Advertisement

தச்சனின் திருமகள் – 1
*1*
“தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!”
     என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது. சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடுமின்றி அனைவரின் சிரமும், கரமும் ஒருசேர மேலெழும்பி பூரணகும்ப கலசத்தில் விழி பதிய, பண்பாடு மாறாமால் பலவித வேத மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ஓதப்பட, கங்கை, யமுனை மற்றும் காவிரியிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் அனைத்து விமானத்திலும் இருந்த தங்க மூலாம் பூசப்பட்ட செப்பு கலசத்தின் மீது ஒரே நேரத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு இனிதே நிறைவேறியது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட, கண்களை மூடி முழுமனதுடன் தங்கள் குறைகளை கொட்டி, நல்லதை எதிர்நோக்கி வேண்டலாய் வைக்க, பக்தி வாடை அவ்விடத்தை நிறைத்தது. 
உலகையே வியக்கவைக்கும் கட்டடக் கலையை தாங்கி, கலை அம்சத்துடன் நம்முடைய பண்பாட்டையும் அழகுற விளித்து, நம் முன்னோர்களின் அறிவியல் ஞானத்தையும் பறைசாற்றி கம்பீரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கோலாகலம் அனைவரின் வதனத்திலும் பிரதிபலித்தது. நெற்களஞ்சியமான தஞ்சை என்றாலே நினைவு வரும் பெரிய கோவிலும், அதைக் கட்டிய மாமன்னன் இராசராச சோழனும் தானாக ஒவ்வொரு தமிழர் மனதிலும் கர்வத்தை விதைக்க, அதே கர்வத்துடன் அங்கு குழுமியிருந்த மக்கள் மேலிருந்து தெளிக்கப்பட்ட புனித நீரை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டனர்.
தங்களின் கடமையை சில நொடிகள் மட்டுமே நிறுத்தி வைத்து, தரிசனம் செய்தவுடனேயே காவலர்கள் மீண்டும் பணியில் முழுஈடுபாட்டுடன் பக்தர்களுக்கு வழி காட்ட துவங்கியிருந்தனர்.
குடமுழுக்கு நிறைவடைந்தவுடன் அனைவரும் முண்டியடித்து எம்பெருமானை முதலில் தரிசிக்க உள்ளே நுழைய முற்பட, அவர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் செல்ல வைத்திருந்தனர் காவலர்கள். பெருங்கூட்டம் கோவிலின் உட்புற சன்னத்திக்கு செல்ல, ஒருசிலர் கூட்டத்திற்கு பயந்து வெளிப்பிரகாரத்திலேயே தேங்கிவிட்டனர்.
அப்படி தேங்கி நின்ற நீலா அருகில் இருந்த தன் மகனின் கையை சுரண்டி, “இவ்வளவு தூரம் வந்துட்டு ஈசனை பார்க்காம போனா எப்படி? நாமளே கிராமத்திலிருந்து எப்போதாவது தான் இங்கே வரோம், வா தச்சா போகலாம்.” என்க, 
அவன் விழிகளோ அதிருப்தியுடன் எதிரே இருந்த கூட்டத்தின் கணத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்தது.
“இந்த தள்ளுமுள்ளுல சாமி கும்பிடனும்னு அவசியம் இல்லை. இப்படியே தரிசனம் பண்ணிட்டு கிளம்புவோம். இன்னோரு நாள் வந்து சாமி தரிசனம் செஞ்சிக்கலாம்.” என்றான் அவனோ அசுவாரசியமாய்.
அவனின் ஆர்வமின்மையில் நீலாவின் முகம் சுருங்கிவிட, பாவமாய் மறுபுறம் நிற்கும் தன் கணவரை பார்த்தார் அவர்.
“இப்போ எதற்கு என்னை பார்க்குற? உன் ஆசை புள்ளை எதையாவது மறுத்தால் தான் என் நினைவே வருது உனக்கு.” என்று முறுக்கிக் கொண்டார் நீலாவின் கணவர் அன்பரசன்.
“இப்போ எதற்கு இந்த சீன் போடுற? இந்த தள்ளுமுள்ளில் உள்ளே போய் சாமிகிட்ட பெருசா என்ன வேண்டிட போற… என் புள்ளைக்கு நல்ல புத்தியை குடுன்னு கேட்ப… அதற்கு என்கிட்டேயே சிபாரிசுக்கு வர… அதான் இந்த நீலாவதியை கட்டிக்கிட்ட புண்ணியவான் கூட்டிட்டு போக தயாரா இருக்காரே, அவர் கூட போ… நான் அப்படியே வெளில சுத்திட்டு இருக்கேன். நிறைய கடையெல்லாம் போட்டு இருக்காங்க…” என்று கண்களில் குறும்பு மின்ன பார்வையை சுழற்றி விரட்டினான் தச்சன்.
அவனை முறைத்த அன்பரசனோ, “ஆமா இவர் அப்படியே அம்மாக்கு கடையில் எதையாவது வாங்கி கொடுக்குற மாதிரி தான்… பொம்பளை புள்ளைங்க வாங்குற வளையல், மணி கடைக்கு போக வேண்டியது, அம்மாக்கு வாங்குறேன் தங்கைக்கு வாங்குறேன்னு அங்க வர பொண்ணுங்ககிட்ட கடலை போட வேண்டியது. நீ வேணா பாரு, இவனை அடக்கி ஆளுர ஆளுமையான பொண்ணு தான் அவனுக்கு வாக்கப்பட்டு வரப்போறா… அப்போ இருக்குடா கச்சேரி உனக்கு.” என்று நீலாவையும், தச்சனையும் ஒருசேர பார்த்து எச்சரிக்க, மேல்சட்டையின் பின்புறம் கழுத்து காலரில் சொருகியிருந்த கூலர்ஸை எடுத்து மாட்டிய தச்சன்,
“சாபம் கொடுக்குறாராம்… சாபம். உங்க சாபத்தை புத்தியில மறக்காம குறித்து வச்சிக்கோ, என்னை எவளாலும் அடக்க முடியாது, நான் யாருக்கும் அடங்க மாட்டேன். எனக்கு பிடிச்சதை தான் செய்வேன்.” என்று அழுத்தமாய் பேசிவைத்தான் அவன்.
“கோவிலுக்கு வந்துருக்கோம்னு கொஞ்சமாவது நினைவு இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்… இங்கேயும் வந்து சும்மா தொணதொணன்னு பேசிட்டு இருக்கீங்க.” என்று இருவரையும் ஒருசேர திட்டியவர் தச்சனிடம் திரும்பி, “குருடன் மாதிரி இந்த கருப்பு கண்ணாடியை போடாதேன்னு சொன்னால் கேட்குறதே கிடையாது அப்பப்போ மாட்டிட்டு சுத்த வேண்டியது… முதலில் அதை கழட்டு தச்சா…” என்றவர் தன் கையோடு அதை தச்சனிடமிருந்து கழற்றி தன் கணவர் சட்டை பையில் மாட்டிவிட்டார் நீலா.
“இதெல்லாம் உனக்கே அநியாயமா தெரியல? என்னை குருடன்னு சொல்லிட்டு அதே கண்ணாடியை ஜம்பமா உன் வீட்டுக்காரர் சட்டைப்பையில் வைக்குற… வயசானாலும் அவர் மட்டும் அப்படியே ஸ்டைலா இருக்கனும் ஆனால் நான் மட்டும் ரெண்டு லிட்டர் தேங்காய் எண்ணையை தலையில் ஊற்றி, நல்லா வழித்து சீவி, பட்டை போட்டு இளிச்சவாயன் மாதிரி சுத்தணும். உன் வீட்டுக்காரரும் அதற்கு தோதாய் பழங்காலத்துக்கும் பழங்காலத்துப் பெயரை எனக்கு வச்சிட்டாரு ஆனால் அவர் பெயரைப் பாரு.. அன்பரசன்.” என்று நீட்டிமுழங்கி அன்னையிடம் பொரிந்தான் தச்சன்.
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை… இவன் பெயருக்கு பின்னாடி பெரிய வரலாறே இருக்கு. அதெல்லாம் தெரிந்து கொள்வதில்லை.” என்று இடம் பொருள் ஏவலை கவனியாமல் அன்பரசன் தன் நினைவுகளுக்குள் மூழ்க, அவர் வதனத்தில் தனிப்பொலிவு வந்தது.
“ஏழு வருடங்களில் சிவ பக்தரான இராசராசன் எகிப்தியரின் பிரமீடுகள் போன்ற கூர்மையான முனை கொண்ட கோபுரத்தை 190 அடி உயரத்திற்கு கட்டியது உலக அதிசயம் தான். வடக்கே புவனேஸ்வரத்தில் லிங்க ராஜா கோவில்தான் அந்த காலத்தில் உயரமானதாக இருந்தது. ஆனால் அதைவிட இக்கோபுரத்தை உயரமாக அமைத்தது இந்த சோழ மன்னன் தான். பெரிய விசாலமான பிரகாரம், 30க்கும் மேற்பட்ட கோவில்களை உள்ளடக்கிய இந்த பிரம்மாண்டத்தில் அக்காலத்தில் 400 நடன கலைஞர்கள், 50 சிவமறை ஓதுவார்கள் நாள்தோறும் பணியில் இருப்பார்களாம். அப்படிப்பட்ட பிரம்மாண்டத்தின் கட்டுமானத்தை சாத்தியமாக்கியது இராசராசன் என்றாலும் இந்த அதிசயத்தை நிறுவ யுக்திகள் வகுத்து, திட்டம் தீட்டி அதை செயல்படுத்திக் காண்பித்த கலை நிபுணரும், தலைமைச் சிற்பியும் தான் இந்த குஞ்சரமல்லன் பெருந்தச்சனும் , நித்த வினோத பெருந்தச்சனும். அவர்களின் கைவண்ணத்தில் பிரமித்து உனக்கு வைத்த பெயர் தான் பெருந்தச்சன்.” என்றவரின் கலாரசனை மகனுடைய எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. அதுவே அவர்களிடத்தில் நிறுவப்படாதா இடைவெளியை வகுத்திருந்தது.
“நீ தான் மெச்சிக்கணும் என்னோட பெயர் காரணத்தை. தச்சன்னா ஆசாரியான்னு எல்லோரும் என்னைதானே கேலி பேசுறாங்க… அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது…” என்று தச்சனும் முகத்தை காட்ட, நீலா இவர்களுக்கு இடையில் நிற்பதற்கு நாமே உள்ளே சென்று விடலாம் என்று கூட்டத்துடன் கலந்து பெருவுடையாரை தரிசிக்க உள்ளே சென்றுவிட, அவரை கவனியாமல் தங்களின் சண்டையில் மும்முரமாயினர் நீலாவதியின் ஆசைக்கணவரும், செல்ல மகனும்… 
“லாரி, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள், கிரேன் போன்ற அமைப்புகள், இன்றைய எளிதான கட்டட அமைப்பு முறைகள் என்று அன்றைக்கு எதுவும் இல்லாத நிலையிலும் இக்கோபுர கட்டியிருக்காங்க… அதோடு இந்த தஞ்சை மண் விவசாயத்திற்கே உரிய மண்ணு. இங்கே பாறையெல்லாம் கிடையாது. ஆனால் இந்த கோயிலின் பீடம் மட்டுமே 200 டன். வேறு ஊர்களிலிருந்து கொண்டுவந்து இங்கே அடுக்கி அழகா வடிவமைத்து இருக்காங்க. எவ்வளவு பெரிய விஷயம் அதெல்லாம்.” என்று அவர் அறிந்து வியந்தவற்றை மகனுக்கு தக்க சமயத்தில் கடத்த முயல, அவனோ காதை தேய்த்துக்கொண்டு பஞ்சு எடுத்துவந்திருக்கலாமோ என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான். 
அதை அறியாத அன்பரசன் பார்வை மொத்தமும் அவர் எதிரில் கம்பீரமாய் எந்த போருக்கும், எந்த படைக்கும் அஞ்சாமல் அசையாமல் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் பெரிய கோவிலின் மீதே இருந்தது.
ஏனோ தீராக்காதல் அக்கோவிலின் மீது, சோழர்களின் மீது, அவர்களின் வீரம் மற்றும் பற்றின் மீது… அதன் பொருட்டே மகனுக்கு அதன் சார்ந்த அதிகம் வெளியில் தெரியாத பெயரை சூட்டியிருக்க, அவர் பெயர் வைத்த அழகை கண்ட நீலா அடுத்து பிறந்த மகளுக்கு திவ்யா என்று அடம்பிடித்து பெயர்சூட்டிவிட்டார். அன்னை தனக்கு அப்படி செய்யவில்லையே என்ற கடுப்பு தச்சனுக்கு விபரம் தெரிந்த நாள் முதலே உண்டு… 
“சிவனின் மீதான பற்றோடு மொழிப்பற்றையும் இந்த கோவில் தாங்கி நிக்குது. கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 12 அடி நம்ம தமிழின் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி, தமிழின் மெய் எழுத்துக்கள் 18. கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி, தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216. சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247. மொழி மீதும், கடவுள் மீதும் எவ்வளவு பக்தி இருந்தால் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பாங்க…” என்று சிலாகித்து அன்பரசன் பேச, அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை அவனுக்கு.
“கோவிலை சைட் அடிச்சது போதும்… நீலாவதி உள்ளே போயிடுச்சு. போங்க துணைக்கு.” என்று அன்பரசனை நினைவுகளில் இருந்து கலைக்க, அவனை முறைத்துவிட்டு மனைவியை தேடிப்போனார் அன்பரசன். இவனும் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.
“டேய் மச்சான் எங்க இருக்க நீ?” பார்வை கூட்டத்தை அளவெடுக்க, கால்கள் கடைகள் இருக்கும் இடம் நோக்கி நடைபோட்டது.
“பஞ்சுமிட்டாய் கடையில்.” என்ற நண்பனிடமிருந்து பதில் வர, தலையில் அடித்துக்கொண்டான் தச்சன், “மானத்தை வாங்குற குணா.”
“அக்கா வந்துருக்கு. குட்டியும் வந்துருக்காடா, அவளுக்குத் தான் வாங்கிக் கொடுத்துட்டு இருக்கேன்.” என்று குணா பதில் கூற,
“விளங்கிடும்… சீக்கிரம் குட்டியை அக்காகிட்ட விட்டுட்டு வா, இந்த வீதியை சுத்தி ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வருவோம்.” என்று கட்டளையிட்டு விட்டு இணைப்பை துண்டித்தவன் பார்வை அங்கிருந்த கடைகள் மீது மேம்போக்காக உலாவியது… ஆங்காங்கு சற்று அழகாய் தெரிந்த காரிகைகள் மீது அதிக நேரம் பார்வை நிலைத்து பின் மீண்டதோ என்னவோ!
*** 

Advertisement