Advertisement

“விசா விஷயமா நேற்று திருச்சி வரை போயிட்டு வந்தேன்டா…”
“நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது இந்த முறை திவ்யா வீட்டுக்காரருக்கும் ஏதாவது ஏற்பாடு செய்யுங்க.” அவன் மட்டுமே கவலையின்றி ஊதாரியாய் சுற்றுவானே ஒழிய, தங்கை மீது சற்று பாசம் அதிகம் ஆனால் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவன் தங்கை திவ்யாவின் கணவர் திருச்சியில் ஒரு பெரிய கடையில் விற்பனை பிரிவில் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று பணம் அதிகம் சேர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சிலபல இடங்களில் பணம் கொடுத்து ஏமாந்திருக்க, தச்சன் குணா மாமாவை நாடினான். அவரும் தக்க வேலையும் சமயமும் அமைந்தால் கண்டிப்பா அழைத்துச் செல்வதாய் சொல்லியிருக்க, அதை நினைவூட்டியே பேச்சை துவங்கினான் தச்சன்.
“அதென்ன திவ்யா வீட்டுக்காரர்? மாமான்னு சொல்லு இல்லை அத்தான்னு சொல்லு.” குணாவின் மாமா கண்டிக்க, துவாலையை உதறி அங்கிருந்த கட்டையில் போட்டுவிட்டு சட்டையை மாட்டியபடியே, “வந்தா சொல்ல மாட்டேனா… அப்படியெல்லாம் கூப்பிட வரல மாமா… நான் அவரை முறை சொல்லி கூப்பிடுவதில்லைனு திவ்யாவுக்கு கூட கோபம்…”
“எனக்கு நல்லா வந்துரும் வாயில… குணா உன் பிரென்ட் வெளியே வரமுடியாதபடி ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அம்மாட்ட வசமா சிக்கப்போறான் பார்த்துட்டே இரு.”
“என்ன எல்லோரும் கூட்டு களவாணிங்களா? என் அப்பாரு என்னவோ என்னை அடக்க ஒருத்தி வருவான்னு சாபம் கொடுத்துட்டு, எவளோ ஒருத்தியை எனக்கு பார்த்து வச்சிருக்காரு. நீங்களும் இப்போ அதையே தூக்கிட்டு வரீங்க?” என்று முறைத்தவன் திண்டின் மீது ஏறி அமர, அவன் அருகிலேயே அமர்ந்தனர் குணாவும் அவன் மாமாவும்.
“பொண்ணு பார்த்திருக்காங்களா? சொல்லவே இல்லை?” தச்சனைப் போலவே ஆர்வமாய் கேட்டான் குணாவும்.
“நீ வேற இம்சையை கூட்டாத குணா. நானே செம்ம காண்டுல இருக்கேன்.” முகம் இறுக எதிரே தெரிந்த மரங்களை வெறித்தவன், “என்னமோ அவர் கல்யாணம் செய்துக்க போற மாதிரி பொண்ணு பார்த்து முடிவு செய்து வச்சிருக்காரு. என்னை கேட்கணும், என் விருப்பம் முக்கியம்னு என்னைக்குமே நினைச்சது இல்லை அவரு… செம்ம காண்டாகுது அவரை நினைச்சாலே…” என்றவன் திண்டில் ஓங்கி குத்த, பதறிப்போய் அவனை தடுத்தனர் மற்ற இருவரும்.
“என்னை அடிக்க முடியாத கோபத்தை அந்த திண்டு மேல காட்டிட்டு இருக்கானா?” என்ற கம்பீரக் குரல் அவர்களின் முதுகுப்புறம் கேட்க குணாவும் அவன் மாமாவும் தான் பதறிப்போயினர்.
“அப்படியெல்லாம் இல்லை அப்பா… சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்று குணா சமாளிக்க, அன்பரசன் குணாவின் மச்சினனை நலம் விசாரித்துவிட்டு தன் மகன் முகம் பார்த்தவர், “இத்தனை நாள் நீ கேட்டுட்டு இருந்தது உனக்கு கிடைக்கும் நீ இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தால்…” என்று ஒரேபோடாய் போட, திண்டிலிருந்து குதித்து இறங்கிய தச்சன் நம்பாத பார்வை பார்த்தான் அவரை.
“என்ன திடீர்னு? என் மேல நம்பிக்கை வந்துடுச்சா?” என்று கேட்ட தச்சனின் கண்களில் ஆர்வம் மெல்ல வந்து போனது.
“அந்த பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று அவனை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, அவரின் பார்வையால் எழுந்த கோபத்தின் வேகத்தை காலை தரையில் உதைத்து கட்டுப்படுத்தினான் தச்சன்.
அவனின் தோளை அழுத்தி அவனை சாந்தப்படுத்த முயற்சி செய்த குணா, “அப்பா சொன்னா சரியா இருக்கும். நீ முரடு பிடிக்காத,” என்க,
“உன் அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும். நீ அப்பா காட்டுற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒழுங்கா வாழ்க்கையை வாழுற வழியைப் பாரு.” என்று குணாவின் மாமாவும் தச்சனின் தோளை தட்டிவிட்டு குணாவுடன் கிளம்ப, கட்டுக்கடங்கா ஆத்திரம் எழுந்தது அவனுக்கு. அந்த ஆத்திரத்தில் மனம் துணை தேட, தன் சட்டைப் பையை துளாவியவன் ஒரு சிகரெட்டை பற்றவைத்து புகையாய் ஆத்திரம் தீர ஊதித் தள்ளினான்.
***
நித்யாவிடம் அரட்டை அடித்துக்கொண்டே தன் மடியில் இருந்த மழலைகளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தவள் தன் அன்னை வந்து உலுக்கவும் தான் அழைப்பை துண்டித்தாள்.
“என்ன அம்மா?”
“அப்பா உன்னிடம் எதுவோ சொல்லனுமா…” என்றவர் கணவரை காண, அவளின் பார்வையும் அவரிடம் சென்றது.
சற்று தயங்கியவர் மகளை சங்கடமாய் பார்த்து, “நம்ம சொந்தத்தில் இருந்து உனக்கு நல்ல வரன் எல்லாம் வருது. சீக்கிரம் முடிச்சிடலாம்னு பார்க்குறேன்.” என்று மென்று விழுங்கி பாதி விஷயத்தை மட்டும் சொல்ல, அவரை கூர்மையாய் பார்த்தாள் அவள்.
“எதுக்குப்பா இப்போ எனக்கு கல்யாணம்? நான் மேல்படிப்பு படிக்கணும். வேலைக்கு போகணும், அப்புறம் தான் எல்லாமே.” வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய் அழுத்தமாய் தன் முடிவை சொன்னாள் குந்தவை.
அவளது தந்தை நந்தனோ மெலிதாய் சிரித்துவிட்டு மகளை அருகில் அழைத்தார். தன் மடியில் இருந்த அக்காவின் இரட்டை பிள்ளைகளை தரையில் அமர்த்தி விளையாட பொருட்கள் கொடுத்துவிட்டு தந்தையின் அருகில் வந்தாள்.
“சூழ்நிலையை புரிஞ்சிகிட்டு அதற்கேற்றாற் போல முடிவெடுப்பேன்னு தெரியும். அந்த நம்பிக்கையில் தான் அப்பா முடிவெடுத்துட்டேன்.” என்க, மளுக்கென்று கண்ணீர் திரண்டது அவளது அகண்ட விழிகளில். 
யார் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசிடும் தைரியம் கொண்டவளுக்கு ஒரே ஒரு பலவீனம், அவளது தந்தை. அவரின் பாசம், அவரின் கோபம். எவ்வளவு முயன்றும் தந்தையின் பாசம், கோபம், அவள் மீதான அவரின் கர்வம், நம்பிக்கை என அவர் எதை முன்வைத்து அவளிடம் யாசிக்கும் காரியங்களுக்கும் அது சரியா தவறா என்று யோசியாமல் தலையாட்டி விடும் குணத்தை அவளால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவள் யோசிக்கும் முன்னர் அவள் தலை தானாக ஆகிவிடும் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அந்த கெட்ட பழக்கமே இப்போது அவர் நம்பிக்கையுடன் பேசவும் முந்திக்கொள்ள, அவரின் முடிவை எதிர்த்த புத்தி, கண்ணீராய் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தது.
“அழாத குந்தவை. உனக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்துட்டா நாங்க அடுத்தது உன் அக்கா வானதியையும், அவள் பிள்ளைகளையும் பார்ப்போம். ஓட தெம்பு இருக்கும் போதே உனக்கு கல்யாணத்தை பண்ணிட்டு, பசங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்சதை சேர்த்து வைக்கணும். எங்களுக்கு பிறகு வானதி நிம்மதியா வாழ வழி செய்யணுமே.” என்றவர் குரல் இறுதியில் உடைந்துவிட, வாழ்க்கையின் பாரத்தை தாளமுடியாத துக்கம் அந்த குடும்பத்தினர் தொண்டையை அடைத்தது.
“ஏன் இப்படி பேசுறீங்க? நான் மேல்படிப்பு கூட அப்புறம் படிச்சிக்குறேன். இன்னும் ரெண்டு மாதத்தில் டிகிரி முடிஞ்சிடும். உடனே வேலையில் சேர்ந்திடுறேன்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து அக்காவை பார்த்துக்கலாம் அப்பா.” 
“நீயாவது நிம்மதியா நிறைவா வாழுவதை பார்த்தால் தான் எங்களுக்கே வாழ்க்கையில் பிடிப்பு வரும் குந்தவை. இதற்கு மேல உன் விருப்பம்.” என்று அவள் அன்னை சுமதியும் சேர்ந்துகொண்டு கண்ணை கசக்க, குந்தவைக்கு நெஞ்சு அடைத்தது.
கண்ணீர் திரண்டு மங்கலாய் தெரிந்த பார்வையுடனே வானதியை காண, அவளோ, “நீ எங்க இருந்தாலும் உன்னோட வாழ்க்கையை பிசிறில்லாமல் செதுக்கிப்ப குந்தவை. எனக்காக யோசிக்க வேண்டாம், உனக்கு என்ன தோணுதோ செய். அம்மாவும், அப்பாவும் அவங்களோட துக்கத்தை மட்டும் மனசுல வைச்சு பேசுறாங்க.” என்று தெளிவில்லாமல் வானதி குழப்பியடிக்க, குந்தவையின் பார்வை தன் பெற்றோரிடம் நிலைத்தது. அவர்களின் வேண்டலும் நியாயமானதாகவே இருந்தது. 
மூத்த மகள் வானதி மணமாகி இரண்டு வருடங்களிலேயே ஆணொன்று, பெண்னொன்றாய் ஒரு வயது இரட்டை பிள்ளைகளுடன் கணவனை இழந்து தனியாய் பிறந்த வீட்டிற்கு வந்துவிட, அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அந்த மழழைகளும், குந்தவையும் தான்… இப்போது குந்தவையின் இளங்கலை படிப்பு முடிய, அவளை மேலே படிக்க வைத்து அதற்கேற்றாற் போல சீர் வரிசைகளுடன் திருமணம் செய்துவைக்க தெம்பில்லை நந்தனுக்கு. மூத்த மகளையும் பார்க்க வேண்டும், இரட்டை பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டுமே… எதிர்காலம் குறித்த பயம் அதிகரிக்க அதிகரிக்க, இறுதிக்காலம் குறித்த ஐயம் கழுத்தை நெறிக்க, தாங்கள் கண் மூடுவதற்குள் குந்தவையை மட்டுமாவது கரை சேர்த்திட வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமானது. அதுவே அவசர அவசரமாய் குந்தவைக்கு மாப்பிள்ளை பார்க்க தூண்ட, தெரிந்தவர்களிடம் சொல்லி இருந்தார். இப்போது அவர்களுக்கு தோதான இடம் வந்திருக்கிறது.
“உங்களுக்காக மட்டும் தான் சம்மதிக்கிறேன். ஆனால் எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு. அதற்கு ஒத்துவந்தால் மட்டும் தான் திருமணம்.” என்று கட்டளை போட, மகள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை யூகித்திருந்தார் நந்தன்.
“மாப்பிள்ளை கண்டிப்பா விவசாயம் பார்க்கும் விவசாயியா இருக்கக்கூடாது. நல்லா படிச்சிருக்கணும். சிட்டி பையனா இருக்கனும். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது. நான் மேல்படிப்பு படிக்க சம்மதிக்கணும். வேலைக்கு கண்டிப்பா போவேன், என்னோட சம்பாத்தியம் எல்லாம் வானதி பசங்களுக்குத் தான். இதற்கெல்லாம் ஒத்துவந்தால் எனக்கு சம்மதம்.” என்று குந்தவை கராறாய் சொல்ல, மகளை விழியெடுத்து பார்க்காமல், மண்டையை மெல்ல ஆட்டினார் நந்தன்.
அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பெருந்தச்சன் விவசாயம் செய்கிறான் என்று சொந்தத்தில் ஒருவர் சொல்லி விசாரித்து தெரிந்துகொண்ட ஒரே காரணத்திற்காகவே அந்த இடத்தை பேசி முடிப்பதில் ஆர்வமாய் இருக்கிறார் என்று தெரிந்தால் என்ன செய்வாளோ… அதுவும் அவன் வசிக்கும் ஊர் பெருநகரமின்றி பத்தாயிரத்திற்கு குறைவாக வசிக்கும் ஊராட்சி என்று தெரிந்தால்…
வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில கொள்கைகளை வைத்திருப்பவள், எப்படியும் வாழலாம் என்ற கொள்கை உடையவனுடன் சேர்ந்தால்?

Advertisement