Advertisement
12
புதன் அன்று அலுவலகம் சென்ற சரத்திற்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. மதிய இடைவேளையில் வந்த ஸ்வாதி, “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வா…” எனச் சரத்தை இழுத்துக் கொண்டு சென்றாள்.
“நானே ரெண்டு நாள் ஆபீஸ் வரலை. ஏகப்பட்ட வேலை இருக்கு… என்னன்னு சொல்லு?” என எரிச்சல் பட்டுக் கொண்டேதான் சரத் சென்றான். கீழ் தளத்தில் விருந்தினர் அறையில், அவன் வயதில் இருந்த ஒருவனைக் காட்டி, “இதுதான் சந்தோஷ். என்னோட வுட்பி.” என ஸ்வாதி அறிமுகம் செய்ய, சட்டென்று விளங்கவில்லை சரத்திற்கு, ஒரு நொடி விழித்தவன், அடுத்த நொடி புரிந்து, விரிந்த புன்னகையுடன் தனது கையைச் சந்தோஷிடம் நீட்டினான்.
“ஹாய் நான் சரத்.”
“தெரியும், இவளை ஞாயிற்றுக்கிழமை பெண் பார்த்ததில் இருந்து, உங்களைப் பத்தி தான் ஒரே பேச்சு. காதுல இருந்து ரத்தம் தான் வரலை.” எனச் சந்தோஷ் சொல்ல,
அவன் அதை மகிழ்ச்சியாகச் சொல்கிறானா அல்லது கடுப்பில் சொல்கிறானா எனச் சரத்திற்குப் புரியவில்லை. சந்தோஷின் முகம் சாதாரணமாகத் தான் இருந்தது.
“கொஞ்சம் ஆர்வக்கோளாறு. ஆனா ரொம்ப நல்ல பொண்ணு.” எனச் சரத் ஸ்வாதிக்கு நற்சான்றிதழ் கொடுக்க,
“உங்க ப்ரண்ட் ஆச்சே விட்டுக் கொடுப்பீங்களா?” என்றான் சந்தோஷ் கேலியாக. சிறிது நேரம் சந்தோஷின் வேலை அலுவகம் எனப் பேச்சு செல்ல, பிறகு சந்தோஷ் ஸ்வாதியை பார்த்து போகலாமா எனக் கேட்க,
“சந்தோஷ் வெளிய சாப்பிட கூப்பிடுறார். நீயும் வா சரத்.” என ஸ்வாதி அழைக்க, “நீங்களும் வாங்க.” என்றான் சந்தோஷும்.
“இல்லை, நான் ரெண்டு நாள் லீவ். இன்னைக்குதான் ஆபீஸ் வந்தேன். எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்குத் தயார் பண்ணனும்.நாம இன்னொரு நாள் போகலாம்.” எனச் சரத் சொல்ல, வாயேண்டா என ஸ்வாதி கண்களால் அழைக்க,
“நீ போயிட்டு வந்து எனக்கு எல்லாம் சொல்லணும். திடிர்ன்னு எப்படிக் கல்யாணம் நிச்சயம் ஆச்சன்னு.” என்றவன், இருவரிடமும் விடைபெறு செல்ல, ஸ்வாதி சந்தோஷோடு சென்றாள்.
சரத்திற்கு இன்னும் ஆச்சர்யமே… திரும்பி இருவரையும் ஒருமுறை பார்த்து விட்டு சென்றவன், இருக்கைக்கு வந்ததும் ஷ்ரேயாவை அழைத்தான்.
“ஷ்ரேயா, ஸ்வாதிக்கு மாப்பிள்ளை பார்த்திடாங்க போல… இப்பதான் அவரை அறிமுகம் செஞ்சா.. பாரேன் இந்தப் பொண்ணு திடிர்ன்னு கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றா… என்னால நம்பவே முடியலை.”
“அவங்க வீட்ல பார்த்திட்டு இருந்திருப்பாங்களா இருக்கும்.”
“ம்ம்… சரி சாயங்காலம் பார்க்கலாம். நிறைய வேலை இருக்கு. பாய்.” எனச் சரத் வைத்து விட…
ஸ்வாதியை நினைத்து ஷ்ரேயாவுக்கும் ஆச்சர்யமே… பாரு தன் நண்பனை காட்ட அதற்குள் அவள் வருங்காலக் கணவனை அலுவலகத்திற்கே அழைத்து வந்துவிட்டது. சரத் அவ்வளவு முக்கியம் இல்லையா அவளுக்கு… என்றுதான் நினைக்கத் தோன்றியது.
சரத் மீட்டிங் சென்றுவிட்டு வர, ஸ்வாதி வரவும் சரியாக இருக்க, அவளை இழுத்து வைத்து ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லு என்றான்.
“சந்தோஷ் கனடால வேலை பார்த்திட்டு இருக்கார். இப்ப லீவ்ல வந்திருக்கார். அவருக்குப் பெண் பார்த்திட்டு இருந்தாங்க. எங்க அப்பாவோட ப்ரண்ட் தான் உன் பெண்ணுக்கு சரியா இருக்கும்ன்னு சொல்லி, ரெண்டு குடும்பத்தையும் அறிமுகம் பண்ணாங்க.”
“நான் இஷ்ட்டம் இல்லாமத் தான்டா போனேன். ஆனா பார்த்ததும் ரெண்டு பேருக்கும் பிடிச்சிடுச்சு. இப்போ சந்தோஷ் ஊருக்குப் போறதுக்குள்ள கல்யாணம் வைக்கணும் சொல்லி… இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம். கல்யாணம் முடிஞ்சு சந்தோஷ் முதல்ல போயிடுவாங்க. எனக்கு விசா வந்ததும் நான் போவேன்.”
“உனக்கும் இப்பதான் சொல்றாளா?” எனச் சர்வேஷ் கேட்க,
“ஆமாம் மேடம்கு நம்மையெல்லாம் எப்படி இப்படி நியாபகம் இருக்கும்.” எனச் சரத் பொய்யாக நடிக்க,
“இங்க பாரு நான் அன்னைக்கே உனக்கு இதைச் சொல்லத்தான் போன் பண்ணேன். நீதான் எடுக்கலை…” என ஸ்வாதி முறைக்க,
ஞாயிறு அன்று இரவு ஸ்வாதி அழைக்கவே செய்திருந்தாள். அன்று தானே ஸ்ரேயாவோடு சண்டை, அவன் அம்மாவோடும் சண்டை என இருந்தான். அதனால் அழைப்பை ஏற்கவில்லை. மறுநாள் ஸ்வாதி அழைத்து அலுவலகம் வரவில்லையா எனக் கேட்டதற்கும், வள்ளென்று விழுந்து விட்டு வைத்திருந்தான்.
“நான் எவ்வளவு ஆசையா போன் பண்ணேன். நீ எடுக்கவே இல்லை.” என ஸ்வாதி சொன்னதும் சரத்திற்கு உருகிவிட்டது.
“சாரி, சாரி… நான் அன்னைக்குக் கொஞ்சம் மூட் சரியில்லாம இருந்தேன். தப்பு என் மேலத்தான்.” என்றான் சரத்.
“உனக்குச் சந்தோஷை பிடிச்சிருக்கா?” ஸ்வாதி கேட்க,
“அவனுக்குப் பிடிக்கலைனா வேண்டாம்ன்னு சொல்லிடுவியா?” சர்வேஷ் ஸ்வாதியை வம்பிழுக்க, சுவாதியின் முகம் கூம்பிவிட்டது.
“அவன் சும்மா கிண்டல் பண்றான் ஸ்வாதி. எனக்குச் சந்தோஷை பிடிச்சிருக்கு. ஆனா நீ வெளிநாடு போறது தான் வருத்தமா இருக்கு.” எனச் சரத் சொல்ல,
“ஆமாம் நீ இருந்தா எப்பவும் லொடலொடன்னு எதாவது பேசிட்டு இருப்ப… நீ போயிட்டா நாங்க யாரை வச்சு டைம் பாஸ் பண்றது.” எனச் சர்வேஷ் அவளை வார….
“டேய்… உன்னை….” என ஸ்வாதி அவனை அடிக்கச் செல்ல,
“நான் நிஜமாவே உன்னை மிஸ் பண்ணுவேன் ஸ்வாதி.” என்றான் சரத்.
“எனக்கும் கஷ்ட்டமாத்தான் டா இருக்கு. நான் கூடச் சந்தோஷ்கிட்ட கேட்டேன். நீங்க இங்கேயே இருக்க முடியாதான்னு. அவர் முடியாதுன்னு சொல்லிட்டார். என்ன பண்ண சொல்ற…”
சுவாதியின் வருத்தம் பார்த்து சரத், “ஹே… நான் சும்மா சொன்னேன். நாங்களும் எப்ப கனடா பார்க்கிறது. உன்னைச் சாக்கு வச்சு நாங்களும் அங்க வருவோம் இல்ல…” சரத் உற்சாகமாகச் சொல்ல,
“நிஜமா வருவியா…” என் ஸ்வாதி நம்பியும் நம்பாமலும் கேட்க,
“கண்டிப்பா வருவோம். நானும் ஸ்ரேயாவும் வரோம்.” என்றான் சரத்.
“சந்தோஷ் இருக்கிறது டபுள் பெட்ரூம் வீடுதான். நீ வந்தா தங்க வசதியா இருக்கும். எங்க வீட்ல தங்கியே எல்லா இடத்துக்கும் போகலாம். வந்தா ஒரு மாசமாவது இருக்கிற மாதிரி வா டா…” என ஸ்வாதி எதோ நாளையே நடக்கப் போகும் விஷயம் போலப் பேச…
“முதல்ல நீ போய் அங்க செட்டிலாகு. அப்புறம் நாங்க வரோம்.” என்றான் சரத். அது தோழியைச் சமாதானம் செய்வதற்காகச் சொன்னதே… வெளிநாடு செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமும் அல்ல… சரத் சொன்னால்.. ஸ்வாதி கண்ணை மூடிக் கொண்டு நம்புவாள்.
வெளியன்று மதிய உணவு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உண்ண, மறுநாள் சந்தோஷோடு வெளியே போவதாக ஸ்வாதியே உளறி விட….
“எப்பவும் சரத் இல்லாம போக மாட்ட… அவன் உன்னை விட்டு போனாலும் சண்டைக்குப் போவ… உன் ஆளு வந்ததும், நீ மட்டும் தனியா போற.” எனச் சர்வேஷ் கேட்க, ஸ்வாதி சரத்தை சங்கடமாகப் பார்க்க,
“ஹே, அவன் கிடக்கிறான். நான் அப்படியெல்லாம் நினைக்கலை… நீ சந்தோஷோடு போயிட்டு வா…” என்றான் சரத்.
சர்வேஷ் அங்கிருந்து சென்றதும் ஸ்வாதி, “நான் நாம எல்லாம் சேர்ந்து போகலாம்ன்னு தான் சொன்னேன். சந்தோஷ் தான் தனியா வா… எதோ பேசணும் சொன்னார். நான் என்ன டா பண்ணட்டும்.” என்ற சுவாதியின் கண்கள் கலங்க…
“ஹே… விடு, இது சின்ன விஷயம். ப்ரண்ட்ஸ்ன்னா எப்பாவும் சேர்ந்துதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. உனக்கு எந்தக் கஷ்ட்டமும் வராது, அப்படி வந்தா நான் உன் ப்ரண்ட் இருக்கிறது மட்டும் மறந்திடாத… நீ சந்தோஷமா இருக்கணும் ஸ்வாதி.”
“ம்ம்… தேங்க்ஸ் டா… என்னோட நிலைமையைப் புரிஞ்சுகிட்டதுக்கு.”
“இதெல்லாம் பார்க்கும் போது, ஷ்ரேயா எவ்வளவோ மேல். அவ நம்மைப் புரிஞ்சிகிட்டா இல்ல… அவளுக்கும் இதே மாதிரி என்னோட தனியா இருக்கணும்னு ஆசை இருந்திருக்கும். ஆனா உன் பிரண்டை விட்டு வான்னு எல்லாம் அவ சொன்னது இல்லை.” மனைவியின் நினைவில் சரத்தின் முகத்தில் மென்னகை படர…. அதைப் பார்த்த சுவாதியும் புன்னகையுடன் ஆமோதித்தாள்.
வீட்டிற்கு வந்தும் சரத் ஸ்ரேயாவிடம் அதையே சொன்னான். “நான் சொன்னாலும் நீங்க உங்க பிரண்டை விடுற ஆளா…”
“நீ சந்தோஷ் மாதிரி நேரா சொன்னது இல்லைதான். ஆனா உனக்கு ஸ்வாதி வர்றது அவ்வளவு இஷ்ட்டம் இல்லைன்னு எனக்குப் புரிஞ்சது. அதனாலதான் நானே அவகிட்ட எதாவது சொல்லி சமாளிச்சேன்.”
சரத் சொல்வது உண்மை என்பதால் ஷ்ரேயா மறுத்து எதுவும் சொல்லவில்லை. பொங்கல் விடுமுறை வார இறுதி என சேர்த்து ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை வர… சரத்தும் ஸ்ரேயாவும் கோயம்புத்தூர் கிளம்பி சென்றனர்.
ஷ்ரேயா வீட்டை ஒதுங்க வைப்பதில் இருந்து, பொங்கல் கோலம் போடுவது என எல்லாவற்றிலும் ஆர்வமாகப் பங்கெடுக்க… வீட்ல ஒரு பொம்பளை பொண்ணு இருந்தாலே தனிக் கலை தான் எனச் சரவணன் மருமகளைக் குறித்துச் சொல்ல,
“ஏன் பா நானும் தானே நைட்டெல்லாம் உட்கார்ந்து அம்மா போடும் கோலத்திற்குக் கலர் எல்லாம் கொடுப்பேன்.” எனச் சரத் முறுக்க…
“என்ன இருந்தாலும் பொண்ணுங்க பண்ணா தனி அழகுதான்.” என்றார் சரவணன்.
“உங்க மருமகளையே கொண்டாடுங்க. நீங்க பொண்ணு பெத்திருக்க வேண்டியது தானே யாரு வேண்டாம்னு சொன்னது.”
“டேய் சரத், பொண்ணுங்க இருந்தா வீட்டுக்குத் தனிக் கலைதான். அதுக்காகப் பசங்க குறைன்னுஅர்த்தம் இல்லை. நீ செய்யும் போதும் எங்களுக்குப் பெருமையாதான் இருக்கும்.”
அம்மா சொன்னதும் சரத் மனைவியைப் பெருமையாகப் பார்க்க, “இன்னும் சின்னக் குழந்தைதான் நீங்க.” என்றாள் ஷ்ரேயா.
கோலம் போட்டு முடித்து எல்லாவறையும் எடுத்து வைத்த சங்கீதா, “போங்க, போய்ச் சீக்கிரம் படுங்க. காலையில நல்ல நேரத்தில பொங்கல் வைக்கணும். அப்புறம் ஷ்ரேயா வீட்டுக்கு வேற நீங்க போகணும்.” என இருவரையும் உள்ளே அனுப்பினார்.
மறுநாள் பட்டுப் புடவை கட்டி ஷ்ரேயா வீட்டில் வளைய வர…வீடே கலகப்பாக இருந்தது. தனது பெற்றோர் சொன்னதைச் சரத் தானும் உணர்ந்தான். மனைவியை ரசனையாகப் பார்க்கவும் தவறவில்லை. மொட்டை மாடியில் பொங்கல் பானை கரும்பு எல்லாம் சூரியனுக்குப் படைத்து பூஜை செய்தனர்.
பொருட்களை மாடிக்கு எடுத்துச் சென்றது, திரும்பக் கீழே எடுத்து வந்தது என ஷ்ரேயா மிகவும் களைத்துப் போனாள். காலை உணவு உண்டது வேறு ஒருமாதிரி இருக்க, சோர்வாகச் சென்று படுத்து விட்டாள்.
சங்கீதா அவள் வீட்டினருக்கு பொங்கல், பலகாரம், தாம்பூலம் என எடுத்து வைத்தவர், ஷ்ரேயாவை தேட, சரத் சென்று அறையில் பார்த்தவன், அவள் படுத்திருக்கிறாள் என்றதும், சங்கீதா அவளிடம் சென்றார்.
“என்ன ஷ்ரேயா படுத்திட்ட உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பலை?”
Advertisement