Advertisement

குந்தவை வானதியை அழைத்து வர, தயங்கித் தயங்கி குந்தவையை ஒண்டியே வந்தாள் வானதி. தச்சனுடன் வரும் போது குந்தவையை பார்க்கப்போகிறோம் அவளிடம் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பு உணர்வே தலைதூக்கி இருந்திருக்க, இப்போது குந்தவையின் புகுந்த வீட்டினரிடம் பதில் சொல்லும் நிலை வந்ததும் தயக்கமும் சேர்ந்து வந்துவிட்டது. பிரச்சனைக்கு பயந்து சொந்தமே என்றாலும் பழக்கமே ஏற்படாத வீட்டிற்கு எப்படி துணிந்து வந்தோம் என்ற எண்ணமும் மெல்ல எட்டிப்பார்த்தது.
“காபி எல்லாம் ஆச்சா? ஏன் நின்னுட்டே இருக்கீங்க? உட்காருங்க… தயக்கமெல்லாம் வேண்டாம் வானதி. யார் வீடோன்னு தயங்காத மா இது உன் தங்கச்சி வீடுதான்.” வானதியின் தயக்கம் உணர்ந்து அன்பரசன் பொதுவாய் பேச, வானதி சம்மதமாய் தலையசைத்துவிட்டு குந்தவையுடன் நீலா அருகில் அமர்ந்துகொண்டாள். 
“தச்சன் இப்போ தான் நடந்ததை சொன்னான். இதில நாங்க உனக்கு என்ன செய்யணும்னு நினைக்குற?” என்று நேரடியாய் அன்பரசன் வானதியை பார்த்துக் கேட்க,
“ப்பா… என்ன கேள்வி இது? நான் தான் நடந்ததை சொன்னேனே…” என்று தச்சன் இடைப்புகுந்தான்.
அன்பரசன் பலமாய் அவனை முறைக்க, அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று குந்தவைக்கு புரிந்துவிட்டது. தாமதியாமல், “நீங்க முன்னே நின்னு என்ன செய்யணுமோ செஞ்சு கொடுத்துருங்க மாமா. வேற யார் என்ன சொல்லறாங்கன்னு நானும் பார்த்துடுறேன். இதை முடிச்சிவிட்டு விடுதலை பத்திரம் வாங்கிக் கொடுத்துடுங்க.” என்றுவிட மெச்சுதலாய் அவளைப் பார்த்தார் அன்பரசன்.
“விடு… என்கிட்ட விட்டுட்டீல்ல நான் பார்த்துக்கறேன்.” என்றவர் மகனிடம் பார்வை பதித்து, “அடேய் ஒரு விஷயத்தில் இறங்குறோம்னா அதில் கடைசி வரைக்கும் நின்னு முடிச்சு கொடுக்கணும். அதுவும் சமாதானம் பேச இறங்கணும்னா ஏதோ ஒரு பக்கத்தில் நாம நிலையா இருக்கனும். இவங்க குடும்பத்திற்கு விருப்பமில்லாம நாமா போய் தேவையில்லாம உள்ளே புகுந்ததா இருக்கக்கூடாது. அது சொந்தங்களுக்கு இடையில் பிரச்சனை வரலாம்.” 
“குந்தவை நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். இருந்தாலும் மத்தியஸ்தம் பண்ண இறங்கிட்டா எல்லாத்தையும் தெளிவா முன்னாடியே முடிவு பண்ணி வச்சிக்கணும். உங்கப்பாக்கு தச்சன் முன்னே நின்று எல்லாம் செய்ததிலேயே உங்க பக்க சொந்தங்களுக்கு வருத்தம் இருக்கு. புது சொந்தம் வந்ததும் அவங்களை ஓரம்கட்டுறதா நினைக்குறாங்க. இப்போ இதில நான் முன்ன நின்னாலும் இதே பேச்சு வரும். நாங்க அதிகாரம் செலுத்துற மாதிரி தெரியும். நீ இதெல்லாம் நல்லா யோசிச்சிட்டு என்ன செய்யலாம்னு சொல்லு. நான் முன்னே நிற்கலைனாலும் என்ன செய்யணுமோ அதை செஞ்சு கொடுத்துறேன். இனி முடிவு உன் கையில் தான்.”
“எல்லாமே யோசிச்சு தான் மாமா சொல்றேன். நீங்களே முன்ன நின்னு முடிச்சு விட்டுருங்க. அம்மாவும், இவளும் தனியா இருக்கும் போது எந்த பிரச்சனையும் வந்திடக்கூடாதுனு நினைக்குறேன். நாளைக்கு எதுனாலும் அங்க நான் தான் மாமா முன்ன நிப்பேன், கேட்க யாருமில்லைனு நினைச்சிக்கிட்டு என்னை மீறி யாரும் அங்க நாட்டாமை பண்ணிட முடியாது. அந்த நான் என்பதில் என்கூட  நிற்கப் போறதும் நீங்க எல்லோரும் தானே… உரிமையுள்ள வீட்டுக்கு நீங்க இவ்வளவு தயங்க வேண்டாம். மற்ற வகையில் எதுவந்தாலும் நான் பார்த்துக்கறேன் மாமா…” என்ற குந்தவையின் அழுத்தமான பேச்சில் நீலாவுமே அவளை பிரம்மிப்பாய் தான் பார்த்தார். 
எல்லாவற்றையும் அவர்கள் காலடியில் கொட்டி பணிந்து போகவுமில்லை… அதற்காக பணியாமலும் தான்தோன்றித்தனமாய் அவள் நடந்துகொண்டதாகவும் தெரியவில்லை… தெரிந்தது எல்லாம் ‘தான்’ என்ற சுயத்தையும், உரிமையையும் அவள் விட்டுக்கொடுக்கவில்லை அதே சமயம் எல்லோரையும் ‛தான்’ என்ற ஒற்றை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டாளே என்ற பிரம்மிப்பு அங்கிருந்த அனைவரிடமும் இருந்தது ஒருவனைத் தவிர… 
“நான் சொன்ன மாதிரியே நம்மளை டம்மி பீஸா உட்கார வச்சிக்கிட்டு இவிங்க ரெண்டு பேரும் ஐ.நா சபை அமைதி தூதுவர் போல உடன்படிக்கை பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்க…” என்று தச்சன் அறிவழகனிடம் புகார் படிக்க, அவன் சொன்னதில் என்ன புரிந்ததோ அந்த குட்டி அழகன் தன் பொக்கை வாயை திறந்துகொண்டு சிரித்தான்.
“உன் லட்சணம் அவனுக்கும் புரிஞ்சிடுச்சுடா…” என்று அன்பரசன் தச்சனைக் கண்டு கொக்கரிக்க, மூத்த மாமியாரும் மருமகளும் ஒண்ணுகூடிவிட்டனர்.
“ச்சு… அவனை ஏதாவது சொல்லிட்டே இருக்கனும் உங்களுக்கு. பேசாம இருங்க.” 
“ஆமாடா… நீயும் உன் புள்ளைக்கு மரியாதை கொடுத்து பழகு. குடும்பஸ்தன் ஆகிட்டான்.”
“அவனை ஏதாவது சொன்னா மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணாகிடுங்க. மத்த நேரத்தில் என்னை காய்ச்சுங்க…” என்று அன்பரசன் பேச்சோடு பேச்சாய் கடுப்படிக்க, ஆதரவுக்கரம் நீட்டி கவுண்டர் கொடுத்தான் தச்சன்.
“வை ப்ளட் சேம் ப்ளட்?” 
அவன் ராகம் இழுத்து பேசிய தொனியில் வானதிக்கு சிரிப்பு வந்துவிட, கடைசி நேரத்தில் தங்கை முகம் போன போக்கை கண்டு அதை அப்படியே விழுங்கிவிட்டாள். ஆனால் அதனை முன்னரே கவனித்துவிட்ட குந்தவைக்கு, வானதி தச்சனைப் பார்த்து சிரித்ததில் அப்படியொரு எரிச்சலும் கோபமும். அது அப்படியே தச்சன் புறம் திரும்பியது.
“வந்ததிலிருந்து டிரஸ் கூட மாற்றல… நீங்க மாத்திட்டு வரலாமே…” அடக்கப்பட்ட குரலில் வெளிவந்த அவளது கட்டளையில் முகத்தை சுழித்தான் தச்சன், “என்னை இங்கிருந்து துரத்தப் பார்க்குறியா என்ன?”
“ஆமாம்,,, அதுக்கு என்ன இப்போ? நான் சொல்ல வர்றது புரியுது தானே அதை செஞ்சாத்தான் என்ன?” சொன்னதின் பின்னிருந்த கட்டளை புரிந்தும் அதை செயல்படுத்தவில்லையே என்ற ஆதங்கம் குந்தவையின் வார்த்தைகளில் வெடித்தது.
“ப்ச்… உன் வேலையை பார்த்துட்டு போடி… நீ கீ கொடுக்குற போதெல்லாம் என்னால ஆட முடியாது.”
“ரெண்டு பேருக்கும் எத்தனை முறை சொன்னாலும் புரியாதா? முக்கியமா பேசிட்டு இருக்கும் போது என்ன விளையாட்டு இதெல்லாம்? சண்டை போடுறதுன்னு வந்துட்டா சுற்றி யார் இருக்கான்னு எல்லாம் பார்க்குறது கிடையாது, மடையை திறந்தது போல முட்டி மோதிக்க வேண்டியது.” என்று நீலா குறுக்கே குரலை உயர்த்த அனைவருமே மெளனியாகிவிட்டனர்.
“இப்போ எதுக்கு எல்லோரும் என் வாயை பார்த்துட்டு இருக்கீங்க? சட்டுபுட்டுனு பேசி முடிச்சு முடிவெடுத்தால் நைட் டிபன் பண்ணி சாப்பிட்டுட்டு தூங்க வேண்டியதுதான்.”
“நாம தனியா முடிவெடுத்திடலாம் ஆனால் அதை செயல்படுத்தும் போது நாலு பேரை சாட்சியா வச்சி செய்தால் தான் நாளைக்கு பிரச்சனை வராது. வானதி நீ என்ன முடிவு பண்ணியிருக்கேன்னு சொல்லுமா… நாங்க எல்லோரும் பேசிட்டு இருக்கோம் நீ ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற? உனக்கு அங்க போக விருப்பம் இருக்கா இல்லையா?”
“இல்லைங்க மாமா… நான் அங்க போக மாட்டேன். எனக்கும் என் பசங்களுக்கும் அவங்க வேண்டாம்…”
“ஏன் வேண்டாம்னு சொல்ற? உங்க வாழ்க்கையில் குறுக்கிடாதபடி எழுதி வாங்கணும்னா வலுவான காரணம் இருக்கணுமே…”
“அப்ப்பா எதுக்கு இந்த விஷயத்தை இவ்வளவு இழுக்குற? அந்த வீட்டாளுங்க சரியில்லை… துணை இல்லாம தனியாத் தானே இருக்கீங்கனு சொல்லி ரொம்ப எகிறுறானுங்க. நான் இவங்க சார்பா பேசியதை கூட அநாகரிகமாக பேசுறாங்க. இப்படியான சூழ்நிலையில் இந்த குழந்தைகளை எப்படி அங்க அனுப்ப முடியும்.” என்று தச்சன் கடுப்படிக்க, அனைவருக்குமே அதிர்ச்சி தான். என்னதிது என்பது போல இருக்க, குந்தவையின் ரத்த நாளங்கள் கொதித்தது. 
“என்ன பேசுனாங்க?”
“ப்ச்… விடுடி… நான் சொல்லிட்டேன். கொல்லி வச்சாலே அவன் மகன் தான் அந்த வகையில் நான் இந்த வீட்டு பையன்னு சொல்லி மூக்கொடச்சிட்டு தான் வந்தேன்.” என்று அவன் உண்மையை கூறாமல் மழுப்புவதிலேயே குந்தவைக்கு என்ன பேச்சுக்கள் வந்திருக்கும் என்று புரிந்தது. 
அனைத்திலும் நேர்த்தியையும் ஒழுக்கத்தையும் பார்ப்பவளின் காதுக்கு கணவனையும், வீட்டினரையும் தகாத வார்த்தைகளில் பேசிவிட்டார்கள் என்ற செய்தி வந்தால் சும்மாவா இருப்பாள்.
“வார்த்தையால இல்லை கையால சொன்னவன் மூக்கை ஒடச்சிட்டு வந்திருக்கணும். வாய் இருக்குனு என்ன வேணும்னாலும் பேசுவானுங்களா? அப்பா இல்லைன்னா கேட்க ஆளில்லைனு நினைச்சிட்டானுங்களா? எவன் சொன்னான் சொல்லு அவனுக்கு இருக்கு கச்சேரி… உன்னையோ என் அக்காவையே பேச எவனுக்கும் தகுதி கிடையாது.  நீ ஏன் அவனுங்களை விட்டுட்டு வந்த… தனியா இருக்கும் பெண்கள்களை மிரட்டுறாங்க, தனிமனித தாக்குதல் நடுத்துறாங்கன்னு போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ள வச்சிருக்கணும்….”
“அம்மாடி… இந்த பொண்ணு இம்புட்டு பேசுது…” என்று மங்களம் ஆவென்று பார்த்து அமர்ந்திருக்க, அன்பரசன் கூட குந்தவையின் திடீர் கொந்தளிப்பில் சற்று மிரண்டுவிட்டார். 
எப்போதும் அழுத்தமாய் என்றாலும் பணிவாய் பேசி பார்த்த முகம் இன்று கோபத்தில் கொந்தளித்து சிவந்திருக்க… சொன்னவன் மட்டும் கையில் கிடைத்தால் அடித்து மண்டையை உடைத்து விடுபவள் போல் ஆங்காரமாய் மேல்மூச்சு வாங்கி அமர்ந்திருந்தாள் குந்தவை.
“இதுக்கு மேல பேச ஒன்னுமில்லை. இவ்வளவு கீழ்த்தரமா பேசுறவங்க நம்ம வீட்டு பொண்ணை நல்லபடியாய் பார்த்துக்க மாட்டாங்க. பதினாறாம் நாள் காரியத்திற்கு எல்லோரையும் கூப்பிடுங்க அங்கேயே உங்க வீட்டில் வச்சி பேசி முடிச்சி விட்டுருவோம்… நீ உங்க பக்கம் இருக்கும் நெருங்கிய உறவுக்காரர்களிடம் சாட்சிக்கு இருக்கச் சொல்லி சொல்லிடு குந்தவை… எவன் வந்தாலும் பார்த்துக்கலாம்… நீ இவ்வளவு கோபப்படாத… உடம்புக்கு நல்லதில்லை…” இதற்கு மேல் இதனை வளர்த்த வேண்டாம் என்று அன்பரசன் முடிவிற்கு வந்திருக்க குந்தவையின் சினம் மட்டுப்பட்டப்பாடில்லை.
“இல்லை மாமா… வானதிக்கு கொழுந்தன்னு ஒருத்தன் இருக்கான். அவன் தான் ரொம்ப துள்ளுவான். அவன் தான் இதெல்லாம் தூண்டி விட்டிருக்கணும். பார்க்கவே பொறுக்கி மாதிரி இருப்பான். இவள் கல்யாணத்தின் போதே என்னையும் அவனுக்கு சேர்த்து கேட்டாங்க… அப்போ முடியாதுனு சொல்லியாச்சு… அப்புறம்  வானதி வீட்டுக்காரர் இறந்ததும் பசங்க  எதிர்காலம் அதுஇதுனு சொல்லி வானதியை அவனுக்கே கட்டிவைக்கணும்னு கேட்டாங்க… அதுவும் முடியாதுனு சொல்லியாச்சு… அதான் ரெண்டுத்துக்கும் முடிச்சு போட்டு வன்மம் வச்சி பேசியிருப்பான். அவனை சும்மா விடக்கூடாது மாமா…” என்றவளுக்கு என்ன முயன்றும் சினத்தை வார்த்தைகளாய் கொட்டியும் ஆதங்கம் அடங்க மறுத்தது.
நீலா தச்சனுக்கு கண்ணை காட்ட, பட்டென எழுந்தவன் குந்தவை உணரும் முன்னரே அறிவழகனை அவள் கையில் திணித்து, “இவனை தூங்க வை… தூக்கம் வருது பாரு இவனுக்கு…” என்று அவளையும் எழுப்பிவிட்டு தச்சன் அறைக்குச் சென்றுவிட அவனை தொடர்வதை தவிர வேறெதுவும் தோன்றவில்லை குந்தவைக்கு.
வானதியோ குந்தவையை தொடர முடியாமல் அங்கே கூடத்தில் அமரவும் முடியாமல் மிரட்சியுடன் அமர்ந்திருந்தாள்.
“அட… நீ ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? உன்கூட பிறந்தவ பொறிஞ்சி தள்ளிட்டு போறா… நீ என்னவோ… சரி சரி… இப்படியே முழியை உருட்டாம எனக்கு குடிக்க கொஞ்சம் சுடுதண்ணி வச்சி கொடேன் வானதி… அப்படியே நீலாவுக்கு ராத்திரி சமையலுக்கு கொஞ்சம் உதவிடேன்… உன் தங்கச்சி இன்னைக்கு சமைக்கப் போனா சமையல்கட்டில் அடுப்பை பற்றவைக்காமலேயே எல்லா சமையலும் ஆகிடும் இல்லை சமையல்கட்டே எரிஞ்சிடும்…” ஏதோ கேலி பேசியது போல மங்களம் சிரிக்க, தன்னை இயல்பாகத்தான் இப்படி பேசுகிறார்கள் என்ற மட்டில் வானதிக்குப் புரிந்தது. கூடியிருந்த சபையும் கலைந்தது.

Advertisement