Advertisement
அத்தியாயம் 19-2
வேந்தன் மில்லிலிருந்து திரும்பியவனுக்கு தாமரையின் நினைவாகவே இருக்க அவளை அலைபேசியில் அழைத்திருந்தான் அவன். அவள் அப்போது தான் உறங்க சென்றவள் அவனின் அழைப்பை பார்த்ததும் புன்னகையுடன் அதை ஏற்றாள்.
மொபைலை காதில் வைத்தவள் “ஹலோ ” என்று சொல்ல அத்தனை ஆர்வம் இருந்தது அவள் குரலில். தான் இவளை மிகவும் சோதிக்கிறோமோ என்று அந்த நொடி தோன்றியது வேந்தனுக்கு.திருமணம் நிச்சயம் ஆன நாள் முதல் அவளிடம் சரியாக கூட பேசி இருக்கவில்லை.
தாமரையின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் கண்டிப்பாக ஒரு சண்டை வந்திருக்கும் ஆனால் தாமரை அதுபற்றி எதுவுமே அவனிடம் இதுவரை கேட்டிருக்கவில்லை.இப்போதும் அவன் அழைக்கவும் அவன் குரல் கேட்கும் ஆர்வம்தான் அவள் குரலில் என்பதை புரிந்தவனுக்கு விண்ணில் பறப்பதை போலிருந்தது.
இவன் யோசனை முடிவதற்குள் தாமரை பலமுறை “ஹலோ ஹலோ ” என்றிருந்தாள்.அவள் குரலில் நிகழ்வுக்கு வந்தவன் ‘ஏண்டி கத்துற ” என்று கேட்க
“அது சரி. போன போட்டுட்டு ஒரு வார்த்தை கூட பேசாம இருந்தா என்னன்னு நினைக்கிறது.அதான் இருக்கீங்களான்னு கூப்டு பார்த்தேன் “
“எப்படி ஹலோ ஹலோ ன்னு தான் கூப்பிடுவியா புருஷனை“
“அதெல்லாம் புருஷனை எப்படி கூப்பிடணும்ன்னு தெரியு எங்களுக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் கூப்பிடுவேன்,அப்போ கேட்டுக்கோங்க “
“பார்றா. ஏன் இப்போவே தான் கூப்பிடு மாமாவை “
“யார் மாமா“
“அடிப்பாவி.என்னையா யாருன்னு கேட்கிற “
” ஆமா.லவ் பண்றேன்னு பின்னாடியே சுத்தினவரு.இப்போ கல்யாணம் முடிவானதும் ஒரு போன் கூட பண்ணல. இதுல மாமாவாம்.அதெல்லாம் சொல்ல முடியாது” என்று அவள் முறுக்கி கொள்ளவும்
” ஹேய் இப்போவும் நாந்தான்டி கூப்பிட்டு இருக்கேன்.நீ போன் பண்ணி இருக்கலாம்ல ” என்று கேட்க
“அப்போ சார் என்னோட மிஸ்ட் கால்ஸ கூட பார்க்கல இதுவரைக்கும்” என்று அவள் கோபமாக கேட்க
“ஹேய் செல்வி.கோபப்படாத, கொஞ்சம் வேலை அதிகம்டி மில்லுல. நீ அந்த நேரம் தான் கூப்பிட்ட.உங்கிட்ட பேச ஆரம்பிச்சா முடிக்க மாட்டேன் அதான் எடுக்கவே இல்ல.” என்று கூற
“நீங்கதானே பேச ஆரம்பிச்சா முடிக்கவே மாட்டீங்க.அப்டியே பேசிட்டாலும் போங்க ” என்று நொடித்து கொண்டாள் அவள்.
“நிஜமா தாண்டி. மாமனை நம்பு ”
“ம்ம் நம்புறாங்க மாமனை. மில்லுல வேலை அதிகம் ன்னா கூட ஆளுங்களை சேர்த்துக்கலாம்ல.ஏன் தனியா இழுத்து போட்டுக்கறிங்க.” என்று அவள் கேட்கவும்
“எத்தனை பேர் இருந்தாலும் நம்ம வேலைய நாம தான் செய்யணும். ஆளுங்க இருந்தாலும் அவங்க சரியா செய்றங்களான்னு பார்க்கணும்ல. அதுவும் இப்போ புது பிளான்ட் போட வேலை நடந்திட்டு இருக்கு. அதான் கொஞ்சம் வேலை அதிகம்.இது முடிச்சிட்டா கொஞ்சம் ப்ரீ ஆகிக்கலாம்” என்று அவன் எடுத்துக் கூற
“இப்போதான் உடம்பு சரி ஆகி இருக்கு.திரும்ப இழுத்து வீட்டுக்காதிங்க. என்ன செஞ்சாலும் உங்களை பார்த்துக்கணும் அதுவும் முக்கியம் தான் ” என்று தாமரை கூற
“அதுக்குதான் டாக்டர் அம்மா இருக்காளே,அவ பார்த்துப்பா. சீக்கிரமா வந்திடு செல்வி,நிஜமா உன்னை விட்டு இருக்க முடியல என்னால ” என்று அவன் உருகி கூறவும்
“இன்னும் மூணு ராத்திரி ரெண்டு பகல் காத்திருங்க.அப்புறம் எப்பவும் உங்ககூட தான் இருப்பா உங்க டாக்டரம்மா.” என்றாள்.
” இன்னும் மூணு நாள் இருக்குடி. வெயிட் பண்ணியே ஆகணுமா,இப்போ வரவா உங்க வீட்டுக்கு. ” என்று அவன் கேட்கவும் பதறி போனவள்
” ஆத்தி, நல்லா தான் போடறீங்க பிளான். போய் தூங்குங்க, வீட்டுக்கு வாறாராம்.நல்ல நேரம் பார்த்தீங்க மாமனார் வீட்டுக்கு வர, போய் தூங்குங்க ” என்றவள் அலைபேசியை வைத்துவிட வேந்தனும் புன்னகையுடன் அவளின் நினைவிலேயே உறங்கி போனான்.
அடுத்த நாள் காலை இருவீட்டு வாசலிலும் கன்னிக்கால் ஊன்றி வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் வணங்கி முடிக்க, திருமண நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடங்கின. இருவீட்டிலும் பிள்ளைகளுக்கு தனித்தனியாக நலங்கு வைத்து பெண்பிள்ளைகளை மஞ்சள்நீராட்டி திருமணத்திற்கு தயார்படுத்த இருவீடுகளும் கல்யாண களை கட்டின.
வீடு முழுவதும் சொந்தங்கள் நிறைந்திருக்க சக்தி காலையிலேயே தாமரையின் வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். பந்தல்கால் ஊன்றும் நிகழ்வில் கலந்து கொண்டவள் தன் தோழியை வாழ்த்திவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தாள்.
இங்கு வேந்தனின் வீட்டில் ரங்கநாயகி பரபரப்பாக கல்யாண பலகாரங்கள் தயாரிக்கும் வேலையை தொடங்கி இருந்தவர் நிற்க கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தார்.அவரவர் கேட்பதை எடுத்து கொடுத்துக் கொண்டு செவ்வியையும் ஒரு பார்வை அவ்வபோது பார்த்துக் கொண்டே அவர் சுற்றி வர,மதி நாள் முழுவதும் செவ்வி இருக்கும் இடத்தில தான்
முன்பு நந்தினியுடன் சேர்ந்து கொண்டு அவளை ஒரு பொருட்டாக கூட மதித்திராதவள் இப்போது அண்ணியின் அருமையை உணர்ந்திருக்க,எந்த நேரமும் அவளை ஓட்டிக்கொண்டே இருந்தாள். குட்டி மாறனும் மதியிடம் நன்றாக ஒட்டிக்கொள்ள செவ்வி சற்று நிதானமாக என்றாலும் தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை பெண்ணிற்கு முதல் நலங்கு வைத்து முடித்திருக்க, வேந்தனையும் அதிகமாக வெளியில் செல்லவேண்டாம் என்று கூறி விட்டிருந்தார் ரங்கநாயகி. வேந்தன் வீட்டிலிருந்தபடியே மில் விவரங்களை அன்புவிடம் கேட்டு தெரிந்து கொள்ள அன்பு அனைத்து வேலைகளையும் தானே பார்த்துக் கொண்டவன் மதியத்திற்கு மேல் தோழனுடன் வந்து இனைந்து கொண்டான்.
ரங்கநாயகி அவனையும் ஏதோ ஒரு வேலை கொடுத்து துரத்திக் கொண்டே இருக்க நொந்து போனான் அவன். மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுத்துவிட வேண்டிய இனிப்பு பலகாரங்களை கன்னிக்கால் ஊன்றிய அன்று மதியம் சக்தியை வர சொல்லி ரங்கநாயகி அவளிடம் கொடுத்து அனுப்ப, வேந்தன் சக்தியை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
வேந்தன்,சக்தி, செவ்வி, மதிமாறன்,தாமரை இவர்கள் எல்லாம் ஒரே அணியினர் சிறுவயதில். அத்தனை பேருக்குமே ஒருவரிடம் மற்றவர்க்கு அத்தனை பாசம் இருக்கும் எப்போதும்.
வளர வளர மங்கையின் குணத்தை அறிந்து கொண்டவன் செவ்வியிடம் ஒதுங்க ஆரம்பித்து, அந்த குழுவில் இருந்தே மொத்தமாக ஒதுங்கி போனான். மங்கையின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவன் செவ்வியை தன் அண்ணியாக ஏற்க மறுத்ததே. அந்த அளவிற்கு மங்கை அவனை பாதித்து இருந்தார்.அதுவும் சக்தி விஷயத்திற்கு பிறகு செவ்வியிடம் அவன் பேசிக்கொண்டிருந்த ஓரிரு வார்த்தைகளும் நின்றுபோக, அவ்வபோது சக்தியிடம் மட்டும் பேசுவான்.
மற்றபடி பெரிய குடும்பத்தின் சகவாசமே வேண்டாம் என்று முற்றிலுமாக ஒதுங்கி தான் விட்டான். இப்போது தன் திருமணத்தில் தன் தோழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை புன்னகை முகமாக பார்த்துக் கொண்டிருக்கையில் செவ்வியின் நினைவு வர அவளை திரும்பி பார்த்தான் அவன்.
அவன் அண்ணியும் அதே வாஞ்சையுடன் தான் சக்தியை பார்த்துக் கொண்டிருந்தாள். இவளையா நாம் தவறாக நினைத்தோம். இவளை விட யாரால் என் அண்ணனை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும் என்று இப்போது தோன்ற செவ்வியை பார்த்திருந்தான் அவன். சிறுவயதில் அண்ணன் அண்ணி என்று எந்த முறையும் இல்லாது பேர் சொல்லி தான் கூப்பிட்டு கொள்வது அனைவரும்.
மதிமாறன் இவர்களை விட பெரியவன் என்பதால் தாமரை அவனை அண்ணன் என்று அழைக்க, செவ்வி முறைவைத்து மாமா என்று அழைப்பாள். மற்றபடி இவர்களுக்குள் பேர் சொல்லி கூப்பிட்டு கூப்பிடுவதே மிகவும் மரியாதையான அழைப்பு தான். அப்படிதான் இருக்கும் இவர்களின் உரையாடல்கள்.
அதிலும் மங்கை தாமரையை பார்க்கும் போதெல்லாம் முறைப்பவர் அவளையும் சக்தியையும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க, ஒரு வயதிற்கு மேல் அவரின் பயத்தை புரிந்து கொண்டவள் வேண்டுமென்றே அவர் முன்னிலையில் மட்டும் மதிமாறனை “மாமா” என்று அழைத்து வெறுப்பேத்துவாள். அவருக்கு ஏனோ அந்த வயதிலேயே இவளை கண்டால் ஆகாது.
தன் பிள்ளைகளின் வாழ்வை கெடுப்பதாகவே அவர் தாமரையையும்,சக்தியையும் அவர் எப்போதும் சாடுவார். ஆனால் இன்று ஒருத்தி அவர் மருமகள், அடுத்தவள் அவர் அண்ணனின் மருமகள். பெரிய மகளின் வாழ்வை பறித்துவிடுவாள் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்க, அவர் சிறிய மகளின் வாழ்வு தானாகவே அவர்களின் செய்கையால் பறி போய் இருந்தது.
ஒருவேளை நந்தினி இவர்களுடன் இவர்களில் ஒருவராக இருந்திருந்தால் வேந்தனின் பார்வை அவள்மீது விழுந்திருக்குமோ என்னவோ ? அவள் எப்போதும் அவள் அன்னையுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்க, இவர்களை ஒன்றாக பார்த்தாலே மங்கையிடம் வத்தி வைத்து விடுவாள் அதனால் தானோ என்னவோ அந்த சிறு வயதிலேயே அவளை அறவே பிடிக்காது வேந்தனுக்கு.
மங்கை பாகுபாடு பார்க்காமல் தாமரை சக்தியை திட்டுபவர் செவ்வியை கையை ஓங்கி விடுவார். தாமரை மேல் கையை வைத்தால் விசாலம் அவரை தெருவுக்கு இழுத்துவிடுவார், சக்தியை தொட்டதால் தான் பெரிய வீட்டை விட்டு வெளியே வந்திருக்க இப்போது அவள் மீது கைவைத்தால் தன் மாமியார் என்னவும் செய்வார் என்று பயம் இருக்க இது மொத்தத்திற்கும் வடிகாலாக செவ்வியை உரித்து விடுவார் மங்கை.
அப்போது யாரும் அவரை தடுக்க முடியாது. வேந்தன் ஒருவன் மட்டுமே அவரை ஏமாற்றி செவ்வியை காப்பாற்றி விடுவான் பல நேரங்களில். மங்கையும் தன் அண்ணன் மகன் மேல் உள்ள பாசத்தால் (?) அவன் முன்பு செவ்வியை எதுவுமே சொல்லமாட்டார்.
அப்படிப்பட்டவன் இன்று செவ்வியை அண்ணி என்று மரியாதையாக அழைத்தால் அது அவளுக்கு மகிழ்ச்சியையா கொடுக்கும். எப்போதும் போலவே “நிறைய சொதப்பி வச்சிருக்க வேந்தா” என்று தோன்றவும், அடுத்தநொடி “அத்தனையும் சரி செய்வேன் ” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.
சக்தி மாப்பிள்ளை வீட்டிலிருந்து மாப்பிள்ளையின் தோழியாக பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய புகுந்த வீடு பலகாரங்கள் இனிப்புகளை எடுத்துக் கொண்டு தாமரையின் வீட்டிற்கு புறப்பட, அங்கே ஏக வரவேற்பு அந்த பெரிய மனுஷிக்கு. தாமரை அவளை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை.
தனா “நீ என் தங்கச்சியா ? இல்ல அந்த வீட்டு பொண்ணா ? நீ ஏன் இதையெல்லாம் கொண்டு வந்த ? அங்க செவ்வி இருக்கா இல்ல.இங்க யாரு இப்போ இதையெல்லாம் எடுத்துட்டு போறது.”என்றவன் அங்கே நிறைந்திருந்த இவர்களின் வீட்டு பலகாரங்களை சக்தியிடம் காட்ட
“ஐயோ தனான்னா இப்போ என்ன போச்சு. மறுபடியும் நானே கொண்டுபோய் அங்க கொடுத்திட்டு வரேன்.கேட்ட என் அண்ணன் வீட்டு முறைமைக்கு கொண்டு வந்திருக்கேன் ன்னு சொல்லிட்டு ஓடி வந்திடுறேன்” என்று அவள் தனாவை சமாதானம் செய்ய
” கண்டிப்பா நீ தான் கொண்டு போகணும். உனக்கு வேற வழியே இல்ல. ” என்று தனா அவளை விடாமல் வம்பிழுக்க விசாலம் தான் “ஏண்டா பிள்ளையை போட்டு படுத்துற.” என்று கேட்டவர் சக்தியை தன்னுடன் வைத்துக்கொள்ள தாமரை வந்தவள்
“என்ன மேடம் எனக்கு நாத்தனார் ஆக போறீங்க போல ” என்று கேட்க
“ஆமாமா. இனிமே பார்த்து நடந்துக்கோ என்கிட்ட. மரியாதையா அண்ணின்னு கூப்பிட்டு பழகு புரியுதா ” என்று கேட்க
தாமரை அவளின் தலையில் கொட்டியவள் “எரும எரும, என்கூட இருடின்னு சொன்னா அங்கே போய்ட்டியா, அவளுக்கு சீர்வரிசையை தூக்கிட்டு வர. நீ கல்யாணம் முடியும் வரை என்னோட தான் இருக்க, தனாக்கு தங்கச்சியா. புரியுதா. இனி எப்பவும் மதியழகி உன்னை ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.
நீ எனக்கு நாத்தனாரா இருக்க வேண்டாம். அவளுக்கு நாத்தனாரா இரு.அதுபோதும், என்கூடவே இருக்க.எங்கயாச்சும் அசைஞ்ச கொன்னுடுவேன் உன்னை ” என்றவள் அவளை முறைக்க
“சும்மா திட்டிட்டே இருக்காதடி. நான் வேந்தனுக்காக போனேன்.செவ்வியால முடியும்ன்னா போய் இருக்கமாட்டேன்.அவ முதல்பிரசவமே சிசேரியன் தான் ஆச்சு.இப்போ மறுபடியும் இப்படி இருக்கப்போ அவளை எப்படி அலைய விட முடியும். நமக்கு செவ்வி முக்கியம் தான.”
“இதெல்லாம் நல்லா வக்கணையா பேசுடி. எல்லாருக்கும் பார்த்து பார்த்து தான் நீ இப்படி இருக்க. போதும்,இனி செவ்வி என் பொறுப்பு நான் பார்த்துப்பேன் அவளை.நீ சந்தோஷமா இரு சக்தி.யாரைப்பதியும் யோசிக்காத” என்று அவள் தன் தோழிக்கு அறிவுரை சொல்ல
சக்தியோ அவளை பார்த்து புன்னகைத்தவள் “என்னோட எல்லா பிரச்சனையுமே உன் அண்ணன் என்னோட இல்லாம போனதால வந்தது தான், இனி அப்படி நடக்கவே நடக்காது அவரும் என்னை எப்பவும் விடமாட்டாரு.அதனால நீ என்னை பத்தி கவலை படாம உன் வேந்தனோட டூயட் பாடு போ ” என்றுகூற
“தேறிட்டடி நீ. போலீஸ்காரரோட கவனிப்பு பலமா தான் இருக்கு போலவே “என்று தாமரை கண்சிமிட்ட
“போபோ நாளைக்கு வேந்தன் சொல்லிக் கொடுப்பான் உனக்கும்.எப்படி கவனிக்கணும் ன்னு ” என்று திருப்பி கொடுக்க
“அவரா அவருக்கு அந்த மில்லை கட்டிட்டு அழவே நேரம் சரியா இருக்கு.இதுல என்னை கவனிச்சிட்டாலும்”
“அப்போ கவனிக்கல ன்னு சொல்ற” என்று சக்தி இடிக்க
“உனக்கு வேற வேலை இல்ல போடி” என்றவள் எழுந்து கொள்ள சக்தியோ அவளோடு ஒட்டி கொண்டு அவளை ஒருவழி செய்து கொண்டிருந்தாள்.
ஆனால் அப்போதும் தாமரை தன் காரியத்தில் கண்ணாக மாப்பிளை வீட்டிலிருந்து பெண் வீட்டிற்கு இனிப்பு கொடுத்துவிட்டு வரும் பொறுப்பை சக்தியிடமே ஒப்படைத்தாள். தனாவும் அதையே வலியுறுத்த தாமரையின் இடத்திலிருந்து சக்தி மீண்டும் பலகாரம்,இனிப்புகளை அடுக்கிக்கொண்டு கிளம்பினாள் தன் நண்பனின் வீட்டிற்கு.
வேந்தனின் வீட்டில் ரங்கநாயகியும்,செவ்வியும் சக்தியை பாத்து சிரிக்க தனாவை போலவே வேந்தனும் அவளை முறைக்க ஆரம்பித்தான்.
“நீ எதுக்கு சக்தி இதையெல்லாம் தூக்கிட்டு வர.உன்னை இதுக்குதான் அனுப்பினேனா, ஒழுங்கா என்னோட இரு” என்று அவனும் சண்டையிட
சக்திதான் “ஷப்பா,இதுங்களோட “என்று தலையில் கைவைத்து கொண்டாள். ஆனாலும் வேந்தனிடம் “நீ சொன்னன்னு எடுத்துட்டு போனேன்ல. இதுவும் அப்படிதான் இளா.உன் பொண்டாட்டி தான் எடுத்திட்டு போக சொன்னா.நீ அவளையே கேளு வேணும்ன்னா. ஹான் அதோட நீ அவளை கவனிக்கவே இல்லையாம்.அதையும் சொல்ல சொன்னா ” என்று சேர்த்து கூற கொல்லென்று ஒரு சிரிப்பொலி அங்கே எழ வேந்தன் அத்தனை அழகாக வெட்கபட்டான் சக்தியின் இந்த பேச்சில்.
சக்தி அப்போதும் விடாமல் “ஐயோ செவ்வி இங்க பாரேன். உன் கொழுந்தனோட முகத்துல பல்பு எரியுது.”என்றவள் அவனை புகைப்படம் எடுக்க முயல அவனோ “ஹேய் சக்தி.என்ன பண்ற நீ “என்று நகரவும்
அவன் கையை பிடித்து நிற்கவைத்தவள் அவள் ஒருபுறம் நின்று கொண்டு செவ்வியை அழைக்க அவளும் ஆவலாகவே வந்து அவன் அருகில் மற்றொரு புறம் நிற்கவும் வளைத்து வளைத்து செல்பி எடுத்துக் கொண்டவள் “இதை உன் ஆள்கிட்ட காட்டி அவளை வெறுப்பேத்துறேன் பாரு ” என்று சொல்லவும் அவள் தலையில் கொட்டியவன் தன் அறைக்கு சென்றுவிட அனைவரும் இவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர் என்றால் மதியழகி சிறிது ஏக்கத்தோடு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த நாள் அப்படியே கழிந்துவிட, அன்றும் தனஞ்செயன் தன் அறையிலிருந்த அந்த கவரை பார்த்தான் இல்லை.அதுபாட்டிற்கு ஒருமூலையில் கிடக்க, அடுத்த நாளும் நல்லபடியாகவே விடிந்தது அவர்களுக்கு. அன்றும் திருமண சடங்குகள் தொடர இரு குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க, இரண்டு ஜீவன்கள் இவர்கள் சந்தோஷத்தை ஒழித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர் அங்கே.
Advertisement