Advertisement

*14*
“எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.” சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று எழுந்த எண்ணத்தை துரிதமாய் ஒதுக்கியவள், “நீ என்கிட்ட சொல்லிட்டு வானதியை கூட்டிட்டு வந்திருக்கணும்.” என்று அடுத்ததை துவங்கினாள். சாவுகாசமாய் மெத்தையில் அமர்ந்தவன் அங்கு உறங்கிக் கொண்டிருந்த அறிவழகியின் கன்னத்தை ஒற்றைவிரல் கொண்டு வருடிவிட்டு திரும்பினான்.
“அட… எல்லாத்துக்கும் குதிக்காத.”
“உனக்கு புரியுதா இல்லையா? அன்றைக்கு தானே மாமா எது செய்தாலும் எங்ககிட்ட முன்னரே சொல்லிட்டு செய்யுங்கன்னு சொன்னாங்க. அப்போ எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இப்போ உன் விருப்பத்துக்கு செஞ்சிட்டு வந்து நிக்குற?” 
“அன்னைக்கு நீதான் அவர் சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டுன, நான் இல்லை…” என்றான் பட்டென்று.
“ஓ… இப்படி வேற நினைப்பிருக்கா உனக்கு… அவளை அழைச்சிட்டு வந்தது எனக்கே அதிர்ச்சியா இருக்கும் போது வீட்டில் என்ன நினைப்பாங்க? எங்கம்மாவை பற்றியும் தான் என்ன நினைப்பாங்க? நீதான் கூப்பிடேன்னா அவங்க எப்படி அனுப்புனாங்கனு தெரியல…” சினம் கொஞ்சமும் கரையாதிருக்க, தச்சனும், சுமதியும் செய்ததில் சற்றும் உடன்பாடு வரவில்லை குந்தவைக்கு.
“ச்சு… உங்கக்காவ உன்கிட்ட அழைச்சிட்டு வந்ததில் என்ன தப்பிருக்கு? உன்கிட்ட தானே கூட்டிட்டு வந்தேன்? வெளில சொன்னியே எங்களுக்கு உன் வீட்டில் உரிமையிருக்குனு… அதே உரிமை உனக்கும் இங்கே இருக்கு. உனக்கு உரிமையுள்ள வீட்டில் உங்கக்கா வந்து இருக்கலாம். தப்பில்லை.” என்று அவன் வாதத்திலேயே நின்றான்.
“நீ செஞ்சதை நியாயப்படுத்த பார்க்காத.”
“அப்போ உன்னோட எண்ணங்கள் தான் சரின்னு நிரூபிக்க நீ முயற்சி பண்ணாத…” என்றவன் அவளிடமிருந்த அறிவழகனை பிடுங்கி மெத்தையில் அவன் சகோதரி அருகில் படுக்க வைக்க, அவன் படுக்காமல் மறுப்பாய் ஓசை எழுப்பி, தன் குட்டி விரல்களால் தச்சன் சட்டையை பற்றுக்கோளாய் இறுக பிடித்துக்கொண்டு எழுந்து நின்றான்.
தச்சனின் பார்வை இப்போது தன் கவனத்தை இழுக்க முயலும் குட்டியின் மீது பதிந்தது, “தூங்குடா குட்டிப்பையா… உன் சித்தியை சமாதானப்படுத்துற கடினமான டாஸ்க் இந்த சித்தப்பாவுக்கு இருக்குடா… அதுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க குட்டிப்பையா…” என்ற அவனின் இலகுவான பேச்சுக்கள் அவளின் எரிச்சலைத் தான் அதிகப்படுத்தின.
“தீவிரமா ஒரு விஷயம் பேசிட்டு இருக்கும் போது இப்படி குறுக்க குறுக்க பேச வேண்டியது… அதென்ன வெளில முக்கியமா பேசிட்டு இருக்கும் போது வாய் நீண்டுச்சே?”
அவளை ஒருபார்வை பார்த்தவன் அறிவழகனை கைகளில் அள்ளிக்கொண்டு எழுந்து அவளை நெருங்கி, “இப்போ நான் உன் அக்காவை கூட்டிட்டு வந்தது உனக்கு பிரச்சனையா இல்லை நான் பேசினது பிரச்சனையா?” என்ற கேள்விக்கு, பதிலேதும் சொல்லாமல் குந்தவை மெளனம் காக்க, அறையிலிருந்து வெளியேற ஆயுத்தமானவன்,
“கடுப்போட பார்த்தா எல்லாமே தப்பாத்தான் தெரியும். சண்டை போடத்தான் தோணும். நிதானத்துக்கு விடுப்பு கொடுத்துட்டு கோபத்தை தலையில் உசரமா ஏத்தி வச்சிருக்க அதை கொஞ்சம் கீழ இறக்கு. 
உங்கம்மா உன்கிட்டையும் இங்கேயும் பேசுறேன்னு தான் சொன்னாங்க… அங்கிருந்து நான் இவங்களை கூட்டிட்டு வரும்போது அந்தாளுங்களும் அங்கத்தான் இருந்தானுங்க. உங்களுக்கு போன் போட்டு நடந்த எல்லாத்தையும் விளக்கி நீங்க அனுமதி கொடுத்ததும் இவங்களை கூட்டிட்டு வந்திருந்தா அதுவே அவங்களுக்கு ப்ளஸ் ஆகியிருக்கும். இதுக்கே இவ்வளவு யோசிக்குறாங்களே நாளைக்கு இவங்க எப்படி பசங்களை பார்த்துப்பாங்கன்னு பேசுவாங்க. ஆனால் இப்போ, உங்க குடும்பத்துக்கு எதுனாலும் முன்ன வந்து நிற்க ஆளுங்களும் அவங்க ஆதரவும் இருக்குனு ஒரு யோசனை வரும். உங்ககிட்ட நேரடியா பிரச்சனை செய்ய யோசிப்பாங்க… அதை நாம பயன்படுத்திக்கனும்.நாம கொடுக்குற வாக்கு அந்த நேர இன்னலிலிருந்து தப்பிப்பதற்காக இருக்கக்கூடாது. காலத்துக்கும் சொன்ன வாக்கை காப்பாத்தணும். அதை அவங்களுக்கும் புரிய வைக்கணும்.” என்ற தச்சனின் கண்ணோட்டம் முற்றிலும் வேறாக இருந்தது.
அவனது விளக்கங்கள் அவளை யோசனைக்குள் ஆழ்த்த, அவர்களுக்குள் இருந்த இடைவெளியை குறைத்தவன் அவள் விழியோடு விழி நோக்கி, “நீ மாறிட்ட குந்தவை. அதிகமா யோசிக்குற… எதற்கெடுத்தாலும் கவலைப்படுற… உடம்பை கெடுத்துக்காத… நடக்குறதை தடுத்து நம்மகிட்ட பிடிச்சு வச்சிக்க முடியாது. எதை பற்றியும் நினைக்காம அடுத்த வேலையைப் பாரு.” என்றுவிட்டு அறிவழகனோடு வெளியேறிவிட, குந்தவை மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள். 
ஏதோ தன்னைச் சுற்றி தன்னை சார்ந்தவர்களை வைத்தே வலை சுற்றப்படுவது போன்ற பிரம்மை ஏற்பட ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் தான் மிஞ்சியது. விதியை மதியால் வெல்லலாம் ஆனால் அந்த விதி எது என்று கணிப்பது தாமரை இலையில் தண்ணீர் ஒட்டியது போலத்தானே. அதுவாக நடக்கும் வரை எதுவெனத் தெரியாது. புலப்படாது.
யோசித்து யோசித்து தலை வலிப்பது போல் இருக்க, மெத்தையில் அப்படியே சரிந்தவள் தலையை அழுந்த பிடித்துக்கொண்டு கண்மூடி படுத்துவிட்டாள். படுத்தவள் எப்போது உறங்கினாளோ வானதி வந்து எழுப்பும் வரையில் நித்திரையின் பிடியில் வலிகள் அடங்கி மனம் நிர்மலமாய் இருந்தது. 
“என்னடி இப்படி நேரம்கெட்ட நேரத்தில் விளக்கு வச்ச பிறகு தூங்கிட்டு இருக்க? உன் மாமியார் திட்டப் போறாங்க.” என்ற பதறளுடம் குந்தவையை பிடித்தெழுப்பினாள் வானதி.
மெதுவாய் ஆறஅமர எழுந்த குந்தவை வானதியின் புலம்பலை சிந்தையில் ஏற்றிக்கொள்ளாமல் தன்னருகில் குழந்தை உறங்குகிறாளா என்று பார்க்க,
“அவள் முழிச்சிட்டா… வெளில விளையாடிட்டு இருக்கா.” என்ற பதில் வானதியிடமிருந்து வந்தது.
“அத்தை மாமாகிட்ட அம்மா பேசுனாங்க. உன் வீட்டுக்காரர் தான் பேச வச்சாரு. நான் கூட உன் மாமியார் கறாரா இருப்பாங்கனு நினைச்சேன். ஆனால் அம்மாகிட்ட நல்லா பேசுனாங்க.” என்ற தகவலைக் கூட அமைதியாய் கேட்டுகொண்டாள்.
“என்னடி எதுவுமே சொல்ல மாட்டேங்குற?” என்று பாவமாய் வானதி கேட்டதற்கு கூட, 
“என்ன சொல்றதுன்னு தெரியல.” என்றதோடு முடித்துக் கொண்டு முகத்தை சீர்செய்தவள் அமைதியாய் வீட்டு முற்றத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
முகத்தை தொங்க போட்டுக்கொண்டு வானதியும் சமையலறை சென்று குந்தவை பருக தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். வானதியை உற்றுப் பார்த்த குந்தவை எதுவும் பேசாமல் தண்ணீர் பருகிவிட்டு தம்ளரை தரையில் வைக்கப்போக, “என்கிட்ட கொடு.” என்று அதை வாங்கிச் சென்று உள்ளே வைத்த வானதி திரும்ப வரும்போது தயாரித்து வைத்திருந்த இரவு உணவுகளை பரிமாற ஏதுவாய் முற்றத்தில் கொண்டுவந்து வைத்தாள். அவளைத் தொடர்ந்து வந்த நீலா, “தச்சா வெளில இருக்கான். சாப்பிட கூட்டிட்டு வா குந்தவை…” என்று அனுப்பிவைக்க, தேமேவென வெளியே சென்றவள் தெருவிளக்கு ஒளியில் விழிகளை அங்குமிங்கும் அலையவிட அவனின் குரலும் குழந்தைகள் இருவரின் குரலும் கேட்டதே ஒழிய அவர்கள் கண்ணில் படவில்லை.
“எங்கப்போனாங்க… ரெண்டு வாலுங்க குரலும் கேட்குது… இவன் எப்படி தனியா ரெண்டு பேரையும் சமாளிக்குறான்… இந்த அழகி அவன்கிட்ட போகமாட்டாளே… எப்படி போனா…” என்று தனக்குள் பேசிக்கொண்டே குரல் வந்த திசை நோக்கி நடைபோட, வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் சென்று நின்றாள் குந்தவை. வீட்டின் சுற்றிலும், கொட்டகையிலுமே சுழல் எல்.ஈ.டி பல்ப் பொருத்தப்பட்டிருக்க பெரிதாய் பயமொன்றுமில்லை.
விழி எதிரில் அழகான காட்சியொன்று விரிந்திருக்க, மனம் தன்போக்கில் உற்சாகமானது. ஒருபுறம் அறிவழகன் தச்சனின் கால்களை இறுக பற்றிக்கொண்டு அதிலேயே தன் முகம் பதித்து முகத்தை மறைத்திருக்க, குனிந்திருந்த தச்சனின் ஒருகரம் அவனை பிடித்திருந்தது மறுகரமோ அறிவழகியை பாதுகாப்பாய் சுற்றி வளைத்து அவனது பெரிய கரத்தினுள் அவளது பிஞ்சிக் கையைப் பிடித்து கன்றுக்குட்டியின் மிருதுவான சருமத்தை வருடிக்கொடுத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான்.
அறிவழகன் ஐயத்தில் தன்னை மறைத்துக் கொள்வதுமாய் அவ்வப்போது ஆர்வத்தில் எட்டிப்பார்ப்பதுமாய் இருக்க, அவனுடன் பிறந்தவளோ உற்சாகமாய் ஓசை எழுப்பி கன்றுக்குட்டியை ஆசையுடன் தடவிப்பார்த்து சிலிர்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அந்த தளிர் கரங்கள் கன்றின் மீது மிருதுவாய் வலம் செல்லும் போதும் கன்றுக்குட்டியும் தன் தலையை சிலுப்பி தன்னுடைய ஒற்றவயதுடைய அழகியுடன் அதற்கு தெரிந்த வழியில் விளையாடியது.
“ப்பா… ப்பா… ப்பூ… ம்மூ…” என்று அவ்வப்போது தச்சனை நிமிர்ந்து பார்த்து அவனிடம் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அறிவழகி. அவனும் அவளுக்குச் சமமாய் அவளிடம் கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருந்தான்.
“அட… பாரேன்… டூ விட்டிருந்தவ இன்னைக்கு ப்பா… ப்பானு உருகுறா… சொக்குபொடி போட்டுட்ட அவளுக்கும்…” அவர்களின் இனிமையில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் ஆவலுடன் குந்தவை அவர்களை நெருங்கி அறிவழகனை தூக்கிக்கொள்ள, குரல் கேட்டு சட்டென நிமிர்ந்த தச்சன் அவளை ஊடுருவும் பார்வை பார்த்துவிட்டு அவள் உணரும் முன்னர் நொடியில் அவளை பிடித்திழுத்து தன் முன் நிறுத்தி அவள் தோளிலும், கழுத்திலும் நாசி கொண்டு ஊர்வலம் நிகழ்த்த, அவளின் ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்து நிமிர்ந்து நின்றது. 
ஒருநொடி குந்தவை மயங்கி பின் சூழ்நிலை உணர்ந்து நிமிர்ந்தாள், “ப்ச்… என்ன செய்யுற நீ? இது ரூம் இல்லை… பசங்க வேற இருக்காங்க…”
“புடவை கட்டுடி… இப்படி எப்போதும் முழுசா சுடிதாரை சுத்திட்டு வந்து நின்னா மனுஷன் எப்படி ரொமான்ஸ் பண்றது? கல்யாணத்தப்போ புடவையில் பார்த்தது… அப்போவும் சரியா பார்க்கல…” குந்தவை நெளிய அவன் பேச்சுக்கள் வளைந்து நெளிந்து வேறு திசையில் சென்று கொண்டிருந்தது.
“நான் என்ன சொல்றேன்… நீ என்ன செய்யுற? சாப்பிட போகலாம்… நகரு…” மறுப்பு தெரிவித்து அவன் பிடியினில் குந்தவை நகர முயல, அவனது கால்களை சுரண்ட ஆரம்பித்துவிட்டாள் அறிவழகி.
தளிர் கரங்களின் சுரண்டல் அவனை கூசச்செய்ய, சத்தமாய் சிரித்தவன் குனிந்து அறிவழகியை கையில் ஏந்திக்கொண்டான், “அடடா… சித்தி கூட போட்டிபோட தயாராகிட்டீங்களா பாப்பூ…” 
குழைவாய் ஒலித்த அவனது குரலை இனம்கண்டு கொண்டு வியப்பாய் தச்சனை நோக்கிய குந்தவையோ, “உனக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா? என்கிட்ட இப்படிலாம் நீ பேசுனதே இல்லையே…” என்று குறைபட்டுக் கொண்டாள்.
“நீ எங்கடி என்னை பேசவிடுற? என்னை எப்போதும் ஒரு பதற்றத்தில் வச்சிருக்கிறதே உனக்கு வேலையா போச்சு? அந்த பதட்டத்திலும் அப்படி இப்படினு உன்னை கரெக்ட் பண்ணி சைட் கேப்பில் நானே சிந்து பாடிட்டு இருக்கேன்… இதுல மானே தேனே எல்லாம் போட்டு பேசி நேரத்தை வீணடிக்குற முட்டாள்தனமெல்லாம் எவனாது செய்வானா… கிடைக்கிறதை அந்த நேரத்தில் எடுத்துக்கத் தான் குறியா இருப்பான். ஆனால் உனக்குள்ளும் இப்படி எல்லாம் ஆசை இருக்கு பாரேன்…” என்று புருவம் உயர்த்திச் சொல்ல, முறைப்பை உதிரித்து முறுக்கிக்கொண்டாள் குந்தவை.
“அதென்ன எனக்கெல்லாம்? நான் என்ன வேற்றுகிரகத்தில் இருந்தா வரேன்?”
“அதில் சந்தேகம் வேற இருக்கா உனக்கு… எப்போ கிட்ட வந்தாலும் நகரு, என்ன பண்றனு தள்ளிவிட வேண்டியது…”
“எதை எங்க செய்யணுமோ அங்கத்தான் செய்யணும்… ரூமைத் தவிர எல்லா இடத்திலும் எக்குதப்பா உன் கை எல்லை மீறினா கொஞ்சுவாங்களா…” என்று கையை விளையாட்டாய் ஓங்கினாள்.
“அப்போ ரூமில் செஞ்சா ஒகேங்குற…”
“செஞ்சிட்டாலும்…” என்று கழுத்தை வெட்டியவள் அங்கிருந்து நகர்ந்து உள்ளே செல்ல நடைபோட, நீண்ட அடிகளை எடுத்துவைத்து அவள் சடையை பிடித்திழுத்து நிறுத்தினான் தச்சன்.
“ஸ்…ஆ… என்னடா பண்ற?” திரும்பி பார்த்து முறைக்க, விஷமமாய் இதழை வளைத்தவன்,
“ரூமுக்கு போயிட்டா வேற என்னென்னமோ தான் நினைப்பு வருது இதெல்லாம் நியாபகம் வரமாட்டேங்குதே…” என்று இழுக்க பட்டென்று விழுந்தது அவன் வாயிலே ஒரு அடி. முதலில் நெடுங்கரம் ஒன்றால் விழுக, பிஞ்சு கரத்தாலும் அதைத் தொடர்ந்து ஒன்று விழுந்தது. 
குந்தவை அடித்ததை தூசு போல ஒதுக்கியவன் அதைத் தொடர்ந்து விழுந்த அறிவழகியின் செய்கையில் தான் அதிர்ந்து விட்டான். குந்தவை என்ன செய்தாலோ அதையே செய்தாள் அந்த அழகி. என்ன குந்தவை ஒருமுறை செய்ததை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு அறிவழகி இரண்டு மூன்று முறை அவன் வாயிலேயே அடிகளை பரிசாக வழங்க அவளது தளிர் கரங்களை பிடித்தமுக்கி ஒரு முத்தம் வைத்துவிட்டு, குந்தவையை முறைத்தான் அவன்.
“என்கிட்ட இதை செய்யாத, அதை செய்யாத அப்படி இருக்காதேன்னு எத்தனை குறை படிக்குற… இப்போ நீ என்ன செய்யுற குழந்தை முன்னாடி?”

Advertisement