“ஆனா எனக்கு குந்தவை மாதிரி யோசிக்க தெரியல… இப்போ கூட எனக்கு யாராவது தோள் குடுத்து உனக்கு நான் இருக்கேன்னு சொன்னா அவங்க கூடவே போயிடணும்னு தோணுது. அப்போ நான் மாறலைன்னு தானே அர்த்தம்?” தன்னுள் எழுந்த மாற்றங்களை களையெடுக்கும் விதமாய் வானதி கேள்வி எழுப்ப, ராஜனும் தீவிரமானான்.
“குந்தவை மாதிரி மாறினா நீங்க குந்தவையா தான் இருப்பீங்க… வானதியா இல்லை.” என்று அவன் அழுத்தமாய் சொல்ல, வறட்சியாய் சிரித்தாள் வானதி.
“வானதியா இருக்கிறதில் பெருமை இல்லையே. வானதிக்கு தன்னம்பிக்கை கிடையாது, அவளுக்கு பறக்கத் தெரியாது… அவளுக்குன்னு சொல்லிக்கிற மாதிரி எதுவுமில்லை. அவள் ஆசைப்பட்டது கூட அவளுக்கு கிடைக்கலை. அவளை மாதிரி இருந்து என்ன சாதிச்சிட முடியும்?”
“ஏன் இவ்வளவு விரக்தி இந்த வயசுலேயே? உங்களுக்குன்னு இரண்டு முத்தான பசங்க இருக்காங்க, உங்களுக்கு ஒன்னுன்னா ஏன்னு கேட்க துணிச்சலான தங்கச்சி இருக்கா, அவள் குடும்பமும் இருக்கு. இவ்வளவு பேரோட ஆதரவும் ஆசியும் இருக்கும் போது நீங்க நல்லாயிருப்பீங்க.”
“யாரையும் சார்ந்து இருக்காதீங்கன்னு சொல்லிட்டு இப்போ நீங்களே இப்படி சார்ந்திருக்கிறதை பத்தி பேசுறீங்களே?” 
“சார்ந்திருக்கிறது இப்போ பிரச்சனை இல்லைங்க. எந்த விஷயத்தில் சார்ந்திருக்கீங்கன்னு தான் பிரச்சனை. நம்மோட சுக துக்கங்களை பங்கெடுத்துக்க நம்மை சுத்தி நாலு பேரு வேணும். நமக்காக நிற்க நம்ம குடும்பம் வேணும். ஆனா உங்க வாழ்க்கையை பற்றிய முடிவெடுக்கிற உரிமை உங்ககிட்ட இருக்கணும். தங்கச்சி சொல்லிட்டா, அம்மா சொல்லிட்டாங்கன்னு கண்ணை மூடிகிட்டு அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்ட கூடாது. அந்த அர்த்தத்தில் தான் அன்றைக்கும் சொன்னேன் இப்போவும் அதே தான்…”
“இது மாதிரி என்கிட்ட யாரும் சொன்னதில்லை, நிதானமா பேசினதில்லை. பணம் காசை எல்லோருமே முக்கியமா பார்த்தாங்க…  என்.. என் வீட்டுகாரர் கூட கடன் சுமையை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு தப்பான முடிவெடுத்துட்டாரு… எனக்கு என்ன வேணும்… நான் என்ன எதிர்பார்க்கிறேன். நானும் பசங்களும் எப்படி சமாளிப்போம்னு எதைபத்தியும் யோசிக்காம போயிட்டாரு…”
“எனக்குன்னு இதுவரை நான் யோசிச்சது இல்லை. முதல்ல அப்பா அப்புறம் என் மாமியார், வீட்டுக்காரர் அப்புறம் குந்தவை சொல்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படியே இருந்துட்டேன்… 
ஆனா ஒரு விஷயத்தில் தீர்க்கமா இருந்தேன்… பணம் காசைவிட என்ன நடந்தாலும் உன்னை விடமாட்டேன்னு ஆறுதலா சொல்றவங்க தான் எனக்கு வேணும்… அவங்க கூடவே இருக்கணும்னு நினைச்சிதான் நான் என் அப்பா, அம்மா குந்தவையை அண்டியே இருந்தேன். ஆனா எப்போதும் அப்படியே இருக்க முடியாதுன்னு நீங்க சொன்ன பிறகு தான் புரிஞ்சிது.” என்று சொன்னவளின் சொல்லப்படாத வருத்தத்திற்கு பின் அவள் கணவன் எடுத்த தவறான முடிவினால் நிலைகுலைந்த அவளது வாழ்க்கையை எண்ணி அதிகம் பயந்து காயப்பட்டிருக்கிறாள் என்றமட்டில் அவனுக்குப் புரிந்தது. அவள் இவ்வளவு மாறியதே பெரிய விஷயமாய் தெரிந்தது!
“போதும்… ரொம்ப யோசிக்காதீங்க. இப்போ சரியான வழியில் தான் போயிட்டிருக்கீங்க. உங்களுக்குன்னு நேரம் வரும் போது நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்களுக்கான தோள் கிடைக்கும். உங்களை கண்ணுல வச்சி பார்த்துக்கிற நல்ல துணை கிடைப்பாரு.”
“இல்லை வேண்டாம்… நான் ஆசைப்பட்டது எப்போவோ முடிஞ்சி போச்சு. என்னால இன்னொரு வாழ்க்கையை நினைச்சி பார்க்க முடியாது. இப்படியே விட்டிருங்க, இதைபத்தி பேச வேணாமே.”
“நான் பேசாம இருந்தா எதுவும் நடக்காமலா இருந்திடும்? உங்களுக்குன்னு ஒரு துணை தேவை, உங்க பசங்களுக்கு தக்கப்பனோட அன்பும் அவசியம். அது அமையும்.”
“சொன்னா புரிஞ்சிக்கோங்க. எனக்கு… எனக்கு தெரியல,.. எப்படி இன்னொருத்தரை என் பசங்களோட அப்பாவா என்னால ஏத்துக்க முடியும்?”
“ஏன் முடியாது? வீட்டுலையும் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க விருப்பப்படுறாங்க. அதுதான் சரியா வரும்.”
“இப்போ தான் வீட்டுல சொல்றாங்கன்னு இல்லாம என் வாழ்க்கையில் முடிவெடுக்கிற உரிமை என்கிட்ட இருக்கணும்னு சொன்னீங்க. எனக்கு துணை வேண்டாம்னு சொல்றேன் ஆனா நீங்க இப்போ மாத்தி பேசறீங்க… வீட்டில விருப்பப் பட்டுட்டாங்கன்னு உடனே நான் ஒத்துக்கணுமா?” 
அவளது பேச்சுக்கள் குதர்க்கமாய் தெரிய கடுப்பாகிவிட்டான் ராஜராஜன். கடுப்பில் பன்மை ஒருமையானது. 
“ஸ்… இதுதான் உன்கிட்ட பிரச்சனை வானதி. எதை ஏத்துக்கணுமோ அதை ஏத்துக்க மாட்ட, எதை கேளுன்னு சொல்றோமோ அதை மறுத்து பேசுவ. இப்படி உல்டாவா எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தா எப்படி? எந்தெந்த விஷயத்தில் பெரியவங்க சொல்றதை கேட்கணுமோ அதுக்கு வீம்பு பிடிக்காம கேட்டுக்கனும். எதுக்கு வீம்பு பிடிக்குமோ அதில் பிடிவாதமா இருக்கணும். நீ எல்லாத்தையும் உல்டாவா பண்ற…”
“இப்போ எதுக்கு எல்லோர் மாதிரியும் நீங்களும் என்கிட்ட சத்தம் போடுறீங்க? நீங்க மட்டும் தான் பொறுமையா பேசுறீங்கன்னு சொல்லி கொஞ்ச நேரம் கூட ஆகலை. அதுக்குள்ள என்னை திட்டியாச்சு… இப்படி திட்ட தான் வந்திருக்கீங்கன்னா கிளம்புங்க. போங்க…” 
ஒருமைக்கு மாறிய அவனது விளிப்பை கவனித்தாளோ இல்லையோ அவனுடன் சரளமாய் பேசும் தன்னையே எண்ணி வியந்து கொண்டாள். அவள் இதுபோல பேசியதில்லையே! கடைசியாய் இது போன்றதொரு இலகுவான அதே சமயம் அழுத்தமான நிதர்சனங்களை யாரிடமும் பகிர்ந்துகொண்டதாய் நினைவிலுமில்லை! அவளது ஆழ்மனதை எழுப்பி அதிலிருக்கும் சந்தேகங்களை வெளிக்கொணர்ந்ததும் இல்லை. ஆனால் இன்றோ! வியப்பு தான்!
“நான் வந்த வேலை முடியாம கிளம்புறதா இல்லை வானதி. நீ முதல்ல வெளிய வா… பசங்களுக்கு மட்டுமில்லை உனக்கும் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்.”
“நீங்க எதுக்கு எனக்கு வாங்கிட்டு வரணும்? பசங்களுக்கு மட்டும்தான்னு சொன்னீங்க?” 
“அப்புறம் நீங்களும் மத்தவங்க மாதிரிதான்னு சொல்றதுக்கா… வந்து வாங்கிட்டு போ.”
“என்னால வரமுடியாதுன்னு சொல்ல தானே கூப்பிட்டேன்.” என்றவள் நாக்கை கடித்துக்கொள்ள, இதழை வளைத்த ராஜன் இலகுவாய்,
“அதைத்தவிர மத்தது எல்லாம் பேசியாச்சு. நீ வா…”
“இங்க திட்டுவாங்களே?”
“திட்டுனா போடா நீயும் உன் வேலையும்னு சொல்லிட்டு வந்துடு.”
“ஆ… நீங்க என்ன முதலுக்கே வேட்டு வைக்குறீங்க?”
“உன் கையை பிடிச்சுக்கிட்டு உனக்கு நான் இருக்கேன்னு சொல்ல ஒரு ஆள் இருந்தா எதுக்கும் கவலைப்பட மாட்டேன்னு சொன்ன? அப்புறம் ஏன் வேலையை பத்தி கவலை? நீ வந்து வாங்கிட்டு போ…”
“கொஞ்சம் புரியுற மாதிரி பேசுங்களேன். இப்போவே யாரோ எனக்காக என் கையை பிடிக்க காத்திட்டு இருக்குற மாதிரியே பேசுறீங்க.”
“நான் சொன்னத்துக்கான அர்த்தம் என்னைக்கு உனக்கு புரியுதோ அப்போ எல்லாம் தானா புரியும். நீ இப்போ வெளில வந்து பையை வாங்கிக்கிறீயா இல்லை நானே உள்ள வரவா?” என்று அவன் மிரட்டல் விடுக்க, பதறிய வானதி,
“ஐயோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க… நானே வரேன்.” என்று இறைஞ்சியவள் அவசரமாய் வெளியே வந்தாள். அலுவலக வாயிலிலேயே அவன் நின்று கொண்டிருக்க அவனிடம் நேரேச் சென்று முகத்தை சுழித்தாள்.
“ரொம்ப மிரட்டுறீங்க.” அவளின் சுணக்கத்தை புறந்தள்ளியவன், பையை அவளிடம் நீட்டி, “இதுல உங்க மூணு பேருக்கும் இருக்கு. எடுத்துக்கோ. இன்னொரு நாள் நீ வீட்டில் இருக்கும் போது வந்து பசங்களை பார்க்கிறேன்.”
“எனக்கு எதுக்கு வாங்கிட்டு வரணும்னு கேட்டேன். நீங்க பதிலே சொல்லலை.” அவள் பையை வாங்காது கேள்வி எழுப்ப, அவள் கையில் அதை திணித்தவன்,
“பார்த்ததும் உனக்கு இதை வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதுதான் வாங்கிட்டு வந்தேன்.”
“உங்களுக்கு ஏன் தோணனும்?” என்றாள் பட்டென கேள்வியாய்!
“என்கூட இவ்வளவு நேரம் பேசனும்னு உனக்கு ஏன் தோணுச்சோ அதே காரணத்தால் தான் எனக்கும் இதை உனக்காக வாங்கனும்னு தோணுச்சு.”
அவனது புதிரான பதிலில் ‛நான் ஏன் இவ்வளவு நேரம் இவர்கூட பேசணும்?’ என்ற கேள்வி கோந்தென வந்து ஒட்டிக்கொள்ள, அதன் பின் அவள் எண்ணங்கள் முழுதையும் ஆக்கிரமித்தது என்னவோ ராஜராஜன் தான்.
“நான் கிளம்புறேன். நீ போய் சாப்பிடு. பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை.”
“நீங்களும் சாப்பிட்டு கிளம்புங்க.” என்று வானதியும் அக்கறையாய் சொல்ல, அவளைப் பார்த்து மென்முறுவல் வீசி கண்சிமிட்டினான்.
அவனது சிமிட்டலில் அவளது விழிகள் மலர, இதழ்களும் மெலிதாய் வளைந்தது. அவள் பார்வையை விட்டு மறையும் வரை ராஜன் அவ்வப்போது அவளை திரும்பிப் பார்த்துச் செல்ல, அவன் மறைந்ததும் வானதி அவசர அவசரமாய் தன் இருக்கைக்குச் சென்று அவன் கொடுத்துச் சென்ற பையில் என்ன இருக்கிறது என்று பிரித்துப் பார்த்தாள். அதில் பிள்ளைகளுக்கு பொம்மைகளும், ஒரு சிறிய பர்ஸும் இருந்தது. பொம்மைகள் பிள்ளைகளுக்கும் பர்ஸ் அவளுக்குமென்று பார்த்தவுடனேயே புரிந்தது.
‛என்ன பர்ஸ் இருக்கு! இதுக்கு தான் இவ்வளவு அக்கப்போரா?’ இதுதான் இருக்கும் என்று எதையும் யூகிக்கவில்லை, இருக்க வேண்டும் என்றும் எண்ணவில்லை. ஆனால் அந்த சிறிய பர்ஸை பார்த்ததும் இவ்வளவு தானா! என்ற எண்ணம் எழாமலும் இல்லை. 
அதிருப்தியுடன் அதை திறந்துப் பார்க்க, புதிய ஐநூறு ரூபாய் தாள்கள் சில இருந்தது, அதோடு சிறு குறிப்பொன்றும் இருந்தது. யோசனையுடன் அதை கையிலெடுத்துப் படிக்க அதிலோ தமிழ் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது. அதையெல்லாம் சேர்த்துப் படிக்கவே அவளுக்கு ஐந்து நிமிடங்கள் தேவைப்பட்டது.
‘யார் இருந்தாலும் இல்லையென்றாலும் உன்னை எவரிடமும் கையேந்த விடாமல் இந்த தாள்களும் அதை ஊதியமாய் பெற்றவனும் உனக்கு துணையாகவே இருப்பான்.’ என்ற அந்தக் குறிப்பு அவளது இதயத் துடிப்பை எகிறச் செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த எழுத்துக்கள் போலவே அவளது கரங்கள் நர்த்தனமாடி நடுங்கத் தொடங்கியது. அறிவழகியும், அறிவழகனும் அவன் அகக்கண்ணில் வந்து செல்ல, அந்த பர்ஸ் தானாய் கீழே விழுந்து, அதிலிருந்த ரூபாய் தாள்கள் காற்றோடு கலந்து அவள் மனம் போல திசை எட்டிலும் பறந்து சென்றது.