Advertisement

“நியாயமா ஒன்னு சொல்லவா… இதுக்கு மேல என்ன நடந்ததுன்னு நீ சொல்லாம இருக்குறது நல்லது. சொன்னா எனக்கு கோபம் தான் வரும். என் பையனை திட்டுறதை என்கிட்டையே சொல்ற உன்னோட நேர்மைக்கு முன்னாடி என்னோட பாசம் தான் நிக்கும். என் பையன் எனக்கு ரொம்ப முக்கியம். அவன் மனசு நோகுறபடி நடந்துக்காத. அவன் கூட உட்கார்ந்து பொறுமையா பேசு. உனக்கு பிடிச்சது, பிடிக்காததை பகிர்ந்துக்க, அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்டு தெரிஞ்சிக்க. கருத்து முரண்படுற விஷயத்துல யாராவது ஒருத்தவங்க விட்டுக்கொடுத்து போங்க. வாழுற காலம் இன்னும் நிறையா இருக்கு. வாழ்க்கையை கட்டமைக்கிறதும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்ட பிறகு செய்யலாம். அப்போ தான் அது செழிப்பா இருக்கும். இப்போ உங்களை புரிஞ்சிக்கோங்க முதல்ல… மற்றது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…” 
தோணியதை தீர்க்கமாய் வெளிப்படுத்தியவர் அப்போது தான் குந்தவையின் மடியில் தலை வைத்து வெற்றுடம்போடு உறங்கும் தச்சனைக் கவனித்தார். குந்தவையின் துப்பட்டா எப்போதோ கீழே சரிந்திருந்தது. உடனே எழுந்து மெத்தையில் இருந்த போர்வையை எடுத்து மகன் மீது போர்த்திவிட்டு, மெத்தையில் கிடந்த அவனது சட்டையை துலாவி சாவியை எடுத்துக்கொண்டார்.
“நல்லா தூங்குங்க… காலையில எதுனாலும் பேசிக்குவோம்.” என்று ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார். மனதில் சிந்தனை ரேகைகள் துளிர்க்க, முற்றத்தை ஒட்டி மங்களுத்துடன் படுக்கத் தயாரான வானதியை அழைத்தார்.
“தச்சன்கூட யாராவது வந்தாங்களா? நீதான அங்க நின்னுட்டு இருந்த?”
“ஆமாங்கத்தை… எனக்கு யாருன்னு தெரியல. லாரி டிரைவருன்னு சொன்னாரு. அப்புறம் அப்படியே கிளம்பிட்டாரு.” என்று பதில் கூறியவளிடம் தடுமாற்றம் நிரம்பி வழிந்தது. இந்த விஷயத்தை நோண்டி துருவினால் குந்தவையின் புறம் கோபம் திரும்பிவிடும் என்ற பயம் அவளை தடுமாற வைக்க, நீலா அவளது உடல்மொழியில் துணுக்குற்றார்.
“லாரி டிரைவரா?”
“அப்படித்தான் சொன்னாங்க.” என்று மென்று விழுங்கினாள் வானதி.
“வேற என்ன சொன்னாங்க? வயசாவனா இல்லை சின்ன பையனா?”
“நடுத்தர வயசிருக்கும்.” 
“நீ ஏன் இப்படி நிக்குற?” நீலா தோண்டித் துருவ, வானதி செய்வதறியாது நெளிந்தாள்.
“நீலா, உன்னை சாவி வாங்கிட்டு வரச் சொன்னா நீ என்ன இங்க கதை பேசிட்டு நிக்குற.” என்று அன்பரசனே தேடி உள்ளே வந்துவிட்டார்.
“சாவி எடுத்துட்டேங்க. தச்சன் கூட வந்தது யாருன்னு விசாரிச்சிட்டு இருந்தேன். ஏதோ லாரி டிரைவர் வந்தானாம்.”
“லாரிக்காரனா? தச்சன் எதுவும் வம்பு பண்ணிட்டானா? எதுக்கு லாரிக்காரன் வீடு வரைக்கும் வரனும்? தச்சனுக்கு தெரிஞ்சவனா கூட இருக்கலாம். காலையில விசாரிப்போம்.” என்று அந்த பேச்சை அப்போதைக்கு முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை பார்த்துவிட்டுச் சென்றார். வானதிக்கு அப்போது தான் இயல்பே மீண்டது.
“நீயும் விளக்கை அணைச்சிட்டு தூங்கு வானதி. நான் தூங்கும் போது கதவடச்சிக்கிறேன்.” என்றுவிட்டு நீலாவும் கணவரை தொடர்ந்துச் சென்று, வண்டியை அன்பரசன் அதனிடத்தில் விட்டுவரும் வரை திண்ணையில் அமர்ந்திருந்தார்.
“தூங்காம எதுக்கு இப்போ இங்கன உட்கார்ந்து காவல் காத்திட்டு கிடக்க?”
“மனசே சரியில்லை. கல்யாணம் முடிஞ்சி ஒரு மாசமும் சொச்சமும் தான் ஆகியிருக்க. ஆனா தினம் சண்டை. ஏதாவது சங்கடம் வந்துருது. முதல்ல குந்தவை அப்பா அது முடிஞ்சதும் வானதி பிரச்சனை. இதுக்கு இடையில் இதுங்க ரெண்டும் வேற புரிதல் இல்லாம பால்வாடி பசங்க மாதிரி சண்டை போட்டுக்குதுங்க.” என்று பெருமூச்சு விட அன்பரசன் அவரருகில் வந்து அமர்ந்தார்.
“புரிதல் இல்லைனு சொல்லிட முடியாது. கருத்து வேறுபாட்டை எப்படி கையால்றதுன்னு ரெண்டு பேருக்கும் தெரியலைன்னு வேணும்னா சொல்லலாம்.”
“எல்லாம் ஒன்னு தான். இப்போ தான் குந்தவையை பார்த்துட்டு வந்தேன். ஆளே சரியில்லை. ஒரு மாதிரி இருக்கா. பெரிய பிரச்சனையா இருக்குமோன்னு பயமா இருக்கு. அதுனாலத் தான் தச்சனும் போய் குடிச்சிட்டு வந்தானோன்னு தோணுது. அவள் எதுக்கோ சண்டை போட்டிருக்கா. ப்ச்… எதுவுமே சரியில்லை. பிரச்சனையா வந்துட்டு இருக்கு. எதுவோ மனசை உறுத்துது. என்னனு சரியா சொல்லத் தெரியல.” எண்ணங்கள் அலைக்கழிக்க நீலாவின் மனம் அடங்கவே இல்லை. என்றுமில்லாத ஒரு உறுத்தல், நெருடல், அமைதியின்மை அவரை சூழ்ந்து கொண்டது. 
மனைவியின் முகத்தில் தெரிந்த கலக்கத்திற்கு சற்றும் குறையாத அமைதியின்மை அன்பரசனிடமும் இருந்தது.
“இந்த வாரம் ஞாயிறு வந்தா அவனுக்கு முப்பத்திரண்டு முடிஞ்சிரும்.”
நீலா சட்டென நிமிர்ந்து விழி விரித்து கணவரைப் பார்த்தார், “அதுதான் மனசு தவிக்குதோ… எங்க இருக்கானோ… என்ன பண்றானோ… கல்யாணம் ஆகியிருக்குமா? குடும்பமா சந்தோஷமா இருப்பான் தானே?”
“தெரியலையே…” என்றார் விரக்தியாய்.
“இருப்பான்… மனசறிந்து நாம யாருக்கும் கெடுதல் பண்ணல, அதுவே அவனை நல்லா பார்த்துக்கும்.” கணவருக்கு சமாதானம் சொன்னாரா இல்லை தனக்குத்தானே சொல்லிக்கொண்டாரா… ஆனால் காரணம் தெரிந்தபின் மளமளவென அடுத்து செய்ய வேண்டியதை அடுக்கிவிட்டார். 
“தச்சன் கல்யாணம் முடிஞ்ச பிறகு கோவில்ல பொங்கலும் வைக்கல, விருந்தும் வைக்கல… இதையே சாக்காய் வைத்து சாமிக்கு பொங்கல் வச்சி ஊருக்கு விருந்து கொடுத்துடுவோம். இதெல்லாம் செய்வது மூலமாவது அவன் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும். தச்சன் வாழ்க்கையிலும் பிரச்சனை குறையும். ராஜாவோட பிறந்தநாள் அன்னைக்கே செஞ்சிட்டா ரெண்டு பேருக்கும் சேர்த்து செஞ்ச மாதிரி ஆகிடும். இதோ புதன் முடிஞ்சி போச்சு. இன்னும் மூணு நாள் தான் இருக்கு, நீங்க சீக்கிரமா எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க.”
“குந்தவை அப்பா இறந்து இன்னும் ரெண்டு மாசம் கூட முழுசா முடியல அதுக்குள்ள கோவிலுக்கு கூட்டிட்டு போய் விழான்னு அந்த பொண்ணை முன்ன நிறுத்தி பொங்கல் வச்சா நல்லாவா இருக்கும். ஒரு ஆறு மாசம் போகட்டுமே. விருந்து மட்டும் வேணும்னா ராஜா பிறந்தநாள் அன்னைக்கே வச்சிப்போம்.”
“ம்… நீங்க சொல்றபடியே செஞ்சிடுவோம். திவ்யா வீட்டுக்கு நேராப் போய் விருந்துக்கு அழைச்சிட்டு வந்துருங்க. மத்தவங்களுக்கு போன்ல சொல்லிப்போம்.”
நீலாவின் திட்டமிடலுக்கு சற்றும் சளைக்காமல் அன்பரசனும் மனதை தேற்றிக்கொண்டு அடுத்து செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டார்.
“குந்தவை அம்மாகிட்ட நீயே பேசிடு. நாளைக்கே சமைக்க ஆள் பார்த்து வீட்டுக்கு அனுப்பி விடுறேன். நீ என்னென்ன வேணுமோ அதை பேசி முடிச்சிடு. காசை பத்தி யோசிச்சிட்டு இதுல சிக்கனம் பிடிக்காத. ராஜன் பிறந்தநாளா இருக்கு, சைவ விருந்தே போட்டுடுவோம். அசைவம் வேண்டாம். கும்பகோணம் பெரிய மார்கெட்டில் தச்சனோட தோஸ்து ஒருத்தன் கடை வச்சிருக்கான். தச்சன்கிட்ட சொல்லி நியாயமான விலைக்கு பேசி காய்கறி இறக்கச் சொல்லு. அந்த பய எதுவும் சொதப்புனா மட்டும் என்கிட்ட கொண்டுவா மற்றபடி அவனே எல்லா ஏற்பாட்டையும் பார்க்கட்டும். நாமளும் அவனை கஷ்டம் தெரியாம வளர்த்து உள்ளங்கையில் தாங்குனதாலத் தான் அலட்சியமா இருக்கான். இறங்கி வேலை பார்க்கட்டும், அப்போ தான் வரவு செலவு கணக்கு புரியும். அடக்கமா செலவு பண்ணுவான்.”
“அதுதானே அவனை ஏதாவது சொல்லிடனுமே உங்களுக்கு அப்போ தான் தூக்கம் வரும்…”
“ஆமாமாம்… உன் புள்ளையை சொன்ன பிறகு தான் எனக்கு தூக்கமே வருது… சீக்கிரம் வீட்டை பூட்டிட்டு வா…” என்று நகைப்புடன் நீலாவின் சுருங்கிய கன்னத்தை தட்டிவிட்டு உள்ளே சென்றார் அன்பரசன்.
***
மறுநாள் விடியல் யாருக்கு புத்துணர்ச்சியாக அமைந்ததோ இல்லையோ தச்சனுக்கு உற்சாகமாகவே இருந்தது. யாரும் எழுப்பாமலேயே விழிப்பு தட்ட, கண்களை திறக்க சோம்பல் பட்டுக்கொண்டு மீண்டும் உறக்கத்திற்கு செல்ல முயன்றவன், தன்னுடலை உரசிக்கொண்டு இருக்கும் மென்மையை மெத்தையென்று எண்ணி அதில் முகத்தை அழுந்த புதைத்து தேய்க்க, அந்த மென்மையில் திடுமென வெளிப்பட்ட அசைவில் பட்டென சோர்வை விரட்டி கண் விழித்தான்.
தூக்க கலக்கத்தில் என்னவென்று முதலில் புரியாவிட்டாலும், புரிந்த நொடி அவனிதழில் புன்னகை தானாய் பிறந்தது. கூடவே விசிலும் சேர்ந்து பறந்தது.
வெறும் தரையில் தன்னருகில் தன்னை இறுக கட்டிக்கொண்டு அமைதியாய் உறங்கும் மனைவியைக் காணக் காண தலை கனத்த போதிலும் அவனுள் ஊறிய உற்சாக ஊற்றுக்கு பஞ்சமில்லை.
“எப்போதும் இப்படியே அமைதியா இருடி… அழகா இருக்க…” என்று மென்மையாய் சொன்னவன் அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுக்க, அவனை சுற்றியிருந்த அவளது கரங்களின் அழுத்தம் அதிகமானது.
அதில் துணுக்குற்றவன் தலையை பின்னிழுத்து நெற்றி சுருங்க அவளைப் பார்த்தான். அவளது கண்கள் மூடியிருந்தாலும் அதனுள் விழிமணிகள் அசைந்தது.
“தூங்கலையா குந்தவை?”
இல்லை என்று மறுப்பாய் அவள் தலையாட்ட, அவளது செயல்களில் வித்தியாசம் உணர்ந்தான் தச்சன்.
“என்னாச்சுடி? அமைதியா படுத்திருக்க?” 
மீண்டும் இடவலமாய் அசைந்தது அவள் சிரம். 
“ஏய்… என்னைப் பாரு? கண்ணைத் திற…” என்று குந்தவையின் தாடையை வன்மையாய் பிடித்தாலும் அவள் அசைந்தபாடில்லை. அவனுள் மீண்டும் மீண்டும் ஒன்றிப்போனாள்.
“எதுக்கு இப்போ தயிர்சாதமா மாறியிருக்க?” என்று கேட்டது தான் தாமதம் அவள் விழியில் நீர் துளிர்த்து அவனுடலை ஈரப்படுத்தியது.
“என்னடி குந்தவை?” என்று எழுந்தே விட்டான் தச்சன். கடினமாகவே பார்த்த முகம் இன்று அழுகையில் சிவக்கவும், நேற்று நடந்த பிணக்குகளும் அவன் செய்துவைத்த சாகசங்களும், பின் அவளிட்ட சண்டையும் நினைவுக்கு வந்தது. 
தன்னையே நொந்துகொண்டவன் அவள் கன்னத்தை வருடி, அதில் அழுந்த முத்தம் வைத்தான், “பயந்துட்டியாடி… அழுகாத.”
“போடா… என்கிட்ட வராத… நான் முக்கியம் இல்ல தானே உனக்கு.” அவன் இறங்கி வரவும், மங்கையவள் மிஞ்சினாள்.
சிரித்துக் கொண்டவன் அரணாய் தன் கரங்களை அவளைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, அவள் தோளில் முகம் பதித்து, அவள் மேலே சரிந்தான்.
“கிட்ட தான் வருவேன்… என்ன பண்ணுவ?”
“அடிச்சிடுவேன்டா.”
“புதுசா ஏதாவது சொல்லுடி. திட்டுறது, அடிக்குறது எல்லாம் நீ ஏற்கனவே பண்றது தான்…”
“கடிச்சிடுவேன்.”
“எப்படி… இப்படியா?” என்று பேச்சோடு பேச்சாய் அவள் கன்னத்தை கடிக்க, தச்சனை தள்ளிவிட்டு எழுந்தாள் குந்தவை.
“ச்சீ… என்னடா பண்ற… பல்லு கூட விளக்காம…யக்…” அவன் பற்தடம் பதிந்த கன்னத்தை திரும்பத் திரும்ப துடைத்தவள் முகத்தில் தற்போது அழுகைக்கான சாயல் துளியுமில்லை.
“ம்ம்… இப்போ தான் என் பிரியாணி ஃபார்முக்கு வந்திருக்கா.”
“உன் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லைடா.” என்று அவன் கையிலே பட்டென்று ஒரு அடி போட்டவள் சற்று நகர்ந்து சுவரில் சாய்ந்தமர்ந்தாள்.
“என்ன உட்கார்ந்துட்ட? அம்மா ஜூஸ் போட்டு வச்சிருக்கும். போய் வாங்கிட்டு வா…” என்று காலாட்டிக் கொண்டு அப்படியே தரையில் படுத்திருந்தான்.
“எதுக்கு அப்படி பண்ண நேத்திக்கு?”
“எப்படி பண்ணேன்?”
“விளையாடாத… நான் சொன்னது கொஞ்சமாச்சும் உன் மண்டையில ஏறி இருந்தா இப்படி குடிச்சிட்டு வந்திருப்பீயா?”
“ஏன் ஏறல… எல்லாம் நல்லாவே ஏறியிருக்கு… நீ இல்லாம நான் என்னடா பண்ணிவேன்னு நீ அழுத தானே?” 
அவனின் அலட்டல் தணிந்திருந்தவளையும் உசுப்பிவிட்டது.
“திருந்தவே மாட்டடா நீ… நான் என்ன சொல்றேனோ அதுக்கு நேரெதிரா செய்யுறதே உனக்கு வேலையாப் போச்சு… என்னை டென்சன் பண்ணி பார்க்குறதில் உனக்கு அவ்வளவு சந்தோசம்.” என்று பற்களை கடித்தவள் எழப்போக, அவளைத் தடுத்து அவள் மடியில் தலை வைத்து அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான் தச்சன்.
“நான் எது செஞ்சாலும் நீ திட்டுறேன்னு கோபத்துல தான் குடிச்சேன். ஆனா நீ போன் போட்டு வீட்டுக்கு வான்னு பயந்துகிட்டே என்கிட்ட பேசுனதும் என்னால அங்க இருக்கவே முடியல… உன்கிட்ட வந்துடனும்னு தோனுச்சு. அதுதான் வேகமா வந்தேன்.”
“வண்டியில வேகமா போக்கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருக்கேன் தானே…” என்றாள் அவளும் தணிவாய் அவன் விரலோடு விரல் பிணைத்துக் கொண்டு… அவன் உருக்கமாய் பேசவும் அந்த நேரம் அவனிடம் சண்டை பிடிக்க மனமில்லை அவளுக்கு.
“இனி போகல… உனக்கு பிடிக்காததையும் செய்யல. ஒன்னை நல்லா புரிஞ்சிக்க குந்தவை, எனக்கு விவசாயம் பிடிக்கும் தான் ஆனா அதையே பெரிய அளவில் எடுத்துச் செய்யுறது எனக்கு இதுதான் முதல் முறை. அதனால கொஞ்சம் சறுக்கிட்டேன். அதுக்காக அல்பத்தனமா என் வாழ்க்கையையே முடிச்சிக்க மாட்டேன். எனக்குத் தெரியும் என் குடும்பம் என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க. நான் உங்க எல்லார் மேலையும் எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு… உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது, அது இந்த மண்ணிலும் சரி விண்ணிலும் சரி… நீங்க எனக்கு முக்கியம். காசு எல்லாம் எனக்கு பொருட்டே இல்லை அதைத்தான் உன்னால ஏத்துக்க முடியலைன்னு நினைக்குறேன்…”
“உனக்கு முக்கியம் இல்லாம இருக்கலாம். ஆனால் அதே காசு பிரச்சனையில் தான் என் அக்கா வாழ்க்கையே போயிடுச்சு…”
“ப்ச்… உன் அக்கா புருஷன் கிடைச்ச வாழ்க்கையை ஒழுங்கா வாழாம…  அதை ரசிக்காம போனதால எல்லோரும் அப்படியே இருப்பாங்கன்னு சொல்ல முடியாது… எங்களுக்கும் கடன் இருக்கு தான். அதை அடைக்க முடியாத சூழல்னு ஒன்னு வந்தா அப்போ அதை சமாளிக்க எதாவது வழி பிறக்கும். வெளியே வரமுடியாத பிரச்சனைன்னு ஒன்னு கிடையவே கிடையாது. எனக்கு என் அம்மா, அப்பா, ஆச்சி, தங்கச்சி, நீ, நமக்கு வரப்போற பாப்பா, அறிவுக் குட்டிங்கன்னு எல்லோருமே வேணும். எல்லோரோடும் வாழனும். அந்த வாழ்க்கையை நீயும் ரசிக்கணும்னு நான் விரும்புறேன். இப்படி தேவையில்லாம கோபப்பட்டு அதை கெடுத்துக்காத…” என்று அவன் பக்க சிந்தைகளை முன்வைத்தாலும், குந்தவையால் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Advertisement