Advertisement

“இல்லையே மாமா எதுக்கு கேட்குறீங்க?”
“ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்குத் தான் திருமண உதவித்தொகை கொடுப்பாங்கலாம். வானதிக்கு வாங்கலேன்னா உங்க கல்யாணத்திற்கு வாங்கிடலாமே… உனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் போது நாம ஏன் அதை விடனும்? உன்னோட போட்டோ, பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ், கல்யாண பத்திரிக்கை, கோவிலில் உங்க திருமணத்தை பதிந்ததற்கான சான்றும் கொடுத்தாங்க. அதையும் விண்ணப்பத்தோடு இணைச்சு செய்ய வேண்டியதை செஞ்சு உன் வீட்டுக்கு வாங்கிக் கொடுத்திடலாமே… டேய் நாளைக்கு குந்தவையை மாயவரம் அழைச்சிட்டு போய் என்ன செய்யணுமோ எல்லாம் செஞ்சிடு.” மருமகளிடம் விவரம் தெரிவித்துவிட்டு மகனிடம் கட்டளை பிறப்பிக்க, அவன் சோம்பலாய் பார்த்துவைத்தான்.
“ஏன் அங்க வரை போகணும்? இங்கேயே வாங்கிக்கலாமே?” என்ற தச்சனின் குரலில் உடலின் சோர்வு அப்பட்டமாய் வெளிப்பட்டது.
“இங்கே வாங்க முடியாது. பெண்ணோட ஊர் எதுவோ அங்க தான் வாங்க முடியும். நாளைக்கு ரெண்டு பேரும் போயிட்டு வந்துருங்க. குந்தவை வீட்டிலும் அலைய முடியாது அதனால கேட்கும் போதே தெளிவா கேட்டு என்னனென்ன நகல் கொடுக்கணும்னா எல்லாத்தையும் பிழை இல்லாம கொடுத்துட்டு வாங்க.” அன்பரசன் பதிலில் உச்சுகொட்டினான் தச்சன்.
சற்றுமுன் தான் திருச்சி வரை வண்டியிலேயே சென்று திவ்யாவை வீட்டில் விட்டுவிட்டு பின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்தான். எப்போதுமே அவள் இங்கு வந்தால் தச்சன் தான் அழைத்துச் சென்று விட்டுவருவான். முன்பு வேறு வேலை எதுவும் இல்லாததால் அவ்வளவு பெரிதாய் தெரியவில்லை. இப்போதோ தினமும் வேலை வேலை என்று வயலில் கிடந்து காய, புதிதாய் முளைத்திருக்கும் பொறுப்புகளும் அவனை தன்னுள் சுருட்டிக் கொண்டிருந்தது. சொல்வதை விட செயல் என்றுமே சற்று கடினம் தானே… என்னால் முடியும் என்று எளிதாய் வாய்ச்சவடால் விடலாம். இறுதிவரை அதை செய்து முடிப்பதற்குள் இக்கட்டுகளும் அனுபவங்களும் பாடங்களாய் மாறத் தானே செய்யும்.
“என்னடா முழிக்குற? போயிட்டு வந்திடு…”
“சும்மா போயிட்டு போயிட்டு வான்னு நீங்க நினைச்ச நேரத்துக்கு எல்லாம் போக முடியாது. ரெண்டு நாள் முன்னாடி தான் ஹால்டிக்கெட் வாங்க போயிட்டு வந்தோம். குந்தவைக்கும் இன்னும் ரெண்டு நாளில் பரீட்சை இருக்கு. அவளை கூட்டிட்டு இப்போ அலையச் சொல்றியா? அவள் பரீட்சை எல்லாம் முடியட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றான் தரையில் படுத்து சோம்பல் முறித்தபடியே…
அன்பரசன் குந்தவையை பார்க்க அவள் தச்சன் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.
“என்ன அமைதியா இருக்க குந்தவை?”
“இல்லங்க மாமா, பொறுமையாவே போயிக்கலாம்.”
“சொல்றதை சொல்லியாச்சு. அப்புறம் உங்க விருப்பம்.” என்று பேச்சுக்கள் முடிந்துவிட, மறுநாள் காலையே அந்த விஷயத்தையே முடிக்கக் கிளம்பினான் தச்சன்.
“உன் வீட்டுக்கு போன் பண்ணி என்னென்ன செராக்ஸ் வேணுமோ அதை எடுத்துவைக்க சொல்லிடு குந்தவை.”
கண்ணாடி முன்னின்று ஈரச்சிகையை துண்டால் துடைத்துக்கொண்டே தச்சன் அவளிடம் செய்தி சொல்ல, புரியாமல் விழித்தாள் குந்தவை.
“எதுக்கு இப்போவே? வீட்டுக்கு போகும்போது நானே எடுத்து வச்சிடுறேன்.”
“நீ எப்போ போறது இந்த காரியத்தை எப்போ முடிக்கிறது? நீ படி… நான் இன்னைக்கே அங்கே போய் தேவையானது எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன். எப்படியும் உன்னோட கையெழுத்து கேட்பாங்க… சும்மா சும்மா அலைய முடியாதே… பாதி வேலையை நான் முடிச்சிடுறேன். கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டியது எல்லாத்தையும் ஆபீசில் கொடுத்து நீ மீதி வேலையை முடிச்சிடு.” பேசிக்கொண்டே துண்டை மெத்தையில் வீசியவன் சட்டையை எடுத்து மாட்ட, அவன் முன்னே வந்து நின்றாள் குந்தவை.
“இல்லை வேண்டாம். உங்களுக்கு எதுக்கு அலைச்சல்? நாளை மறுநாள் எக்ஸாமுக்கு நான் அங்க போகத்தானே போறேன். அப்போ இந்த வேலையை முடிச்சிடுறேன்.”
“எதுக்கு இப்போ சீன் போடுற? இதை உடனே முடிக்கணும்னு தானே உனக்குள்ள நினைப்பு ஓடிட்டு இருக்கு? சீக்கிரம் பணம் கிடைச்சா வீட்டுக்கு உதவியா இருக்கும்னு தோணுது தானே?” என்று கேள்வியாய் பார்க்க மலர்ச்சியுடன் அவனை நெருங்கி அவன் கையை தட்டிவிட்டு அவளே அவனது பொத்தான்களை அதன் துளையில் விட்டிழுத்து மூடினாள்.
“நீ எப்போ இவ்வளவு பொறுப்பா… என் மனசை படிக்குற புருஷ்ஷா மாறின?” என்று கேலியாய் ராகம் இழுக்க, இடையில் கரம் கொடுத்து அவளை தன்னோடு இழுத்துக் கொண்டான் தச்சன்.
“உன் மனசை அப்படியே படிச்சிட்டாலும்… உன் முகத்திலேயே எல்லாம் எழுதி ஒட்டியிருக்குடி… நேற்றே பார்த்தேனே நான் அப்புறம் பார்த்துக்கலாம்னு இழுக்கவுமே உன் முகம் போன போக்கை… ஏதோ இந்த கல் நெஞ்சத்திலேயும் உன்னோட அப்பாவி புருஷன் மேல கொஞ்சம் ஈரம் இருந்திருக்கு… அதுதான் மேடம் பம்மிட்டீங்க… இல்லைனா என் சட்டையை பிடிச்சு வாடான்னு என்னையும் இழுத்துட்டு தானே போயிருப்ப?”
“இப்போவும் உன் சட்டையை பிடிச்சி தான் இருக்கேன்.” என்று அவன் சட்டையை பிடித்திழுத்து நகைத்தாள் குந்தவை.
மலர்ந்த முகத்துடன் அகலமாய் சிரித்தவன், “எதையோ ஒன்னை பிடிச்சா சரிதான்.” என்று அவள் இடையில் அழுத்தம் கொடுக்க, அவனது விரல்கள் செய்யும் சேட்டையில் நெளிந்தவள் அவன் நெஞ்சத்திலேயே பட்டென்று வலியாமல் அடித்தவள், “அங்கேயும் இங்கேயும் அலைஞ்சிட்டே இருக்கீயே… உனக்கு இங்க வேலை இல்லையா? மாமா முழு நேரமும் வேலை வேலைனு வயலில் தான் இருக்காங்க. ஆனால் நீ நினைச்ச நேரத்துக்கு வெளில கிளம்புற, வீட்டுக்கு வர…”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… குணா இருக்கான். நான் இல்லாதபோது அவன் பார்த்துப்பான்.” என்று அலட்சியமாகவே பதில் வந்தது அவளது வினாவிற்கு.
“அவங்க பார்த்துப்பாங்கன்னா? சும்மா பார்த்துப்பாங்களா?” என்று சந்தேகத்தோடு குந்தவை இழுக்க தச்சனின் முகம் மாறியது.
“சும்மானா? என்ன சொல்ல வர நீ?”
“லாபம் நஷ்டம் எல்லாம் எப்படி பங்கு போட்டுப்பீங்கனு கேட்டேன்?” என்று நேரே கேட்டுவிட, அவளது கேள்வியில் சட்டென சினம் பிறந்து தன் சட்டையிலிருந்த அவள் கரத்தை தட்டிவிட்டான் தச்சன்.
“கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே உடனே எங்களோட நட்பை கழற்றிவிட வச்சிடுவீங்களே… இந்த பொண்ணுங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுனா அவளுக பண்ற முதல் வேலையே அவன் நண்பர்களை பிரிச்சிடுவாங்கன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு. இதுவரை நீ சொன்னது எல்லாமே என்னோட தனிப்பட்டது அதனால் நான் மாத்திக்கிட்டேன். ஆனால் எல்லா விஷயத்திலும் அப்படியே இருக்க மாட்டேன் குந்தவை. உன்னோட விஷயத்தில் நான் என்னைக்குமே தலையிட்டது இல்லை ஆனால் நான் எது செஞ்சாலும் அதில குறை கண்டுபிடிக்குறதிலேயே நீ குறியா இருக்க…”
“அதென்ன பொண்ணுங்கன்னு எள்ளலா சொல்ற? நீ செய்றது சரியா இருந்தா நான் ஏன் குறை கண்டுபிடிக்க போறேன்? உனக்கு உதவி பண்றதில் தப்பில்லை ஆனால் உழைப்பை கொட்டுற இடத்தில் அதற்கான ஊதியத்தை கொடுக்கணும். உன் வசதிக்கு அவங்களை வேலை வாங்கிட்டு லாபம் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டா அது சரியா இருக்காது.” 
கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க, ஓசையும் எகிறியது.
“அவன் பணம் காசை பார்த்து வேலை செய்யல… எனக்காக செய்யுறான்… நீ சொல்ற மாதிரி முதலாளியா இருந்து அவனுக்கு ஊதியம் கொடுத்து அவனோட நட்பை கலங்கப்படுத்த முடியாது. நீ உன் லிமிட்டோட நிறுத்திக்கோ… இதில் தலையிடாத.”
“உன்னை யாரு இப்போ முதலாளியா இருக்கச் சொன்னா? பார்ட்னரா இருக்க வேண்டியது தானே? அவங்களை உன் இஷ்டத்துக்கு வேலை வாங்குவியா? நீ நினைச்ச நேரத்துக்கு வெளில போவது அவங்களால தானே? அதற்கான மதிப்பை கொடுக்கணும். இன்னைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒருநாள் இதில் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு. அவங்க வீட்டில் எவ்வளவு நாளுக்கு இப்படி பிரெண்டுக்கு வேலை செய்வதை எல்லாம் ஒத்துப்பாங்க? அவங்களோட உழைப்பையும், நேரத்தை நாம சுரண்டுனதா இருக்கக்கூடாது.”
“ப்ச்… போடி… தினம் ஏதாவது பிரச்சனையை இழுத்து விடுறதுலேயே குறியா இருக்க… எப்படி கிளம்புனேன் இப்போ எப்படி டென்ஷன் ஆக்கிவிட்டுட்ட…” என்று கத்தியவன் வேகமாய் வெளியேற, அவன் கைபிடித்து நிறுத்தினாள் குந்தவை.
“டென்ஷனோட வீட்டிலிருந்து கிளம்பாத…”
“சொல்றதை எல்லாம் சொல்லிட்டு அப்புறமென்ன?” என்று முகத்தை திருப்பிக்கொண்டு நிற்க, முன்னது மறந்து அவளுக்குமே இந்த பேச்சை வேறு நேரத்தில் எடுத்திருக்கலாம் என்றே தோன்றியது.
“என்னடி அமைதியா இருக்க? ஒரு முத்தமாவது கொடுத்து சமாதானப்படுத்துவேன்னு பார்த்தேன்.” என்றவனின் பாவனை இப்போது முற்றிலும் மாறியிருந்தது. 
ஆச்சர்யமாய் அவனை பார்த்தவள் கணப்பொழுதில் அவனின் விளையாட்டை உணர்ந்து, “கேடிடா நீ…” என்றவளின் விரல்கள் அவனது கன்னத்தை செல்லமாய் தட்டியது.
“அப்படியிருந்தும் இந்த ஸ்ட்ரிக்ட் ஆபீசரை கரெக்ட் பண்ண முடியலையே…” என்று வழிந்துக்கொண்டு நின்றான் தச்சன்.
“பேச்சை பாரு… வளவளக்காம சீக்கிரம் போயிட்டு வா… நான் அம்மாகிட்ட எல்லாத்தையும் எடுத்துவைக்க சொல்றேன்.” 
“அடியேயே முத்தம் கேட்டேன்டி… கண்டுக்காம இருக்க?”
“கேக்குறது கிடைக்கேலன்னா கொடுத்துட்டு போக வேண்டியது தானே?” என்று அலட்சியமாய் சொல்வது போல பாவனை செய்ய, அவள் கன்னம் கிள்ளியவன் துரிதமாய் அவள் கன்னத்தை ஈரப்படுத்திவிட்டு, “நீதான்டி கேடி…” 
“உன்கூட இருந்து இதுகூட கத்துக்கலேன்னா எப்படி… சரி மசமசன்னு நிக்காம கிளம்பு…. நான் சொன்னதையும் யோசி…” என்று சொல்லியே அனுப்ப, அது அவன் கருத்தில் பதிந்ததா என்பது சந்தேகமே. 
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் வேலை முடித்து திரும்ப வரும்போது வானதியும் பிள்ளைகளோடும் தான் வந்தான். அவனது கைகளில் அறிவழகன் பாந்தமாய் பொருந்தி இருக்க, ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் அவர்களை நெருங்கினாள் குந்தவை. அதற்கு முன் நீலா தச்சனை நெருங்கி,
“என்னடா இது? சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு வந்திருக்க? அவங்க எப்படி உன்கூட அனுப்புனாங்க?” என்று நீலா கேட்டபோது கூட,
“பசங்களுக்கு முதல்ல குடிக்க ஏதாவது தயார் பண்ணு. எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாளுக்கு அவங்க இங்கத் தான்.” என்ற தச்சனின் பதிலில் திருப்தி ஏற்படவில்லை அவருக்கு. 
குந்தவையை பார்த்தபோது தோன்றிய அதே சஞ்சலம் மனதிற்குள் மீண்டும் ஏற்பட சிறிது நாட்களுக்கு என்று நுழைந்திருப்பவள் இனிவரும் காலம் முழுதும் நிரந்தரமாய் இங்கேயே தங்கும் நிலை வரும்போது என்ன செய்வாரோ? இளகிய நெஞ்சம் மீண்டும் இறுகிவிடுமோ என்னவோ… 

Advertisement