அடுத்து சிந்திக்க முடியாமல் சிந்தையிழந்து நின்றாள்.
‘என் நிலமைய யார் கிட்டயும் சொல்ல முடியாம தவிக்கிறேன். என்னால ஒருத்தர் வாழ்க்கை கெட்டா அந்தப் பாவம் எனக்கு தானே. இத எப்படி அப்பா கிட்ட சொல்லி புரிய வைப்பேன். அவரு நான் சொல்றத கேட்கிற மனநிலையே இல்லையே’ என நினைத்தவள் தனது தந்தைக்காக அவசரமாக முடிவெடுத்தாள்.
“அப்பா ஒரு நிமிஷம் தயவு செய்து நில்லுங்க. நான் அவரோட போறேன் பா. நில்லுங்க” என கத்தினாள்.
ஷான்வியின் குரலைக் கேட்டு கௌதம் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அதே இடத்தில் நின்றார்.
“தயவு செய்து இந்த அப்பாவை தப்பா நினைக்காதம்மா. உன்ன வாழவைக்க எனக்கும் வேற வழி தெரியல” என அவளருகில் வந்து கைகளைப் பிடித்து மன்றாடினார்.
“உங்களுக்காக நான் நிச்சயமா போறேன் பா. அதான் உங்க சந்தோசம்னா அதையும் நான் தாங்கிக்கிறேன்” என்று கூறியவள் வேகமாக தனது அறைக்குள் சென்றவள் தனக்கான சில உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டாள்.
மனதிற்குள் ஆயிரம் துன்பங்களை சுமந்து கொண்டு நிம்மதியின்றி அங்கிருந்து கிளம்ப தயாரானாள்.
“மாப்ள நம்ம வீட்ல இருந்து கூட்டிட்டு போக யாராவது வருவாங்களா?” என வனிதா கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களின் வீட்டின் முன் பிளாக் கலர் கார் ஒன்று வந்து நின்றது.
அக்னிவின் அன்னை மற்றும் சிலர் அதிலிருந்து இறங்கி வந்தனர்.
அவரது தோற்றத்தை பார்க்கும் பொழுதே பணக்காரத் தோரணை தெரிந்தது.
“இவங்க தான் என்னோட அம்மா வசுந்தரா” என அக்னிவ் அறிமுகப்படுத்தினான்.
“அம்மா என் மேல கோபமா இருக்கீங்க. அதான் நீங்க வரலையோன்னு நெனச்சேன்.”
“கோபம் இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் மனசு கேட்காம தான் வந்துட்டேன்.”
“எல்லாரும் மன்னிக்கணும் திருமணத்திற்கு சொன்ன நேரத்துல வர முடியல. இது மிகப்பெரிய தவறுதான். ஆனாலும் வேறு வழி இல்லாத சூழ்நிலை. என் மருமகள நான் அழைச்சிட்டு போலாம்னு வந்திருக்கேன்” என்று சொல்ல.
“ரொம்ப சந்தோசமா இருக்கும்மா. வாங்க வந்து உட்காருங்க” என வனிதா பரபரப்பாக உள்ளே சென்று குடிக்க தண்ணீர், பலகாரம் எல்லாம் கொண்டு வந்து வைத்தாள். வந்தவர்களுக்கு குளிர்பானங்கள் கொடுக்க ஏற்பாடுகளை செய்திருந்தாள்.
“ஷான்வி எப்படியும் நீ ரொம்ப கோவமா இருப்பேனு நினைக்கிறேன். ஆனா என்னோட பையன் செலக்சன் ஒரு போதும் தவறா இருக்காதுன்னு நான் நூறு சதவீதம் நம்பி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். என்ன காரணம்னு எனக்கு தெரியாது. ஆனா உன் மேல என் பையன் உயிரையே வச்சிருக்கான். இது சத்தியமான உண்மை. போகப்போக நீயே புரிஞ்சிக்கிற நாள் வரும். சந்தோஷமா முகமலர்ச்சியா எங்களோட வரணும்னு ஆசைப்படுறேன்” என அவளது தலையை வருடி விட்டார்.
இதுவரை பார்த்திராத முகம். அவர் பேச்சில் இருந்த அன்பு. முகத்தில் தெளிவான சாந்தம். இதையெல்லாம் பார்த்த ஷான்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிப் போய் நின்றாள்.
‘இந்த அம்மா இவ்வளவு நல்லவங்களா தெரியுறாங்க. இந்த அக்னி மட்டும் ஏன் இவ்வளவு முரட்டுத்தனமா இருக்கான். இவன் நல்லவனா கெட்டவனானே புரிஞ்சுக்க முடியலையே. இனி என் வாழ்க்கை என்னதான் ஆகப்போகுதோ தெரியலையே’ என மனதிற்குள் குழம்பி தவித்தாள்.
“உன்னோட மனசுல இருக்குற குழப்பம் எனக்கு நல்லாவே புரியுதும்மா. நம்ம வீட்டுக்கு போன பிறகு எல்லாத்தையும் தெளிவு படுத்திக்கலாம். நல்ல நேரம் போறதுக்குள்ள கிளம்பலாமே” என்று சொல்லியவர் தான் கொண்டு வந்த பூவையும் ஷான்வி தலையில் வைத்து விட்டார்.
ஷான்வி மறுப்பு தெரிவிக்க முடியாமல் அமைதியாக நின்றாள்.
‘அடேங்கப்பா! இத்தனை நேரம் அந்த ஆட்டம் ஆடினா. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கா?’ என அக்னி மனதிற்குள் நினைத்தான்.
ஷான்வியின் அமைதியைப் பார்த்த வசுந்தரா, “என்னம்மா கல்யாணத்துக்கே வராதவர் இப்ப வந்து நிக்கிறானு தானே யோசிக்கிற. எனக்கும் என் பையன் மேல கோவம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக உன்ன உதாசீனப்படுத்த முடியாது. உனக்காக தான் நான் இங்கே வந்தேன். என்னோட வார்த்தை மேல நம்பிக்கை வச்சு என்னோட அன்புக்கு கட்டுப்பட்டு நீ கிளம்பி வருவேன்னு நம்பிக்கையோடு நிற்கிறேன்.”
வசுந்தராவின் அந்த வார்த்தையை கேட்ட ஷான்வி அதற்கு மேலும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் தந்தையிடம் சொல்லிக் கொண்டு அமைதியாக அவர்களுடன் கிளம்பினாள்.
அனைவரும் இவர்கள் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். போகும் வழியில் ஷான்வி எதுவுமே பேசவில்லை. ஷான்வியின் மௌனமே வசுந்தராவிற்கு அவளின் எண்ண ஓட்டத்தைப் புரிய வைத்தது.
கார் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இல்லத்தை வந்தடைந்தது. அங்கு ஷான்விக்கு பிரம்மாண்டமான வரவேற்பு இருந்தது.
முறைப்படி ஆரத்தி எடுத்து வசுந்தரா உள்ளே அழைத்துச் சென்றார்.
முக்கியமான சொந்தங்கள் மட்டும் வந்திருந்தார்கள். சற்று நேரத்தில் அவர்களும் கலைந்து செல்லத் தொடங்கினர். அதன் பிறகு வீடு அமைதியாக இருந்தது.
ஷான்வியின் கண்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையாலேயே அளந்தது.
சுவற்றின் ஓரிடத்தில் மாற்றப்பட்ட புகைப்படத்தை பார்த்து கண்கள் நிலைகுத்தி நின்றது. புகைப்படத்தை பார்த்த அந்த நொடியே அவளது சப்த நாடிகளும் ஒடுங்கியது. உடல் வியர்வையில் குளித்தது. கைகால்கள் நடுங்கியது.
“என்னம்மா அப்படி பார்க்கிற. அவன் தான் என்னோட மூத்த பிள்ளை என்னோட மூத்த மருமகள். ரெண்டு பேருமே ஒரு கார் விபத்துல இறந்துட்டாங்க. இப்போ எனக்குனு இருக்கு ஒரே சொந்தம் சொத்து என்னோட சின்ன மகன் அக்னிவ் தான்” என்று வருத்தத்துடன் வசுந்தரா கூற.
அதைக் கேட்டு ஷான்வி கண்கலங்க நின்றாள். அவளது உதடுகள் பேச முன்வரவில்லை. உடல் மொத்தமும் தளர்ந்து போனது. மீண்டும் பார்வையை புகைப்படத்தை நோக்கி செலுத்த விட. அப்போ… அந்த… அந்த…” என மனதிற்குள் வார்த்தைகளை தேடி நடுங்கினாள்.
“உன்னோட மாமனார் உள்ளே படுத்த படுக்கையா இருக்காரு. அவரால் எழுந்து வெளியே வர முடியாது. பெரிய மகன் இருந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் வெளியே வரல” என்று கண்கலங்க சொன்னார்.
‘இந்த குடும்பம் இப்போ இருக்கிற நிலைமையில நாம எப்படி இவங்ககிட்ட மேற்கொண்டு பேசுறது. எந்த உண்மையையும் சொல்ல முடியாது’ என சுக்கு நூறாக உடைந்து சிந்தித்தாள்.
“உன்னோட மனநிலை எனக்கு நல்லாவே புரியும். உன்னோட பேரு? தப்பா எடுத்துக்காதம்மா. அக்னிவ் உன் பேர் சொன்னான் தான். ஆனா நான் தான் மறந்துட்டேன்” என்று தடுமாற்றத்துடன் கேட்க.
“ஷா… ஷான்வி” என்றாள்.
“உன்னோட மனசு எனக்கும் புரியும். சந்தோசமா நிம்மதியா இரும்மா. பெரிய பிள்ளையை இழந்த தூக்கத்திலிருந்தே இன்னும் இந்த குடும்பம் மீண்டு வரல. இப்போதைக்கு எங்களுக்கு இருக்க சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் தான். உனக்கு புரியும்னு நினைக்கிறேன். கொஞ்ச நேரம் போய் ஓய்வெடும்மா” என்று கூறியவர் வேலையாட்களை அழைத்து மதிய உணவிற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
மதிய உணவு விருந்து பிரமாதமாக தயாரானது. அனைவருக்கும் விருந்து பரிமாறி அழகு பார்த்தார்.
நொறுங்கி போய் மனதில் இருக்கும் வலியைக் கூட வெளியே காட்ட முடியாமல் தீயிலிட்டு புழுவாய் துடித்துக் கொண்டு இருந்தாள்.
ஷான்விக்கு உணவு ஒருவாய் கூட இறங்கவில்லை. பளிங்கு தொண்டையில் நீர் மட்டும் ஒவ்வொரு மிடராய் இறங்கியது. கண்களில் நீரையும் மனதில் தாங்க முடியாத வலியையும் சுமந்து கொண்டு இருந்தாள்.
அவளது வாழ்க்கையே இப்போது அவளுக்கு மிகப்பெரிய சுமையாய் தெரிந்தது. அவளது விழிகள் தொலைந்து போன எதையோ தேடுவது போல அலைபாய்ந்தது.
அவளது எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்ட வசுந்தரா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். காலப்போக்கில் சரியாகிவிடும் என நம்பினார்.
அக்னிவ் அமைதியாக இருக்காமல் யாரும் எதிர்பாராத வண்ணம் தனது இலையில் இருந்த ஸ்வீட்டை எடுத்து, இந்தா சாப்பிடு ஆங்கிரி பேர்ட்” என அவளது வாயில் திணித்தான்.
அந்த நொடி என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறித்தான் போனாள். வசுந்தராவின் முகத்திற்காக சிந்தித்தாள். ஆனாலும் “இல்ல எனக்கு வேண்டாம்” என அவனது கைகளை தட்டி விட.
“அதெல்லாம் முடியாது. நீ சாப்பிட்டு தான் ஆகணும்” என வலுக்கட்டாயமாக ஊட்டினான்.
அவனை முறைத்துக் கொண்டு எரிச்சலுடன் வேறு வழி என்று விழுங்கினாள்.
ஏதோ விஷத்தையே உண்பதைப் போல எண்ணம் தான் அவளுக்கு தோன்றியது. அவசரமாக தண்ணீரை எடுத்து குடித்தால் கை கழுவ எழுந்தாள்.
“ஆஹாங். நீ பெரிய தில்லாலங்கடியா இருப்ப போலவே. நான் மட்டும் ஊட்டி விடணும். நீ சாப்பிடுவ. ஆனா எனக்கு ஊட்டி விட மாட்டியா?” என அவளது கையைப் பிடித்தான்.
‘இவன் நிஜமாகவே லூசா? இல்ல நடிக்கிறானா?’ என நினைத்தவள், “என்னாலலாம் ஊட்ட முடியாது” என கையை உதறி விட்டாள்.
“இதோடா. எனக்கு ஊட்டாம இங்க இருந்து நீ ஒரு அடி கூட நகர முடியாது. நாள் முழுக்க இப்படியே இருந்தாலும் சரி” என இழுத்து அதே இடத்தில் அமர வைத்தான்.
வசுந்தரா அதற்கு மேலும் அங்கு நிற்க வேண்டாம் என நினைத்து தனது கணவர் இருந்த அறைக்கு உள்ளே சென்றார்.
அக்னிவின் பாட்டி கண்ணம்மா அங்கு வர. பேராண்டி பொண்ணு அம்சமா இருக்கா. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தான் புடிச்சிட்டு வந்திருக்க” என நெட்டி முறிக்க .
“உங்களுக்கு பிடிச்சிருந்தா ரொம்ப ஹாப்பி தான் பாட்டி. எனக்கு ஊட்டி விட மாட்டேங்குறா. கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன்” என கொஞ்ச லோடு சொல்ல .
“என்னம்மா புது பொண்ணு. வந்ததும் வராதம்மா என் பேரன கஷ்டப்படுத்துற. ஒரு வாய் ஊட்டி விட்டா என்ன? குறைஞ்சா போய்டுவ” என பழிப்பு காட்ட.
‘இதுங்க குடும்ப மொத்தமும் லூசு தான் போல இருக்கு. லூசு கிழவி’ என நினைத்துக் கொண்டு சிலையென அமர்ந்திருந்தாள்.
“ஏண்டா! ஒருவேளை பொண்ணுக்கு காது கேட்காதா? செவிடா?” என முழிக்க.
“அவளுக்கு நல்லாவே காது கேட்கும் பாட்டி . ரொம்ப அழுத்தக்காரி. ரொம்ப திமிரு அதிகம். அதே சமயம் ரொம்ப பாசமானவ பாட்டி. அதனாலதான் விடாப்பிடியா இவள கூட்டிட்டு வந்து இருக்கேன்.”
“அது சரி பாசம் அதிகமா இருக்கிறதுனால தான் ஊட்ட மாட்டேன்னு சொல்றாளோ. ஆமா பொண்ணு பேரு என்ன? ஏதோ சொன்ன. மறந்துட்டேன். வாயில நுழையாத பேரா இருக்கே.”
“ஷான்வி பாட்டி.”
“அதென்ன சாணியோ, பாணியோ. எனக்கு வாயில வரல டா. நான் வேணும்னா பாப்பான்னு சொல்லிக்கவா? பொம்பள பிள்ளைகள எல்லாம் நம்ம குடும்பத்துல செல்லம்மா பாப்பானு தான கூப்பிடுவோம்.”
“எனக்கு நோ அப்ஜக்ஷன் பாட்டி” என்று சொல்ல.
‘உண்மையிலேயே இதுங்க லூசு குடும்பம் தான் போல இருக்கு’ என இருவரையும் முறைக்கு முறைக்க பார்த்துக் கொண்டிருந்தால் ஷான்வி.
அப்போது மீண்டும் அங்கு வந்த வசுந்தரா, “அம்மா அந்த பொண்ணை ஏன் கஷ்டப்படுத்தறீங்க கொஞ்ச நேரம் தனியா விடுங்க. நீ போய் கை கழுவிட்டு ஓய்விடும்மா” என்று சொல்ல.
‘தெய்வமே!’ என நினைத்துக் கொண்டு ஷான்வி வேகமாக எழுந்து சென்று கைகளை கழுவி விட்டு வந்தாள்.
“அந்த ரூம் அக்னியோடது. அங்கே போய் ஓய்வெடும்மா” என்று சொல்ல.
‘அவனோட ரூம்லயா?’ என நினைத்து தயங்கியபடி நின்றாள்.
“இனிமே அதுதான் உன்னோட ரூம். உன்னோட உடமைகள எல்லாம் எடுத்துட்டு போயி அங்க வச்சுக்கோ” என்று சொல்ல.
‘இவன் தனியா சிக்கட்டும். அதுக்கு மேல இவனுக்கு இருக்கு’ என நினைத்துக் கொண்டு தான் கொண்டு வந்திருந்த உடமைகள் அனைத்தையும் அந்த அறைக்கு எடுத்துக்கொண்டு சென்று வைத்தாள்.
அறை மிகவும் விசாலமாகவும் பிரம்மாண்டமாகவும் பணக்கார தோரணையோடும் ஆடம்பரமான பொருட்களை தன்னுள் அடக்கிக் கொண்டு இருந்தது தெரிந்தது.
‘அடேங்கப்பா! இதெல்லாம் நான் சினிமாவில தான் பார்த்திருக்கேன்’ என அசந்து போய் நின்றாள்.
அப்பொழுது கதவு கிரீச்சிடும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தாள். அக்னிவ் தான் கதவை சாத்தினான்.
“நான் கிஸ் பண்றத யாரும் பாக்க கூடாதுன்னு நினைச்சேன். நீ எல்லாரும் பாக்கட்டும்னு நினைக்கிற. உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்” என மெதுவாக அவள் அருகில் வந்தான்.
“என்னது கிஸ்ஸா? பக்கத்துல வந்தேனா கொன்னுடுவேன் ராஸ்கல். மரியாதையா பத்தடி தள்ளி நில்லு” என அவனை பின்னால் தள்ளி விட்டாள்.
“தள்ளி விடுற மாதிரி அதே சாக்குல என் மேல நீ மட்டும் கைய வச்சுட்ட பாத்தியா? இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டா என் மேல இவ்வளவு வெறுப்பை கொட்டுற” என மீண்டும் அருகில் நெருங்கினான்.
“உன் மேல ஆசையும் இல்ல ஒரு மண்ணும் இல்லை, என்னோட சூழ்நிலை தெரியாம இப்படி அசிங்கமா நடந்துக்காதே. ஒழுங்கா நீயா தள்ளி போறியா? இல்ல நான் சத்தம் போட்டு கத்தவா?” என்றாள்.
“நீ எப்படி கத்த முடியும். அதுக்கு வாய்ப்பே இல்லையே ஆங்கிரி பேர்ட்” என சொல்லிக்கொண்டு அவள் அருகில் நெருங்கி அவளை தன் வசம் இழுத்தான்.