Advertisement
காலையில் மதி காலேஜ் கிளம்பும் போதே ஷியாமும் கிளம்பி விட்டான். சூர்யா மதியை விடுவதுக்காக காரை எடுத்தவுடன் ஷியாம் சூர்யாவின் பைக்கை எடுத்து கொண்டான்.
மூவரும் கிளம்பினார்கள். “என் பின்னாடியே வா டா. நான் உன் ஆள் பஸ் ஏறும் இடத்தை உனக்கு காட்டுறேன். அவளோட வீட்டையும் காட்டுறேன். அப்புறம் நீ வெயிட் பண்ணி பாத்துட்டு அவளை காலேஜ்க்கு கூட்டிட்டு வா. நாங்க காலேஜ் கிட்ட உள்ள காபி ஷாப்ல வெயிட் பன்றோம் “, என்று சொல்லி விட்டு காரை கிளப்பினான் சூர்யா.
மதி, சூர்யா அருகில் அமர்ந்து கொண்டாள். அவர்கள் கார் கிளம்பியதும் ஷியாமும் அவர்கள் பின்னே வண்டியை செலுத்தினான்.
ஒரு இடத்தில் நின்ற சூர்யா “இது தான் காவ்யா வீடு”, என்று கார் ஜன்னல் வழியாக சொல்லி விட்டு சிறிது தூரம் சென்ற பின்னர் “இங்க தான் பஸ் ஏறுவா. பத்திரமா வா டா “, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
ஷியாமும் சிரித்து கொண்டே காவ்யாவின் வீட்டை பார்த்து வண்டியை திருப்பினான்.
அவள் வீட்டின் எதிரே வண்டியை நிறுத்தியவன் அவள் வீட்டையே நோட்டம் விட்டான். அப்போது அவள் வீட்டின் மாடியில் வீடு வாடகைக்கு விட படும் என்ற போர்டு கண்ணில் பட்டது. பின் அவள் எப்போது வெளியே வருவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தான்.
“அம்மா நேரம் ஆகிட்டு . நான் கிளம்புறேன்”, என்று திலகாவிடம் சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் காவ்யா. அவளை பார்த்து ஒரு வாரம் ஆனதில் நொந்து போய் இருந்தவன், இன்று கிடைத்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியாக உணர்ந்தான் ஷியாம்.
அவன் ஹெல்மட் போட்டிருந்ததால் “யாரோ நிக்காங்க”, என்று எண்ணி கொண்டு மெதுவாக பஸ் ஸ்டான்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தவளின் பின்னே வண்டியை மெதுவாக உருட்டி கொண்டு சென்றான். பின் அவள் வீட்டை விட்டு சிறிது தூரம் தள்ளி சென்றதும் வண்டியை வேகமாக உருட்டியவன் அவளை வழி
மறைத்தது போல நிறுத்தினான்.
திடீரென்று ஒரு பைக் வழி மறைக்கவும் பயந்து போனவள் சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்வையை ஓட்டினாள்.
“ஏய், ஏதோ திருடன்னு நினைச்சு ஏதாவது விபரீதமா செஞ்சிறாத மா. மானம் போயிரும்”, என்று சொல்லி கொண்டே மாட்டி இருந்த ஹெல்மட்டை கழட்டினான் ஷியாம்.
குரலிலே அவன் தான் என்று உணர்ந்தவள் வியப்பின் எல்லைக்கே சென்றாள். அவன் ஹெல்மட்டை கழட்டவும் அவன் அருகே ஓடி சென்றவள் “நீங்களா? எப்ப வந்தீங்க?”, என்று ஆர்வமாக கேட்டாள்.
அந்த ஆர்வத்தில் அவன் மனமும் துள்ளியது. தன்னை தேடிய அவளுடைய செய்கையில் அவன் மனம் குளிர்ந்து போனது.
“வந்து ரெண்டு நாள் ஆச்சு டி. உன்னை பாக்காம இருக்க முடியலை தெரியுமா? எப்ப டா பாப்பேன்னு இருந்தது. எப்படி இருக்க?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் ஷியாம்.
“நல்லா இருக்கேன். எனக்கும் உங்களை பாக்கணும்னு தோணுச்சு. அட்லீஸ்ட் போன்லயாவது பேசலாம்னு ஆசை பட்டேன். ஆனா அம்மா, அப்பா கூட கிராமத்துக்கு போய்ட்டேன். சரி இன்னைக்கு கிளாஸ் போன அப்புறம் கால் பண்ணலாம்னு நினைச்சேன். பாத்தா நீங்களே வந்து நீக்குறீங்க?”, என்று சொல்லும் போதே சந்தோஷத்தில் அவள் கண்களும் கலங்கியது.
அதில் நெகிழ்ந்தவன் “இங்க இருந்து பேச முடியாது. வா கிளம்பலாம்”, என்றான்.
“வண்டியிலயா?”, என்று தயக்கமாக கேட்டாள் காவ்யா.
“பொண்டாட்டி, புருசன் பின்னாடி உக்காரலாம். தப்பில்லை”, என்று சிரித்தான் ஷியாம்.
“ப்ச், போங்க. நான் அப்பாவை தவிர யார் கூடவும் பைக்ல போனது இல்லை தெரியுமா?”
“இனி காலம் முழுவதும் என் பின்னாடி தான் உக்காரனும். காமெடி பண்ணாம ஏறு செல்லம்”
“எனக்கு கூச்சமா இருக்கு”
“ஏய், அன்னைக்கு மாதிரி உனக்கு முத்தமா கொடுத்தேன்? பின்னாடி உக்காருன்னு தான டி சொன்னேன்? என்னை தொடாம உக்காரு மா. போதுமா?”, என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
தயக்கத்துடன் அவன் அருகே சென்றவள் அவன் முறைக்கவும் பின்னே ஏறி அமர்ந்தாள். அவள் நுனியில் அமர்வதை பார்த்தவன் “பாத்து பாத்து என் மேல பட்டுற போகுது? நான் தீண்டத்தகாதவனா டி? இதுக்கு முன்னாடி நான் உன்னை தொட்டதே இல்லையா? உன்னை பாக்க அங்க இருந்து வந்தேன் பாரு? என்னை சொல்லணும்”, என்று சொல்லி கொண்டே வண்டியை கிளப்பினான்.
அவனுடைய கோபத்தை தாங்க முடியாமல் மெதுவாக அவன் தோள் மீது கையை வைத்தவள் வண்டியில் சரியாக அமர்ந்து விட்டாள்.
அதன் பின்னும் அமைதியாக இருந்தவனை “சாரி, அதான் உங்களை பிடிச்சிகிட்டேன்ல ?”, என்று கெஞ்சும் குரலில் சமாதானம் செய்தாள் காவ்யா.
அதில் உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் கண் முன் வந்து கொண்டிருந்த வேகத்தடையை பார்த்தான். அதை பார்த்து மனதுக்குள் குதூகலித்தான் ஷியாம்.
வண்டியை வேகத்தடை மீது செலுத்தியதும் அவன் மீதே மொத்தமாக சாய்ந்து அவன் இடுப்பை சுற்றி ஒரு கையை போட்டு பிடித்து கொண்ட காவ்யா “விழுந்து விடுவோமோ?”, என்று பதறி போனாள்.
“ஹா ஹா, இதை இதை தான் எதிர்பார்த்தேன்”, என்று சிரித்த ஷியாம் “நீ டபுள் சைட் கால் போட்டு உக்காருந்தேன்னா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்”, என்றான்.
“வேணும்னு பண்றீங்களா? உங்களை”, என்று சொல்லி கொண்டே அவன் முதுகில் நன்கு கிள்ளி விட்டாள்.
“ஹா ஹா, இப்ப தான் காவ்யாவை பாக்குற மாதிரி இருக்கு. நீ இவ்வளவு நேரம் மாதிரி வெட்க பட்டு சிணுங்கிட்டு இருந்தேன்னு வை உன் மாமா நிலைமை பாவமா ஆகிறும் செல்லம். கல்யாணம் முடியுற வரைக்கும் ப்ளீஸ் ரவுடியாவே இரு டி”, என்று சிரித்தான் ஷியாம்.
“எல்லாரும் அமைதியா அடக்க ஒடுக்கமா இருக்குற பொண்ணு வேணும்னு கேப்பாங்க. நீங்க என்னனா ரவுடியா இருக்கணும்னு சொல்றீங்க?”
“எனக்கும் ஆசையா தான் இருக்கு. ஆனா நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் உன்னை பிரிஞ்சு இருக்கணுமே. அது வரைக்கும் நல்ல தோழியா நினைச்சா தான் உண்டு. இல்லைனா உன்னோட வெட்கம் எல்லாத்தையும் ரசிச்சேன்னு வை, இப்படியே உன்னை தூக்கிட்டு போய், கல்யாணம் பண்ணி, கட்டி புடிச்சு….”, என்று அவன் சொல்வதுக்குள் அவன் வாயை பின்னால் இருந்து மூடி இருந்தாள் காவ்யா.
அவளுடைய தொடுகை அவனுக்கு நிறைவாக இருந்தது. மென்மையாக இருந்த அவளுடைய உள்ளங்கை அவனுடைய ஈர உதட்டில் பட்டு இருவருக்குமே ஒரு சிலிர்ப்பை கொடுத்தது.
அதனால் உடனே கையை விலக்க போனாள் காவ்யா. அதை உணர்ந்தவன் அடுத்த நொடி அவள் கையை பிடித்து அவள் விரலில் முத்தமிட்டான்.
கரண்ட் சாக் எடுத்து போல கையை வெடுக்கென்று உருவி கொண்டவள் “இப்படி எல்லாம் செய்யாதீங்க ஷியாம்”, என்று மெல்லிய குரலில் முனங்கினாள்.
“நானும் அப்படி தான் நினைச்சேன். பட் முடியலை. சாரி. சூர்யா வெயிட் பண்றான். வேகமா போவோம்”, என்று சொல்லி சாலையில் கவனத்தை பதித்தான் ஷியாம்.
அதன் பின் அந்த காபி ஷாப் சென்று மதி சூர்யா அருகில் அமர்ந்து கொண்டார்கள்.
காலேஜ் ஆரம்பிக்கும் நேரத்துக்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னர் தான் இருவரும் சொல்லி கொண்டு கிளம்பினார்கள். பின் ஷியாமும், சூர்யாவும் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு முடித்த பிறகு “டிவி பாருடா. லேப்டாப் யூஸ் பண்ணு. மதியம் நான் வந்ததும் சேந்து சாப்பிடலாம். சாயங்காலம் நான் சீக்கிரம் வீட்டுக்கு வரேன். அப்புறம் மதியை கூட்டிட்டு வர போகலாம். உன் ஆளையும் சேத்து தான் டா”, என்று சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டான் சூர்யா.
அவன் சொன்னதை எதையும் செய்யாமல் நன்றாக உறங்கி விட்டான் ஷியாம். மதியம் சூர்யா உள்ளே வந்தது கூட அவனுக்கு தெரியாது. சூர்யாவே தன்னிடம் இருக்கும் சாவியை வைத்து திறந்து உள்ளே சென்றான்.
பின் அவனும் எழுந்த பிறகு இருவரும் மதி செய்த குழம்பை சூடு செய்து சாப்பிட்டார்கள். “சாயங்காலம் பாப்போம்”, என்று சொல்லி விட்டு சென்ற சூர்யா ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டான். “சரி தூங்குறவனை எழுப்ப வேண்டாம்”, என்று எண்ணி மதியம் போலவே கதவை திறந்தான். திறந்தவன் அதிர்ந்து போனான்.
அங்கே டிப்டாப்பாக கிளம்பி சூர்யாவுக்காக காத்து கொண்டு இருந்தான் ஷியாம்.
“அட பாவி, மதியம் நான் கதவை தட்டியும் திறக்காம தூங்குனது என்ன? இப்ப கிளம்பி இருக்குறது என்ன?”, என்றான் சூர்யா.
“அதெல்லாம் அப்புறம் திட்டிக்கோ. வா கிளம்பலாம். என் டார்லிங்கை பாக்கணும்” என்று சொல்லி வீட்டை பூட்டி விட்டு உடனே காரை எடுக்க சொன்னான் ஷியாம்.
காரை எடுத்து கொண்டே “காவ்யாவை பாக்க இவ்வளவு ஆர்வமா கிளம்பிட்ட? நீ மதியம் மாதிரியே தூங்கிட்டு இருப்பேன்னு நினைச்சேன் டா?”, என்றான் சூர்யா.
“நீ வேற, நானே எப்ப டா அஞ்சாகும்னு நினைச்சு இப்படி உக்காந்துருக்கணும்னு தான் காலைல அப்படி தூங்குனேன்”, என்று சிரித்தான் ஷியாம்.
“நல்ல பாலிசி டா மச்சான்”
“ரொம்ப புகழாத. சரி காவ்யா வீட்டு மேலயும் ஆள் இருக்காங்களா?”
“அப்படி எல்லாம் இல்லை டா. அது சும்மா தான் இருக்காம். வாடகைக்கு விட தான் நல்ல ஆளா தேடிகிட்டு இருக்காங்க”, என்று சூர்யா சொன்னவுடன் ஷியாம் மனதில் ஒரு யோசனை வந்தது.
அதற்கான சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தவன் மனசுக்குள்ளே முடிவெடுத்து விட்டு அமைதியாகி விட்டான்.
எப்போதும் மதி, சூர்யாவுக்காக காத்திருப்பாள். ஆனால் காலேஜ் விட்டதும் காவ்யா கிளம்பி விடுவாள். அப்படி அவள் கிளம்பி விட கூடாது என்பதால் தான் இருவரும் சீக்கிரம் காலேஜ் வந்தார்கள்.
இன்னும் அவர்களுக்கு கிளாஸ் முடியவில்லை என்பதால் இவர்களே காத்திருந்தார்கள். அப்போது காவ்யாவும் மதியும் வருவது கண்ணில் பட்டது.
காரை கண்டதும் அவர்களே இங்கே வந்து விட்டார்கள். இறங்கி நின்ற ஷியாம், “மதி, சூர்யா பக்கத்தில் உக்காந்தா தான் நம்ம ஆளு கூட நம்ம உக்கார முடியும்”, என்று எண்ணி கொண்டான்.
ஆனால் அவனுக்கு பல்ப் கொடுப்பது போல மதியும், காவ்யாவும் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அப்போது தான் ஷியாம் முகத்தை பார்த்த அனைவருக்கும் அவன் சிந்தனை விளங்கியது. “டேய், இப்ப காவ்யா வீட்டுக்கு போறோம் டா. அதனால ஜோடியா உக்காரனும் அப்படிங்குற ஆசையை மூட்டை கட்டிட்டு வண்டில ஏறு”, என்று சிரித்தான் சூர்யா.
அசடு வழிந்தான் ஷியாம். அவனை பார்த்து மூவரும் சிரித்தார்கள். பின் அவன் அமர்ந்ததும் காரை எடுத்தான் சூர்யா.
காவ்யா வீட்டு முன்பு கார் நின்றதும், வழக்கம் போல “எல்லாரும் உள்ள வாங்க”, என்று அழைத்தாள் காவ்யா.
“அதெல்லாம் வேண்டாம் மா. நாளைக்கு பாப்போம்”, என்று மறுத்தான் சூர்யா.
“உன் தங்கச்சி, இப்படி கெஞ்சி கெஞ்சி கூப்பிடுறா. நீ வரலைன்னு சொல்ற? இது தர்மமா? அடுக்குமா? உள்ளே போவோம் டா”, என்றான் ஷியாம்.
“நான் ஒன்னும் கெஞ்சியே கூப்பிடலையே”, என்று சிரித்தாள் காவ்யா.
அவள் தலையில் கொட்டிய ஷியாம் “எனக்கு, என் மாமனார் மாமியாரை பாக்கணும்”, என்றான்.
“டேய், இப்ப நீ வந்தா ஆண்ட்டி என்ன டா நினைப்பாங்க?”, என்றான் சூர்யா.
“ஆமா, அண்ணா சொல்றது சரி தான். நீங்களும் வந்தா என்னனு சொல்றது?”, என்றாள் காவ்யா.
“ஏய், உன் மாமாவை உள்ள கூப்பிட மாட்டியா? நீ என்ன டி என்னை கூப்பிடுறது? இது என் வீடாக்கும். அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க. சூர்யா பிரண்டுன்னு சொன்னா போதும்”, என்று சொல்லி முதல் ஆளாக இறங்கி விட்டான் ஷியாம்.
மற்ற மூவரும் சிறு பதட்டத்துடன் தான் உள்ளே சென்றார்கள்.
கதவை திறந்த திலகா “வாங்க தம்பி, உள்ள வா மதி, இன்னைக்கு அவங்க கூடவே வந்துட்டியா காவ்யா?”, என்று வரவேற்றவள் புதிதாய் இருந்த ஷியாமை பார்த்து சிரித்தாள். பின் பொதுவாக “எல்லாரும் உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
அனைவரும் சென்று அமர்ந்தார்கள். “இது என்னோட பிரண்ட் ஆண்ட்டி. இவனோட வீட்டுக்கு தான் நாங்க எல்லாரும் போனோம்”, என்றான் சூர்யா.
Advertisement