Advertisement
தள்ளி போகாதே நிலவே
அத்தியாயம் 8
சரத் குறிப்பிட்ட அந்த மாலுக்குச் சென்று சேர்ந்த போது, அவன் நண்பர்கள் எல்லோரும் ஏற்கனவே வந்திருந்தனர். முதலில் நேராக உணவு அருந்ததான் சென்றனர்.
தேவையானது தட்டில் எடுத்து வந்த சரத், அமைதியாக உணவு உண்ண, அவனிடம் வந்த ஸ்வாதி, “என்ன டா வீட்ல சண்டையா?” எனக் கேட்டாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே?”
“அப்புறம் என்கிட்டே ஏன் அப்படிக் கத்தின?”
“பின்ன சனி ஞாயிறு வீட்ல பொண்டாட்டியோட இருக்க வேண்டாமா… உங்களுக்கு ட்ரீட் வைக்க வேற நாளே இல்லையா…லீவ் நாள்ல வச்சா குடும்பத்தோடவாவது வர சொல்லணும்.”
“எங்க வீட்ல நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போறவங்க. லீவ் நாள் அன்னைக்கும் நான் அவளோட இல்லாம வெளிய கிளம்பி வந்தா… அவளுக்கு எப்படி இருக்கும்.”
“இனிமே ட்ரீட் வச்சா ஒன்னு ஆபீஸ் நாள்ல வைங்க, இல்லைனா தயவு செய்து என்னைக் கூப்பிடாதீங்க.” என்றவன், உணவு அருந்தியவுடன் கிளம்பிவிட்டான்.
உணவுக்குப் பிறகு மாலில் இருந்த விளையாட்டு அரங்கிற்குச் செல்வதாக இருந்தது. ஆனால் சரத் இருக்க முடியாது என உடனே கிளம்பிவிட்டான்.
பாலாஜி ஏன் போய்விட்டான் எனக் கேட்டதற்கு, ஸ்வாதி சரத் சொன்னதைச் சொல்ல… “தப்பு என் மேலத்தான், அவனுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆகி இருக்கு. நான் அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு இருக்கணும்.” என்றான்.
வீட்டிற்குச் செல்லும் வழியில், ஸ்ரேயா விரும்பி சாப்பிடும் நொறுக்கி தீனிகளை வாங்கிக் கொண்டுதான் சரத் வீட்டிற்குச் சென்றான்.
அவன் சென்றபோது, ஸ்ரேயா சாதத்தில் தயிர் மட்டும் ஊற்றிக் கொண்டு சாப்பிட, பார்த்த சரத்திற்குக் கஷ்ட்டமாகிவிட்டது. தங்களுக்கு மட்டும் சமைக்க வேண்டுமென்றால்… பெண்கள் சமைக்கவே மாட்டார்கள், ஸ்ரேயா மட்டும் விதிவிலக்கா என்ன? இதெல்லாம் ஆண்களுக்குப் புரியாது.
மனைவியின் மீது கரிசனம் இருந்தாலும், சரத்தின் கோபமும் மட்டுப்படவில்லை. அதனால் வாங்கி வந்தவைகளை… மேஜையில் வைத்துவிட்டு, அறைக்குள் சென்று உடைமாற்றி விட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
அவன் சீக்கிரமே வந்தது ஸ்ரேயாவுக்கும் ஆச்சர்யம் தான். ஆனால் அவள் கோபமும் இறங்காததால்…. அவனிடம் போய்ப் பேசவில்லை. ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
மாலை எழுந்து வந்த சரத் மடிக்கணினியில் வேலைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். ஸ்ரேயாவும் ஒரு பக்கம் அவள் மடிக் கணினியுடன் அமர்ந்து கொண்டாள்.
இரவு சமைக்க ஆள் வரும் வரை, இருவரும் அப்படியே உட்கார்ந்து வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். சமையல் பெண்மணியைப் பார்த்ததும் சரத்திற்குத் திகில் பரவ… “ஸ்ரேயா, நைட் வெளியப் போய்ச் சாப்பிடுவோமா.” என்றான் கோபத்தையெல்லாம் விட்டு.
அவன் முகத்தில் இருந்த கலவரத்தை பார்த்து ஸ்ரேயாவுக்கும் சிரிப்பு வந்துவிட… ஆனால் அதை அடக்கிக் கொண்டு, “எனக்கு வெளிய சாப்பிட வேண்டாம்.” என்றாள். அவளை முறைத்து விட்டு. மீண்டும் மடிக்கணினியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
ஸ்ரேயா சமையல் அறைக்குச் சென்றவள், “நீங்க இன்னைக்குப் பாத்திரம் மட்டும் தேய்ச்சிட்டு போங்க. சமைக்க வேண்டாம்.” என்றாள்.
பத்து நிமிடத்தில் பாத்திரம் தேய்த்து விட்டு அந்தப் பெண்மணி சென்றுவிட, சரத் அதைக் கூடக் கவனிக்கவில்லை.
சங்கீதா அரைத்து வைத்து விட்டுச் சென்ற தோசை மாவு இருந்தது. செல்லில் வீடியோ பார்த்து மசால் தோசை செய்ய நினைத்து, அவள் வீடியோ பார்க்க, நிறைய வீடியோ இருந்ததால்.. எதைப் பார்ப்பது எனக் குழம்பிப் போய், சங்கீதாவை அழைத்தாள்.
அவர் வீடியோ கால் போட்டு சொல்லிக் கொடுக்க… அதன் படியே மசால் செய்தவள், அவரிடம் கேட்டே சட்னியும் அரைத்தாள்.
“இனி தோசை மெல்லிசா ஊத்திட்டு, சுத்தி நெய் விட்டு, வெந்ததும் நடுவில மசாலா வச்சிட்டு மூடி எடுக்க வேண்டியது தான்.”
“சரி அத்தை இனிமே நான் பண்ணிக்கிறேன்.” எனப் போனை வைத்து விட்டு சென்று, சரத்தை சாப்பிட அழைத்தாள்.
அவன் எழுந்து வருவதாகத் தெரியவில்லை. “நீங்க சாப்பிட்டா நான் போய்ப் படுப்பேன். எனக்குத் தூக்கமா வருது.” என்றதும்,
“சப்பாத்தி தான… நானே வச்சுச் சாப்பிடுக்கிறேன். நீ சாப்பிட்டு தூங்கு.” என அவன் சொல்ல,
“சப்பாத்தி இல்லை. மசால் தோசை…” என்றதும், அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன், மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு எழுந்து வந்தான்.
சிவந்த மொறுமொறுப்பான தோசையில், மசால் வைத்து ஸ்ரேயா எடுத்து வந்து கொடுக்க, “வாவ்… செம்மையா இருக்கு.” என்றவன், நான்கு தோசைகளை விழுங்கும் வரை, நிமிரவே இல்லை.
ஸ்ரேயா தனக்கு முதல் தோசையை எடுத்துக் கொண்டு அடுத்தத் தோசை ஊற்றியவள், அங்கேயே நின்று சாப்பிட… கைகழுவ வந்த சரத், “சாரி எனக்குத் தோசை ஊத்த வராது. இல்லைனா நான் ஊத்திக் கொடுப்பேன்.”
அவன் சொல்வதைக் காதில் வாங்கினாலும், ஸ்ரேயா சாப்பிடுவதில் கவனமாக இருக்க… “நான் வேணா கிட்சென் கிளீன் பண்றேன்.” என்றான்.
வேண்டாம் எனச் சொல்ல வந்தவள், சமையல் அறை இருந்த கோலத்தைப் பார்த்து வாயை மூடிக்கொண்டாள். சமைத்தே களைத்துப் போனாள்.
காய்கறி குப்பைகளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, ஈர துணிக் கொண்டு, அடுப்பு மற்றும் சமையல் மேடையை, சரத் துடைத்து எடுத்தான். கழுவதற்கு இருந்த பாத்திரங்களையும் கழுவி வைத்தான்.
சரத் மீண்டும் மடிக்கணியை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட, ஸ்ரேயா உறங்குவதற்குத் தயார் ஆகியவள், சரத் இருக்கும் இடம் வந்து, “நீங்க நம்ப மாட்டீங்க, இருந்தாலும் சொல்றேன். நான் எங்க அம்மாகிட்ட எதுவும் நம்ம வீட்டை பத்தியோ, உங்களைப் பத்தியோ குறையா சொன்னது இல்லை.” என்றாள்.
“உன்னை நம்ப மாட்டேன்னு நீயா முடிவு பண்ணிட்டா நான் பொறுப்பு இல்லை. உங்க அம்மா பேசினதுக்கு நீ காரணம் இல்லைனா, அது எனக்குச் சந்தோஷம் தான்.” என்றவன், மீண்டும் அவன் வேலையில் கவனமாக…அறைக்குள் வந்த ஸ்ரேயா மனதிற்குள் குமுறிக் கொண்டு இருந்தாள்.
“அப்படியா ஸ்ரேயா… மதியம் நானும் கோபத்துல பேசிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்றானா பாரு … அப்ப அவன் கோபத்தில் சொல்லவில்லை.. மனதில் இருந்ததைத்தான் சொல்லி இருக்கிறான்.” என நினைத்தவள், கடுப்புடன் படுத்துக் கொண்டாள்.
சரத் கோபத்தில் அவன் விட்ட வார்த்தையை மறந்து இருந்தான்.
மறுநாள் காலை இரவு தோசைக்குச் செய்த மசால் மீதம் இருக்க… அதைச் சூடு செய்துவிட்டு, பூரி போட்டு எடுத்தாள். அதுவுமே சங்கீதாவிடம் கேட்டுத்தான் செய்தாள்.
அவள் சிரமப்பட்டுச் சமைப்பது சரத்திற்குத் தெரிய… மதியம் வெளியப் போய்ச் சாப்பிடலாம் என்றான். அந்த வார இறுதி முடிந்தும் விட… வார நாட்கள் வழக்கம் போலச் சென்றது.
சமையல் ஆளிடம் சப்பாத்தி மட்டும் போட சொல்லிவிட்டு … சங்கீதாவை கேட்டு ஸ்ரேயாவே, தொட்டுக்கொள்ளக் குழம்பு செய்தாள்.
“நீயே ஆபீஸ்ல இருந்து டயர்டா வந்திருப்ப… ஏன் சமையல் வேற செஞ்சு கஷ்ட்டப்படுற… அந்த அம்மாவையே சமைக்கச் சொல்லு… நான் சாப்பிடுவேன், எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” சரத் சொல்ல…
வெளியே அவனிடம் ஒன்றும் சொலல்வில்லை என்றாலும், “நான் உனக்காக இஷ்ட்டபட்டுத் தாண்டா சமைக்கிறேன்.” என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
சரத்தின் அலுவலகத்தில் அவர்கள் ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிந்ததால்… அலுவலகத்தில் இருந்து, அவர்கள் டீம் முழுவதையும் எதாவது ரெசார்ட் சென்று வர சொல்லி இருந்தனர். குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு வரலாம்.
சரத் ஸ்ரேயாவிடம் சொன்ன போது, “நீங்க போங்க நான் வரலை.” என்றாள்.
“எனக்குப் போகத் தெரியும், அதை நீ சொல்ல வேண்டாம். வர்றியா வரலையா அதுக்கு மட்டும் பதில் சொல்லு.” என்றான்.
அப்போது ஸ்வாதி அழைத்து, “டேய் ரூம் புக் பண்ண போறோம் டா… நீ வர்ற தானே?” எனக் கேட்டாள்.
“நான் வருவேனான்னு எனக்குத் தெரியாது ஸ்வாதி.”
“ஏன் டா?”
“நாங்க கோயம்புத்தூர் போனாலும் போவோம்.”
“டேய்…. நீ மட்டும் வரலைன்னு வச்சுக்கோ அவ்வளவுதான். கோயம்புத்தூர் அடுத்த வாரம் போக முடியாதா?”
“நான் யோசிச்சு சொல்றேன் ஸ்வாதி.”
“எவ்வளவு நாள் டா யோசிப்ப… வார கடைசி டா… ரூம் கிடைக்காது.”
“கிடைக்கலைனா போகட்டும்.” என்றவன், போன்னை வைத்து விட…
தன்னால் ஒரு விஷயம் தடைப்பட வேண்டாம் என நினைத்த ஸ்ரேயா, “சரி போகலாம்.” என்றாள்.
“முழு மனசோட சொல்றியா? அப்புறம் அங்க வந்து பிரச்சனை பண்ணக் கூடாது.”
“நான் இதுக்கு முன்னாடி எத்தனை தடவை அப்படிப் பிரச்சனை பண்ணி இருக்கேன் சரத்.”
“போன வாரம் நீதான் ஆரம்பிச்ச, அது உனக்கு மறந்திடுச்சு போல.. பரவாயில்லை விட்டுடலாம்.” என்றவன், ஸ்வாதியை அழைத்து, தங்கள் இருவருக்கும் தனி அறை பதிவு செய்யச் சொன்னான்.
சனிக்கிழமை காலையும் இல்லாமல் மதியமும் இல்லாமல், இரண்டிற்கும் சேர்த்து நடுவேளையில் உணவு உண்டுவிட்டு ரெசார்ட் செல்ல கிளம்பினர்.
செல்லும் வழியில் ஸ்வாதியை அழைக்க, அவளது வீட்டிற்குச் சென்றனர்.
பழசாறு கொண்டு வந்து கொடுத்த ஸ்வாதியின் அம்மா “சரத் வரான், அப்புறம் நீயும் கூட வரேன்னு சொன்னதுனாலதான் அவளை அனுப்புறேன். கொஞ்சம் பார்த்துக்கோ மா…” என்றார்.
“போகாதேன்னு சொன்னா கேட்கப் போறது இல்லை. கல்யாணம் பண்ணி அனுப்புற வரை வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்க வேண்டியது தான். அப்புறம் கட்டுறவன் பாடு.” என அவர் சொல்ல, ஸ்ரேயா புன்னகையுடன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சரத் போகலாமா என்றதும், அவரிடம் விடைபெற்று வெளியில் வந்தனர்.
“ஸ்வாதி தனியா எங்கையும் போகக்கூடாது.” என அவள் அம்மா ஆரம்பிக்க,
“அம்மா, ப்ளீஸ்… எத்தனை தடவை சொல்வீங்க? காதுல இருந்து ரத்தம் வருது.” என்றவள் காரில் ஏறிக்கொண்டு, “சரத், சீக்கிரம் போ டா… இல்லைனா எங்க அம்மா ரத்தம் வர வைக்காம விட மாட்டாங்க.” எனச் சொல்ல…
“உனக்கு மட்டுமா வருது? எங்களுக்கும் தான். இப்படியெல்லாம் எங்களைக் கஷ்ட்டபடுத்தி நீ வரணுமா.. பேசாம உங்க அம்மா பேச்சை கேட்டு வீட்ல இருந்தா என்ன? உனக்கு டிரைவர் வேலை பார்க்கிறதாவது மிச்சம் ஆகும்.” என்றான் சரத்தும் சலிப்பாக.
“போடா… நான் வரலைன்னு சொன்னா விடுற மாதிரிதான்.” என ஸ்வாதி இளகாக எடுத்துக் கொண்டு சொல்ல, அது உண்மை என்பதால்… சரத் புன்னகையுடன் காரை ஓட்டினான். ஸ்ரேயாவிற்கு அவர்கள் இருவரையும் பார்த்து ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
Advertisement