“நான் சொன்னேனா..? நான் எங்க இவன் கூட பேசினேன்..!” என்று அவள் யோசிக்க,
“ஹேய் என்ன..? இப்படி பார்த்துட்டே இருக்கே..! ட்ரெயின்லயும் இப்படி தான் பார்த்த. நேத்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு போன..? சாரி நான் அப்படி சடனா போனது உனக்கு ஷாக்கிங்கா தான் இருந்திருக்கும். பட் என்னோட சிச்சுவேஷன் அப்படி..!” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, உறைந்தாள் சுபஷ்வினி.
“என்னது ட்ரெயின்ல பார்த்தானா…? என்னையவா..? நேத்து நான் எங்க இவனைப் பார்த்தேன்..! அதுவும் மும்பைல இருந்து…. என்று யோசித்தவளுக்கு மூளைக்குள் சட்டென விஷயம் மின்னி மறைய… அப்படியும் இருக்குமோ..?” என்று நினைத்தாள்.
“ஓகே..! இந்த கம்பெனி எம்டி என்னோட பிரண்டு தான்..! உன்னைப்பத்தி சொல்லிட்டு போறேன்..! எதுன்னாலும் போன் பண்ணு..!” என்றவன், அங்கிருந்து செல்ல…. சுபஷ்வினியின் கண்கள் தெறித்து விடும் அளவிற்கு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“அப்படின்னா…இவன் என்னை தேஜஸ்வினின்னு நினைச்சு பேசிட்டு போறானா..? தேஜுவை இவனுக்கு எப்படித் தெரியும்? எப்படி பழக்கம்? ரொம்ப உரிமையா பேசிட்டு போறானே…? நான் பார்த்த மாதிரியே தேஜுவும் அவனைப் பார்த்தாளா..?” என்று பல கேள்விகள் அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது.
“அஸ்வினி..!” என்று அவளின் தோளைத் தொட்டாள் சங்கீதா. அவள் அப்படியே இருக்கையில் அமர, சங்கியும் தன்னுடைய சேரை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
“என்னடி இப்படி பேசிட்டு போறான்..! நீ இவனை மறந்துட்ட தானா..?” என்றாள் சங்கீதா, கண்களில் பயத்துடன்.
“ரொம்ப நாள் ஆச்சுல்ல சங்கி. இன்னும் கொஞ்சம் கூட மாறலை. என்கூட இன்னைக்கு பேசிட்டார்..!” என்றாள் அழுகையுடன் அஸ்வினி.
“அவர் உன்கூட பேசிட்டு போகலை. நீ தான் தேஜுன்னு தப்பா புரிஞ்சுகிட்டு பேசிட்டு போறார்..” என்றாள்.
“எப்படி நினைச்சா என்ன? பேசிட்டு போறார் தான..! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..!” என்றாள் அஸ்வினி.
“வேண்டாம் அஸ்வினி..! அவனை மறந்தது மறந்தாவே இருக்கட்டும். அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..! அது தெரிஞ்சு தான, நீ தேவையில்லாத முடிவெல்லாம் எடுத்த..? இப்போ மறந்து போயிடுச்சா..?” என்றாள் சங்கி.
சங்கீதாவின் வார்த்தைகள் அஸ்வினியின் மனதிற்குள் இறங்க, அந்த உண்மையை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர, வெகுவாய் பிரயத்தனப் பட்டாள் அஸ்வினி.
“ஆமா..! அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு..! உன்னோட காதல் இந்த ஜென்மத்துல அவனுக்கு இல்லை..! மறந்தும் கூட இனி அவனை நினைக்காத..?” என்று மனசாட்சி எச்சரிக்கை விடுக்க, சில நிமிட சந்தோசம் வந்த வேகத்திலேயே சென்று விட்டிருந்தது. சட்டென்று இறுகிப் போனாள் அஸ்வினி.
அவளின் ஒவ்வொரு மாறுதல்களையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் சங்கீதாவும். அன்று மும்பையில் நடந்தது நியாபகத்திற்கு வந்தது அவளுக்கு.
“ஹேய் அஸ்வினி..! நம்ம கம்பெனியோட எம்டி பொண்ணுக்குக் கல்யாணமாம்…! எல்லாரையும் இன்வைட் பண்ணி மெயில் வந்திருக்கு..! நாளைக்கு எல்லாரும் போறாங்க..! நாமளும் கண்டிப்பா போய் தான் ஆகணும்..!” என்றாள் சங்கி.
“இல்லடி..! நான் வரலை..!” என்றாள் சோர்வாய். இப்போதெல்லாம் அவளின் முகத்தில் அதீத சோர்வு காணப்படுகிறது.
அஸ்வினி பதில் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க, இது புரியாத சங்கீதாவும் அவள் பார்த்த திசையை நோக்கினாள். அங்கே அவனைப் பார்த்து அவளும் அதிர்ந்து போக,
“என்னடி இவன், அவன் தான..?” என்றாள் அஸ்வினியிடம்.
“ஆமாம்..” என்பதைப் போல அவளின் தலை ஆடியது.
அவனைத் தொடர்ந்து லக்சனாவும் வர,
“அன்னைக்கு அவன் கூட இருந்தது இந்த பொண்ணு இல்லைல..?” என்றாள் சங்கி.
அதற்கும் ‘ஆமாம்’ என்பதைப் போல அஸ்வினியின் தலை ஆடியது.
“அப்போ அது யாரு..? தங்கச்சியா இருக்குமோ..? இல்லைன்னா பிரண்டா இருக்குமோ..?” என்று சங்கீதா மட்டும் பேசிக் கொண்டிருந்தாள். அஸ்வினியின் பேச்சு நின்று பல நிமிடங்கள் ஆகியிருந்தது.
காரணமே இல்லாமல் தோன்றிய காதல், காரணமே இல்லாமல் அங்கே அழிந்து கொண்டிருந்தது. அவளுடைய காதலை அவன் அறியவேயில்லை. அதி அவனுடைய தவறு எதுவும் இல்லை.
ஆதனால் தன்னுடைய அத்தனை உணர்வுகளையும் கட்டுப் படுத்திக் கொண்டு, அவர்களின் திருமணம் முடியும் வரை இருந்துவிட்டு, அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் தனக்குள் சேமித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினாள் அஸ்வினி.
முதலில் அவளின் இந்த மாற்றத்தை சங்கீதா கவனிக்கவில்லை. ஆனால் வெளியே வந்த பின்பும் அவள் முகம் ஏதோ யோசனையில் இருப்பது கண்டு, அப்போது தான் கேட்டாள் அவளிடம்.
“எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க..?” என்றாள்.
“நான் மும்பைல வேலை பார்த்தது போதும்ன்னு நினைக்கிறேன்..!” என்றாள்.
“என்னடி திடீர்ன்னு…?” என்றாள் புரியாமல்.
“தெரியலை.ஆனா இதுக்கு மேலயும் இங்க இருக்க முடியும்ன்னு தோணலை. எனக்கு அவனை மறக்க முடியாது..!” என்றாள்.
“நீயென்ன லூசா அஸ்வினி..? யாருன்னே தெரியாதவன் மேல எப்படி காதல் வரும்..? அப்படியே வந்தாலும் இதெல்லாம் ஓவர். அவனைப் பார்த்து, அவன் குரல் கேட்டா மட்டும் போதுமா..? அவன் நல்லவனா இல்லை கெட்டவனா அப்படின்னு தெரிய வேண்டாமா..? சரி அதை விடு..! இப்போ அவனுக்கு கல்யாணம் கூட முடிஞ்சிடுச்சு. இனி அவனைப் பத்தி நினைக்கிறது முட்டாள் தனம்..!” என்றாள் சங்கி.
“ஸ்டாப் இட் சங்கீதா..! என்னைப் பத்தி என்ன நினைச்ச? எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னா..? எனக்குத் தெரியும். என்னோட கற்பனை, அதில் வந்த காதல் இப்படி எல்லாமே என்னை மீறி நடக்கும் விஷயம். என்னைய மீறி நடக்குற ஒரு செயலுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.
காரணமே இல்லாம அவன் மேல எனக்கு காதல் வரலை. நீ சொன்ன மாதிரி அவன் யாருன்னே தெரியாது தான். அப்படி இருக்கும் போது கூட, அவனைப் பார்த்தா நான் பீல் பண்றேன். எனக்கு ஏதோ பல நாள் அவன் கூட பேசுன உணர்வு. இப்படித்தான்னு தெரியாம அதுவே விருப்பம் ஆகிடுச்சு…! நான் என்ன பண்ண..? எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கும்.எப்பேர்பட்ட புத்திசாலியும், தைரியசாலியும் ஒரு கட்டத்துல சறுக்குவான். நான் இப்போ அந்த நிலமையில இருக்கேன்.
கூட இருக்காட்டியும் பரவாயில்லை. ஆனா அட்வைஸ் பண்ணி கொள்ளாத..!” என்று அவளைப் பார்த்து கும்பிட்டவள், விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள்.
அன்று ஆரம்பித்தது அவள் பிரச்சனை. வெளியில் தெரிந்தால் சிரிப்பார்கள், ஏதாவது சொல்லுவார்கள் என்று எண்ணி, எண்ணி தனக்குத் தானே தனிமைப் பட ஆரம்பித்தாள். இன்னொருத்திக்கு சொந்தம் ஆனவனை நினைக்கக் கூடாது என்று நினைத்து தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டாள்.
அவளையும் அடக்க முடியாத ஒரு சூழ்நிலையில், தற்கொலை வரை சென்றது அவளின் போராட்டம். ஆனால் எமனுக்கும் அவளை எடுத்துக் கொள்ள மனமில்லை போலும். மீண்டாள் உயிருடன். ஆனால் மனதளவில் மீளாமல், யாருடனும் பேசாமல் தனக்குள் இறுகிப் போனாள்.
அவளை சகஜமாக்க யாராலும் முடியவில்லை. வசந்தாவோ அவளை எண்ணி கவலைப் பட்டார். அந்த சமயத்தில் தான் தேஜஸ்வினியின் மனம் கொஞ்சம் இளக ஆரம்பித்தது. ஒருவேளை அவளுடன், தான் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்று எண்ணினாள்.
இரட்டையரில், ஒருவரின் விலகல் மற்றொருவருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அறிவியல் ரீதியான உண்மையாக கூட இருக்கலாம்.
நினைவில் இருந்து சங்கீதா வெளியே வர,
“என்ன பிளாஷ்பேக்கா..?” என்றாள் அஸ்வினி.
“உன்னோட பிளாஷ்பேக் தான்..!” என்றாள் சங்கி.
“ரொம்ப யோசிக்காத…! அவனையே இன்னமும் நினைக்க நான் ஒண்ணும் முட்டாள் இல்லை. சடனா பார்க்கவும், அவனா வந்து பேசவும் ஒரு மாதிரி தடுமாறிட்டேன். இனி எப்பவும் இந்த சுபஷ்வினி மாற மாட்டா..!” என்றாள் உறுதியாக.
“உன்னை பழைய மாதிரி தைரியமா எப்ப பார்ப்பேன்னு நான் தான் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். உன்னோட பேச்சில இருக்குற தெளிவு செயல்லயும் இருக்கணும்..” என்றாள் சங்கி.