Advertisement

அதன் பின் இரவு மூவரையும் அமர வைத்து பரிமாறினாள் திலகா. காவ்யா பக்கம் பார்வையை திருப்ப கூட செய்யாமல் சுந்தர் மற்றும் திலகாவிடமே பேசிய படி சாப்பிட்டான் ஷியாம்.
அதை பார்த்து காவ்யாவுக்கு தான் குழப்பமாக இருந்தது. அவனை அடிக்கடி அடி பார்வை பார்த்து கொண்டே சாப்பிட்டு முடித்தாள். அதன் பின்னர் அவன் அவனுடைய ரூமுக்கு சென்று விட்டான்.
தன்னுடைய அறையில் படிக்க ஆரம்பிக்கலாம் என்று எடுத்த காவ்யாவுக்கோ சுத்தமாக படிக்க தோன்றவே இல்லை. மேல் வீட்டில் அவன் இருக்கும் போது அவளுக்கு எப்படி படிக்க தோன்றுமாம்?
எப்படியோ பத்து மணி வரை நேரத்தை கடத்தியவள் “படுக்கலாம்”, என்று நினைத்து எழுந்தாள்.
பாட்டிலில் தண்ணீர் இல்லாததால் கீழே சென்றாள். திலாகவும் சுந்தரும் அமர்ந்து சீரியல் பார்த்து கொண்டிருந்தார்கள். 
“என்ன டி,  படிச்சிட்ட?”, என்று கேட்டாள் திலாகா.
“ஓ, படிச்சிட்டேனே? தூங்க போறேன் மா. தண்ணி எடுக்க வந்தேன்”
“காலைலயும்  ஒரு தடவை படி, சரியா?”
“திலகா அவ என்ன ஐ. ஏ. எஸ்க்கா  படிக்கிறா?  வேலை பாக்குற அளவுக்கு அறிவு இருந்தா போதும். கூடவே கொஞ்சம் மார்க்கும். நீ போடா குட்டி”, என்றார் சுந்தர்.
“நீங்க இப்படியே செல்லம் குடுங்க. சரி காவ்யா, ஷியாம் தம்பிக்கும் தண்ணி எடுத்துட்டு போய் கொடுத்துரு. நாளைக்கு கேன் வாங்கி வச்சிரலாம்”
“நானா? அதெல்லாம் முடியாது. நீ போய் கொடு”
“மேல தான டி போற? போய் கொடு”, என்று சொல்லி விட்டு டிவி  பக்கம் திரும்பி கொண்டாள்.
“அட பாவிகளா, அவன் நல்லவன்னு  நம்பி இப்படி போக சொல்றீங்களே? நீங்க அப்படி நினைக்கணும்னு தான் அவன் என்னை பாக்காத மாதிரி சீன போட்டானா?”, என்று நினைத்து கொண்டு இரண்டு பாட்டிலில் தண்ணீர் பிடித்தவள் மாடியை நோக்கி சென்றாள்.
தன்னுடைய ரூமில் ஒரு பாட்டிலை வைத்தவள், மற்றொன்றை தூக்கி கொண்டு அந்த கதவு வழியாக  அவன் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றாள்.
ஹாலில் நின்று கொண்டு தலையை சுழற்றி பார்த்தாள். “அவன் கிட்ட கொடுத்துட்டு ஓடி வந்துரனும்”,   என்று மனதுக்குள் சொல்லி கொண்டாலும் காவ்யா கால்கள் தாளம் போட்டன.
ஒரு பெட்‌ரூம் வெளியே பூட்டி இருந்ததால் மற்றொன்றில் தான் இருப்பான் என்று எண்ணி அதை நெருங்கியவள் கதவை தட்டினாள். ஏற்கனவே கதவை தட்டாமல் சென்று பார்த்த கோலம் இன்றும் மறக்க வில்லையே.
“கதவு திறந்து தான் இருக்கு அங்கிள்”, என்று சொல்லி எழுந்து வந்தான் ஷியாம்.
இவள் கதவை திறக்கவும், அவன் கதவு அருகே வருவதும் சரியாக இருந்தது. அந்த நேரத்தில் அவளை அவன் சுத்தமாக எதிர்பார்க்க வில்லை.
“முதல் நாளே இவ்வளவு அருகில் அவளுடைய தரிசனமா? இதுக்கு தானே இத்தனை பிளான்  போட்டேன்”, என்று எண்ணி கொண்டே அவளை பார்த்து சிரித்தான்.
அவனை பார்க்க முடியாமல் “தண்ணி”, என்று பாட்டிலை மட்டும் நீட்டினாள். கை நீட்டி  அதை வாங்கி கொண்டவன் அவள் கைகளை மட்டும் விடவே இல்லை.
“இதுக்கு தான் இங்க வர யோசிச்சேன்?”, என்று நினைத்து கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து “கையை விடுங்க”, என்றாள்.
அவனோ பிடித்திருந்த கையை சுண்டி இழுத்தான். அவனுடைய மார்பில் போய் விழுந்தாள் காவ்யா. 
“ப்ச், இதுக்கு தான் இங்க வர மாட்டேனு சொன்னேன். இந்த அம்மா தான்”
“ஹா ஹா, நீயும் என்னை இப்படி தனியா பாத்தா இப்படி நடக்கும்னு எதிர் பாத்துருக்க? அப்படி  தான? அப்ப நடத்தாம போனா நல்லா இருக்குமா?”, என்று சொல்லி கொண்டே அவளுடைய உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு விடுவித்தான்.
“ஏய், பொண்டாட்டி உன்னோட மாமா ரூம்கு நீ வர கதவு தட்டி அனுமதி வாங்கணும்னு எந்த அவசியமும் இல்லை சரியா?”, என்று அவள் காதில் சொன்னான் ஷியாம்.
“எதுக்கு? கதவு தட்டாம வந்து  அன்னைக்கு மாதிரி நடக்குறதுக்கா?”, என்று வெட்கத்துடன் சொன்னாள் காவ்யா.
“என்னை அப்படி பாக்க  உனக்கு மட்டும் தான டி உரிமை இருக்கு”, என்று சிரித்தான் ஷியாம்.
அவன் கையில் கிள்ளி விட்டு ஓடியே  வந்து விட்டாள் காவ்யா. அவன் கொடுத்த முத்தத்தை பற்றியே நினைத்து கொண்டு  தன் அறைக்கு வந்தவள் படுத்து விட்டாள். சிரித்து  கொண்டே ஷியாமும் தூங்க போனான்.
அதே நேரம் கட்டிலில் படுத்திருந்த சூர்யா  உறக்கம் வராமல் புரண்டு  கொண்டிருந்தான். மதியை ஆர்வமாக பார்த்து கொண்டே தூங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான்.
அவன் அசைவுகளிலே அவன் தூங்க வில்லை என்று உணர்ந்த மதி “அத்தான் என்ன தூக்கம் வரலையா?”, என்று கேட்டாள்.
“ம்ம்”
“என்ன ஆச்சு? பால் காச்சு கொண்டு வரவா?”
“வேண்டாம் கலை”, என்று சோகமாக ஒலித்தது அவனுடைய குரல்.
அவன் வருத்தத்தை உணர்ந்தவள் காரணம் தெரியாமல் எழுந்து லைட்டை போட்டாள்.
“இப்ப எதுக்கு லைட் போடுற?”
“சும்மா தான்”, என்றவள் அவன் அருகே அமர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவனும் எழுந்து அமர்ந்து கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி  அமர்ந்தான்.
அவனை போலவே அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கையை பற்றி கொண்டாள்.
“கலை”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் சூர்யா.
தோளில் இருந்து தலையை எடுக்காமல் முகத்தை மட்டும் திருப்பி “என்ன அத்தான்?”, என்று கேட்டாள்.
“நான் இல்லாம இருந்துருவியா டி?”
“அத்தான்”, என்று சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அதை பார்த்து பதறி போனவன் “லூசு இப்ப ஏன் இப்படி அழுற?”, என்று கேட்டான்.
“நீங்க இப்படி கேட்டா அழாம என்ன செய்றதாம்? நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்? எதுக்கு அப்படி சொன்னீங்க? எனக்கு பயமா இருக்கு”, என்று சொல்லி அவன் வயிற்றில் கைகளை போட்டு இறுக்கி கொண்டாள்.
“எனக்கு டிரான்ஸ்பர் வந்துருக்கு டி”
“என்ன?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் கலைமதி.
“ஆமா கலை, செகந்தராபாத்க்கு  போட்டுருக்காங்க. அங்க புது பிரான்ச் போன மாசம் கடைசில ஸ்டார்ட் பண்ணிருக்காங்கன்னு  சொன்னேன்ல? அங்க டிரெயினிங் கொடுக்குறதுக்கு  போகணுமாம். டிரான்ஸ்பர் மாதிரி இல்லை. ஆனா ஒன்னு இயர் டிரெயினர் மாதிரி போகணும்”
“அத்தான்”
“என்ன மா?”
“இந்த விஷயத்துனால தான்  நீங்க ரெண்டு நாள் சரியாவே இல்லையா? என்னை விட்டுட்டு போயிருவீங்களா?”
“அது தான் டி எனக்கும் வலிக்குது. ஆனா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலைல  இருந்துட்டு என்ன செய்ய? டிரெயினிங் கொடுக்க என்னை போட்டுருக்காங்கன்னா  அடுத்து எனக்கு ஆபிஸரா  புரமோஷன் வரும். அதுக்கு சந்தோச படுறதா? ஒரு வருசம் உன்னை பிரிஞ்சு இருக்கவான்னு தெரியலை டி”
“எதுக்கு அத்தான் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? நீங்க இல்லைன்னா நான் என்ன பண்ண? என்னால அவ்வளவு நாள் உங்களை பாக்காம இருக்க முடியாது”
“அப்படி இல்லை டா  குட்டி, லீவுக்கு வருவேன். ஆனா மாசம் மாசம் பாக்க  முடியுமானு எல்லாம் தெரியலை. முந்தாநேத்தெ விசயம் தெரியும் கலை. ஆனா என்னால மனசை சமாளிக்க முடியலை. நான் இல்லாம நீ எப்படி இருப்பன்னு  தான் எனக்கு மனசுக்குள்ள ஓடிட்டே  இருக்கு. பேசாம வேலையை விட்டுரலாம்னு தான் யோசிக்கிறேன் டி. வேற ஜாப் தேடவா?”
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்ட மதி அமைதியாக இருந்தாள். இருவருக்குள்ளும் ஆழ்ந்த மௌனம் தொடர்ந்தது.
என்ன சொல்வது என்று இருவருக்கும் தெரிய வில்லை. கவர்ன்மெண்ட் வேலை கிடைக்க அவன் எவ்வளவு கஷ்ட பட்டு படித்திருப்பான்  என்று மதி அறியாதது அல்ல.
அப்படி பட்ட வேலையை தனக்காக உதறி தள்ளும் அளவுக்கு அவன் காதல் கிடைத்ததே பெரும் பாக்கியம். அப்படி பட்ட காதலுக்கு மதி என்ன செய்திருக்கிறாள்? 
“உங்களை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது அத்தான்”, என்று சொல்லி அவனுடைய வளர்ச்சியை தடுக்க வேண்டுமா?  இதை அறிந்தால் எல்லாரும் அவளை பற்றி சுயநலவாதி என்று சொல்ல மாட்டார்களா? அப்படி பட்ட செயலை அவள் செய்வாளா?
அது மட்டுமல்லாமல் அவளை ஒவ்வொரு முறையும் அவன் காதலோடு நெருங்கி விட்டு விலக முடியாமல் விலகும் போது அவன் படும் அவஸ்தையை அவள் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்?
இந்த ஒரு வருட பிரிவில் அவளுடைய படிப்பும் முடிந்து விடும். தன்னை நெருங்கி அவன் விலகும் அவஸ்தையும் விலகும்? இனி மீதி இருப்பது இரண்டே செமஸ்டர் தான். அது வரைக்கும் பிரிந்து இருந்து, இருக்கும் காதலை அதிக படுத்தலாமே?
எல்லாவற்றையும் எண்ணி பார்த்தவள் “அத்தான்”, என்று அழைத்தாள்.
“என்ன டா?”
“நீங்க அங்க வேலைக்கு போங்க”
“கலை மா “
“ஆமா அத்தான், இந்த வேலை வாங்க எவ்வளவு கஷ்ட பட்டு படிச்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியும். இப்ப இருக்குற சூழ்நிலைல  அந்த வேலையை விட்டா, நீங்க இவ்வளவு நாள் செஞ்ச எல்லாமே வீணா போயிரும். அது மட்டுமில்லாம நான் படிச்சு முடிச்ச அப்புறம்  தான் என்கூட சேந்து வாழணும்னு  இருக்கீங்க? ஆனா என்னை முத்தமிட்டு பிரியும் போது, நீங்க ரொம்ப கஷ்ட படுறீங்க? இன்னொரு உண்மை என்னன்னா  என்னாலேயே  நீங்க என்னை விட்டு விலகுறதை  தாங்க முடியலை. அதை விட என்னால இப்ப எல்லாம் படிப்புல  கவனம் செலுத்தவும் முடியல. எனக்கு உங்களை ஒட்டிகிட்டே  இருக்க தான் தோணுது. எல்லாத்தையும் யோசிச்சு பாத்தா நமக்கு இந்த ஒரு வருச இடைவெளி தேவை தான் அத்தான்”
“கலை, நீயா இப்படி பேசுறது? நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. தேங்க்ஸ் டி. நீ போகாதீங்க அத்தான்ன்னு சொல்லிட்டா   என்ன செய்யன்னு ரொம்ப தவிச்சு போய்ட்டேன். பாரின்ல சாப்ட்வேர் சைடு வேலைக்கு போய்ட்டு  உடம்பு சரி இல்லாம போய், பிறகு இங்க வந்து என்ன செய்யன்னு யோசிச்சு மறுபடியும் ஸ்கூல் பாடம்  எல்லாம் கவனத்தோட  படிச்சு பாஸ் ஆகுறதுக்குள்ள  ரொம்ப நொந்து போய்ட்டேன் டி . அது மட்டும் இல்லாம இப்ப அடுத்த போஸ்ட் கிடைக்க போகுது அப்படிங்குறப்ப  அதை இழக்க யாருக்கும் மனசு வராது தான். ஆனா எனக்கு நீ அதை விட முக்கியம். ஆனாலும்  உனக்காக வேலையை  விட்டாலும் என் மனசுல வேலை இல்லாதது உறுத்திட்டே  இருக்கும். ஆனா இப்ப நீ போக சொன்ன அப்புறம் சந்தோசமா இருக்கு மா. ஆனாலும் அங்க போனா உன்னோட நினைவாவே இருக்குமே கலை. நீயும் என்னையே நினைசுட்டு இருப்பியே?”
“அது தான அத்தான் நமக்கு வேணும்? நம்ம ரெண்டு பேரும்  ஒருத்தரை பத்தி ஒருத்தர் நினைச்சிட்டே வாழுறது கூட நல்லா தான் இருக்கும்? ஆனா நீங்க போனும்னா எனக்கு ஒரு கண்டீசன் இருக்கு”
“கண்டிசனா? என்ன டா  குட்டி?”
“எனக்கு வீடியோ மொபைல் வேணும். உங்களுக்கு அங்க இருக்குற வேலைல  எனக்கு பேசிட்டே  இருக்கணும்னு சொல்லலை. ஆனா ஒரு அஞ்சு நிமிசமாவது என்கிட்ட பேசணும். எனக்கு தினமும் உங்களை பாக்கணும். அதுக்கு சரின்னா நீங்க போகலாம்”
“நானே உனக்கு மொபைல் வாங்கி கொடுக்க தான் டி நினைச்சேன். ஆனா இப்படி ஒரு சூழ்நிலைக்கு வாங்கணும்னு எதிர் பாக்கலை. கண்டிப்பா வாங்கி தரேன். தினமும் உன்னை பாக்காம  என்னாலயும்  இருக்க முடியாது மா. அதனால தினமும் போன்  பண்ணுவேன் சரியா?”
“மூணு நாள் நாலு நாள் சேர்ந்து லீவ் கிடைச்சா இங்க வந்துருவீங்க தான அத்தான்?”
“கண்டிப்பா கன்ணம்மா”
“ஆமா, இது உங்களுக்கு அன்னைக்கே தெரியும்னா எதுக்கு எங்க கிட்ட சொல்லலை?”
“இல்லை டி, அன்னைக்கு ஷியாம் சும்மா பிரிவை பத்தி பேசினானா? அடுத்த நாளே  இதை பத்தி  சொன்னா அவன் அப்படி சொன்னதுனால தான் இப்படி ஆகிட்டோன்னு பீல்  பண்ணுவான். அதனால தான் சொல்லலை. அது மட்டுமில்லாம உன்னோட கண்ணீரை பாக்க பயந்து தான் உன்கிட்டயும் சொல்லலை டி”
“நீங்க கண்ணீரை துடைக்கிறதா இருந்தா நான் எப்பவும் அழுதுட்டு இருக்க ரெடீ அத்தான்”, என்று சொன்னவளின்  கன்னத்தை இரு பக்கமும் கை வைத்து பிடித்து கொண்டு அவள் கண்களுக்குள் உற்று பார்த்தான் சூர்யா.
“இவ்வளவு காதலை என் மேல வைக்கிறதுக்கு நான் என்ன டி உனக்கு செஞ்சேன்?”
“நீங்க  செஞ்சது ரொம்ப ஏராளமா இருக்கு அத்தான்? என் தலையை கோதி விட்டு, சாப்பாடு ஊட்டி, நெஞ்சில் சாய்த்து  ஆறுதல் சொல்லி எனக்கு அம்மாவா இருக்கீங்க? இதை இதை இப்படி செய். இது சரியா வராதுன்னு  அட்வைஸ் பண்ணி ஒரு வழிகாட்டியா எனக்கு அப்பாவா இருக்கீங்க? எனக்கு புடிச்சது எது புடிக்காதது எதுன்னு தெரிஞ்சு வச்சு நல்ல நண்பனா சகோதரனா  இருக்கீங்க? அது மட்டுமில்லாம உங்க மனசுல உள்ள மொத்த காதலையும் என் மேல கொட்டி நல்ல காதலனா இருக்கீங்க? இதை விட ஒரு பொண்ணுக்கு வேற என்ன வேணும்  சொல்லுங்க?”
“ஹா ஹா, எல்லாத்தையும் சொல்லிட்ட? ஆனா என்னை பாக்க உனக்கு புருசனா தெரியலையா டி?”
“அது  தான் படிச்சு முடிச்ச அப்புறம்  தான் ஹஸ்பண்டா இருப்பேன்னு  சொல்லிட்டிங்களே?”, என்று வெட்கத்துடன் சிரித்தாள் மதி.
தித்திப்பு தொடரும்……

Advertisement