Advertisement

அத்தியாயம் 13
என் உயிரின் தாகத்தையே
தீர்த்து வைக்கிறது, தித்திப்பான
உன் இதழ் முத்தம்!!!
பின் காவ்யா  குளித்து முடித்து வந்ததும்  அனைவரும் கிளம்பினார்கள். இன்று வெகு தூரம் போக வேண்டாம் என்று நினைத்து அருகில் உள்ள இடத்துக்கு சுற்றி பார்க்க சென்றார்கள்.
மதியையும், சூர்யாவையும் தொல்லை செய்ய கூடாது என்று எண்ணி ஷியாமுடன் சேர்ந்து  கொண்டாள் காவ்யா. அவனுக்கு அது ஆனந்தமாகவே இருந்தது.
“பரவால்லயே உனக்கு மேனஸ் எல்லாம் இருக்கு”, என்று சொல்லி காவ்யாவை சீண்டினான் ஷியாம்.
“என்ன நக்கலா? இப்ப எதுக்கு மேனஸ் பத்தி பேசுறீங்க சார்?”, என்று கேட்டாள் காவ்யா.
“இல்லை புருசன் பொண்டாட்டியை தொல்லை செய்ய கூடாதுன்னு  தெரிஞ்சிருக்கே. அதான்”
“ரொம்ப பேசாதீங்க. இது இப்ப உள்ள சின்ன பிள்ளைங்களுக்கு கூட தெரியும். எனக்கு தெரியாதா? எனக்கு எல்லாமே தெரியும்”
“எல்லாம்னா?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் ஷியாம்.
“எல்லாம்னா எல்லாம் தான் போதுமா?”, என்று சொல்லி  அவனை முறைத்தாள் காவ்யா.
இப்படி அவளை சீண்டி கொண்டே அந்த டிரிப்பை சந்தோசமாக்கினான் ஷியாம். அதன் பின் மதிய வேளை வரும் போது நால்வரும் ஒரு மிருககாட்சிசாலையை பார்த்து கொண்டிருந்தார்கள்.
மதியம் இரண்டு மணியாகி விட்டதால் “பசிக்க ஆரம்பிச்சிருச்சு. திரும்பி போகலாமா?”, என்று கேட்டாள் காவ்யா.
“உன் பிரண்டுக்கு  எப்போதும் சாப்பாட்டு மேல தான் கண்ணு இருக்கும் போல மதி ?”, என்று சிரித்தான் ஷியாம்.
“அவளை எதுக்கு ஷியாம் கிண்டல் பண்ற? எனக்கே பசிச்சிருச்சு. ஹோட்டல் போகலாம். வெளிய தான இருக்கு. வாங்க திரும்பிரலாம்”, என்றான் சூர்யா .
“அப்படி சொல்லுங்க அண்ணா. உங்க பிரண்டுக்கு மட்டும் வயிறு பசியே வராத மாதிரி பேசுறார். இப்ப சாப்பாட்டை கொடுத்தா முதல் ஆளா அவர் தான் விழுங்குவார்”, என்று சிரித்தாள் காவ்யா.
“சரி சரி சும்மா பேசிட்டு இருக்காம சாப்பிட போகலாம்”, என்று சூர்யா நடக்கும் போது அவனை கை பிடித்து நிறுத்திய மதி “நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேனே”, என்று சொல்லி ஒரு மரத்தடியில் அமர்ந்தாள்.
சூர்யாவும், காவ்யாவும் வியப்புடன் அவள் பின்னே சென்றார்கள். அவர்களை பார்த்து சிரித்து கொண்டே ஷியாமும் சென்றான்.
வட்டமாக நால்வரும் அமர்ந்ததும் “மதி நிஜமாவே சாப்பாடு கொண்டு வந்தியா? என்கிட்ட சொல்லவே இல்லை”, என்றாள் காவ்யா.
“ஆமா கலை, எனக்கும் ஆச்சரியமா இருக்கு “, என்று சொன்னான் சூர்யா.
“இதை பாத்தா நம்புவீங்க தான?”, என்று கேட்டு கொண்டே தன் தோளில் மாட்டி  இருந்த பையில் இருந்து நான்கு பார்சலை எடுத்தாள். கூடவே இரண்டு தண்ணீர் பாட்டில்களையும்.
அதை பார்த்து மற்ற மூவருக்கும் நிறைவாக இருந்தது. மதியை பெருமையாக பார்த்தார்கள்.
“எதுக்கு மதி நாலு பார்சலா போட்டுட்டு வந்த? ஒண்ணா போட்டிருந்தா தனி தனியா சாப்பிடாம ஒண்ணா ஷேர் பண்ணி சாப்பிட்டுருக்கலாம்?”, என்று கேட்டாள் காவ்யா.
“லூசு, இப்பவும் ஷேர் பண்ணி தான் சாப்பிட போறோம்”, என்றாள் கலைமதி.
“எப்படி டி?”
“நாலு பார்சல்லயும் ஒரே சாப்பாடு இல்லை. வேற வேற இருக்கு”
“என்ன?”
“ஆமா”, என்ற படி நாலு பார்சலையும் பிரித்தாள். அதில் லெமன் சாதம், புளியோதரை, தக்காளி சாதம், மற்றும் தோசை இருந்தது. தொட்டு கொள்ள தக்காளி தொக்கு வேற இருந்தது. கூடவே கொறிப்பதுக்கு வாங்கி வந்த நொறுக்கு தீனிகளும் இருந்தது.
அதை பார்த்ததும் அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது. ஒரு மினி ஹோட்டலையே உன் பையில் வச்சிருந்தியா மதி?”, என்று கேட்டாள் காவ்யா.
பல ஆயிரம் செலவு செய்து பெரிய ஹோட்டலுக்கு  சென்று வித விதமான உணவு வகைகளை சாப்பிட்டால் கூட இப்போது கிடைத்திருக்கும் நிறைவு யாருக்கும் கிடைக்காது. அதையே வார்த்தையாலும் சொன்னான் சூர்யா.
அவன் சொன்னதை  மற்றவர்களும் ஒப்பு கொண்டார்கள். “இனி சுத்தி பாக்குற வரைக்கும் இப்படி தான் சாப்பாடு எடுத்துட்டு போகணும்”, என்றான் ஷியாம்.
“சாப்பாடு செய்றது  எல்லாம் ஈஸி தான். ஆனா சுமக்க மட்டும் வச்சிராதீங்க பா. நான் தாங்க மாட்டேன்”, என்று சிரித்தாள் கலைமதி. மனதில் இருந்து அழகுடன்  சிரிக்கும் தன் மனைவியை இழுத்து அணைக்க மனம் நினைத்தது சூர்யாவுக்கு. இங்கே முடியாததால் தன் காதலை கண்கள் வழியே அவளுக்கு சொன்னான் சூர்யா.
அவன் பார்வையில் முகம் சிவந்தவள் “சாப்பாட்டை  பாத்து சாப்பிடலைன்னா, பெரிய அடி கிடைக்கும்”, என்னும் விதமாய் கண்களால் பதில் கூறினாள்.
அரட்டை அடித்த படியே சாப்பிட்டார்கள். கடைசியாக இருந்த தோசையை எடுத்தான் ஷியாம். அவனை ஒரு பார்வை பார்த்த காவ்யா “எனக்கு அந்த தோசை தந்துருங்களேன். எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும்”, என்றாள்.
அவளை பார்த்து சிரித்தவன் “சாரி எச்சி கையால எடுத்துட்டேனே?”, என்றான்.
“பிரண்ட்ஸ்குள்ள அதெல்லாமா பாக்கணும்? சும்மா தாங்க. நீங்க வேணும்னா இந்த தக்காளி சாதம் சாப்பிடுங்க”, என்று சொல்லி அவளுடையதை கொடுத்தாள்.
சந்தோசமாக தோசையை கொடுத்து அவளுடையதை வாங்கி கொண்டவனுக்கு திருமண மேடையில் மாலையை மாற்றி கொண்டது போல தோன்றி வைத்தது.
அதை பார்த்து கொண்டிருந்த சூர்யாவும் மதியும் சிரித்து கொண்டார்கள். “நீ கேட்டா அண்ணண் தோசை என்ன? அவங்க சொத்தையே எழுதி கொடுப்பாங்க காவ்யா”, என்றாள் மதி.
“ஐயோ பாவம். அவங்களே ரொம்ப கஷ்ட படுறவங்க. அவங்க கிட்ட இருக்குற கொஞ்ச சொத்தையும் நான் பிடுங்க மாட்டேன் பா”, என்றாள் காவ்யா.
“கொஞ்ச சொத்தா?”, என்று இழுத்தாள் கலைமதி.
“ஆமா, அந்த பெரிய பங்களாவை பாத்துக்குற வேலை தான செய்றார்? அப்புறம் அவருக்கு எப்படி சொத்து இருக்கும்?”, என்று கேட்டாள் காவ்யா.
அதை மறுத்து கூற வந்த கலைமதியை விழிகளால் நிறுத்தி பேச விடாமல் செய்தான் ஷியாம் பிரகாஷ்.
அதன் பின் வயிறு நிறைய உண்டு விட்டு பேசி கொண்டிருந்தவர்களுக்கு மனது சந்தோசமாக இருந்தது. 
தன்னுடைய போனில் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி சூர்யாவின் செல்லை கேட்டாள் காவ்யா.
அவன் அதை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்ததால் ஷியாம் தன்னுடையதை கொடுத்தான். அதை வாங்கி தன்னுடைய அம்மா திலகாவை அழைத்து பேசினாள் காவ்யா.
அவள் பேசி முடித்து தந்ததும், அவள் பேசிய எண்ணை “வைப் ஹோம்”, என்று பதிந்து வைத்தான் ஷியாம். 
நான்கு மணி அளவில் மழை பெய்வது போல இருந்ததால் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். வீடு வந்து சேர்ந்த போது மணி ஆறாகி இருந்தது. அன்று முழுவதும் அலைந்தது அனைவருக்கும் அசதியை கொடுத்தது.
சமையல் கார அம்மாவை எளிதாக “எதையாவது செய்ங்க”, என்று சொல்லி விட்டு மேலே தன் அறைக்கு சென்று விட்டான் ஷியாம்.
அறைக்குள் சென்ற மதியை இறுக்கி அணைத்து கொண்டான் சூர்யா. “அத்தான், நீங்க வர வர சரியே இல்லை. அதுவும் இங்க வந்த அப்புறம் ரொம்ப சேட்டை பண்றீங்க? இப்ப தான் வீட்டுக்குள்ளே வந்துருக்கோம். அதுக்குள்ளே இப்படி செஞ்சா எப்படி?”, என்று கேட்ட மதியின் கை விரல்கள் அவனுடைய சட்டை பட்டனை திருகி கொண்டிருந்தது.
“நான் செய்ற சேட்டை உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியுமே? அப்புறம் எனக்கு மதியம் சாப்பிடும் போதே இப்படி கட்டிக்கணும்னு தோணுச்சு டி. எப்படி டி சாப்பாடு கொண்டு வரணும்னு ஐடியா தோணுச்சு உனக்கு?”
“இது பெரிய விஷயமா? எனக்கு இப்படி சேர்ந்து ஊரை சுத்தி பாக்க போனா சேர்ந்து உக்காந்து சாப்பிட தோணும். ஆனா இது வரைக்கும் எனக்கு அப்படி ஒரு சந்தோசம் கிடைக்கவே இல்லை. ஷியாம் அண்ணா கிட்ட கேட்டேன். அவங்களும் நான் சொன்னதையே சொன்னாங்க. அப்புறம் சமையல்கார அம்மா காலைல சாப்பாடுக்கு தோசை சுட்டுட்டு இருந்தாங்க. நான் சாதம் வச்சேன். அப்புறம் வேலை ஈஸி தான? சீக்கிரம் முடிச்சிட்டோம். இதுவே ஹோட்டலுக்கு போனா அந்த சாம்பார் சாதத்தை, இல்லைன்னா சத்தே இல்லாத ரொட்டி அது இதுன்னு தின்னு நாலு பேருக்கும் சேத்து ஐநூறு கிட்ட கொடுத்துருக்கணும்? இதுவே இப்படி செஞ்சா  நாலு இலையில கட்டி கொண்டு போய் சாப்பிட்ட அப்பறம் இலையை குப்பை தொட்டில போட்டுட்டா முடிஞ்சிருச்சு”, என்று சிரித்தாள் கலைமதி.
“வர வர நீ மனசுக்குள்ள நிறைஞ்சு கிட்டே போற கண்ணம்மா. எனக்கு  நீ பொண்டாட்டியா வந்தது எனக்கு வரம் டி செல்லம்”
“இல்லை அத்தான். எனக்கு நீங்க கிடைச்சது தான் வரம். நீங்க வந்த அப்புறம் தான் என் வாழ்க்கையில சந்தோசம் அப்படிங்குறதே எனக்கு கிடைச்சிருக்கு. வாழ்க்கையில ஒரு பாதி கஷ்டமா இருந்தா மற்றொரு பாதி சந்தோசமா இருக்குன்னு சொல்லுவாங்க. உங்க கூட சந்தோசமா இருக்கணும்னு தான் ஒரு பாதி வாழ்க்கை எனக்கு அழுகையில் போனது போல? இப்படி அன்பை பொழியுற நீங்க தான் எனக்கு எப்பவும் வேணும்”
“என்னை தர தான் நானும் தவிச்சிட்டு இருக்கேன். எங்க? அதுக்கு தான் இன்னும் நாள் இருக்கே”, என்று பெருமூச்சு விட்டான் சூர்யா.
“என்ன அத்தான் சொல்றீங்க?”
“ஒன்னும் இல்லை டி. சரி ஒரே ஒரு முத்தம் கொடுத்துக்கட்டா?”
“அது எப்படி எப்பவும் கொடுக்காத மாதிரியே, கேள்வி கேக்குறீங்க?”, என்று சிரித்தாள் மதி.
“நீ செமையா வாய் பேச கத்துகிட்ட டி”
“பேச வைக்கிறதே நீங்க தான?”
“இனி பேசாம வைக்க என்ன செய்யணும்னு தெரியுமே”, என்று சொல்லி கொண்டே அவன் முகம் நோக்கி குனிந்தான். சிரிப்புடன் அவனுடைய முத்தத்தை எதிர்பார்த்தாள் கலைமதி. 
முத்தம் கொடுக்க ஆரம்பித்தவன் “மீசை குத்துது”, என்று அவள் சொன்ன பிறகே அவளை விட்டான். “மீசை எல்லாம் எடுக்க மாட்டேன் டி. எடுத்தா அசிங்கமா இருக்கும். என்ன செய்ய?”, என்று அவளிடமே அபிப்பிராயம்  கேட்டான்.
“கொஞ்ச நேரம் விட்டு விட்டு முத்தம் கொடுத்தா குத்தாது”, என்று அவனுக்கு ஐடியா சொல்லி அடுத்த முத்தத்தை கொடுக்க வைத்தாள் மதி.
தன்னுடைய அறைக்கு சென்ற காவ்யாவோ தூக்கம் வராததால் தோட்டத்தில் நடக்கலாம் என்று வெளியே வந்தாள்.
அப்போது கேட் உள்ளே கார் வந்து நின்றது. “யாரா இருக்கும்?”, என்று நினைத்து கொண்டு ஊன்றி பார்த்தாள் காவ்யா.

Advertisement