகே அவள் வரவும், முன் பக்க கதவை உள்ளே இருந்தே திறந்து விட்டான் சூர்யா.
அவனை பார்த்ததும் அவள் தலை தன்னாலே குனிந்தது.
ஏறி அமர்ந்தவள் கதவை மூடி விட்டு அவனை பார்த்தாள்.
அவள் முகத்தை பார்த்தவன் “போகலாமா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்”
கார் கிளம்பியது.  இருவருக்குள்ளும் மவுனமே ஆட்சி செய்தது.
காலையில் வரும் போது வெளியவே பார்வையை பதித்திருந்த மதி, இப்போது வெளியே பார்ப்பதும், அவன் முகத்தை பார்ப்பதுமாக  இருந்தாள்.
“என்ன இவன்  காலைல கேட்ட கேள்வியை இப்ப கேக்காம வண்டியை ஓட்டுறான்? காலைல  கேட்ட  கேள்வியை  இப்ப  கேளுங்கன்னு  எப்படி  சொல்ல  முடியும்? கேக்கவே  மாட்டிக்கானே”, என்று  நினைத்து  அவனை  அடிக்கடி  திரும்பி  பார்த்தாள்.
“என்ன  மேடம்  அடிக்கடி  நம்ம  பக்கம்  பார்வையை  திருப்புறாங்க?”, என்று  நினைத்தவனுக்கு  அப்போது  தான்  காலையில்  தான்  கேட்ட  கேள்வி  நினைவில்  வந்தது.
“அதுக்கு  பதில்  சொல்ல  தான்  இப்படி  துடிக்கிறாளா? பிடிக்கும்னு  சொல்றதுக்கு  இப்படி   பாத்துட்டு வாராளா? இல்லை பிடிக்கலைன்னு சொல்லிருவாளோ?”, என்ற படியே அவள் முகத்தை பார்த்தான்.
அதில் பிடிக்காதது போல எந்த அறிகுறியும் தெரியாததால் நிம்மதியாக மூச்சு விட்டான் சூர்யா.
அவளுடைய தவிப்பு தாங்காமல் “என்ன ஆச்சு கலை? எதாவது கேட்கணுமா?”, என்று கேட்டு மேலும் அவளை கடுப்பேத்தினான்.
“சும்மா இருந்தவளை பிடிக்குமா பிடிக்காதான்னு கேள்வி கேட்டு சொறிஞ்சு விட்டுட்டு இப்ப நல்ல பிள்ளை மாதிரி என்ன ஆச்சுன்னு கேக்குறதை பாரு?”, என்று நினைத்து கொண்டு “இல்லையே”, என்றாள்.
“அதான  இவளாவது தைரியமா நீங்க கேட்ட கேள்விக்கு பதிலை கேக்கலைன்னு கேக்குறதாவது”, என்று நினைத்து கொண்டு “இல்லை இங்க அடிக்கடி திரும்பி பாத்தியா? அதான் அப்படி நினைச்சிட்டேன்”, என்றான்.
“இதை எல்லாம் நல்லா கேளு. கேட்ட கேள்வியை மறந்துரு”, என்று நினைத்து கொண்டு “இல்லை கார் வேகமா போற மாதிரி இருந்தது அதான்”, என்று சமாளித்தாள்.
“நம்ம பொண்டாட்டி விவரம் தான் டா”, என்று நினைத்து கொண்டு “அதுவா அம்மா அப்பா எல்லாரும் ஊருக்கு போறாங்க. அதான் சீக்கிரம் போகலாம்னு போறேன்”, என்று அவனும் அவளுக்கு சமமாக பதில் சொன்னான்.
அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் கலைமதி.
“என்ன ஆச்சு? இப்படி முழிக்கிற?”, என்று கேட்டான் சூர்யா.
“எல்லாரும்னா எங்க அப்பாவும் போறாங்களா?”
“ஆமா, இது என்ன கேள்வி? நேத்து அம்மா உன்கிட்ட சொல்லிருப்பாங்கன்னு நினைச்சேன்”
“அத்தை, என்கிட்டே சொல்லலையே. அத்தை போயிட்டு எப்ப வருவாங்க?”
“ஆமா நீ எதுக்கு இவ்வளவு அதிர்ச்சியாகுற?”
“இல்லை எல்லாரும் போய்ட்டா எப்படி வீட்ல தனியா இருக்குறது?”
“என்கூட இருக்க பய படுறாளோ?”, என்று நினைத்து “நான் உன்னை என்ன செய்ய போறேன்? எதுக்கு பயம்?”, என்றான்.
“ஐயோ நான் உங்களை சொல்லலை. நம்ம ரெண்டு பேரும் எப்படி தனியா இருக்கன்னு தான் கேட்டேன் அத்தான். உங்களுக்கும் பயமா இருக்குமே”
“இவ என்ன என்னை சின்ன பாப்பானு நினைச்சாளா?”, என்று நினைத்து கொண்டு “எனக்கு துணையா தான் நீ இருக்கியே? நீ என்னை பாத்துக்க மாட்டியா?”, என்று கேட்டான்.
மண்டையை பலமாக ஆட்டினாள் மதி. அவளை பார்த்து சிரித்து விட்டு  திரும்பி கொண்டான்.
“போயிட்டு எல்லாரும் எப்ப வருவாங்க?”, என்று மறுபடியும் கேட்டாள் மதி.
“இதையாவது அவளாவே கேக்குறாளே”, என்று நினைத்து கொண்டு நம்ம ரிசப்ஷன் சண்டே இருக்கே? அதுக்கு சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட போறாங்க. ரெண்டு நாளில் வந்துருவாங்க”, என்றான்.
“ஓ?”
“என்ன ஓ?”
“ஒன்னும் இல்லை”, என்ற படி அமைதியாகி விட்டாள்.
“அமைதியாகிட்டா. இன்னும் பேசா மடந்தை பேசாது”, என்று நினைத்து கொண்டு காரில் கவனம் செலுத்தினான் சூர்யா.
வீட்டருகே காரை நிறுத்தியதும் “போய் கேட் திறக்கவா?”, என்று கேட்டாள் கலை மதி.
“அதெல்லாம் வேண்டாம். இப்ப அவங்களை விட போகணுமே. அப்புறம் உள்ளே நிப்பாட்டிக்கலாம். நீ இறங்கு, நான் திருப்பி வைக்கிறேன்”, என்றான் சூர்யா.
“சரி”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் மதி.
அங்கே அவன் சொன்ன படியே மூவரும் கிளம்பி கொண்டிருந்தார்கள்.
“வந்துட்டியா மதி மா? மதியம் மிச்சம் வைக்காம சாப்பிட்டியா?”, என்று கேட்டாள் மங்களம்.
அந்த பாசத்தில் நெகிழ்ந்து போனாள் மதி. வாழ்க்கையில் பாசத்தை உணரும் முதல் தருணம்.
“சாப்பிட்டேன் அத்தை. நல்லா இருந்தது. என் பிரண்ட் டேஸ்ட்டா இருக்குன்னு முக்கால்வாசி அவளே சாப்பிட்டா. அவளோடதை நான் சாப்பிட்டேன்”, என்று சிரித்தாள் மதி.
“இன்னும் கூட கொஞ்சம் சேத்து வைக்கிறேன். அப்புறம் மதி மா, ரெண்டு நாள் நீ வீட்டை கவனிச்சிக்கோ. உனக்கு தான் சமைக்க தெரியுமே. ரெண்டு பேரும் புடிச்சதை செஞ்சி சாப்பிடுங்க. சூர்யா எதை கொடுத்தாலும் சாப்பிட்டுக்குவான். அத்தை ரெண்டு நாள்ல வந்துறேன் என்ன டா?”
“ஹ்ம்ம் சரிங்க அத்தை. அத்தான் இப்ப தான் சொன்னாங்க. பத்திரமா போயிட்டு வாங்க. நான் எதாவது எடுத்து வைக்கணுமா?”
“ஹ்ம்ம், மேல துணி காய போட்டுருக்கேன். அதை மட்டும் எடுத்துட்டு வா, என் பாவாடை அதுல தான் இருக்கும்”
“ஹ்ம்ம் சரி அத்தை”, என்று சொல்லி விட்டு காலேஜ் பேகை அங்கு இருந்த சோபாவில் வைத்து விட்டு மேலே ஓடினாள்.
சூர்யா உள்ளே வரும் போது,  மங்களம் அருகே அமர்ந்து துணியை மடித்து கொண்டிருந்தாள் கலைமதி.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.
“நான் இதை பாத்துக்குறேன் மதி. நீ போய் முகம் கழுவிட்டு காபி சூடு பண்ணி, அவனுக்கு கொடுத்துட்டு நீயும் குடி”, என்றாள் மங்களம்.
“சரிங்க அத்தை”, என்று எழுந்து உள்ளே போய் பேகை வைத்தவள், தன்னுடைய உடையை எடுத்து கொண்டிருந்தாள்.
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சூர்யா அவளை பார்த்தான்.
“டிரஸ் மாத்த போறியா கலை?”, என்று கேட்டான் சூர்யா.
“ம்ம்”, என்றவளின் கையில் ஒரு சுடிதார் இருந்தது.
“நாமளும் அவங்க கூட போறோம். அதனால எல்லாரையும் பஸ் ஏத்தி விட்டுட்டு வந்து மாத்திக்கோ”
“ஹ்ம்ம் சரி அத்தான்”, என்றவள் உடையை அங்கேயே வைத்து விட்டு முகம் கழுவ போனாள்.
அடுத்து மங்களம் போட்டு வைத்திருந்த காபியை சூடு செய்து, அவனுக்கும் கொடுத்தாள்.
இருவரும் டிவி முன்பு எதிர்  எதிர் சோபாவில் அமர்ந்து காபி குடிப்பதை பார்த்த மங்களத்துக்கு மனது நிறைவாக இருந்தது.
“பையன் வாழ்ந்துருவான். இது தான் உன் கணக்கா கடவுளே?”, என்று நினைத்து கொண்டே மதியை பார்த்தாள்.
“இப்படி அழகுலயும், குணத்துலயும் தங்கமான மருமக கிடைச்சா, எந்த மாமியாருக்கு தான் பிடிக்காது?”, என்று நினைத்து கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தவள் “மதி மா”, என்று ஆரம்பித்தாள்.

Advertisement