Advertisement

*15*
“குந்தவை டிபன் எடுத்து வச்சிட்டேன்… சீக்கிரம் வாடி… நேரமாகிட்டு இருக்கு…” என்று வானதி வெளியிலிருந்தே சத்தமாய் தங்கையை அழைக்க, குந்தவை அறையினுள்ளே தச்சனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.
கல்லூரி இறுதித்தேர்வு முடியும் தருவாயில் இருக்க, அடுத்த தேர்வுக்கான விடுப்பும் மூன்று நாட்களுக்கு மேலிருந்தது. அதனால் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தில் இன்று பரீட்சை முடிந்ததும் தோழிகளுக்குள் சிறிய பார்ட்டி. குந்தவை அதை முடித்துக்கொண்டு, காப்பீடு, தந்தையின் சம்பளம் மற்றும் உதவித்தொகை தொடர்பான பண விஷயங்களையும் அங்கேயே அம்மாவுடன் மூன்று நாட்கள் தங்கி நிவர்த்தி செய்துவிடுவது என்ற திட்டத்தில் இருக்க, அந்த சிறிய விருந்திற்காக அவள் தெரிவு செய்திருந்த உடை தான் அவளை இம்சையில் மாட்டிவிட்டிருந்தது.
பார்த்து பார்த்து நேர்த்தியாய் உடுத்தியிருந்த சிகப்பும், கருப்பும் கலந்த சில்க் காட்டன் சேலை கேட்பாரற்று அவன் சட்டையோடு தரையில் கிடக்க, சிகை கலைந்து, சரீரம் அவன் கட்டுப்பாட்டில் கட்டுண்டு இருந்தது. வறண்ட அதரங்களுக்கு இணையாக தச்சனின் கரங்களும் அவளிடத்தில் ஊர்வலம் நிகழ்த்த, அவளது கரம் அவனது புஜத்தில் பதிந்து விரல்நகத்தின் தடங்களை அச்சிட்டுக் கொண்டிருந்தது. அவனை தடுக்கவென முதலில் பதிந்த அந்தக் கரங்கள் எப்போது பிடிமானத்திற்காக மாறியதோ அவளே அறியாள்… உடலும் உள்ளமும் அவன் புறம் சாய்ந்து அவனிடம் சிக்கி மயங்கியிருக்க, புத்தி மட்டும் காலை நேர அவசரங்களை நினைவூட்டி அவளை எழுப்ப முயன்று ஓய்ந்திருந்தது.
அவ்வளவு எளிதில் சூழ்நிலை மறந்து மயங்குபவள் அல்ல தான் என்றாலும், என்றுமில்லாத அவனது பிரத்யேக கொஞ்சல்கள் அவளை மயக்கத்தான் செய்தன. 
“வானதி கூப்பிடுறா…” 
வானதியின் அழைப்பை காரணம் காட்டி அவனிடமிருந்து விடுபடவென அவள் பேசியதில் தொண்டைக்குழி ஏறி இறங்க, அதில் ஊர்ந்த அதரங்களின் வெப்பம் இதமாய், இனிப்பாய் இருக்க பரீட்சை எல்லாம் மறந்தே போனது குந்தவைக்கு.
“எதுக்குடி தாலிச் செயின் மாத்துன? மண்ணு மாதிரி இருக்கு இந்த தங்கச்சரடு…”
அவனின் சிணுங்களில் வெடித்துச் சிரித்தவள், அவன் முகம் பற்றி நிமிர்த்தி, “தங்கம் சாப்பிடுற பொருளா உனக்கு?”
அவளது அதரங்களுக்கு இணையாக அவனதும் அகல விரிந்திருக்க, துரிதமாய் அதை அவளிழலில் ஒற்றி எடுத்து, “இல்லைடி… புது மஞ்சள் தாலியில் இருந்து வந்த மஞ்சள் வாசனை ஆளையே மயக்கி அசச்சிடுச்சுடி… அதுவே ஒரு தனி கிக்கா இருந்துது. நீ அதைப்போய் மாத்திட்ட…”
“இதுவே லேட்… எங்க வழக்கத்தில் கல்யாணம் ஆன மூணாவது நாளே தங்கத்தில் மாத்திடுவாங்க.”
“நல்லா மாத்துனாங்க…”
“எப்படி இப்போ நீ மாத்திவிடுறேனு கலச்சிவிட்ட மாதிரியா?” சிணுங்கலாய் குந்தவை அவன் சிறையினில் நெளிய, அவளிடையில் இருந்த அவனது கரம் அழுத்தம் கொடுத்து அவளை அசைய விடாமல் சிறைபிடித்தது.
“கலச்சிவிடலடி… நல்லாயில்லை வேற மாத்தலாம்னு கழட்டிவிட்டேன்…” என்க, எப்போதும் போலவே அவன் அதரங்களில் செல்ல அடிகள்.
“எல்லோரும் ஒரே மாதிரி எடுத்த சேலைடா இது…” கெஞ்சலுடன் கொஞ்சலாய் அவள் குரல் ஒலிக்க,
அவளை விடுவித்து ஓரடி பின்னெடுத்து அவளை மேலிருந்து கீழ் பார்த்து கூசச் செய்தவன், “இன்னும் உனக்கு புரியலையா மக்கு பொண்டாட்டி…” என்று விஷமமாய் இழுக்க, குந்தவை அகலமாய் கண்களை விரித்தாள்.
“டேய்… பிராடு. மணியாகுடா…” என்று அவள் எகிறிக்கொண்டு வர, நகைப்புடன் திமிறியவளை தன்வசம் இழுத்தணைத்துக் கொண்டான் தச்சன்.
“நான் எதிர்பார்த்த போதெல்லாம் விட்டுட்டு உன்னை யாரு இன்னைக்கு புடவை கட்ட சொன்னது? பார்த்ததும் பாயத்தான் தோணுது…” என்று பேசி மேலும் இரு அடிகளை சுகமாய் வாங்கிக் கொண்டான்.
“மணியாகுது விடு…” என்று அவள் மீண்டும் சிணுங்க, கேலியாய் புருவம் உயர்த்தியவன்,
அவளை சுற்றியிருந்த கரங்களை விலக்கிக்கொண்டு கிண்டலாய், “விடு விடுன்னு உன் வாய் மட்டும் தான் சொல்லுது ஆனால் உன் கை என்னமோ உடும்புப் பிடியாய் என்னை அணைச்சு புடிச்சிருக்கு.” என்று மொழியிலும், விழியிலும் உண்மை உரைக்க, பட்டென்று அவனிடமிருந்து விலகி நகர்ந்தாள் குந்தவை.
“முறைக்கும் போது கூட ஆளை சுண்டி இழுக்குறடி…” அவனது வழிசளுக்கு விழிகளை உருட்டி மிரட்டியவள், கண்ணாடி முன்னின்று கலைந்திருந்த சிகையை முழுதாய் கலைத்துவிட்டு பரபரவென தலைவாறினாள்.
தச்சனின் விழிகளோ அவளைவிட்டு பிரிய மறுக்க, பூனைக்குட்டி போல அவளை நெருங்கியவன் பின்னிருந்து அணைக்கும் முன்னமே முறைப்புடன் திரும்பினாள் குந்தவை. 
“கிட்ட வந்த தொலைச்சிடுவேன்… இப்போவே மணி ஏழரையை தாண்டிடுச்சு… நான் ஒன்பது மணிக்கு காலேஜில் இருக்கணும்.” என்று மிரட்ட, அவள் முறைப்பில் அவசரம் உணர்ந்தவன், “அதுக்குத்தான் உனக்கு உதவி பண்ண வந்தேன்… நீ திரும்பு.” என்று அந்தர்பல்டி அடித்து அவள் தோள் பற்றி திருப்பியவன், ரவிக்கையில் இருந்த கயிற்றை இழுத்துக்கட்ட,
“எல்லாம் இதில் ஆரம்பிச்சது தான்…” என்று சலுகையாய் சலித்துக்கொண்டாள் குந்தவை.
“உன் மேலத்தான் தப்பு… பாவம் பொண்டாட்டிக்கு பரீட்சை நடக்குதே… நாம தானே அழைச்சிட்டு போகனும்… அவசரமா கிளம்பிட்டு இருப்பாளேன்னு காலையில் நேரமே எழுந்து வயலுக்கு போய் தண்ணி பாய்ச்சி வேலையெல்லாம் முடிச்சு குளிச்சிட்டு வந்தா மேடம் அப்போ தான் ஆடியசைஞ்சு புடவை கட்டிட்டு இருக்கீங்க… சரி கொஞ்சம் சைட் அடிச்சிப்போம்னு பார்த்தா, பார்க்க ஒண்ணுமே இல்லடி…” என்று தன்னிலை விளக்கம் வேறு கொடுக்க, உறுத்து விழித்தாள் குந்தவை.
“என்ன சொன்ன இப்போ?”
அவனும் சளைக்காமல், “கட்டுனது தான் கட்டுன பார்க்க கொஞ்சம் இடம்விட்டு கட்டியிருக்க கூடாதா… என்னமோ சொல்லுவாங்களே இந்த லோ ஹிப்னு… அப்படியெல்லாம் கட்ட மாட்டியா நீ… சுடிதாரையே ஆறு முழத்துக்கு நீட்டி ஸ்க்ரீன் மாதிரி சுத்தி வச்சிருக்க… ஏதோ இந்த ப்ளவுஸ் தைக்குற அம்மா எனக்கு கரிசனம் காட்டி தச்சிருக்காங்க…” என்று பெருமூச்சுவிட, குந்தவையின் பாவனையில் மாற்றமில்லை. அவன் பேசத் துவங்கிய போது புருவம் சுருக்கி எப்படி உறுத்து விழித்தாளோ அப்படியே தான் நின்றாள்.
“லோ ஹிப் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்? அதுமாதிரி எத்தனை பேரை இதுவரை பார்த்திருக்க?”
“அதையெல்லாம் கணக்கா வச்சிருப்பாங்க…” என்று கிளம்புகிற போக்கில் அவளது பிந்தைய கேள்விக்கு வம்பு வரப்போவது தெரியாமல் வாய்கொடுத்தான்.
“கழுத்துக்கு கீழ பார்வை போதுன்னா அவன் ஒழுங்கானவனா இருக்க மாட்டான்.” அடக்கப்பட்ட ஆத்திரமும் அருவருப்பும் அவள் குரலில் வெளிப்பட, தலை சீவிக்கொண்டிருந்த தச்சனின் கை அந்தரத்தில் நின்றது. அவன் பார்வை முற்றிலும் மாறிவிட, அவளை கூறுபோடும் பார்வை பார்த்தவன், “என்ன சொன்ன இப்போ?”
குந்தவையின் விழியும் குரலும் உயர்ந்து, உடல் விறைத்து நிற்க அடிக்குரலில் சீற்றமுடம் பதில் பேசினாள், “உன் காதில் என்ன விழுந்துதோ அதைத் தான் சொன்னேன்.”
அவளது பதிலில் அவனின் குருதி சூடாகி, நரம்புகள் புடைக்க சீப்பை விசியடித்தவன், “என்னை அவ்வளவு கேவலமா நினைச்சியா நீ? உன்கிட்ட அப்படியா நடந்துக்குறேன்.” என்று ஆத்திரத்தில் கத்திவிட்டு வெளியேற முற்பட, அவன் கரம் பற்றி தடுத்தாள் குந்தவை.
“இந்த கேவலமானவனை எதுக்கு இப்போ தொடுற? விடுடி…” என்றானே ஒழிய அவனாய் அவள் பிடியை விலக்கவில்லை, தள்ளவுமில்லை.
“உண்மையை சொன்னா குத்துதா உனக்கு?”
ரெளத்திரத்துடன் திரும்பியவன் அவள் கரத்தை தட்டிவிட்டு, “குந்தவை… அவ்வளவு தான் உனக்கு மரியாதை. ஒத்துக்குறேன் பொண்ணுங்களோட சரளமா பேசுவேன், கிண்டலடிச்சிருக்கேன் ஏன் சைட் கூட அடிச்சிருக்கேன் ஆனால் நீ சொன்ன அளவுக்கு கேவலமான எண்ணம் என்னைக்குமே எனக்கு வந்ததில்லை. என்னை குற்றவாளி கூண்டில் நிறுத்துறதுக்கு முன்ன அதை புரிஞ்சிக்க முதல்ல…”
“செஞ்சதை இப்படி பகிரங்கமா ஒத்துகிட்டா நீ பண்ணது எல்லாம் சரியாகிடுமா… தப்பு என்னைக்குமே தப்புத்தான்.” அவள் எதெல்லாம் கொள்கை என்று வைத்திருக்கிறாளோ அது அனைத்தையுமே தவிடுபொடி ஆக்குபவனை காணக்காண கடுப்பு கூடியது குந்தவைக்கு.
“நான் பண்ணது தப்பாவே இருக்கட்டும். அதுக்கு இப்போ என்னை என்ன செய்யச் சொல்ற?” அவனிடமும் எரிச்சல் வந்து அமர்ந்துகொண்டது. எப்போது நெருக்கம் கூடினாலும் சண்டையும் சேர்ந்து வந்துவிடுகிறதே என்ற இயலாமை அவனை அமைதியடைய விடவில்லை.
“குந்தவை நேரமாகுது…” என்ற வானதியின் குரல் மீண்டுமொலிக்க, இருவருமே அவர்கள் இடத்திலிருந்து அசைந்த பாடில்லை.
“எதுக்கு அமைதியா இருக்க இப்போ? வாயை திறடி…”
“சரியான இம்சைடா நீ… உன்னை விட்டுத்தொலையவும் முடியல… கூடவச்சிக்கவும் முடியல…” என்று கத்தியவள் கீழே கிடந்த புடவையை எடுத்து தூர எறிந்துவிட்டு, செல்ப்பை துலாவி கையில் கிடைத்த சுடிதாரை எடுத்து அவசர அவசரமாக மாற்றினாள். மனம் முழுதும் எரிச்சல் மண்டியிருக்க அந்த நேரம் எதுவுமே பிடிக்கவில்லை குந்தவைக்கு. படிப்பு ஒன்று மட்டுமே அமைதிப்படுத்துவதாய் தெரிய, முயன்று பரீட்சையை நினைவுபடுத்திக் கொண்டு கிளம்பி வெளியேறினாள்.
அவள் செல்வதையே பார்த்தவன் அருகிலிருந்த சுவற்றில் வேகமாய் ஒரு குத்துவிட்டு கடுப்பில் எப்போதும் போல தன் துணையைத் தேடி அலமாரியைத் துலாவ, இப்போது தான் சிகரெட்டும் அந்த பழக்கமும் அவனிடம் இல்லையே… அதுவேறு எரிச்சலை அதிகப்படுத்தியது. அதே எரிச்சலுடன் அவனும் கிளம்பியவன் சாப்பிடாமலேயே வண்டியை கிளப்பி, வெளியில் நின்றபடியே அதை உறுமவிட, குந்தவை அவசர அவசரமாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். அதுவோ உள்ளே செல்ல மாட்டேன் என அடம்பிடித்து அவள் தொண்டையில் சிக்கி நிற்க, சற்றுமுன் அதே தொண்டையில் ஊர்ந்த அவனது அதரங்களும் அதனது நினைவுகளும் அதன் பின்னானதும் வந்து கண்களில் நீரை சுரத்தது.
“என்னாச்சுடி?”
வானதி அவளையே கவலையுடன் பார்த்துக்கொண்டு நிற்க, அவளுக்குத் தெரியாமல் கண்ணீரை உள்ளே இழுத்த குந்தவை, குனிந்த தலை நிமிர்த்தாமல் எழுந்து கைகழுவிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
வாயிலில் நின்ற அவனது பைக்கில் ஏறியவள் பட்டும்படாமல் அமர்ந்துகொள்ள,
“என் தோளை பிடிச்சிடாத… கலங்கமில்லாத உன்னோட புனிதம் கலங்கமாகிடும்… வண்டி சீட்டை புடிச்சிக்கோ.” என்று அவனாகவே வண்டியை கிளப்பும் முன் சொல்ல, ஏனென்றே தெரியாமல் அவள் விழிகள் மீண்டும் நீர்த்தது. அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவன் சொன்னது போலவே வண்டி சீட்டை பிடித்துக்கொள்ள, மின்னல் வேகத்தில் வண்டியை கிளப்பினான் தச்சன்.
சுற்றுபுறத்தை கவனிக்காது தங்களின் சஞ்சலங்களில் உழன்றவர்களை தவறாமல் கவனித்திருந்தாள் வானதி. முகத்தில் கவலை அப்ப, நீலாவைத் தேடி கொல்லைக்குச் சென்றவள் அங்கு பிள்ளைகளோடு பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்த நீலாவிடம் சென்று நின்றாள்.
“என்ன வானதி? ஏதாவது வேணுமா?” நிமிர்ந்து அவளை ஒருமுறை பார்த்துவிட்டு நீலா கேள்வி எழுப்ப,
“அத்தை… அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை.”
“அது எப்போதும் நடக்குறது தான். நீ கவலைப்படாத…”
“இல்லத்தை… ரூமிலிருந்து வெளியே வரை சத்தம் கேட்டுச்சு. குந்தவை சரியா சாப்பிடல, உங்க பையனும் சாப்பிடாமலேயே கிளம்பிட்டாரு.” என்றதும் நீலா புருவம் சுருக்கி பின் மீண்டு,
“என்ன கிளம்பி போயிட்டாங்களா? சொல்லாமலே போயிட்டாங்க…” என்று இழுத்தவர் வானதியின் கவலை தோய்ந்த முகத்தை கண்டு சமாதானமாய், “சண்டை போடலைன்னா அந்த நாளே அவங்களுக்கு திருப்தியா இருக்காது. அவங்களுக்குள்ள சரியாகிடுவாங்க… நீ நாலு சின்ன வெங்காயம் உரிச்சி வை… அது இல்லைன்னா உங்க மாமாவுக்கு பழைய சோறே இறங்காது. அப்படியே மேல் அலமாரியில் பச்சை வாலியில் மோர்மிளகாய் இருக்கு. அதையும் நிறையா எண்ணை ஊற்றி வறுத்து வச்சிடு. நான் வந்து பசங்களுக்கு இட்லி ஊத்தித் தரேன்…”

Advertisement