Advertisement
தீரா காதல் தீ 4
“தீக்ஷி.. உன் பார்ட்னர்ஸை என்ன செய்யலாம்ன்னு இருக்க..?” என்று இந்திரஜித்தின் தந்தை ஆனந்தன் போன் செய்து தீக்ஷியிடம் கேட்டார்.
“AAR.. டவர்ஸோட மூணு வருஷத்து கணக்கை சப்மிட் செய்ய நான் அவங்களுக்கு கொடுத்த டைம் நாளையோட முடியுது மாமா.. எப்படியும் அவங்களால ஒழுங்கான கணக்கை காட்ட முடியாது, AAR லிருந்து நிறைய பணம் எடுத்திருக்காங்க, அதுக்கான ப்ரூப் நம்மகிட்ட இருக்கு, அதை வச்சி போலீஸ்ல கம்பளைண்ட் செய்யலாம்ன்னு இருக்கேன்..” என்று தீக்ஷி சொன்னாள்.
“தீக்ஷி.. நான் கேட்கிறது, அவங்க உன்னை அட்டேக் செய்ய பார்த்ததுக்கு என்ன செய்யலாம்ன்னு இருக்கேன்னு தான்..” என்று ஆனந்தன் சிறிது கோபத்துடன் கேட்க, தீக்ஷி பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.
“இப்படி அமைதியா இருந்தா என்ன மீனிங் தீக்ஷி..? உன்னை டார்கெட் செஞ்சிருக்காங்க, உனக்கு ஏதாவது ஆகியிருந்தா..? உன்னோட தருண் வேற இருந்திருக்கான்.. அவங்களை அப்படியே விட்டுற முடியுமா..? என்று கொதித்தார் மனிதர்.
“மாமா.. நீங்க என்ன எதிர்பார்க்குறீங்கன்னு புரியுது, ஆனா வேண்டாம் மாமா, ஒவ்வொரு உயிரோட வேல்வியூம் நம்ம விட யாருக்கு அதிகமா தெரியும் சொல்லுங்க..” என்று சொன்ன தீக்ஷியின் குரலில் தெரிந்த வேதனையில் தானும் வேதனை கொண்ட ஆனந்தன்,
“அதை தான் தீக்ஷி நானும் சொல்றேன், ஒவ்வொரு உயிரோட மதிப்பும் நமக்கு நல்லா தெரியும், ஆனா அது அவங்களுக்கு தெரியலையே, அதை தெரிய வைக்கணும் தானே..” என்று கோவம் கொண்டு சொன்னவர்,
“அவங்களை விட எனக்கு இந்த லிங்கத்து மேலதான் வெறியா இருக்கு, முதல்ல அவனை தான் கை வைக்கணும்..” என்று ராமலிங்கத்தை குறிவைத்து ஆத்திரத்துடன் சொன்னார்.
“மாமா..” என்று அவரின் பேச்சில் கோவம் கொண்டு கூப்பிட்டவள், “அவர் நம்ம தர்ஷினியோட அப்பா..” என்று சொன்னாள்.
“அந்த ஒரே காரணத்துக்காக தான், நான் இத்தனை வருஷமா பல்லை கடிச்சிகிட்டு இருக்கேன்.. ஆனா நம்மோட இந்த பலவீனம் தான் அவனுக்கு பலமா போயிருச்சு, அதனால தான் அவங்களோட சேர்ந்துக்கிட்டு உன்னையே குறி வச்சிருக்கான் ராஸ்கல்..”
“மாமா.. எனக்கென்னமோ இதுல அவர் சம்மந்தபட்டிருப்பார்னு நம்பிக்கை இல்லை, தருணும் என்னோட இருப்பான்னு அவருக்கு நல்லா தெரியும், சோ எனக்காக இல்லைன்னாலும், அவர் பேரனுக்காகவாவது அவர் இதுபோலயெல்லாம் பிளான் செய்ய மாட்டார், அவருக்கு தெரியாம தான் மத்தவங்க இந்த பிளானை போட்டிருக்கணும்..” என்றாள்.
“என்னமோ நீ சொல்ற..? என்று ஏற்று கொள்ளாமல் சொன்னவர், “இந்தா அத்தை பேசுறா பாரு..” என்று மனைவி சுபாவிடம் போன் கொடுத்தார் ஆனந்தன்.
“தருண் எப்படி இருக்கான்..?” என்று ஒட்டாதன்மையுடன் கேட்டார் சுபா.
“ம்ம்.. நல்லா இருக்கான்..” என்று சொன்ன தீக்ஷியின் குரலிலும் விலகல் தான்.
“உன்னால என் பேரன் உயிருக்கும் ஆபத்து வரணுமா..? போதும் அவன் உன்னோட இருந்தது, முதல்ல அவனை ஊட்டிக்கு அனுப்பிவிடு..” என்று கணவரிடம் இருந்து தள்ளி வந்து கடுமையாக சொன்னார் சுபா.
“தருண் லீவ் முடிஞ்சுதான் வருவான்..” என்ற தீக்ஷியின் குரலில் தெரிந்த உறுதியில் கோவம் கொண்ட சுபா,
“தருணை அனுப்ப மாட்டேன்னு சொல்ல உனக்கு யார் உரிமை கொடுத்தது, அவனோட விஷயத்துல முடிவெடுக்க நீ யாரு..? அவனோட பாட்டி நான் சொல்றேன், அவனை அனுப்பிவிடு..” என்று அதிகாரமாக சொன்னார்.
“தருணுக்கு நீ யார்..?” என்ற சுபாவின் கேள்வி, தீக்ஷிக்கு கடந்த காலத்தை நினைவு படுத்த பெருமூச்சு விட்டவள், “தருண் உங்களோட பேரன் தான்னு இத்தனை வருஷம் கழிச்சு இப்போவாவது உங்களுக்கு தோணுச்சே.. நல்லது, ஆனா அதுக்காக எல்லாம் அவனை ஊட்டிக்கு அனுப்ப முடியாது..” என்றுவிட்டாள்.
“நான் இப்போவே விஷ்வாகிட்ட பேசி, தருணை கூப்பிட்டுகிறேன் பாரு..” என்று சுபா சவால் போல் சொன்னவர், உடனே மகனுக்கும் அழைத்து விட்டார்.
“விஷ்வா.. தருணை ஊட்டிக்கு அனுப்பிவிட சொல்லி, அந்த தீக்ஷிக்கிட்ட சொல்லுப்பா, நான் கேட்டதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டா..” என்று தீக்ஷியை பற்றி சொன்னார்.
“தருண் விஷயத்துல அவ முடிவுதான், நான் எதுவும் சொல்றதுக்கில்ல..” என்று விஷ்வா முடித்துவிட்டான்.
“என்னப்பா பேசுற நீ..? தருண் உன்னோட மகன், என்னோட பேரன், நமக்கில்லாத உரிமை அவளுக்கென்ன தருண் மேல, அவன் விஷயத்துல முடிவெடுக்க அவ யார்..?” என்று ஆங்கராமாக கேட்டார்.
“ம்மா.. அவனுக்கு நான் அப்பாதான், ஆனா அப்பான்ற கடமையை நான் சரிவர செய்றேனான்னு கேட்டா இல்லை, ஒரு பாட்டியா நீங்களும் அவனுக்கு எதுவும் செய்யல.. அவன் பிறந்தலிருந்து அவனை வளர்த்தது தீக்ஷி குடும்பம் தான், அதை மறந்துடாதீங்க..”
“தீக்ஷி இப்போ உறவா நினைக்கிறது தருணை மட்டும் தான், அவன் அவளோட இருக்கிறது தான் சரி, இனி தருணுக்கு அவ யார்ன்ற உரிமை பேச்செல்லாம் பேசாதீங்க..” என்று கண்டிப்புடன் சொன்னான்.
“விஷ்வா.. ஏன் உனக்கு நடந்தது தெரியாதா..? அந்த தீக்ஷிக்கு யாரோ குறி வச்சு அட்டேக் நடந்தப்போ, நம்ம தருணும் அவளோட தான் இருந்திருக்கான், அவளை அட்டேக் செய்யப்போய் அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தா..? இந்த ரிஸ்க் எல்லாம் என் பேரனுக்கு எதுக்கு..? அவ பிரச்சனை அவளோட..” என்ற சுபாவின் பேச்சில் வெறுப்படைந்த விஷ்வஜித்,
“நீங்க தருணோட பாதுகாப்பை பற்றி கவலைப்பட தேவையில்லை, தருணை தீக்ஷியை விட யாரும் பெஸ்ட்டா பார்த்துக்க முடியாது..” என்று வைத்துவிட்டான்.
“அதிதி.. நாம மாட்டிக்க மாட்டோம் இல்லை.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” என்று ராகுல் சுற்றும் முற்றும் பார்த்தபடி புலம்பினான்.
“டேய் இப்படி பயந்து சாகாதடா, வீரனுக்கு ஒரு முறை தான் சாவு, கோழைக்கு ஒவ்வொரு நொடியும் சாவுன்னு எங்க தலைவர் பிரகாஷ் ராஜ் சொல்லியிருக்கார், நாம எல்லாம் வீராதி வீரர்கள்டா..” என்று நீட்டி முழக்கி கூவி கொண்டிருந்தாள் அதிதி.
“சரி டைலாக் பேசி நீ என்னை சாகடிக்காத, வா வந்த வேலையை பார்ப்போம்..” என்று ராகுல் சலிப்புடன் அதிதியை இழுத்து கொண்டு பார்ட்டிக்குள் சென்றான்.
இரவு மணி இரண்டை நெருங்கி கொண்டிருக்க, இரவு நேர பார்ட்டிக்கு சென்றே ஆகவேண்டும் என்ற ஆசையுடன், வீட்டிற்கு தெரியாமல் இந்த மிட் நைட் பார்ட்டிக்கு வந்திருந்தனர் இருவரும்.
“ஏன் அதி உனக்கு மட்டும் இந்தமாதிரி விபரீத ஆசை எல்லாம்..? நம்ம வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சுது, நாம காலி..” என்ற ராகுலின் புலம்பலை கண்டு கொள்ளாமல், ஆச்சரியமாக கண்களை விரித்து, பார்ட்டியை பார்த்தவள்,
“டேய்.. அங்க பார்த்தியா என்னை மாதிரி எத்தனை பேர் மிட் நைட்ல சாப்பிட்டுட்டு இருக்காங்க, என்னை மட்டும் எப்படி கிண்டல் செய்வீங்க..?” என்று அங்கு நடந்து கொண்டிருந்த பபே உணவில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை கை காட்டி சொன்னாள்.
“க்கும்.. அவங்க எல்லாம் இந்த மாதிரி பார்ட்டில மட்டும் தான் சாப்பிடுறாங்க, ஆனா நீ தினமும் மிட்நைட்ல சாப்பிட்டு பேய்க்கு இல்லை கம்பெனி தர்ற..” என்று வாரினான்.
“போடா..” என்று உதட்டை சுழித்தவள், “டேய்.. இது நம்ம தெரு முக்குல இருக்கிற வேணிடா, எப்படி டிரஸ் செஞ்சுட்டு வந்திருக்கா பாரேன்..?” என்று ஸ்கர்ட், மினு மினு டீஷர்ட் அணிந்து உயர்தர இங்கிலீஷில் பீட்டர் விட்டு கொண்டிருந்த வேணியை பார்த்து அங்கலாய்த்தாள்.
“ஆமாம் அதி.. அது அந்த பேக்கு வேணி தான்.. ஆனா இதுல நீ அதிசயபட என்ன இருக்கு, நீங்க எல்லாம் வீட்ல இருந்தா வேலாயி.. வெளிய வந்தா நயன்தாரா போல இல்லை இருக்கீங்க..” என்று சொல்லவும் பொங்கிய அதிதி,
“டேய் நீங்க மட்டும் என்னவாம், வீட்ல இருந்தா சப்பாணி மாதிரியும் வெளிய வந்தா எதோ ரன்வீர் சிங் மாதிரி இல்லை சீனை போடுறீங்க..” என்று பேச,
“ஆமாமா நாங்கதான் மூஞ்சிக்கு மூணு கோட் பெயிண்ட் அடிக்கிறோமா..?” என்று ராகுலும் பொங்கி சண்டையிட, எப்போதும் போல சில பல நிமிடங்கள் சண்டையிட்டவர்கள், இறுதியில் தாங்களே டயர்டாகி நிறுத்தினர்.
“டேய்.. புல்டோசர் வாயா, உன்னை என்னோட கூட்டிட்டே வந்திருக்க கூடாதுடா, இங்க வந்தும் சண்டை போடுற..” என்று அதிதி கடுப்பாக சொன்னாள்.
“ஆமா இவ பெரிய கத்ரினா கைப்.. என்னை சொல்ல வந்துட்டா, உன் வாயே ஒரு பானை வாய்..” என்று ராகுலும் அதிதியை பேசவும், மறுபடியும் ஒரு சண்டை ஆரம்பிக்கும் நிலையில், அதிதிக்கு பின்னால் வந்தவர்களை பார்த்தும் அதிர்ச்சியான ராகுலை கண்டு தானும் திரும்பி பார்த்தவளின் முகம் பேயறைந்தது போலானது.
“அதி.. உங்க மாமாங்க வந்திருக்காங்க..” என்று பார்ட்டி ஹாலுக்குள் வந்துகொண்டிருந்த இந்திரஜித்தையும், விஷ்வஜித்தையும் பார்த்து திகிலுடன் சொன்னான் ராகுல்.
“ஆமாடா.. இவர் எப்போடா சென்னை வந்தார்..? எதோ ஒரு ஊர்ல, ஏதோ அரசியல்வாதிகிட்ட எப்பவும் போல உரண்டை இல்லை இழுத்துட்டு இருக்கிறார்னு இல்லை கேள்விப்பட்டேன்..” என்று விஷ்வஜித்தை பார்த்து கொண்டே சொன்னாள்.
“இப்போ என்ன செய்ய..? எங்க போய் ஒளிஞ்சிக்க..?” என்று ராகுல் ஒளிய இடம் தேடவும்,
“டேய் நாம ஏண்டா ஒளியனும், அவர் தான் என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டார் இல்லை.. அப்பறம் என்னை கேள்வி கேட்க அவருக்கு என்ன இருக்கு..?” என்று விஷ்வஜித்தை பார்த்து ரோஷத்துடன் சொன்னவாறே, கண்களில் மின்னும் பயத்தோடு நைசாக பக்கத்திலிருந்த அலங்கார செடியின் பின்னால் மறைந்து கொண்டாள்.
“ஏய்.. இங்கதான் வராங்க அதி..” என்று திரும்பி பார்த்தவன், பக்கத்தில் அதிதி இல்லாமல் போகவும், “ராட்சஸி.. அவ வேலையை காமிச்சிட்டா”, என்று சுற்றிலும் தேடியவனை நெருங்கி கொண்டிருந்தனர் விஷ்வஜித்தும், இந்திரஜித்தும்..
“அய்யோ.. இவங்க வேற இங்கதான் வர்றாங்க..” என்று முகத்தை துடைப்பது போல முகம் மறைத்தவனின் தோளில் தட்டிய இந்திரஜித்,
“உன்னோட ப்ரண்ட் அந்த செடிக்கு பின்னாடி ஒளிஞ்சி கண்ணாமூச்சு விளையாண்டுட்டு இருக்கா, ஓடி போய் தொட்டுட்டு வந்துரு..” என்று கிண்டலாக சொன்னான். இந்திரஜித் சொன்னதை கேட்ட அதிதிக்கு அச்சோ என்றானது.
“மேடம்.. அதிதி மேடம்.. அங்கிருந்து கொஞ்சம் வெளியே வாங்க, ஏதாவது பூச்சி கடிக்க போகுது..” என்று இந்திரஜித் சத்தமாக கூப்பிட, திருதிருவென விழித்தபடி வெளியே வந்தாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் கண்ணாமூச்சி விளையாட மிட்நைட் தான் டைமா..? அதுவும் இந்த இடம் தான் வேணுமா..? இந்த வீட்ல எல்லாம் விளையாட மாட்டிங்களா..?” என்று கிண்டலாக கேட்ட இந்திரஜித்தின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நின்ற அதிதி, ஒர கண்ணால் விஷ்வஜித்தை பார்க்க, அவனோ இவளை கடுமையாக முறைத்து கொண்டிருந்தான்.
அவனின் முறைப்பில் பயம் வந்தாலும், “இவர் ஏன் என்னை முறைக்கணும்..? இவருக்கு என்னவாம்..?” என்ற வீம்பு தோன்ற, நிமிர்ந்து அவர்களை பார்த்தாள். அவளின் வீம்பு பார்வையை கண்டு கொண்ட விஷ்வஜித், எரிச்சலுடன் தலையை ஆட்டியயவன்,
“ஜித்து.. இருக்கிற டென்க்ஷன்ல இது வேற.. கார்ட்ஸ் கிட்ட சொல்லி முதல் வேலையா இவங்களை கொண்டு போய் வீட்ல தள்ளிட்டு வரச்சொல்லு..” என்று தம்பியிடம் சொன்னான்.
“அவங்க எதுக்கு என்னை கொண்டு போய் தள்ளனும்.? இவரையே என்னை தள்ளிட்டு போக சொல்லுங்க..” என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னவளின் பேச்சை கேட்டு, இந்திரஜித் சிரித்துவிட, விஸ்வஜித் அதிதியோடு சேர்த்து, தம்பியையும் முறைத்தான்.
Advertisement