Advertisement

*5*
அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்துக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது. அதெல்லாம் இந்த அற்ப உவகையில் சற்று மட்டுப்பட்டது. 
வெள்ளியில் ஆன மெட்டியை அவளது பாதம் பிடித்து விரல்களில் அவன் போட்டுவிட, அதனைத் தான் அவனே காலில் விழுந்தது போன்றெண்ணி சற்று உவகை கொண்டாள் குந்தவை. எப்பொழுதும் உம்மென்று மனதில் கோபத்தை தீட்டி வளர்ப்பதிலும் மனம் வெகுவாய் சோர்ந்து போயிருந்தது. சோர்ந்த மனதிற்கு சற்று தெம்பேற்றும் விதமாய் அவன் மெட்டி போட்டுவிடுவதையே மனதிற்குள் கேலியாய் உருவகித்துக் கொண்டவள் முகமும் சற்று தெளிந்து விரிய, எழுந்த தச்சன் அவளை நேராய் பார்த்து கேலிப் புன்னகையுடன்,
“நானே உன் காலில் விழுந்த மாதிரி சந்தோசமா இருக்குமே…” என்று சரியாய் கணித்துக் கூற,
“ஆமாம். இப்போ சம்பிரதாயத்திற்காக விழுந்த, கூடிய சீக்கிரம் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தது தப்புனு விழுவ,” என்றாள் அவளும் திமிராய்.
ஓசையின்றி நகைத்தவன் அவள் தோள் உரசி நின்றுகொண்டு யாரும் அறியா வண்ணம் அவள் புறம் சாய்ந்து, “நல்லா கனவு காணுற. கோபம் எல்லாம் போயிடுச்சோ… மரியாதை அதிகமாகிடுச்சே?” அவளது ஒருமை விளிப்பை கேலி பேசியவன் எதிரே வந்தவர்களை பார்த்து முறுவல் உதிர்த்து இயல்புநிலையை காக்கவும் தவறவில்லை. கோபத்தில் தான் அவனை ஒருமையில் அழைக்கிறோம் என்கிறதே அவன் சொல்லித்தான் கவனித்தாள் குந்தவை. உணர்ந்த பின் அவள் பதிலின்றி மெளனத்தை கடைபிடிக்க, தீவிரமானவன்,
“ஏதோ ஒருவகையில் திருமணம் வேண்டுமென்றால் உன்னை நிர்பந்தித்து நடந்திருக்கும். ஆனால் என்னை பிடிச்சிருக்குனு சொல்லி பரிசம் போட்டது எல்லாம் உன்னோட விருப்பத்தின் பேரில் தான். அதில் நான் எதுவுமே செய்யல. பரிசம் போட்டதிலேயே நீ எனக்கானவள் என்பது முடிவாகிடுச்சு. என்னுடையதை நான் மிஸ் பண்ணிடாம தக்கவச்சிகிட்டேன் அவ்வளவு தான்.” என்று தச்சன் தோள்களை குலுக்கிக்கொள்ள, தன்னுடைய குமுறல் இன்னும் அவனுக்கு புரியவில்லை என்று தான் தோன்றியது குந்தவைக்கு. தச்சனுக்கோ அப்படி என்ன வறட்டு வீம்பு அவளுக்கு என்ற எண்ணம். 
பிடித்திருந்தால் வாழ்ந்துவிட முடியாதா என்று அவன் நினைக்க, பிடித்தம் ஒன்று மட்டும் வாழ்க்கைக்கு எப்படி போதும் என்று நினைத்திருந்தாள் அவள். அந்த நினைப்பைத் தான் துவக்கம் முதலே செயலாய் வெளிப்படுத்தினர் இருவருமே.
அதற்கு மேல் அவர்களை சிந்திக்க விடாமல் வானதியின் பிள்ளைகள் இருவர் காலடியிலும் நின்று அவர்களின் கவனத்தை இழுக்க, இம்முறை அறிவழகியை தூக்கி வைத்துக்கொண்டான் தச்சன். உடுத்தியிருந்த பட்டுப்பாவாடை சட்டை ஒருபுறம் அறிவழகியின் தளிர் சருமத்தை உறுத்த, தச்சனின் கழுத்தில் இருந்த மாலை ஒருபுறம் என எரிச்சல் தாளாது வீலென்று அழத்துவங்கினாள் அவள். வானதி வேகமாக ஓடிவந்து அவளை தூக்கிக்கொள்ள, தூரத்தில் இருந்த நீலாவின் முகம் சுருங்கியது.
அருகில் இருந்த மகளிடம், “இந்த பொண்ணு ஏன் பிள்ளைங்களை சபையில் விட்டு அங்குமிங்கும் உலாத்திட்டு இருக்கு. தாலியிறங்கி ஒரு வருடம்கூட முடியாத இந்த பொண்ணு மணவறையில் ஏறுவதெல்லாம் நல்லாவா இருக்கு?”
“அம்மா என்ன இப்படி பேசுற?” என்று திவ்யா அதிர்வுடன் அன்னையின் புறம் திரும்ப,
“ப்ச்… உன் அண்ணன் சரியில்லைடி. இப்போவே அவங்களுக்கு நிறைய இடம் கொடுக்குறான். நீ சூதானமா இருந்துக்கோ.” என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டுவிட்டு நீலா உறவினர்களை கவனிக்கச் சென்றுவிட, திவ்யாவின் பார்வை எடைபோடும் விதமாய் தன் அண்ணனின் மீதும் குந்தவையின் மீதும் படிந்தது. புன்னகை முகமாய் தச்சன் இடைவிடாது அவ்வப்போது குந்தவையிடம் ஏதோ பேச்சு கொடுத்துக்கொண்டே இருக்க, குந்தவையின் முகத்திலிருந்து எதையும் யூகிக்கமுடியவில்லை.
‘அம்மா ஏதோ உளறிட்டு போறாங்க… அண்ணியோட அக்காக்கு நம்ம வயசு தான் இருக்கும், ஏதோ இந்த குழந்தைங்க ஓரிடத்தில் நிற்காமல் ஓடிட்டே இருக்கும் போது அவங்க அமைதியா எப்படி இருக்க முடியும்? அண்ணனுக்கும் இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு அப்படி இப்படின்னு கொஞ்சம் நெருக்கமாத் தான் இருப்பாங்க, அம்மா புரியாம அந்த காலத்திலேயே இருக்காங்க.’ என்று நினைத்துகொண்டு திவ்யா நகர்ந்துவிட்டாள்.
மகள் மட்டும் பிறந்த வீட்டை, உடன்பிறந்தவனை கெட்டியாக கைக்குள் பிடித்துவைத்து தன் உறவுகளுடன் பிணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மருமகள் அதைச் செய்தால் குற்றம் என்ற சராசரி மாமியாராக அவரையே அறியாமல் நீலா மாறிக் கொண்டிருக்க, மங்களம் அனைத்தையும் அமைதியுடன் கவனித்துக் கொண்டிருந்தார். அவரும் அந்த நிலையை கடந்து வந்தவர் தானே அதனால் அவருக்கு நீலாவின் போக்கு உடனே பிடிபட்டுவிட்டது.
தொடர்ந்து திருமணத்திற்கு பின்னான சடங்குகள் சூழ்ந்துகொள்ள, வந்திருந்தவர்களின் வாழ்த்தை பெற்று இன்முகமாக புகைப்படத்திற்கும் நடித்து என புது தம்பதிகளுக்கு மூச்சுவிட நேரம் கிடைத்ததே திரும்ப தச்சனின் வீட்டிற்கு கிளம்பிய பின்தான்.
அழுவாள் என்று எதிர்பார்த்திருக்க, அனைவரின் எண்ணத்திற்கு மாறாக அழுத்தமாக கிளம்பினாள் குந்தவை. 
“உங்க நம்பிக்கையை காப்பாத்திட்டேன். இனி நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்று ஒட்டாத தன்மையுடன் தந்தையிடம் விளித்துவிட்டு, சுமதியிடம் சிறு தலையசைப்பு மட்டுமே. துவக்கத்தில் தனக்கு ஆதரவாக பேசியவர் இடையினில் ஏனோ தந்தையுடன் சேர்ந்து வார்த்தைகளின்றி தன்னை கட்டாயப்படுத்தியது போலத் தோன்ற அவரிடமும் பேச்சை குறைத்தாள். வானதி கையை பிடித்து விடுவித்து ஒன்றிரண்டு தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை மட்டும் பேசியவள் குழந்தைகளை பார்த்ததும் கண் கலங்கிவிட்டாள். பிறந்ததிலிருந்து அருகினிலேயே அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்திருக்க, பிரிவது சிரமமாய் இருந்தது. 
‛கூடிய சீக்கிரம் நீயும் ஒரு பிள்ளையை பெத்துக்க. இந்த ஏக்கம் எல்லாம் போயிடும்.’ என்ற குரல் கூட கூட்டத்ததில் எங்கிருந்தோ கேட்டது. அதை அலட்சியம் செய்துவிட்டு இருபிள்ளைகளையும் தூக்கி கொஞ்சி முத்தம் வைத்துவிட்டே விடைபெற்றாள் குந்தவை. அவ்வளவு தான் அவள் அங்கிருந்து கிளம்பிய படலம். 
விருப்பத்திற்கு மாறாய் நிர்பந்தித்து திருமணம் செய்ததில் தச்சனின் பங்கு பாதி என்றால் மீதி அவள் குடும்பத்தினரது தானே… அவர்கள் மட்டும் இவளின் விருப்பிற்கு மதிப்பு கொடுத்திருந்தால் தச்சனாவது எவனாவது என்று எவரையும் தூக்கி போட்டிருக்க மாட்டாள்? என்ற கோபம் அழுத்தமாய் மாறியிருக்க பெரிதாய் செல்லம் கொஞ்சிக்கொண்டு கிளம்பவில்லை குந்தவை. கோபம் மொத்தமும் இருபக்கமும் சரிசமமாய் இருக்க, இருந்த வருத்தம், துக்கம், கோபம் என அனைத்தையும் அடைத்து மனதில் பூட்டிவைத்து அதை கொட்ட நேரம் பார்த்து காத்திருந்தாள்.
***
காரினில் ஒருபுறம் அவள் பெரியம்மா இருக்க மறுபுறம் அவளை வேண்டுமென்றே இடித்துக்கொண்டு அமர்ந்தவனை முறைக்கக்கூட முடியாமல் குந்தவை அமர்ந்திருக்க, தன் விரல் கொண்டு அவள் முழங்கையை மெல்ல நிமிண்டினான் தச்சன்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு இப்போ?” என்று பார்வையை திருப்பாமல் அடிக்குரலில் சீற,
“இங்கே பாரு.” என்று தன் அலைபேசியை பதிலுக்கு அவளிடம் நீட்டினான் தச்சன்.
என்ன சொல்ல வருகிறான் என்பது போல பார்த்தவள் அவனது அலைபேசியை வாங்கிப் பார்க்க, இம்முறை அதன் வால்பேப்பரில் சற்று முன் எடுத்த அவர்களின் திருமணப் புகைப்படம் ஒன்று இருந்தது. மனம் சாந்தமாகவா என்ற வினாவிற்கு விடை காண, அவளது பார்வை அந்த புகைப்படத்தை இதயத்திற்குள் பதித்துக் கொண்டது.
கோபம், வீம்பு, கொள்கை என்று எது இருந்தாலும் அவன் புறம் மனம் சாய்ந்தது உண்மை தானே! திருமணம் நடந்து இந்த வாழ்க்கை முழுதும் அவளுக்கு துணையானவனும் அவன் தானே! அவன் கட்டிய தாலி அவள் நெஞ்சத்தினுள் அழுத்தமாய் இடம்பிடித்திருப்பதும் மெய் தானே! அந்த மெய் மேலெழும்ப மனதினில் மெல்லிய சாரல். எல்லாம் அவன் பேசத் துவங்கிய வரை தான். 
“நீ கொஞ்சம் சிரிச்சிருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்.” என்று வேறு யாருக்கும் கேட்கா வண்ணம் அவள் செவியின் அருகில் கிசுகிசுக்க,
“நான் சிரிக்குற மாதிரியா எல்லாம் நடக்குது?” என்றாள் மீண்டும் வீம்பை பிடித்துக்கொண்டு… என் பேச்சை எவரும் கேட்கவில்லை தானே நானும் உங்கள் எவரின் விருப்பத்திற்கும் இசைந்து கொடுக்க மாட்டேன் என்ற வீம்பு. 
அதில் எரிச்சலுற்றவன், “என்ன பிரச்சனை உனக்கு? ஒன்னுமில்லாததை பெருசாக்கி நீயும் நிம்மதியா இல்லை உன்னை சார்ந்திருப்பவங்களும் நிம்மதியா இல்லை.”
“இதுக்கு தான் முன்னாடியே கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்.” என்று அவள் பதில் பேச, அவளருகில் இருந்த அவளின் பெரியம்மாவிற்கு கேட்டு விட்டது. அதிர்ந்தவர் முன்னே காரில் பயணம் செய்யும் தச்சனின் நண்பன் குணா கேட்டிருப்பானோ என்று பார்க்க,
“அவருக்கு முன்னாடியே தெரியும்.” என்றாள் குந்தவை சும்மாயிராமல்.
“என்னடி பேசுற நீ? உங்கக்கா வாழ்க்கை இப்படி முடிஞ்சி போச்சேன்னு உங்க அம்மா அழுது புலம்பாத நாளிலில்லை. இப்போ தான் உன் கல்யாணம் நடக்கவும் கொஞ்சம் தெளிஞ்சிருக்கா. ஆனால் நீ இப்படி பேசிட்டு இருக்க.”
“ப்ச்… அதுதான் கல்யாணம் நடந்துருச்சே. இனி என் வாழ்க்கை என்பாடு.” என்று அவள் எரிச்சலாய் மொழிய,
“குந்தவை அமைதியா இரு.” என்று குரலில் கடினம் கூட்டி எச்சரித்தான் தச்சன்.
“எல்லோரும் என் வாயை அடைங்க. அவங்கவங்க விருப்பம் அவங்கவங்களுக்கு முக்கியம் ஆனால் நான் மட்டும் எதுவும் விருப்பப்படக் கூடாதா?” என்று எதிர்த்துக்கொண்டு வர, இன்றுமா என்றிருந்தது தச்சனுக்கு. 
“நான் பேசிக்கிறேன் அத்தை. நீங்க ஓய்வெடுங்க.” என்று குந்தவையின் பெரியம்மாவிடம் சொல்ல, அவரோ என்ன இவள் நல்ல வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்வாளோ என்று பயம் கொண்டு தச்சனின் பேச்சையும் மீற முடியாமல் தவிப்புடன் அமர, குந்தவையை அழுத்தமாய் பார்த்தவன்,
“நாம அப்புறம் பேசலாம்.” என்றான். அதன் பின்பு அவள் வாய் திறக்கவில்லை. 
அவளுக்கும் புரிந்தது, தன்னுடைய நியாயத்தை இனி எவரும் புரிந்துகொள்ளப் போவதில்லை. என்னவென்றாலும் அவளையே பணிந்து போகச் சொல்லுவார்கள் என்று. அதுதானே காலம் காலமாய் நடக்கிறது? இனி பேச வேண்டியது எல்லாம் தச்சனிடம் மட்டும் தான், என்று முடிவெடுத்துக் கொண்டு, பின்னே சரிந்து கண்மூடிக் கொள்ள மனம் நிம்மதியின்றி தவித்தது. எப்படி அனுபவித்திருக்க வேண்டிய தருணம் ஆனால் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வி பூதாகரமாய் தெரிய, உடலுடன் உள்ளமும் சோர்ந்து கண்ணயர்ந்து விட்டாள்.
முன்னே இருந்த குணா என்னடா என்பது போல தச்சனை பார்க்க, ஒன்றுமில்லை என்று தலையசைக்க, ஒன்றில் நிலையில்லாமல் மனம் தடுமாறியது. சொன்னபடியே திருமணம் முடித்தாகிவிட்டது. அடுத்தது என்ன? என்ற கேள்வி அவனுள்ளும் எழ, ஒன்றும் புரியவில்லை. குந்தவையை சமாளிப்பது எளிதானதாக இருக்காது என்று மட்டும் புரிந்தது. 
தலையை சரித்து அவளைப் பார்க்க, பார்வை அவளுக்கு மறுபுறம் இருந்தவரின் மீதும் விழுந்தது. இருவரின் கண்களுமே மூடியிருக்க, மனம் இலகுவாகி, ‛இது தான்டா சரியான நேரம். உன் பொண்டாட்டி எழுந்துட்டா காளியாட்டம் ஆடிடுவா. அப்புறம் எங்க இவ்வளவு நெருக்கமா பார்க்குறது. நேரம் கிடைக்கும் போதே ட்ரையல் பார்த்துடனும். என்சாய்.’ என்று மனத்திற்குள்ளேயே அலப்பறை கூட்டி, உல்லாசமாய் ஒரு கையை தூக்கி அவள் தோள் சுற்றி போட்டவன் மெல்ல முகத்தை மட்டும் அவள் புறம் சரிக்க, அவளின் சுகந்தம் அவன் நாசியினுள் சென்று சுகமாய் இம்சித்து இதோவென்று இதழ்களை அவள் கன்னத்தில் பதிக்கும் நேரம் வேகத்தடை சரியாய் தடையாக வந்துவிட, எக்குத்தப்பாய் அவள் முகத்தினில் மோதி அவளையும் விழிக்க வைத்திருந்தான் தச்சன்.
திடுமென அதிர்வில் முழித்தவள் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்து, முறைப்பது போல அவனைப் பார்த்து, “என்ன பண்ண?” என்று அவள் கேட்ட தினுசில் தச்சனுக்கு உதறல் எடுத்தது.
“ஒன்னுமில்லையே.” என்றவன் நேராய் அமர்ந்து தலையை பின்னே சாய்த்து, கண்களை இறுக மூடிக்கொண்டான்.
குந்தவையின் இதழ்கள் விரிவேன் என சண்டித்தனம் செய்து புன்னகையாய் விரிய, அவனையே கண்களில் நிரப்பிக் கொண்டவள் கார் சீட்டில் சாய்ந்து பின் உறக்கத்தில் சரிவது போல அவன் தோளினில் தலை சாய்த்துக் கொண்டாள். அவனுமே உறக்கத்தில் சாய்வது போல் அவள் தலை மீது தன் தலை சரிக்க, சற்று நேரத்தில் உறங்கியும் விட்டிருந்தனர் இருவரும். 
அனைத்தையுமே அமைதியாய் பார்த்தும் பார்க்காத மாதிரி கவனித்துக் கொண்டிருந்த குணா மெல்ல நகைத்துக் கொண்டான், ‛என்ன காதல்டா இரு, இம்சைங்க. சண்டை போடுற மாதிரி போட்டுட்டு ஜோடி போட்டு தூங்குறதை பாரு… இதுக ரெண்டும் சமாதானம் ஆகும் முன்னம் இன்னும் என்னென்ன ஏழரை எல்லாம் கூட்டப் போதுங்களோ… இவங்க இடையில் வரவங்க செத்தாங்க.’
★★★
“எழுந்திருங்க நல்லவங்களே… ஊர் வந்துடுச்சு.” ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு குணா இருவரையும் எழுப்ப, உடனேயே விழித்துக்கொண்ட தச்சன் குந்தவையை எழுப்பலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்க, அவனது அசைவில் ஏற்கனவே விழித்திருந்தாள் குந்தவை. விழித்தவள் ஒன்றும் அறியாதது போல அவன் தோளிலிருந்து தலையை எடுத்து சுற்று புறம் கவனிக்க கார் நெரிசல் இல்லாத சாலையில் சென்று கொண்டிருந்தது. 
ஆதவன் ஆரவாரமாய் தன் கதிர்களை வீசினாலும் சாலைக்கு இருபக்கமும் வரிசைகட்டி விரிந்து படர்ந்திருந்த மரங்கள் வெப்பத்தை சற்று தணித்தன. இளம்பச்சை நிறம் ஆக்கிரமித்து, கண்களுக்கு குளிர்ச்சியாய் அந்த மரங்களுக்கு பின்னே வயல்வெளியில் நாற்று நடப்பட்டிருக்க, காற்றும் பஞ்சமில்லாமல் நன்றாகவே வீசியது. 
நெடிய கண்ணாடி கட்டிடங்கள், நினைத்த நேரத்திற்கு எதுவும் கிடைக்குமிடம், எந்நேரமும் வெளிச்சமாய் தூங்கா நகரத்தை எதிர்பார்த்திருந்தவள் இனி இதுதான் வாழ்க்கை என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ள முயன்றாலும், இந்த சிறிய ஊரில் எப்படி உயரிய இடத்திற்கு வளரப்போகிறோம் என்று புத்தி முரண்டியது. சுத்தமான காற்று நுரையீரளுக்குள் புகுந்தாலும் அதனருகில் இருக்கும் உறுப்பு அடங்க மறுத்தது.

Advertisement