“இந்த பாசாங்கு பாத்து உண்மைனு நம்பாதிங்க மாப்ள. அவ அப்படி தான் நடிப்பா” என வனிதா வார்த்தை அம்புகளால் ஷான்வி மனதை குத்திக் கிழிக்க.
“உங்களுக்கு தேவை பணம். அதோட உங்க வேல முடிஞ்சது. இனி ஷான்வி என் பொண்டாட்டி. அவள பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. முதல்ல தூரமா போய் நில்லுங்க” என வனிதாவை விரட்டாத கொடுமையாக தள்ளி வைத்தான்.
‘இவன் நல்லவனா கெட்டவனானே புரியலையே’ என வனிதா மனதிற்குள் சிந்தித்தபடி நகர்ந்து நின்றாள்.
“ஷான் இப்படிலாம் பண்ணாத டீ. நான் வேணும்னா கட்டின தாலியை கழட்டிடவா?” என்றான்.
ஷான்வியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அசைவற்று துவண்டு போய் கிடந்தாள்.
‘அப்போ நடிக்கல. உண்மையா தான் மயங்கிட்டா போல. நடிப்பா இருந்தா நான் சொன்ன வார்த்தைக்கு இந்நேரம் முழிச்சிருப்பா’ என நினைத்தவன் நீரை கொண்டு வரச் சொல்லி அவளது முகத்தில் தெளித்தான்.
ஷான்வி மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தாள். “இன்னும் நான் உயிரோட இருக்கேனா?” என கேட்டாள்.
“என் உயிரே நீதானடி. எமனே வந்தாலும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது ஆங்கிரி பேர்ட் ” என அக்னிவ் சொல்ல.
“ஒரு பொண்ணு இவ்வளவு தூரம் கெஞ்சரானு கொஞ்சம் கூட மனசே இறங்காம இப்படி அரக்கத்தனமா தாலிய கட்டின நீயெல்லாம் என்ன ஜென்மம் டா. என் நிலமை புரியாம என் வாழ்க்கையையும் கெடுத்து உன்னோட வாழ்க்கையையும் நீயே அழிச்சிக்கிட்டயே. நீ படிச்ச முட்டாள் டா. ச்ச்சீ” என வார்த்தைகளை கொட்ட.
அவள் கூறிய எதுவும் காதில் விழாததைப் போல அக்னிவ், “டைம் ஆகுது. பசிக்குது வேற. சீக்கிரம் கிளம்பலாம். வாங்க… வாங்க” என அடுத்து கிளம்புவதில் பரபரப்பை காட்டினான்.
‘ச்ச்சீ. இவன விட கேவலமான ஜென்மம் இந்த நாட்டில் இருக்கானு தெரியல’ என நினைத்தவள் ” நான் எங்கேயும் வரமாட்டேன். நீங்க எல்லாரும் கிளம்புங்க” என ஆவேசமாக கத்தினாள்.
“அடியேய்! இது கோயில். இங்க வந்து ஆடாத. வீட்ல வந்து என்ன ஆட்டம் வேணா போடு” என வனிதா ஷான்வியை அடக்க முயற்சி செய்தாள்.
“ஒஹோ! உங்களுக்கு மான மரியாதை வேற இருக்கா? ரொம்ப ஆச்சர்யம் தான். உன்னை யெல்லாம் என் அம்மாவா நினைச்சேன் பாரு. அதான் வாழ்க்கைல நான் செய்த மிகப்பெரிய தவறே” என்றவள் அந்த இடத்தை விட்டு நகர முற்பட்டாள்.
“அவளது கரங்களை எட்டிப் பிடித்தவன், “அப்படிலாம் என்னை விட்டுட்டு போக முடியாது டார்லிங். கொத்தா இருபது லட்சம் கொடுத்து உன்னை வாங்கி இருக்கேன். மாமா கிட்ட வந்துடுமா” என அவளை தன் பக்கமாக இழுக்க.
அவளையும் அறியாமல் மறு நொடி அவன் இழுத்த இழுப்பிற்கு வேகமாக அவன் அருகில் வந்து இடித்து நின்றாள்.
அங்கிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு கௌதம் தன் மகளிடம் கண்ணீர் விட்டு கெஞ்சினார். “இங்க வச்சி எந்த பிரச்சனையும் வேண்டாம்மா. தயவுசெய்து வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என கரம் கூப்ப.
தந்தையின் கண்ணீருக்கு கட்டுப்பட்டு மௌனமாகி கண்ணீருடன் நின்றாள்.
அக்னிவ் அவளின் பட்டுப் போன்ற கரங்களை தன் கரத்தோடு இணைக்க முயற்சி செய்து தோற்று போனான்.
அவனது கரங்களை உதறிவிட்டு வேகமாக முன்னால் செல்ல.
“மை சுவீட் ஆங்கிரி பேர்ட். கொஞ்சம் மெதுவா போங்க டியர்” என்றான்.
அவனை முறைத்தவள் தாங்க முடியாத மன வலியுடன் அவன் வார்த்தைகளை செவி மடுக்க விருப்பமின்றி நடந்தாள்.
“நம்ம கார் இங்க இருக்கு டியர்” என அவளை தடுத்து நிறுத்த.
அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுக்குள் தீயாய் சுடுவது போல நினைத்தாள். கண்களால் அவனை எரித்து விடுவது போல பார்த்தாள்.
“இப்படியே எத்தனை நாள் தான் முறைச்சி முறைச்சி பார்க்கப் போற ஷான். அதான் உனக்கு ஆங்கிரி பேர்ட்னு செல்லமா நேம் வச்சிட்டேன். இன்னொரு நேம் கூட இருக்கு. கிரீன் சில்லி” என எதுவுமே நடக்காததைப் போல சாதரணமாக பேசிக் கொண்டு நிற்க.
‘இவனுக்கு நிஜமா அறிவே இருக்காதா? இல்ல நடிக்கிறானா? ‘ என நினைத்தபடி அவனைப் பார்த்தாள். அவன் முகத்தை பார்த்தாலே கோபமும், எரிச்சலும் தான் வந்தது. மேற்கொண்டு பேசப் பிடிக்காமல் அமைதியானாள்.
“மாப்ள நாங்க அந்த கார்ல முன்னாடி கிளம்பறோம். நீங்க மெதுவா இந்த கார்ல வாங்க” என வனிதா அன்பு கட்டளை இட்டாள்.
“சரிங்க அத்தை” என்றவன், “என் கோபக்கார பொண்டாட்டி. கார்ல முன்னாடி வந்து உட்காருங்க” என உத்தரவிட.
அவன் சொல்வதை காதில் வாங்காமல் பின் சீட்டில் அமர்ந்தாள்.
வனிதாவும் மற்றவர்களும் மூன்று கார்களில் தனித்தனியாக கிளம்பினார்கள்.
“ஷான் குட்டிமா. நீ எவ்வளவு கோபப்பட்டாலும் இந்த அக்னிவ் உன்ன விடமாட்டான். அடம் பிடிக்காம மாமா கூட முன்னாடி வந்து உட்காருங்க பாக்கலாம்” என செல்லமாக சொல்ல.
“வரமுடியாது” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அப்போ உங்க அப்பா கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கும். உனக்கு ஓகேவானு யோசிடா பட்டு” என அவளது கன்னத்தை தட்டினான்.
“இப்படி ப்ளாக் மெயில் பண்ணி காலம் முழுக்க வாழ முடியும்னு கனவு காணாத அக்னிவ். என் உடம்பில உயிர் இருக்க வரைக்கும் அது நடக்காது” என்றவள் வேகமாக முன் சீட்டில் வந்து அமர்ந்து கார் கதவைப் படாரென்று மூடினாள்.
“இந்த திமிரு தான் உன்கிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு டியர்” என சொல்லிக் கொண்டே காரின் முன் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை இயக்கத் தொடங்கினான்.
கார் சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்றது. அக்னிவ் ரோட்டையும் ஷான்வியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே காரை செலுத்த. குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்தது.
வனிதா முன்பாகவே வந்த அவர்களை வரவேற்க தயாராக நின்று இருந்தார். சகல மரியாதையோடு இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தார்.
“இருவருக்கும் பால் பழம் கொடுக்கும் சமுதாயத்தை நல்ல நேரம் போறதுக்குள்ள செய்யுங்க” என ஒரு குரல் ஒலிக்க.
வனிதா அவசர அவசரமாக தயார் செய்து கொண்டு வந்து அக்னிவிடம் நீட்ட.
ஷான்வி கோபத்துடன் தட்டை வேகமாக தட்டிவிட்டாள். பாலும் பழமும் சிதறி விழுந்தது.
“முறைப்படி சந்தோசமா இந்த கல்யாணம் நடக்கல. எல்லாத்தையும் சம்பிரதாயப்படி செய்ய. “
“ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். எங்க வீட்டு ஆளுங்க இங்க இருக்காங்க. உங்க வீட்ல இருந்து இந்த கல்யாணத்துக்கு ஒருத்தர் கூட வரலையே. அது ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?” என திமிருடன் சத்தமாக அவனை பார்த்து கேட்க.
“கல்யாணம் முடிஞ்சு கையோட நேரா எங்க வீட்டுக்கு தானே கூட்டிட்டு போக போறேன். அங்க போய் உன் சந்தேகத்தை மொத்தமா தீர்த்து வைக்கிறேன் டியர். அதுவரை தேள் மாதிரி வார்த்தையால கொட்டாம அமைதியாக இரு ஷான்” என்றான்
“கோயில்ல வச்சு எதுவும் பேச கூடாதுன்னு சொன்னீங்க. இப்பதான் வீட்டுக்கு வந்தாச்சு. இப்போ தெளிவா பேசி முடிவு பண்ணிடலாம் தானே” என ஷான்வி கேட்க.
அவளைச் சுற்றி இருந்த அனைவரையும் அவளையே பார்க்க.
“இதுக்கு மேல இன்னும் என்னடி பேசணும். பேசுறதுக்கு என்ன இருக்குன்னு கேட்கிறேன். கல்யாணம் முடிஞ்சிடுச்சு. நேரம் காலமா புருஷன் வீட்டுக்கு போய் சேர வழிய பாரு. தேவையில்லாம இங்க நின்னு சத்தம் போடுற வேலையெல்லாம் வேண்டாம்” என வனிதா கடுகடுவென பேசினாள்.
“இதுவும் பேசுவீங்க. இதுக்கும் மேலயும் பேசுவீங்க சித்தி. ஏன்னா நான் உங்க பொண்ணு இல்லையே. இதுவே நீங்க பெத்த பொண்ணு சம்யுக்தாவா இருந்தா இப்படி எல்லாம் நடத்துவீங்களா? கேவலம் இருபது லட்ச ரூபா பணத்துக்காக இவ்வளவு அசிங்கமா நடந்துக்கிறீங்க. என்னோட வாழ்நாளில் என்னைக்குமே உங்களுக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது” என ஆவேசமாக சொன்னாள்.
“இவ பெரிய ஃபாதர். எனக்கு பாவமன்னிப்பு கொடுக்க வந்துட்டா. உன்னோட நிழல் கூட என் பொண்ணு மேல படக்கூடாதுனு தான் அவளை வெளி ஊர்ல சேர்த்து படிக்க வைக்கிறேன். அவளை ஏண்டி இழுக்கற. வாய மூடிக்கிட்டு உன் துணிமணி எல்லாம் எடுத்து வை. நல்ல நேரம் முடியறதுக்குள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்” என ஷான்வியை கண்களால் பொசுக்கி விடுவதைப். போல பார்த்தாள்.
“நிச்சயமா நான் அங்க போக மாட்டேன். இங்க நடந்தது கல்யாணமா? இதுக்கு பேரு தாலியா? என்ன அடி முட்டாள்னு நினைக்கிறீங்களா?” என சீறினாள்.
“ஷான் உன்னை எவ்வளவு லவ் பன்றேன்னு உனக்கே தெரியும். என்ன ஒரு நாயா கூட மதிக்கல. நீ எவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சாலும் சரி. நீ தான் எனக்கு பொண்டாட்டி. இதை படைச்ச கடவுளே வந்தாலும் மாற்ற முடியாது. சொன்ன டயலாக்கை திரும்ப திரும்ப சொல்ல வைக்காத. எனக்கே போர் அடிக்குது டியர். சமத்தா சீக்கிரம் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு கிளம்புங்க பார்க்கலாம்” என அக்னிவ் நிதானமாக சொல்ல.
“ச்ச்சீ. நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? பிடிக்கலைன்னு தெரிஞ்சும் வலுக்கட்டாயமா ஒரு பொண்ணு கழுத்துல தாலிய கட்டிட்டு வெக்கமே இல்லாம இப்படி பக்கம் பக்கமா பேசுறியே. என்ன மனுஷன் டா. உன்னையும் பெத்தது ஒரு பொண்ணு தானே. அப்போ அவங்க உன்னை விட கேவலமாக தான் இருப்பாங்க” என்று கூற. அக்னிக்கு கோபம் சுளீரென வந்தது. பளாரென்று அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். என்னோட வாழ்க்கை மொத்தமும் நீ தான்னு நினைக்கிறேன். அதனால ரொம்ப பொறுமையா இருக்கேன். அளவுக்கு மீறி வார்த்தையை விட்டா நான் தாங்க மாட்டேன். முதல்ல கிளம்பு” என்றான்.
“இவ்வளவு நடந்ததுக்கு பிறகு நான் உன்னோட வருவேன்னு கனவுல கூட நினைக்காத. மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு” என கோபக்கனலோடு கூறினாள்.
“அப்படியெல்லாம் நீங்க சொன்ன உடனே ரோஷம் வந்து போயிட முடியாது ஷான். நான் உன்னோட புருஷன். உன் கழுத்தில கட்டின மஞ்சள் கயிறு ஈரம் கூட இன்னும் காயல. அது கூட அவசர கல்யாணம். அதனால மஞ்சள் கயத்துல கட்டிட்டேன். வீட்டுக்கு வா தங்கத்திலேயே தாலி செஞ்சு போட்டுருவேன்” என தெனாவெட்டாக சொல்ல.
“வேண்டாம். உன் பேச்சைக் கேட்கவே அருவருப்பா இருக்கு. உன்னை பார்க்க அதைவிட அசிங்கமா இருக்கு. நீ கட்டின தாலி என் கழுத்துல இருந்தா தானே உரிமை கொண்டாடுவ. இப்பவே அறுத்து உன் மூஞ்சில வீசுறேன். எடுத்துட்டு எடுத்த காலி பண்ணு” என தாலி சரடை கையில் எடுத்தாள்.
“நிறுத்து ஷான்வி. இவ்வளவு நேரம் நானும் பொறுமையா தான் இருந்தேன். இத்தனை நாளா உன் அப்பா மேல வச்சு பாசம் உண்மைனா தயவுசெய்து இன்னைக்கு ஒரு நாளாவது என் பேச்சைக் கேளு.”
“இதுக்கு மேல இன்னும் என்னப்பா மீதி இருக்கு? என்ன கேக்க சொல்றீங்க? எனக்கு இந்த தாலி வேண்டாம்” என பலம் கொண்ட மட்டும் கத்தினாள்.
“உன் சித்தி கிட்ட இருந்து ஒவ்வொரு நாளும் சித்திரவதை அனுபவிக்கிறத விட தயவு செய்து அந்த தம்பியோட போய் சந்தோஷமா வாழப் பாரு. அதான் உனக்கு நல்லது. அதை மீறி தாலிய அறுத்து வீசுவேன். போக மாட்டேன்னு சொன்னா இந்த நிமிஷமே இங்கயே நான் உயிர விட்டுடுவேன். அதை பார்த்து நீ சந்தோஷமா இங்கயே இரு” என கூறிய கௌதம் வேகமாக சமையல் அறைக்கு ஓட.
இதை தனது தந்தையிடம் இருந்து இந்த செயல்களை சற்றும் எதிர்பாராத ஷான்வி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.