Advertisement

“நீ பேசுனது தப்பில்லை நான் செஞ்சது தான் தப்பா போச்சோ?” என்று அவளும் முறைக்க,
“நான் பேசுனதை அவங்க கத்துக்கிட்டு திரும்ப பேசுனாங்களா என்ன? அது என்னனு கூட அவங்களுக்கு புரியவும் புரியாது. ஆனால் நீ செஞ்சதை பார்த்து தான் இவள் செய்யுறா?” என்று தன் கரத்தில் பவ்யமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியை காண்பிக்க, குந்தவை முகம் கூம்பிவிட்டது. 
எப்போதும் நீ செய்வது சரியாய்த் தான் இருக்கும் என்ற நேர்மறை விமர்சனங்களை அதிகம் கேட்டு பழகியவளுக்கு, நீ செய்ததும் தவறு என்ற எதிர்மறை விமர்சனத்தை பட்டென்று அவன் முன்வைக்கவும் மனம் சட்டென சோர்ந்து அதை செமிக்க முயன்றது.
அவளது எண்ணத்தை படித்தானோ என்னவோ தாடையை தடவியபடி விழியை விண்ணில் பதித்து, “ஆனா இதை மாற்ற ஒன்னு செய்யலாம்…” 
“என்ன?” என்ற ஆவல் அவளிடத்தில்…
“இப்போ நீ அடிக்க சொல்லிக் கொடுத்த விதம் விபரீதத்தில் முடியும்… ஆனால் இதையே ப்ளான் பீ (B) யூஸ் பண்ணி நடந்ததை மாத்திடலாமே…”
“சுற்றி வளைக்காம என்ன சொல்ல வர்றியோ அதை நேரா சொல்லு…” என்று அவள் துரிதப்படுத்த, அவளை சுண்டி இழுத்தான் தச்சன்.
அவன் இழுத்த வேகத்தில் பதறி, தன் தோளில் இருந்த அறிவழகனை கெட்டியாக தன்னோடு அணைத்துக்கொண்டு அவனை முறைத்தாள் குந்தவை.
“இந்த முறைப்பை ஓரம்கட்டிட்டு கையால அடிச்சதை அழிச்சிட்டு கிஸ் அடிச்சி மறுபடி ஆரம்பிச்சிடு… அவளும் நல்ல பழக்கத்தை கத்துப்பா… என்ன நான் சொல்றது?” 
“கேடி… அங்க சுத்தி இங்க சுத்தி உனக்கு தேவையானதில் வந்து நிக்குற. நான் கூட என்னவோ உருப்படியா சொல்லப் போறேன்னு நினைச்சேன்…” என்று சிணுங்கினாள் குந்தவை.
“ஏய்… என்னடி இப்படி பொசுக்குனு உருப்படியில்லைனு சொல்லிட்ட… பொண்டாட்டிக்கிட்டேயும், பிள்ளைக்கிட்டேயும் வாங்குற கிஸ்ஸில் இருக்கும் கிக்கு தெரியாதவளா இருக்கியே… சரிசரி.. அந்த பாடமெல்லாம் நான் அப்புறம் எடுக்குறேன். நீ சீக்கிரம் கோட்டை அழிச்சிட்டு மாத்திப் போடு…” என்று கன்னத்தை அவளுக்கு காட்டிக்கொண்டு நிற்க, சுற்றும் முற்றும் பார்வையை சுழலவிட்டு எவரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பின்பு வேண்டுமென்றே அவன் கன்னத்தை கடித்தாள் குந்தவை.
“ஸ்… திருந்தவே மாட்டடி நீ…” என்று தச்சன் சொல்லி முடித்திருக்கவில்லை அவளிடம் இருந்த அறிவழகன் பாய்ந்து தச்சனின் கன்னத்தில் ஈரலிலிருந்து மெல்ல எட்டிப்பார்த்த தன் பல்லின் தடத்தை பதித்தான்.
“டேய்… நீயுமாடா… குடும்பமே சேர்ந்து ஒரு அப்பாவியை எவ்வளவு டேமேஜ் பண்றீங்க…” தச்சனின் முகம் போன போக்கில் வெடித்துச் சிரித்த குந்தவை, தச்சனின் கன்னத்தில் அறிவழகனின் பற்தடத்தோடு சேர்ந்து இடம்பிடித்திருந்த எச்சிலை தன் துப்பட்டா கொண்டு துடைத்துவிட்டு அறிவழகன் பதித்த தடத்திலேயே தன் இதழை ஒற்றி எடுத்தாள்.
“ஷப்பா… ஒரு முத்தம் வாங்க எவ்வளவு மெனக்கெட வேண்டியதிருக்கு… அடி, கடி எல்லாம் வாங்குனாத்தான் கிடைக்கும் போல… ஆனாலும் இதெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறி மாதிரி…” என்று அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டு செல்ல, மீண்டுமொரு முறை அழுத்தமாய் அவனது கன்னத்தில் இதழ்களை குவித்து, பதித்து பின் பிரித்தெடுத்தாள் குந்தவை.
“இப்போதைக்கு இவ்வளவு தான்… இதுக்கு மேல மூச்சுவிடக்கூடாது…” என்று இதழில் விரல் வைத்து மிரட்ட, 
“தம்மாத்துண்டு முத்தம் கொடுத்துட்டு என்னமா மிரட்டுற நீ…”
புருவங்களை ஏற்றி இறக்கியவள், “இதுக்கு அளவெல்லாம் இருக்கா என்ன?” 
அவள் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னரே அழகியும், அழகனும் பாய்ந்து குந்தவை செய்தது போலச் செய்கிறேன் என்ற பெயரில் அவன் கன்னத்தை மாறி மாறி கடித்து ஈரப்படுத்திக் கொண்டிருந்தனர். இரு பிள்ளைகளுமே தங்களுக்கு கிடைத்த விளையாட்டுப் பொருளென அவன் கன்னத்தை பங்குபோட்டு பிடித்துக்கொண்டு உரிமைப் போராட்டம் நடத்த அங்குமிங்கும் திரும்ப முடியாமல், விலகவும், விலக்கவும் முடியாமல் திக்குமுக்காடிப் போனான் தச்சன்.
“அடேய்… போதும்டா… விடுங்க…” என்று தச்சன் கதற, சிரித்துகொண்டே அவன் படும் இன்ப அவஸ்தைகளை ரசித்துக் கொண்டிருந்தாள் குந்தவை.
“அடியேய் என்னடி பராக்கு பார்த்துட்டு நிக்குற… இந்த பாசக்கார புள்ளைங்க கொஞ்சுறேன்னு என்னை குதறத்துக்கு முன்னாடி காப்பாத்துடி…”
“பிள்ளைங்க கிஸ் கிக்கா இருக்கும்னு சொன்னா… கிக்கு அதுக்குள்ள மப்பாகிடுச்சா?” 
“நீயெல்லாம் என்னை கலாய்க்குற நிலைமைக்கு வந்துட்டேன்…” என்று  நொந்துகொண்டவன் ஒருவழியாய் பிள்ளைகளிடம் பேச்சு கொடுத்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப,
“ரெண்டு பசங்களும் உங்களை ரொம்ப தொல்லை பண்றாங்களா?” என்று கேட்டுகொண்டே கவலை தோய்ந்த முகத்தோடு உணவுக் கிண்ணத்துடன் அவர்களிடம் வந்தாள் வானதி.
கவனம் இப்போது வானதியிடம் திரும்பிவிட, அறிவழகி சட்டென தன் அன்னையிடம் தாவினாள்.
“அதெல்லாம் இல்லை…” தச்சன் தயக்கமின்றி பதில் பேச, வானதியிடமிருந்த கிண்ணத்தை வாங்கிக்கொண்டாள் குந்தவை.
“நீங்க சாப்பிட போங்க… அத்தை உங்களுக்காக காத்திட்டு இருக்காங்க.” குனிந்த தலை நிமிராமல் தயக்கத்துடன் தச்சனிடம் சொன்னவள் தங்கை புறம் திரும்பி, “குந்தவை நீயும் போ… நான் பசங்களுக்கு சாப்பாடு ஊட்டிட்டு வரேன்…” 
“எல்லோரும் ஒன்னாவே சாப்பிடலாமே… குந்தவை சாப்பிடலாம் தானே? பசங்க சாப்பிட அடம் பண்ணுவாங்களா?”
மறுப்பாய் குந்தவை தலையசைக்க, அவளிடமிருந்து கிண்ணத்தையும் அறிவழகனையும் வாங்கிகொண்டு உள்ளே சென்றான்.
“ரொம்ப நேரம் வெளில நிக்காதீங்க… இருட்டில் பூச்சி இருந்தாலும் தெரியாது.” என்று சொல்லிவிட்டு செல்ல, அக்கா தங்கை இருவருமே அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர்.
அன்பரசன் ஏற்கனவே உண்டு கொண்டிருக்க, நீலா தச்சனுக்கும் உணவு எடுத்து வைத்தார்.
வானதி அங்கேயே ஒரு ஓரமாய் பிள்ளைகளை அமர்த்திக்கொண்டு உணவு ஊட்ட, இரு வாண்டுகளும் ஓரிடத்தில் அமர மாட்டேன் என அடம்பிடித்து அவளிடமிருந்து திமுறிக்கொண்டு தச்சனும் அன்பரசனும் இருக்குமிடம் தவழ்ந்து வந்தனர்.
“மம்மு சாபிட்டு வந்து விளையாடலாம்.” என்று வானதி அவர்கள் பின்னேயே ஓடிவந்து பிடித்துத் தூக்க்கிக்கொண்டு நகர, அவளிடமிருந்து நழுவி வேக வேகமாய் கால்களை அங்குமிங்கும் இலக்கின்றி வைத்து தச்சன் மடியிலேயே சென்று விழுந்தனர்.
“மெல்ல நடங்கடா…” ஒற்றைக்கரம் கொண்டு தச்சன் ஒருபிள்ளையை தூக்கி மடியில் அமர்த்திக்கொள்ள, அவன் தட்டில் அறிவழகனும், அன்பரசன் தட்டில் அழகியும் கையை நுழைத்து உணவை கலைத்து உலாத்த, வானதி தயக்கத்துடன் கையை பிசைந்துகொண்டு நின்றாள்.
குந்தவை இருவரையும் தூக்கியதற்கும் சிணுங்கி பின் பெருங்குரலிட்டு அழ,
“விடுமா… சின்ன பிள்ளைங்க அப்படித்தான் இருக்கும்… நாம என்ன செய்றோமோ அதையே செய்யணும்னு நினைப்பாங்க.” என்று அன்பசரன் தடுக்க, நீலா அவர்களுக்கு சிறிய தட்டில் உணவை வைத்துக் கொடுத்தார்.
தனக்கென்று உணவுத் தட்டுகள் முன் வைக்கப்படவும், உற்சாக கூக்குரலிட்டு கால்களை பரப்பி தச்சன் அருகிலேயே அமர்ந்தவர்கள் தரைக்கு பாதியையும் தங்களின் உடைக்கு மீதியையும் கொடுத்துவிட்டு சாப்பிட்டதாய் பெயர் பண்ணினாலும் அவர்கள் முகத்தில் ஒளிர்ந்த வெற்றிப் புன்னகை எதையோ சாதித்துவிட்ட திருப்தியை பிரதிபலித்தது,
இதில் இடையிடையே கை நிறைய உணவை அள்ள முயன்று அனைத்தும் விரல் இடுக்கின் வழியே கீழே சிந்தி மிச்சமீதி மாட்டிய சிறு உணவுத்துகள்களை தச்சனுக்கு ஊட்டிவிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்பாட்டம் வேறு… அவனும் அவர்களுக்கு சிறிது ஊட்டிவிட்டு அவர்கள் ஊட்டியதையும் வாங்கிக்கொள்ள போட்டி போட்டுகொண்டு அவனை பிடித்து எழுந்து நின்று அவன் முகம், சட்டை என அவனையும் சாப்பாட்டு மழையில் நனைத்திருந்தனர் அந்த இரட்டையர்கள்.  இத்தனை களீபரத்திலும் அவர்கள் முகத்தில் தெரிந்த பொலிவு மனநிறைவாய் இருக்க, தந்தையின் அன்பு என்னவென்றே கண்டிராத அந்த பிஞ்சுகள் தங்களுக்கு நன்கு பரிட்சயமாகி நெருங்கிய உறவாகிப்போன தச்சனின் மேல் தங்கள் பாசத்தை போட்டி போட்டுகொண்டு பொழிய அக்காட்சி காணவே கனமானதாகவும், இதமானதாகவும் என இருவிதமாய் பதிந்தது.
அது வானதியிடமும் வெளிப்பட, நீலாவிடமும், அன்பரசனிடமும் சிந்தனை முடிச்சுகள். துன்பங்களை எதிர்கொள்ள திராணியற்று குடும்பத்தை பற்றி நினைக்காமல் மனைவி, பிள்ளைகளை தவிக்கவிட்டு சென்றவனால் பின்விளைவுகளை சந்தித்து வாழ்க்கையை தொலைத்து நிற்பது என்னமோ வானதியும், பிள்ளைகளும் தானே… அவன் செய்த தவறுக்கு இவர்கள் என்ன செய்வார்கள். வானதிக்கு கூட குடும்பத்தை கட்டிக்காத்து, பிரச்சனைகளை களைந்து நெறிபடுத்த வேண்டிய கடமை இருக்க அதில் அவள் தவறியிருக்கும் பட்சத்தில் அவளோடு சேர்ந்து பிள்ளைகள் என்ன பிழை செய்தார்கள்? 
கணநேர உணர்வுச் சிதறலுக்கும், இறக்கத்திற்கும் மதிப்பளித்து இறக்கத்திற்கு பின் வரவிருந்த ஏற்றத்தை அவனே அழித்துக் கொண்டதற்கு இந்த பிள்ளைகள் நியாயமாய் தங்களுக்கு கிடைக்கவேண்டிய தந்தை பாசத்தை இழக்க வேண்டுமா? யாருக்குத் தான் அழுத்தங்களும், கலக்கங்களும் இல்லை? அவரவர் வசதிக்கு, தகுதிக்கு ஏற்ப இக்கட்டுக்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதன் வீரியம் அவரவருக்கே தெரிந்த ஒன்று… அதையெல்லாம் தாண்டித்தானே பலர் சாதித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
அவ்வளவு ஏன்… பயந்து நடுங்கி வாழ்க்கையில் தெளிவில்லாமல் இருக்கும் வானதி கூட தன்னை துன்புறுத்திக் கொள்வதை பற்றி யோசிக்கவில்லையே…. அவளை ஊக்குவித்தால் நன்றாய் வருவாளோ… அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமையுமோ… அமைந்த பின் ஒருவன் வருவானோ… அந்த பிள்ளைகளின் ஏக்கம் தீர்க்கவும் ஒருவன் பிறக்காமலா இருப்பான்? என்ற எண்ணங்கள் எழ, அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அந்த ஒருவன் அவர்கள் வீட்டில் அவர்களுக்கு பிறந்தவனென்று… இங்கே வரவேண்டியவள் எங்கோ திசை மாறிச் சென்று மீண்டும் கரை தேடி சேர வேண்டிய இடத்திற்கு தங்கை மூலம் வந்து சேர்ந்திருக்கிறாள் என்று அவளுக்கும் தெரியவில்லை. 
 

Advertisement