Advertisement

அவர்கள் வந்து சேர்ந்ததே மாலை என்பதால் இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். “வேலைக்காரியும் காலையில்  தானே வருவான்னு வாட்ச்மேன் சொன்னார். அப்ப   நைட் வெளிய ஆர்டர் பண்ணிரலாமா?”, என்று யோசித்தவனுக்கு “ஹோட்டல் கூட்டிட்டு போகலாம்”, என்ற யோசனை வந்தது.
பின் நிம்மதியுடன் சோபாவில் சாய்ந்தவன் டிவி பார்க்க ஆரம்பித்தான்.
ஜம்பமாக ஹீட்டர் ஆன் பண்ண தெரியும் என்று சொன்ன காவ்யாவோ பாத்ரூம் சென்று விழித்து கொண்டிருந்தாள். அங்கே உள்ள ஹீட்டர் புது விதமாக இருந்தது.
“திருப்பி போய் அவன் கிட்ட கேட்டா என்னை பத்தி என்ன நினைப்பான்? அதுக்கு பச்சை தண்ணிலே குளிச்சிரலாம்”, என்று நினைத்து கொண்டே ஜில் தண்ணீரில் கை வைத்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த தண்ணீரில் குளித்தால் அவள் விறைப்பது உறுதி. அவன் கிட்டயே கேட்கலாம் என்று நினைத்து வெளியே வந்தவள் ஷியாம் அருகே வந்து அவனை பார்த்தாள்.
அவளை ரசிக்க தூண்டிய மனதை அடக்கியவன் “என்ன ஆச்சுங்க? எதாவது வேணுமா?”, என்று சாதாரணமாக கேட்டான்.
“அந்த ஹீட்டர் ஆன் பண்ண தெரியலை அதான்”, என்று மென்று முழுங்கினாள் காவ்யா.
“அதுக்கு தான் சொன்னேன். ஆனா உங்களுக்கு தெரியும்னு சொன்னீங்களே? ஆனா பரவால்ல மத்தவங்க மாதிரி கேட்க அவமான பட்டு நிக்காம என்கிட்டே கேட்டதுக்கே உங்களை பாராட்டணும். வாங்க நீங்க குளிக்க, நான் ஹெல்ப் பண்றேன்”, என்று முன்னே நடந்தான்.
“என்னது?”, அதிர்ச்சியாக விழித்தாள் காவ்யா.
“ஐயையோ, நான் நீங்க குளிக்க ஹீட்டர் விசயத்துல ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்”, என்று அவசரமாக சொன்னான் ஷியாம்.
அதில் நிம்மதியாக மூச்சு விட்டவள் அவன் பின்னால் சென்றாள். அங்கே சென்றவுடன் அனைத்தையும் சொல்லி கொடுத்தான் ஷியாம். அதுக்கு தேங்க்ஸ் சொன்னாள் காவ்யா.
“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் வேண்டாம்ங்க”, என்றான் ஷியாம்.
“நீங்க சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னை பாராட்டும் போது நான் தேங்க்ஸ் சொல்ல கூடாதா?”, என்று கேட்டாள் காவ்யா.
புரியாமல் விழித்த ஷியாம் “என்ன பாராட்டுனேன்?”, என்று அவளிடமே கேட்டான்.
“நான் மறுபடி வந்து ஹெல்ப் கேட்டதுக்கு பாராட்டுனீங்கள்ல? இதுல மான ரோசம் பாத்தா பச்சை தண்ணீர்ல விறைக்க வேண்டியது தான். இதுக்கெல்லாம் இனி பாராட்ட வேண்டாம். எனக்கு எல்லாம் சூடு சுரணை கம்மி”
அவளுடைய எளிமையான பேச்சில் கவர பட்டவன் ஒரு புன்னகையை அவளிடம் சிந்தி விட்டு வெளியே வந்து  மறுபடியும் டிவி பார்க்க அமர்ந்தான்.
அறைக்கு வந்த காவ்யா தன்னுடைய போனை எடுத்து தன் அப்பாவை அழைத்து இங்கே வந்து சேர்ந்து விட்டதை சொன்னவள் குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து மற்றொரு சுடிதாரை அணிந்தவள் அதன் மீது துப்பட்டாவை போடாமல் ஒரு சுவட்டரை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
எங்கேயோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான் ஷியாம் பிரகாஷ். அவனுடைய நினைவில் காவ்யா தான் இருந்தாள். “காவ்யா மனசுல வேற யாராவது இருக்காங்களான்னு தெரிஞ்சிக்கணுமே”, என்பது தான் அவன் எண்ணமாக இருந்தது.
அவனுடைய எண்ணத்தின் நாயகியே அவன் எதிரே வந்து நிற்பதை அறியாமல் கனவுலகில் இருந்தான் அவன். அவனுடைய கையில் இருந்த ரிமோட்டை யாரோ பிடுங்குவதை உணர்ந்து சுயநினைவுக்கு வந்தவன் எதிரே தன்னை முறைத்து கொண்டிருந்தவளை பார்த்து திகைத்தான்.
“எதுக்கு இப்படி முறைக்கிறா?”, என்று நினைத்து கொண்டு அவளிடமே “என்னங்க ஆச்சு?”, என்று கேட்டான்.
“என்ன என்ன ஆச்சு? உங்களுக்கு என்ன ஆச்சு? நான் இங்க அஞ்சு நிமிசமா உங்களை கூப்பிட்டுட்டு இருக்கேன்? ஏங்க, சார், மங்கின்னு  கூட கூப்பிட்டேன். இன்னும் டா போடாதது மட்டும் தான் குறை. நீங்க என்னடான்னா, அப்படியே அசையாம இருக்கீங்க?”
“நீ டா சொல்லி கூப்பிட்டா அதை விட பெரிய பாக்கியம் என்ன இருக்கு?”, என்று எண்ணி கொண்ட ஷியாமோ “சாரிங்க. ஏதோ யோசனையில் இருந்துட்டேன். எதுக்கு கூப்பிட்டீங்க?”, என்று கேட்டான்.
“எப்பவும் மனசுல உள்ள கவலையே நினைக்க கூடாதுங்க”, என்றாள் காவ்யா.
“நான் என்ன கவலையை நினைச்சேன்?”, என்று மனதுக்குள் எண்ணி கொண்டு “சரி இனி கவலை படலை”, என்றான்.
“தட்ஸ் குட். சரி நான் இப்ப எதுக்கு கூப்பிட்டேன்னா, எனக்கு ரிமோட் வேணும்னு கேட்க தான் கூப்பிட்டேன்”
“ஓ, ஆனா நல்ல மூவி தான ஓடிட்டு இருக்கு. எதுக்கு மாத்தணும்?”
“நல்லா கேட்டிங்க போங்க? எங்க வீடா இருந்தாலும் சரி, யார் வீடா இருந்தாலும் சரி, சரியா ஆறரைக்கு பாலிமர்ல நினைத்தாலே இனிக்கும் பாத்துருவேன்”
“நினைத்தாலே இனிக்குமா அந்த மூவி தினமுமா போடுவான்?”
“ஐயோ அது மூவி இல்லை சீரியல். சாரி நேரம் ஆகிட்டுன்னு தான் அவசரமா பிடுங்கிட்டேன்”, என்று சொல்லி கொண்டே சேனலை மாற்றி கொண்டே அந்த சீரியலை வைத்தாள்.
ஒரு புன்னகையுடன் அவளை பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளுடைய மனதை அறிய இது தான் சரியான நேரம் என்று தோன்றியது.
“இது என்ன சீரியல் நான் கேள்வி பட்டதே இல்லையே?”, என்று பேச்சு கொடுத்தான் ஷியாம் பிரகாஷ்.
“உங்களுக்கு தெரியாதா? இது ஸ்கூல் லைப்ல வர ஒரு லவ் ஸ்டோரி. செமையா இருக்கும்”
“அப்படியா? உங்களுக்கு லவ்னா ரொம்ப பிடிக்குமா காவ்யா?”
“லவ்னா யாருக்கு தான் பிடிக்காது? எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்”
“ஹா ஹா, ஆமா ஆமா நீங்க லவ் பண்றீங்களா என்ன?”
“இல்லையே, அந்த ஆசை எல்லாம் இல்லை. எனக்கு மிக பெரிய எய்ம் இருக்கு”
அவள் மனதில் யாரும் இல்லை என்று நிம்மதியானவனுக்கு அந்த எய்மை அறிந்து கொள்ள ஆவல் எழுந்தது.
“மிக பெரிய எய்மா? அப்படி என்ன எய்ம்? கல்யாணம் பண்ணாம சமூக சேவகியா ஆக போறீங்களா?”
“ஐயோ சார்.. நீங்க வேற? இப்ப தான சொன்னேன், லவ்ன்னா பிடிக்கும்னு? அப்பறம் எப்படி கல்யாணம் பண்ணாம இருப்பேன்?”
“ஓ சாரி, நான் தான் தப்பா சொல்லிட்டேன். சரி உங்க உறவுல யாரையாவது கல்யாணம் பன்னிப்பீங்களா? அது தான் உங்க எய்மா?”
“அப்படி எல்லாம் யாரும் இல்லை. எனக்கு எல்லாம் பெரிய கொண்டாட்டத்தோட கல்யாணம் செஞ்சிக்கணும். லவ் பண்ணி எல்லாம் மனசை கொன்னுக்க கூடாது. கல்யாணம் அப்புறம் தான் அவனை உருக உருக காதல் செய்யணும்”, என்று காவ்யா சொன்னதும் பணிசாரலில் நனையும் உணர்வை அடைந்த ஷியாம் பிரகாஷ், அதை மறைத்து அவளிடம் பேச்சு கொடுத்தான்.
“கல்யாணம் முன்னாடி உள்ள லவ்க்கும், கல்யாணம் அப்புறம் உள்ள லவ்க்கும் என்ன வித்தியாசம் மிஸ் காவ்யா?”
“மிஸ் எல்லாம் வேண்டாம். சும்மா காவ்யான்னே கூப்பிடுங்க. அது இருக்கு நிறைய வித்தியாசம். எனக்கு எல்லாம் லவ் பண்ணி ஓடி போய் திருட்டு தனமா கல்யாணம் பண்ணிக்கிறதுல எல்லாம் ஆசை இல்லை. எனக்கு கல்யாணமெல்லாம் ஒரு கனவு. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணா. அதே மாதிரி எங்க  அம்மா வீட்லயும், அப்பா வீட்லயும் அவங்க மட்டும் தான் வாரிசு. அதனால அவங்க எல்லாரோட சொத்தும் எனக்கு தான் வரும்”, என்று அவள் சொன்னதும் திகைத்தான் ஷியாம். அவன் மனதில் எதுவோ குழப்பம் சூழ்ந்தது. அதை அவளிடம் கேட்கவும் செய்தான்.
“என்ன காவ்யா இப்படி சொல்லிடீங்க? நீங்க மதி மாதிரியே எளிமையானவங்க அப்படிங்குறது என்னோட எண்ணம். ஆனா நீங்க சொத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்களா?”
“ஹா ஹா, அதுல என்ன தப்பு? நான் எதார்த்தவாதி சார்.  அத்தனை சொத்தையும் எனக்கு தான் தருவாங்க. ஆனா இவ்வளவு சொத்து இருக்குன்னு சொல்லி எல்லாம் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்க மாட்டாங்க. என்னை கல்யாணம் பண்ணிக்கிறவன் என்னை பாத்தே மயங்கிறணும். எனக்காகவே என்னை கல்யாணம் செய்யணும். மணமேடைல அப்படியே நானும் அவனும் தான் ஜொலிக்கனும். எல்லாருமே பொருத்தமான ஜோடின்னு புகழணும். அப்புறம் அவனோட வீட்டுக்கு போகும் போது என் அம்மா அப்பாவை கட்டி புடிச்சு அழுது என் பிரிவுத்துயரை வெளியே காட்டணும். அப்புறம் புகுந்த வீட்டுல போய் அது தான் என் வீடு, அங்குள்ளவங்க எல்லாரும் என்னோட உறவு, என்னவன் தான் எனக்கு உயிர் அப்படின்னு வாழணும். ஆடி சீர், அந்த சீர் இந்த சீர்ன்னு என் பிறந்த வீட்டில் என்னை சீராட்டணும். சுத்தி இருக்குற எல்லாருமே என்னை பொக்கிஷமா பாத்துக்கணும். இதெல்லாம் தான் என்னோட ஆசை. ஆனா இது எல்லாம் காதல் கல்யாணத்துல கிடைக்குமா சொல்லுங்க? வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. அது முதல் கஷ்டம். அப்பறம் அவங்க கிட்ட சண்டை போட்டு, தனியா போய் கல்யாணம் செஞ்சு எதாவது நேரத்துல குடும்பத்தை நினைச்சு இவனை காதலிக்காம  இருந்திருந்தா என் அம்மா அப்பாவை பிரிஞ்சிருக்க மாட்டேன்னு தவிச்சு காதலும் செத்து போறது என்ன வாழ்க்கை? கல்யாணம்னு பூரிச்சு, அம்மா அப்பா செய்ற சீரோட, மரியாதையா, எல்லாரோட ஆசிர்வாதத்தோட வாழ்றது தான வாழ்க்கை? அது தான் எனக்கு வேணும். இந்த சந்தோஷத்தோட கூடுதலா அவங்க எல்லோரோட சொத்தும் எனக்கு தானே வரும்?”, என்று அவனை பார்த்து கண்ணடித்தாள் காவ்யா.
ஷியாமை இப்போது “நீ எங்க இருக்க?”, என்று கேட்டால் “வானத்தில் மிதக்குறேன்”, என்று சொல்லுவான். அப்படி பட்ட மனநிலையில் இருந்தான். அவள் மனதில் இருக்கும் ஒவ்வொரு  ஆசையையும்  நிறைவேற்ற  அவன் மனது துடித்தது.
அவளோ அவனை எல்லாம் அறியாமல் நாடகத்தில் ஒன்றி விட்டாள். நாடகம் முடிந்து ஏழு மணி ஆனதும் அவள் வயிறு பசிக்க ஆரம்பித்தது.
அவனை பார்த்து “பசிக்குதே, சாப்பிட எதாவது கிடைக்குமா?”, என்று கேட்டாள்.
அதில் அவசரமாக எழுந்தவன் “சமைக்குற லேடி நாளைக்கு தான் வருவாங்க. இப்ப வெளிய போகலாம்னு நினைச்சேன். சூர்யா வந்துட்டா கிளம்பலாம். இருங்க நான் அவனை கூட்டிட்டு வரேன்”, என்று செல்ல போனான்.
அடுத்த நொடி அவன் கரம் பற்றி தடுத்தாள். அவளுடைய முதல் தொடுகையில் சிலிர்த்து போய் அவள் முகத்தை பார்த்தான் ஷியாம்.
“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவங்களை இப்படி எல்லாம் போய் டிஸ்டர்ப் பண்ண கூடாது. அவங்க அங்க ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்க வந்த அப்புறமே போகலாம்”, என்று சொல்லி விட்டு கையை விட்டு விட்டாள்.
“இவளுக்கு ரொமான்ஸ் பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கா?”, என்று குஷியாக எண்ணி கொண்டு “சரி அவங்க வரும் போது வரட்டும். வேற எதாவது சாப்பிட எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி நகர்ந்தான்.
பாரினில் இருந்து தங்கைக்காக, மதிக்காக என்று நிறைய வாங்கி வந்திருந்தான். காவ்யாவுக்குமே வாங்கி வந்திருந்தான். ஆனால் அதை அவளிடம் கொடுக்க முடியும் என்பதை கனவில் கூட அவன் எண்ணவில்லை.
தன்னுடைய அறைக்கு சென்றவன் அவளுக்கென்று வாங்கி வைத்திருந்த பொருள்களையே ஒரு பார்வை பார்த்து விட்டு சாக்லேட் மட்டும் எடுத்து வந்து காவ்யாவிடம் கொடுத்தான்.
“ஐ சாக்லேட்”, என்று துள்ளி குதித்து அதை பிடுங்கியவள் சாக்லேட்டில் மூழ்கி விட்டாள்.
“பாக்க சின்ன பொண்ணா இருக்கீங்க காவ்யா? நீங்க ரொமான்ஸ் பத்தி எல்லாம் பேசுறீங்க?”, என்று தூண்டில் போட்டான் ஷியாம்.
“வாய்ல மட்டும் தான் சார் நான் வடை சுடுவேன். அதெல்லாம் கண்டுக்காதீங்க. எல்லாம் ஒரு யூகம் தான். அப்பறம் நான் இன்ட்ரெஸ்ட்டா சாக்லேட் சாப்பிடுறேன். கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்ன?”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவளை ரசித்து கொண்டிருந்தான் ஷியாம். 
அங்கே சூர்யாவின் கை அணைப்பில் இருந்த மதியோ அவனிடம் தன்னை விடுமாறு கெஞ்சி கொண்டிருந்தாள்.
“அத்தான், ஒரே ஒரு முத்தம்னு சொல்லிட்டு இப்படியா? இன்னும் குளிக்கவே போகல? ப்ளீஸ் அப்புறமா தாங்களேன்”, என்றாள் கலைமதி.
“நீ கிட்ட வந்தாலே என்னால விட முடியலை டி செல்லம். என்ன பண்ண சொல்லு? இன்னும் ஒண்ணே ஒன்னு”, என்று சிரித்தான் சூர்யா.
“இப்படி சொல்லி ஏமாத்துவீங்க. போங்க”
“ஏமாத்த மாட்டேன். வேணும்னா நீ ஒண்ணே ஒன்னு கொடு. குளிக்க போயிரலாம்”
“நானா, அதெல்லாம் மாட்டேன். நீங்களே தாங்க”
“அப்படின்னா ஒன்னு நீண்டு கிட்டே போனாலும் குறை சொல்ல கூடாது”, என்று குனிந்து அவளை முத்தமிட்டவன் சில நிமிடங்கள் கழித்து தான் விட்டான். அடுத்த நொடி சிட்டாக பறந்து பாத்ரூமுக்குள் சென்று விட்டாள்.
அவள் குளித்து முடித்ததும் அவன்  உள்ளே சென்று குளித்தான்.
பின் காவ்யா போல மதியும் சுடிதார் மேல் ஒரு சுவட்டரை அணிந்து கொண்டு சூர்யா கிளம்பியதும் அவனையும் அழைத்து கொண்டு வெளியே வந்தாள்.
அவர்கள் வரவை கூட அறியாமல் காவ்யா சாக்லெட்டிலும், ஷியாம் காவ்யாவை பார்ப்பதிலும் மூழ்கி இருந்தார்கள்.
தித்திப்பு தொடரும்……

Advertisement