Advertisement

*7*
“அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?”
ஒன்றுமே நடவாதது போல அவன் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்கும் விதம் நீலாவுக்கு எரிச்சலைத் தர, அதை சிறிதும் மறைக்காமல் பெரிதாய் வெளிக்காட்ட காத்திருந்தவர் அதை அடக்கிக்கொண்டு, “துக்கம் நடந்த வீட்டிலிருந்து வந்தால் குளிக்கணும்னு தெரியாதா? வீட்டை சுத்தி கொல்லைக்கு போய் குளிச்சிட்டு உள்ள வா.” என்று அதட்ட, “இதை சாதாரணமா சொல்ல வேண்டியது தானே? ஏன் சீரியல் வில்லி மாதிரி எக்ஸ்ட்ரா எபெக்ட் எல்லாம் கொடுத்து உர்ருனு முறைச்சிகிட்டே சொல்ற?” என்று குறைபட்டுக் கொண்டவன் வீட்டிற்குள் நுழையாமல் கொல்லைப்புறத்தில் குளிக்கச் செல்ல அமைதியாய் நீலா துண்டை வைத்துவிட்டு நகர்ந்துவிட்டார். குளித்துவிட்டு துண்டை மட்டும் இடுப்பில் சுற்றியவன் தலையை துவட்டிக்கொண்டே உள்ளே நுழைய, அவனையே விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள் திவ்யா.
அவள் தலையை தட்டியவன், “நீ இன்னும் உன் வீட்டுக்கு போகலையா? உன் வீட்டுக்காரரும் இங்கேயே தான் இருக்காரா?” என்று இயல்பாய் வழக்கமாய் பேசும் அலட்சியத் தொனியிலேயே பேச திவ்யாவின் முகம் இருண்டது.
“ஏன் நான் இங்கே இருக்கக் கூடாதா?” என்று அழுத்தமாய் புருவங்களை ஏற்றி இறக்கிக் கேட்க,
“போடி லூசு… எப்போதும் காலில் வெந்நீர் கொட்டிகிட்ட மாதிரி இங்க வந்தாலே உன் வீட்டுக்கு ஓடி ஓடி போவ, இப்போ இவ்வளவு நாள் இங்க இருக்கியே அதுதான் கேட்டேன்.” என்றவன் தலையை திருப்பி, “ம்மா ஒரு ஸ்ட்ராங்க காஃபி,” என்று அடுப்பறை நோக்கி குரலை செலுத்தினான்.
அவனது வேண்டலுக்கு பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க, விழிகளை சுருக்கியவன் திவ்யாவை நெருங்கி மெல்லிய குரலில், “என்ன விஷயம் நீலாவதி உர்ருனு இருக்கு? இப்போ பாத்திரமும் உருளுது?”
“நீயே கேட்டுக்கோ.” என்றுவிட்டு அவள் நகரப்பார்க்க,
“நில்லுடி கேட்டதுக்கு பதில் சொல்லாம போற? உன் வீட்டுக்காரரும் இங்க தான் இருக்காரா? அவருக்கு இங்கே பொழுது போகாதே… அவர் இருந்தா தோப்புக்கு கூட்டிட்டு போவேன்.”
அவனின் கேள்விக்கு, “சவரம் பண்ணதும் ஆளே மாறிட்ட.” என்று சம்மந்தம் இல்லாமல் திவ்யா கூற, அதன் அர்த்தம் புரியாமல் அங்கேயே மூலையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் முகத்தை இடமும் வலமும் திருப்பிப்பார்த்து கன்னத்தை தேய்த்துக் கொண்டவன், “ஆமாடி வித்தியாசமா இருக்கு.”
“நீ செய்யறது எல்லாமே வித்தியாசமா தான் இருக்கு.” என்று பிள்ளையார் சுழியிட்டாள் தங்கை.
“என்னதான் சொல்ல வர? புரியுற மாதிரி சொல்லு.”
“நேராவே கேட்குறேன்… நேத்து வந்த சொந்தத்துக்கு அவ்வளவு முன்னுரிமை கொடுத்து மரியாதையா பேசுற… ஆனால் என் வீட்டுக்காரரை முறை வச்சிக் கூட கூப்புடுறது இல்லை. இப்போ தான் தெரியுது நீ என்னை மதிக்குற இலட்சணம்… நம்ம அண்ணன் தானேனு நீ செய்யுற எல்லாத்தையும் கண்டும் காணாம விட்டா, நீ என்னையே விட்டுருவ போல.” என்று திவ்யா அமிழ்த்தி வைத்திருந்ததை கொட்டிவிட, 
அவளது வார்த்தைக்கு பின் இருக்கும் குத்தல் அவனுக்கு புரியவில்லை. புரியவில்லை என்பதைவிட ஆழ்ந்து சிந்திப்பதில்லை. அவனுக்கு எல்லாமே நேராய் சொல்லிட வேண்டும், எதிர் இருப்பவர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே உள்வாங்கி அந்த நொடி என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிவிடுவான். சொல்வதை செய்தும் விடுவான். 
“ஏய் நான் என்ன இன்னைக்கு நேற்றா அவரை அப்படி கூப்பிடுறேன்? உனக்கு கல்யாணம் ஆனது முதல் ரெண்டு வருஷமா அப்படித்தான் அவரை கூப்பிடுறேன். இன்றைக்கு என்னவோ புதுசா கோச்சுக்குற… இதெல்லாம் அவரே பெருசா எடுத்துக்கல, நீ சும்மா ஏத்திவிடாத.”
“அப்போ குந்தவை அண்ணிக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? அவங்க ஆசைப்பட்டாங்கனு இதுவரை வழக்கத்தில் இல்லாது யாருமே செய்யாததை செஞ்சிருக்க. ஆனா நான் ஒரு சின்ன கோரிக்கை அதுவும் என் அண்ணன் என் வீட்டுக்காரருக்கு தகுந்த மரியாதை கொடுக்கணும்னு ஆசைப்பட்டு ரெண்டு வருஷமா கேக்குறேன் அதை உன்னால செய்ய முடியல. பொண்டாட்டினா ஒரு நியாயம் தங்கச்சின்னா வேறா? நாளைக்கே அவங்க மட்டும் போதும் கூடப்பிறந்தவ வேண்டாம்னு முடிவு பண்ணாலும் பண்ணிடுவேனு நினைக்கிறேன்…” 
வழக்கமான பழக்கங்களே ஆனாலும் அவன் குந்தவைக்கு ஆதரவாய் நின்ற ஒரே காரணத்தால் அவனின் அனைத்து செயல்களும் குந்தவையை வைத்து எடைபோடப்பட்டது. 
“என்னடி உளறல் இது? எதுக்கும் எதுக்கும் முடிச்சி போடுற?” என்று குரலை உயர்த்தினான் தச்சன்.
“நான் உளறல சரியாத்தான் பேசுறேன். அவங்க ஒருமுறை தான் உன்கிட்ட கேட்டாங்க நீ உடனே செவி சாச்சிட்டா. நான் ரெண்டு வருஷமா கேக்குறேன் நீ அதை காதில் வாங்குற மாதிரியே தெரியல.” என்று திவ்யாவும் எகிறினாள். இன்று உன்னை விடுவதாய் இல்லை என்ற வேகம் அவளது பேச்சில் தெறித்தது.
“பையித்தியம். நீ கேட்டதும் அவ கேட்டதும் ஒன்றா? சும்மா இருந்தா இப்படி தான் எடக்கா யோசிக்க தோணும். போ… போய் எனக்கொரு காபி போட்டு எடுத்துட்டு வா.” என்று உத்தரவாய் சொல்லிவிட்டு அவன் அறைக்குச் செல்ல,
“இதுக்கு மட்டும் நான் வேணுமா. அவங்ககிட்டேயே கேட்க வேண்டியது தானே?” என்ற திவ்யா கத்தியது முதுகின் பின் ஒலிக்க, அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அறைக்குள் நுழைந்து திவ்யாவின் கணவன் கதிரவனை அழைத்தான்.
“எங்க இருக்கீங்க?”
“என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கீங்க மச்சான்? நான் கடையில் தான் இருக்கேன்.” என்று கதிரவன் இயல்பாய் பேச, தச்சனுமே இயல்பை கையிலெடுத்துக் கொண்டான்.
“உங்க பொண்டாட்டி இங்க தைய தக்கா தைய தக்கானு குதிச்சிட்டு இருக்கா. என்னமோ ஆச்சு அவளுக்கு… லூசு மாதிரி பேசிட்டு திரியுறா.”
“அப்படியெல்லாம் இருக்காதே… சும்மா உங்க சின்ன பிள்ளை சண்டையை என்கிட்ட தூக்கிட்டு வந்து சின்ன புள்ளை மாதிரி புகார் கொடுக்காதீங்க மச்சான்.” என்று மறுபுறமோ கதிரவன் சிரித்தான்.
“எங்களை கண்டாலே உங்களுக்கு ஒரே சிரிப்பு தான் ம்ம்ம்… தோ வந்துட்டா உங்க தர்மபத்தினி என்னனு கேளுங்க.” என்று திவ்யா காபியுடன் உள்ளே நுழையவும் அவளிடம் தன் அலைபேசியை நீட்டினான்.
அவனை முறைத்துக்கொண்டே, “அவரை எதுக்கு இப்போ தேவையில்லாம தொந்தரவு செய்யுற?” என்று கடிந்தவள் வெடுக்கென்று அலைபேசியை பிடுங்கி காதில் வைக்க,
“என்ன பண்ணி வச்சீங்க திவ்யா மேடம்? உங்க அண்ணன் கதறுறான்?” 
“ஆமா அப்படியே கதறிட்டாலும்… காபியை மொக்கிக்கிட்டு இருக்கான். என்னனு கம்ப்லைன்ட் பண்ணான் உங்ககிட்ட?” என்று திவ்யா கணவனையும் மிரட்ட, தச்சன் அவளை அடிப்பது போல கை ஓங்கி சைகை செய்தான். 
ஓங்கிய அவன் கையிலேயே சுள்ளென்று வைத்தவள் கவனத்தை கணவன் பேச்சினில் வைக்க, கதிரவன் காட்டிய கடினத்தில் முகம் சுண்டிப்போனது.
“என்ன பண்ணி வச்ச திவ்யா? நான் செய்யக் கூடாதுன்னு சொன்னதை தான் செய்து வச்சி இருக்கியா?” என்ற கதிரவனின் கேள்விக்கு இவள் ‛ம்’ கொட்ட,
“திரும்ப திரும்ப உனக்கு சொல்லிட்டே இருக்கமுடியாது. மச்சான்னு என்ன கூப்பிடலையே தவிர உன் அண்ணன் என்னை என்றைக்குமே மரியாதை குறைவா நடத்தினது இல்லை. இயல்பா பழகுறாரு. எனக்கும் அதுவே ஒத்துபோச்சு. நீ சும்மா இந்த முறை அதுஇதுன்னு எதையவாது இழுத்துவிட்டு அதுவே நாளைக்கு எங்களுக்குள் பிளவை ஏற்படுத்தினால் நீ தான் அப்புறம் வருத்தப்படுவ. மனசுல இருக்கு மரியாதையும் பாசமும், அதை வெளிப்படுத்தவும் செய்யுறாரு அப்புறம் எதுக்கு இப்படித் தான் கூப்பிடனும்னு கட்டுப்பாடு போட்டு இருக்குறதை கெடுத்துக்கணும்? இதை நீ மட்டும் இல்லை உன் அம்மாவிடமும் சொல்லிடு. மரியாதை கொடுக்கணும்னு சும்மா பெயருக்கு நேரில் முறையா கூப்பிட்டுட்டு பின்னாடி புரணி பேசுறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.”
“உடனே ஒன்னு கூடிடுவீங்களே… உங்களுக்காக பேசுனா என் பக்கமே குறையை திருப்புறீங்க? போங்க… நான் எதுவுமே சொல்லல.” என்று கடுப்பாய் மொழிந்தவள் அலைபேசியை தச்சனிடம் நீட்ட, அதை பிடுங்கியவன்,
“என்ன பிரச்சனை உனக்கு? நான் அவரை மச்சான், மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா இப்போ இருக்கும் நெருக்கம் வராது. ஒவ்வொரு முறை கூப்பிடும் போதும் அந்த உறவு முறைக்கான மரியாதையை குறையில்லாமல் கொடுக்கணும்னு தான் ஓடிட்டே இருக்குமே தவிர இப்போ இருக்குற மாதிரி இயல்பா எல்லாம் பழக முடியாது. எங்களுக்கு இதுவே போதும் நீ சும்மா இருக்குறதையும் ஊதி கெடுத்துடாத.”
“என் வாயை நல்லா அடைங்க.” என்று திவ்யா கடுப்பாய் முணுமுணுக்க,
“அதென்ன உன் வீட்டுக்காரரை மட்டும் நீ வெளு வெளுனு வெளுக்குற. நீ சொல்றதை அவர் கேட்கணும்னு நினைக்குற. ஆனால் இப்போ என்னவோ நியாஸ்தி மாதிரி நான் குந்தவை பேச்சை கேக்குறேன்னு குதிக்குற? அப்போ உனக்கொரு நியாயம் குந்தவைக்கு ஒரு நியாயமா?” என்று அவளது எண்ணங்களில் இருக்கும் அசட்டையான உண்மையை பட்டென்று கேட்டுவிட்டான் தச்சன். அவனது கேள்வியில் இருக்கும் உண்மை அவளை சிந்திக்க வைக்க, தன் மீது தான் தவறோ என்ற எண்ணமே வந்துவிட்டிருந்தது. 
நிறைகளை விட குறைகளே எளிதாக கண்டுகொள்ளும்படியான மனநிலை அதிகரிக்கத் துவங்க குறைகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழகும் நிலை அரிதாகிவிட்டது. அதிலும் குறை என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்திருக்க, பல விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 
“இல்லாத மேல்பாகத்தை ரொம்ப தட்டாத… நான் செய்யுற ஒவ்வொரு காரியத்துக்கும் இப்படி நீ அர்த்தம் கண்டுபிடிச்சிட்டு இருந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது தாயே… இதோட விட்டுரு இதை. குந்தவையிடமும் இதையே போய் கேட்டு வைக்காத, அவ அப்பாவோட இழப்பில் ரொம்ப நொடிஞ்சிட்டா.”
உண்மை புரிந்ததோ என்னவோ திவ்யாவின் உடல்மொழி முதற்கொண்டு கணநொடியில் மாற்றம் கொண்டது, “பாவம் தானே… கல்யாணம் ஆனவுடனேயே என் கடமை முடிஞ்சுதுன்னு அவங்க அப்பா கண்ணை மூடிட்டார். நீ தான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அடிக்கடி போன் பண்ணி பேசு, சீக்கிரமே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டும் வந்துடு. இங்க வந்தால் புது இடம்னு அவங்க கவனம் இங்க திரும்பிடும்.” 
திவ்யாவின் வார்த்தைகளை நம்பமுடியாமல் திகைத்தவன் கரத்தை காற்றுக்கு தூதுவிட்டுவிட்டு, “உங்களை புரிஞ்சிக்கவே முடியலேயே… நீங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா தாய்குலங்களே…” என்று கையை மேலெடுத்துக் கும்பிட, கணவனும் மனைவியும் ஒருசேர சிரித்தனர். 
கதிரவன் அழைப்பை துண்டிக்காமல் இருக்க அவனுக்கும் இவர்களின் சண்டையும் சமாதானமும் கேட்கவே செய்தது.
“என்ன லந்தா? ஏய் போடி எனக்கு பசிக்குது ஏதாவது செய்யச் சொல்லு.” என்று தங்கையை விரட்டியவன், அலைபேசியை காதில் வைத்து, “நான் புலம்புறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என்று குரலில் கடுமை காட்ட,
“சந்தேகமே வேண்டாம் மச்சான். நீங்களும் எங்களோட சங்கத்தில் இணைஞ்சதை நினைச்சாலே உற்சாகமா இருக்கு. யாம் பெற்ற இன்பத்தை இனி நீங்களும் அனுபவிங்க..”
“உங்களுக்கு என்ன குறைச்சல்? என் தங்கச்சி உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாம தான் இங்க தங்குறதே இல்லை. ஒழுங்கா நீங்க அயல்நாட்டுக்கு வேலைக்கு போகும் போது அவளையும் கூட்டிட்டு போறீங்க, இங்கேயே விட்டுட்டு எல்லாம் போகக்கூடாது.”
“தங்கள் சித்தம் மச்சான். ஆனால் ஒன்னு இப்போ திவ்யா கேட்ட கேள்விகள் அவளோடு முடியபோவது இல்லை. அத்தை, மாமான்னு எல்லோருமே உங்க மேல வருத்தத்தில் இருக்காங்க. நானும் அங்கேயே உங்க சார்பா அவங்ககிட்ட பேசி கரைக்கப் பார்த்தேன் ஆனாலும் அவங்களுக்கு நீங்க செய்த காரியத்தில் உடன்பாடு இல்லை. என்னாலும் ஒருகட்டத்திற்கு மேல இதில் அழுத்தமா பேச முடியல. நம்ம வீடுனா பேசிடலாம், உங்க மாமனார் வீட்டு விஷயத்திற்கு எப்படி பேசுறது? நீங்க கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க. தங்கச்சியையும் பார்த்து நடந்துக்க சொல்லுங்க.”
 

Advertisement