Advertisement
அத்தியாயம் 15
நீ என்னுள் ஆழ புதையும்
ஒவ்வொரு நொடியுமே
தித்திப்பான தருணங்களே!!!
“நான் சும்மா தான் மச்சான் சொன்னேன். நீயும் என் தங்கச்சியும் சேர்ந்து சந்தோசமா இருக்கணும். உங்களுக்குள்ள பிரிவே வரக்கூடாது. என் மேல கோபம் இல்லை தான டா?”, என்று கேட்டான் ஷியாம்.
“இல்லை டா. உன் சந்தோசம் எனக்கும் முக்கியம். நீ தாராளமா காவ்யா வீட்ல தங்கிக்கோ. ஆனா அப்ப அப்ப வீட்டு பக்கம் வா டா. அப்புறம் என் பைக்கை நீயே யூஸ் பண்ணிக்கோ”, என்று சிரித்தான் சூர்யா.
“என் தங்கச்சி என்னை மன்னிக்க சொன்னதுனால தான நீ மன்னிச்ச? இல்லைன்னா முகத்தை தூக்கிட்டு தான் இருப்ப. தேங்க்ஸ் தங்கச்சி”
“சும்மா இருங்க அண்ணா. அத்தானுக்கு கோபமே வராது தெரியுமா?”, என்று சிரித்தாள் கலைமதி.
“ஆமா, ஆமா அவனுக்கு கோபமே வராது தான்” , என்று சிரித்தான் ஷியாம். இப்படியே பேசிய படியே வீட்டுக்கு சென்றார்கள். ஷியாம் மற்றும் மதியை இறக்கி விட்ட சூர்யா தன்னுடைய அப்பாவை போனில் அழைத்து “எங்கே வரீங்க?”, என்று கேட்டான்.
அவர் பத்து நிமிசத்தில் வந்து விடுவோம் என்று சொன்னதால் அவர்கள் இருவரிடமும் சொல்லி விட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.
பின் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மங்களமும் சிவ பிரகாசமும் ஷியாமை பாசத்தோடு வரவேற்றார்கள்.
ஆனால் அவன் காவ்யா வீட்டில் தங்க போவதை அறிந்து இருவரும் நன்கு திட்டினார்கள். சூர்யா தான் அவர்களுக்கு உண்மையை விளக்கினான்.
அவர்கள் கொடுத்த திட்டை வாங்கி கொண்டு பேசி பேசியே மங்களத்தையும் சிவ பிரகாசத்தையும் சம்மதிக்க வைத்தான் ஷியாம்.
அதன் பின் அடுத்த நாள் காலையில் மதி, சூர்யாவுடன் காரில் காலேஜ் கிளம்பும் போது சூர்யாவின் பைக்கை எடுத்து கொண்டு காவ்யாவை காண கிளம்பினான் ஷியாம்.
அதை பார்த்த சூர்யா சிறிது யோசித்து விட்டு, “நீங்க ரெண்டு பேரும் பைக்ல சுத்துறது சேப் இல்லை டா. இந்தா நீ கார்ல போ”, என்று காரை ஷியாமிடம் கொடுத்து விட்டு மதியை பைக்கில் அழைத்து சென்றான்.
காரை எடுத்து கொண்டு காவ்யா ஏறும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தான் ஷியாம். அங்கு வந்த காவ்யா சூர்யா காரை கண்டதும் “எல்லாரும் இருக்காங்க போல?”, என்று நினைத்து கொண்டே அருகில் சென்றாள்.
ஆனால் அதன் பின்னர் அவளுடைய நாயகன் மட்டுமே உள்ளே அமர்ந்திருந்ததை கண்டு சிரித்தவள் “நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?”, என்று கேட்டாள்.
“உள்ள ஏறிட்டு பேசு டி”, என்று சிரித்தான் ஷியாம்.
பின் பக்கம் அமர போனவளை “கொன்னுருவேன். ஒழுங்கா முன்னால ஏறு”, என்று சொல்லி திட்டினான்.
அவள் முன்னால் ஏறியதும் சந்தோசத்துடன் காரை ஓட்டினான்.
“கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சார் எப்ப சிவில் இன்ஜினியரிங் படிச்சீங்க?”, என்று நக்கலாக கேட்டாள் காவ்யா.
“என் பொண்டாட்டிக்காக நான் டாக்டர்ன்னு கூட சொல்லுவேன் டி”, என்று சொல்லி அவளை திகைக்க வைத்தான் ஷியாம்.
“பின்னாடி அம்மா அப்பாக்கு விசயம் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? எனக்காக தான் பொய் சொல்லி வீட்ல தங்கி இருந்தீங்கன்னு கண்டு பிடிச்சிர மாட்டாங்களா?
“ஒண்ணும் நினைக்க மாட்டாங்க. கடைசி வரை அது சைட் பாக்குற விசயமாவே இருக்கட்டும். உங்க வீட்டில தங்கி இருக்கும் போது உன்னை விரும்புனதா அவங்க கிட்ட சொல்லிக்கலாம் . அவங்களை ஏமாத்தினது அவங்களுக்கு கடைசி வரைக்கும் தெரியாம பாத்துக்கலாம். போதுமா?”
“தேங்க்ஸ் ஷியாம்”
“போடி லூசு. சரி இப்ப காலேஜ் வந்துரும். உன்னை விடவே மனசு இல்லை. லீவ் போடுறியா?”
“கொன்னுருவேன். அதெல்லாம் முடியாது. அதான் நாளைக்கு மறுநாள்ல இருந்து என் கூட தான இருக்க போறீங்க? அப்புறம் என்ன?”
“உன் கூட ஒரே வீட்டில இருப்பேன். ஒரே பெட் ரூம்ல இருக்க முடியுமா டி?”
“ஆசை தோசை”, என்று உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவளை பார்த்தவன், நாகர்கோவில் செல்லும் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்தியே விட்டான்.
“என்ன இங்கயே நிறுத்திட்டீங்க?”, என்று அவன் முகம் பார்த்து கேட்டவள் அவன் பார்வை தன்னுடைய உதட்டில் இருப்பதை பார்த்து அதிர்ந்து “ஷியாம் வண்டியை எடுங்க”, என்றாள்.
“ப்ளீஸ் டி ஒன்னெ ஒண்ணு”, என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளுடைய உதடுகளை சிறை செய்தான்.
சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகி நல்ல பையனாக காரை ஓட்ட ஆரம்பித்தான். அவள் தான் அவனை பார்க்க முடியாமல் முகம் சிவந்து அமர்ந்திருந்தாள்.
அவள் வெட்கத்தை ரசித்தவன் “இப்படி தான் வெட்க படாதேன்னு சொன்னேன் “, என்று சொல்லி அவளை சீண்ட ஆரம்பித்தான்.
அதன் பின் அவளை காலேஜில் விட்டுவிட்டு மாலையும் அவளை அழைத்து கொண்டு அவள் வீட்டருகே இறக்கி விட்டு விட்டு சென்று விட்டான்.
அடுத்த நாளும் இதுவே தொடர்ந்தது.
அதற்கு அடுத்த நாள் மாலை சூர்யாவை அழைத்து கொண்டு, காவ்யா வீட்டுக்கு வந்து விட்டான் ஷியாம்.
அவர்களை வரவேற்றது சுந்தர் தான். அன்று சனிக்கிழமை என்பதால் அவருக்கு விடுமுறை. இருவரையும் “உள்ள வா சூர்யா. வாங்க தம்பி”, என்று வரவேற்றார்.
திலகாவும் அவர்களை பார்த்து சிரித்தாள்.
“திலகா சொன்னா, நீங்க இங்க தங்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் யாராவது வேற ஆள் வந்தா தான் அதோ அந்த கதவை பூட்டனும்னு நினைச்சோம். இதுவும் மாடிக்கு போற வழி தான். இந்த கதவை திறந்தா மேலயும் கீழயும் ஒரே வீடு தான். அதனால நீங்க தனி வீட்டில எல்லாம் இல்லை. எங்க வீட்டில தான் இருக்கீங்க. அதனால சாப்பாடு எங்க கூட தான்”, என்றார் சுந்தர்.
“ஐயோ, அத்தனை நாள் உங்களுக்கு எதுக்கு சிரமம்? வாடகையும் வேண்டாம்ணு சொல்லிட்டீங்க? சாப்பாடாவது கடைல சாப்பிட்டுக்குறேனே?”, என்று நல்ல பையன் போலவே பேசினான் ஷியாம். சூர்யாவோ அவனுடைய நடிப்பை ரசித்த படி அமர்ந்திருந்தான்.
“உங்க ஒருத்தருக்கு சேர்த்து சமைச்சு நான் ஒண்ணும் குறைஞ்சிர மாட்டேன் தம்பி. ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டு போயிரும். எங்க வீட்டில தான் சாப்பிடணும் சொல்லிட்டேன்”, என்றாள் திலகா.
“ஆமா ஷியாம். சூர்யாவோட நண்பன் நீங்க. அப்படின்னா நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான? அப்படி தான சூர்யா?”, என்று கேட்டார் சுந்தர்.
“ஆமா அங்கிள்”, என்று சிரித்தான் சூர்யா.
“அவனை மட்டும் வா போன்னு சொல்றீங்க? என்னையும் வா போன்னே பேசுங்க அங்கிள் ? இல்லைன்னா உங்க வீட்டில சாப்பிட மாட்டேன்”, என்று சிரித்தான் ஷியாம்.
“சரி பா, இனி உன்னையும் சூர்யா மாதிரியே கூப்பிடுறேன் போதுமா?”, என்று சிரித்தார் சுந்தர்.
“சரி அங்கிள்”, என்று சிரித்தான் ஷியாம்.
“நான் மதியையும் காவ்யாவையும் கூட்டிட்டு வறேன்”, என்று எழுந்த சூர்யா ஷியாமிடம் கார் சாவியை வாங்கி கொண்டு கிளம்பி விட்டான்.
அவன் கிளம்பியதும் “நீ மேல வா ஷியாம். உனக்கு வீடு பிடிச்சிருக்கான்னு பாரு. நீ தனியா இருக்கணும்னு கேட்டதுனால தான் மேல வீடு. இல்லைன்னா இங்கயே ஒரு ரூம்ல தங்க சொல்லிருப்பேன்”, என்றார் சுந்தர்.
“பரவால்ல அங்கிள் நான் மேலயே இருக்கேன்”, என்ற படி அவருடன் எழுந்து போனான் ஷியாம்.
“சரி நீ அன்டைம்ல வரும் போது தான் வெளிய உள்ள, படிகட்டு மூலமா மேல போகணும். மித்த நேரம் வீட்டுக்குள்ள வழியா தான் மேல வீட்டுக்கு போகணும் சரியா?”
“உங்க வீட்டை என் வீடா நினைக்க சொல்றீங்க? அப்படி தான அங்கிள்?”
“புரிஞ்சிக்கிட்டா சரி? உனக்கு என்ன சாப்பிட வேணும்னு திலகா கிட்ட சொல்லு. அவ செஞ்சு தருவா”
“ஸ்பெஷலா ஒண்ணும் வேண்டாம் அங்கிள். எது கொடுத்தாலும் சாப்பிட்டுக்குவேன்”
“நல்ல பையன் தான் நீ. எங்க வீட்டு வாலு இருக்காளே? அது வேணும் இது வேணாம்னு சரியான இம்சை பண்ணுவா”
தன்னவளை பற்றி பேசியதும் ஷியாம் முகம் மென்மையானது. “எங்க வீட்டுக்கு வந்துருக்குறப்ப அப்படி காவ்யா ஒண்ணுமே சொல்லலை அங்கிள். சமத்தா தான் இருந்தா”
“அப்படியா? அடுத்த வீடுன்னு அடக்கி வாசிச்சிருப்பா. பொல்லாத பொண்ணு. சரி இதோ ரெண்டு பெட் ரூம் இருக்கு. எதுல வேணும்னாலும் நீ தங்கிக்கோ. குடிக்க தண்ணி மட்டும் மேலேய வைக்க சொல்றேன். மித்த படி நீ கீழே தான் வரணும். டீவீ கீழே இருக்கு. எவ்வளவு நேரம் வேணும்னாலும் பாக்கலாம் சரியா?”
“சரி அங்கிள்”
“சரி பா. நீ டிரெஸ் மாத்திட்டு வா. நான் திலகா காப்பி போடுறாளான்னு பாக்குரேன்”
“சரி அங்கிள்”, என்றான் ஷியாம்.
அவர் போனதும் சிரித்து கொண்டே தன்னுடைய பேகை எடுத்து கொண்டு ஒரு ரூமுக்கு சென்றவன் கட்டிலில் அமர்ந்து தன்னுடைய தங்கை காயத்ரியை அழைத்தான்.
“அண்ணா, என்ன அண்ணி வீட்டுக்கு போய்ட்டியா? பிளான் சக்ஸஸ் ஆகிட்டா?”, என்று கேட்டாள் காயத்ரி.
“காயு குட்டி கொடுத்த ஐடியா வொர்கவுட் ஆகாம இருக்குமா? இப்ப தான் வந்தேன். ஆனா மேடம் இன்னும் காலேஜ் முடிஞ்சு வரல”
“வந்து உன்னை பாத்து முழிக்க போறா. சரி இருபது நாள் ஜாலியா இரு. இங்க வந்தும் தனியா இருக்கேன்னு தான் உனக்கு அந்த ஐடியா சொன்னேன்”
“இருபது நாள் இல்லை மேடம். ஐயா எக்ஸ்ட்ரா பத்து நாள் லீவ் சொல்லிட்டேன்”
“அட பாவி, நீ சரி விவரம் தான் அண்ணா. அப்புறம் அப்பா எப்ப அவங்க வீட்டில வந்து பொண்ணு கேக்கன்னு கேக்க சொன்னாங்க”
“இப்ப வேண்டாம்ணு சொல்லிரு காயு. ஒரு ஆறு மாசம் போகட்டும்”
“சரி அண்ணா . நீ உடம்பை பாத்துக்கோ. காவ்யாவை அப்புறமா என்கிட்ட பேச சொல்லு, வைக்கிறேன்”
“சரி டா “, என்று சொல்லி விட்டு போனை வைத்தவன் முகத்தை கழுவி கொண்டு ஒரு டீசர்ட் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பேண்ட்டை அணிந்து கொண்டு கீழே சென்று சுந்தருடன் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான்.
திலகா அவனுக்கு சினாக்ஸ் மற்றும் காப்பி கொடுத்து கொண்டிருக்கும் போது மதியும், காவ்யாவும் உள்ளே வந்தார்கள். பின்னாடியே சூர்யாவும் வந்தான்.
மதி மற்றும் காவ்யா அருகில் வந்து நின்ற சூர்யா “பாத்தியா இப்பவே மாப்பிள்ளை உபசாரம் நடக்குது”, என்று இருவரிடமும் சொல்லி சிரித்தான்.
ஷியாமை பார்த்து சிரித்த படியே மதியும், முறைத்த படியே காவ்யாவும் சென்றார்கள்.
சூர்யா அமைதியாக ஷியாம் அருகில் போய் அமர்ந்து கொண்டான். அடுத்து அவர்களுக்கும் காபி கொடுக்க பட்டது.
தன்னையே பார்த்து கொண்டிருந்த காவ்யாவை பார்த்த ஷியாம் “எப்படி ஐயாவோட பிளான்?”, என்று கண்ணை காட்டினான்.
“போடா”, என்று சைகை செய்தாள் காவ்யா. அதை ஆசையாக ரசித்து கொண்டிருந்தான் ஷியாம்.
பின் மதியும் சூர்யாவும் ஷியாமை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லி திலகா மற்றும் சுந்தரிடம் சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
சுந்தரும், ஷியாமும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். திலகா நைட் சமையல் செய்ய சென்று விட்டாள்.
காவ்யா தன்னுடைய அறைக்கு செல்வதுக்காக மாடி ஏறினாள். அப்போது அவள் அறை அருகே இருந்த கதவு திறந்திருப்பதை பார்த்தவள் “ஐயோ தினமும் இந்த வழியா தான் மேல் மாடிக்கு போவானோ? இன்னும் என்னோட ரூமை பப்பரப்பன்னு தொறந்து போடாம பூட்டி வைக்கணும் பா. சரியான கள்ளன்”, என்று நினைத்து சிரித்து கொண்டே குளிக்க சென்றாள்.
நைட்டி அணிந்து பாத்ரூமை விட்டு வெளியே வந்த பிறகு தான் நினைவு வந்தது. யாராவது வீட்டில் இருந்தால் நைட்டி அணிந்தால் திலகாவுக்கு பிடிக்காது என்பது.
“இவன் இருக்கும் போது இப்படி போனா அவன் ஒரு மார்கமா பாப்பான். அம்மா பல மார்கமா பாக்கும். வேண்டாம் பா”, என்று நினைத்தவள் ஒரு மிடியை எடுத்து போட்டு கொண்டு கழுத்தை சுற்றி ஒரு பழைய துப்பட்டாவையும் போட்டு கொண்டாள்.
துள்ளி குதித்து கீழே வந்தவளை விழி எடுக்காமல் பார்த்தான் ஷியாம். அவளை இது வரை சுடிதாரில் மட்டும் தான் ஷியாம் பார்த்திருக்கிறான். பாவாடை சட்டையில் இன்னும் அழகாக இருந்தாள்.
அவன் பார்வையை கண்டவள் “இதுக்கே இப்படி பாக்குறான். இதுல நைட்டி போட்டிருந்தா அவ்வளவு தான்”, என்று நினைத்து கொண்டு திலகாவுக்கு உதவ சென்று விட்டாள்.
“நைட்டியை போட்டுட்டு வருவியோன்னு நினைச்சேன் டி “, என்றாள் திலகா.
“எதுக்கு? அதை போட்டுட்டு வந்து உன்கிட்ட திட்டு வாங்கவா?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் காவ்யா.
“பரவால்லயே, என் பொண்ணுக்கு, இந்த அளவுக்கு யோசிக்க மூளை வளந்துருச்சா?”
“அம்மா…. உனக்கு போய் ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் பாரு?”
“சட்னி வச்சிட்டேன். தோசை சுட்டுட்டு இருக்கேன். இதுல நீ என்ன ஹெல்ப் பண்ண போற?”
“போமா”
“சரி டி, அப்புறம் இனி உன் ரூம்ல இருந்தே படி சரியா? அந்த தம்பி டிவி பாக்கட்டும்”
“ஓ சரி மா”
“சரின்னு சொல்லிட்டு ரூம்ல படிக்காம தூங்குனியோ, அடி பிச்சிறுவேன்”
“படிக்கேன் மா, படிக்கேன். கொடுமை படுத்தாத”
“சரி, அப்புறம் உன் ரூம் பக்கத்துல இருக்குற மேல் மாடிக்கு போற டோரை அடைச்சு வச்சிராத. அந்த தம்பி இங்க இருக்குற வரைக்கும் அது துறந்தே இருக்கட்டும்”
“திருடனுக்கு கதவை நீங்களே திறந்து வைக்க சொல்றீங்க?”, என்று நினைத்து கொண்டு நல்ல பிள்ளையாய் “சரி மா”, என்றாள் காவ்யா.
Advertisement