Advertisement
அத்தியாயம் 10
வேந்தன் பெரிய வீட்டிலிருந்து கிளம்பியவன் வீட்டிற்கு செல்லாமல் நேராக மில்லுக்கு சென்றுவிட்டான். வீட்டில் அனைவரும் காரில் வந்திருக்க இவன் தன் வண்டியில் வந்திருந்தது அவனுக்கு வசதியாக போக, அவர்களிடம் சொல்லாமல் கூட வண்டியில் இவர்களை தாண்டி சென்றுவிட்டான். அவன் அப்படி செல்வதை பார்த்த மதி நிச்சயம் அவன் வீட்டுக்கு வரமாட்டான் என்று உணர்ந்து இருந்தாலும் அப்போது எதுவுமே பேசவில்லை.
தாயிடம் ஏற்கனவே அவனிடம் உண்மையை சொல்லுமாறு சொல்லி இருக்க, அவர் காதில் வாங்காமல் அவனிடம் பொய்யுரைத்திருக்க, அதற்கான எதிர்வினையை அவன் இப்போது தொடங்கி இருந்தான். மாலை அவன் முகத்தில் தெரிந்த வேதனையை கண்டவன் ஆதலால் மதிமாறன் அவனை எதுவும் சொல்லாது அமைதியாகவே வந்தவன் வீட்டிற்குள் நுழைந்தும் கூட எதுவும் பேசவில்லை.
சுந்தரபாண்டியன் வேந்தன் எங்கே என்று கேட்கவும் தான் தாயை திரும்பி முறைத்தான் அவன். பின்னே அவன் அத்தனை தூரம் சொல்லி இருக்க, வீணாக அவன் கோபத்தை கிளப்பியது அவர்தானே. ரங்கநாயகி அவன் முறைப்பதை கண்டவர்
“என்னடா என்னை ஏன் முறைக்கிற. எங்கே அவன்” என்று கேட்க
“என்னை கேக்குறீங்களா” என்று தந்தையிடம் திரும்பியவன் “இவங்கதான்பா. நான் வேண்டாம்னு சொல்லியும் தாமரை தான் பொண்ணுன்னு அவன் கிட்ட சொல்லாம அவனை அலையவிட்டு, கடைசி நிமிஷத்துல ஆதி ஏதோ சொல்லி அவனை வரவைத்தான். அவன் முகமே மாறிடுச்சு. இப்போவும் அந்த கோபத்துல தான் வீட்டுக்கு வரவே இல்ல” என்று நல்ல அண்ணனாக தாயை போட்டுக் கொடுத்தான் அவன்.
“அடப்பாவி” என்பதுபோல் அவனை பார்த்த ரங்கநாயகி “இவர் வேற சாமியாடுவாரே” என்று நினைத்து அமைதியாக இருக்க, அவர் நினைத்தது போலவே சுந்தரபாண்டியன் “ என்ன பண்ணி இருக்க ரங்கு நீ. அவன் எத்தனை கலங்கி போய் இருக்கான்னு உனக்கு தெரியாதா. அவன் கிட்ட இப்படிதான் நடந்துக்கறதா” என்று அவர் கோபமாக கடிந்து கொண்டு
“நீ வா மதி. நாம போய் அவனை கூட்டிட்டு வருவோம்” என்று மதியை கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் செவ்வி தன் அத்தையை முறைத்தவள், “நான் அப்போவே சொன்னேன் கேட்டிங்களா” என்பது போல் பார்க்க, அவளை பார்த்து “ இதெல்லாம் ஒரு விஷயமா ? எங்கே போய் இருப்பான். அந்த மில்லை கட்டிக்கிட்டு அழ அங்கேதான் போய் இருப்பான்”
“ எல்லாம் உன் மாமாவும்,உன் புருஷனும் உன் கொழுந்தனை கூட்டிட்டு வந்துருவாங்க. போடி” என்றவர் கூடவே “நான் என் பொண்ணை காணும்ன்னு துடிக்கல, என் வளர்ப்பை பொய்யாகிட்டான் ன்னு நான் வேதனைப்பட்டேன்ல . கொஞ்சம் உன் கொழுந்தன் படட்டும் தப்பு இல்ல” என்றார்.
செவ்வி அவரின் வாயை பார்த்துக் கொண்டிருக்க, தன்னை மீட்டுக் கொண்டவர் “ என்னடி என் வாயையே பார்த்துட்டு இருக்க.போ போய் புடவைய மாத்து” என்றுவிட்டு கிச்சனுக்குள் நுழைய
“என்ன வேணும் அத்தை.” என்று செவ்வி கேட்க
“அவன் சரியாவே சாப்பிடலடி. என்னை முறைக்கிறேன்னு சாப்பாட்ட கொரிச்சிட்டு இருந்தான். அதான் ரெண்டு தோசை சுட்டு எடுத்தா வந்ததும் சாப்பிடுவான் ” என்று கூற, புன்னகையுடன் அவரை பார்த்தவள் பிரிட்ஜை திறந்து தேங்காயை எடுத்து அவனுக்கு பிடித்த விதத்தில் கொஞ்சம் சட்னியும் மிக்சியில் அரைத்து கொடுக்க ரங்கநாயகி அதில் நீர் சேர்க்காமல் மகனுக்கு பிடிக்கும்வகையில் தாளித்து கொட்டி கட்டியாகவே எடுத்து வைத்தார்.
பிரிட்ஜில் இருந்த தக்காளி தொக்கையும் கொஞ்சம் எடுத்து சூடுபடுத்தி வைத்து அவர் முன்றாவது தோசை சுட்டு எடுக்க ஆண்கள் மூவரும் வீட்டினுள் நுழைந்தனர். வேந்தன் வந்து தந்தையுடன் சோபாவில் அமர ரங்கநாயகி அவனை முறைத்தவாறே தோசையை எடுத்துவந்து ஹாட் பாக்ஸில் வைத்தவர் மகனை பார்க்க அன்னையை முறைத்தான் அவன்.
ரங்கநாயகி அப்போதும் “ நீ செஞ்சதை விட குறைவு தான். உனக்கு கோபம் வேற வருதா” என்று கேட்கவும் அவன் முறைத்து கொண்டு படியை நோக்கி நடக்க “டேய். சாப்பிட்டுட்டு போ. எங்கே போறதா இருந்தாலும்.” என்று அழுத்தமாக கூற
அவரின் குரலில் எதுவும் பேசாமல் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் அவன். அவன் வந்ததும் தட்டை வைத்து அவர் பரிமாற வேந்தன் அவரை முறைத்து கொண்டிருந்தாலும் தட்டில் வைத்த தோசையை முழுங்கி கொண்டிருக்க, அவரும் அவனுக்கு வாகாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் செவ்வி தோசையோடு கிச்சனில் இருந்து வர மதிமாறன் “பாருடா இவளை. கொழுந்தன் என்ன பேசினாலும், அவன் மேல இருக்க பாசம் குறையாது இவளுக்கு” என்று சீராட்டிக் கொண்டான். என்ன இருந்தாலும் அது என்ன அவனை மட்டும் கவனிப்பது என்று லேசாக பொறாமை எட்டிப்பார்க்க வீம்புக்கு சென்று தானும் அமர்ந்துகொண்டவன் செவ்வி அடுத்த தோசையை கொண்டுவந்து ஹாட் பாக்ஸில் வைக்கவும் தட்டில் எடுத்துவைத்துவிட்டு சட்னியை ஊற்ற அதற்குள் வேந்தன் அவன் தட்டிலிருந்து அதை எடுத்துவிட்டவன் தான் உண்ண ஆரம்பித்து விட்டான்.
மதி தம்பியை முறைத்துவிட்டு அமர்ந்துகொள்ள, செவ்வி வந்தவள் மதியை பார்த்து புன்னகைத்துவிட்டு அவனுக்கு ஒரு தோசையை வைத்துவிட்டு போனாள். அந்த நேரம் மதியழகியும் உடையை மாற்றி வந்தவள் தன் அண்ணன்கள் உண்ணவும் அருகில் அமர்ந்துகொண்டவள் அவளும் சாப்பிட ஆரம்பிக்க, சட்னி சுத்தமாக தீர்ந்து இருந்தது. செவ்வி வெளியே வந்தவள் தோசையோடு சட்னியும் கொண்டுவந்து வைத்துவிட்டு உள்ளே சென்று மீண்டும் தக்காளி தொக்கும், மிளகாய் பொடியும் எடுத்து வந்து டேபிளில் வைக்க ரங்கநாயகி தன் மருமகளை எப்போதும் போல் மெச்சிக் கொண்டார்.
மூன்று பிள்ளைகளும் சாப்பிட, கணவரையும் அழைத்தவர் அவருக்கும் சாப்பிட கொடுக்க மறுக்காமல் ஒரே ஒரு தோசையுடன் எழுந்து விட்டார் சுந்தரபாண்டியன். பிள்ளைகள் சாப்பிட்டு முடிக்கவும் மூவரையும் ஒன்றாக நிற்க வைத்தவர் மருமகளையும் அழைத்து அவர்களுடன் நிற்க சொல்லி உப்பை அள்ளிவந்தவர் நால்வருக்கும் திருஷ்டி எடுத்துவிட்டு அந்த உப்பை நீரில் கரைத்தார்.
செவ்வியை உடையை மாற்றும் படி அனுப்பிவைத்தவர் பாலை காய்ச்சி டம்ளரில் ஊற்றி வைக்க, செவ்வி உடை மாற்றி வந்ததும் நான் செய்யமாட்டேனா அத்தை என்று கடிந்துகொண்டாள் அவரை. அவளை கட்டியணைத்தவர் புன்னகையுடன் “ம்ம்ம். நீ செய்வ. ஆனா என் பிள்ளைகள பார்த்துகிறவளை நானும் பார்த்துக்கணும்ல.” என்று தன் மருமகளை தாடை பிடித்துக் கொஞ்சியவர் பாலை அவளிடம் கொடுத்தார். புன்னகையுடன் பாலை எடுத்துக் கொண்டு செல்லும் தன் மருமகளை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கநாயகி.
நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் நிம்மதியாக உறங்கச் சென்றனர். “கடவுளே என் குடும்பம் இன்னிக்கு போல என்னிக்கும் சந்தோஷமா இருக்கணும்” என்ற வேண்டுதலோடு ரங்கநாயகியும் உறங்கச் சென்றார்.
வேந்தன் தன் அறைக்கு வந்திருந்தவன் நினைவு முழுவதும் தாமரையையே சுற்றிக் கொண்டிருந்தது. மாலை அவள் முகத்தில் தெரிந்த கலவரம் தன்னை குறித்தே என்று புரிந்து இருந்தாலும் ஏனோ அதற்கும் கோபமே வந்தது அவனுக்கு. என்ன தெரியாதா இவளுக்கு? அப்படி என்ன என்னை பார்த்து பயம் இவளுக்கு ? என்று எண்ணிக் கொண்டான்.
மேலும் அன்று மதியம் திட்டும்போதே இந்த விஷயத்தை தன்னிடம் கூறி இருந்தால் என்ன ? அத்தனை பேச்சுக்கும் அழுத்தமாக நின்றாளே ஒழிய ஒருவார்த்தை கூட பேசவில்லையே அவ்வளவும் திமிர் என்று அவள் செய்யத குற்றங்களை அவள் மீது வரிசையாக அடுக்கி கொண்டிருந்தான் அவன்.
ஏதோ தோன்ற தன் மொபைலை எடுத்துப் பார்க்கவும், நேரம் பதினொன்றை காட்ட என்ன செய்து கொண்டிருப்பாள் ? தூங்கி இருப்பாளோ என்று யோசித்தவன் இரண்டு நிமிடங்களுக்கு மேல் முடியாமல் அவளை அழைத்திருந்தான். மொபைல் முழுவதும் அடித்து ஓயும்வரை எடுக்கப்படவே இல்லை. தூங்கிட்டாளோ என்று யோசித்தவன் மீண்டும் ஒருமுறை அழைக்க, இந்த முறை கடைசி ரிங்கில் போன் எடுக்கப்பட்டது.
தாமரை வீட்டிற்கு வந்தவள் இத்தனை நேரம் தாயோடு பேச்சில் இருந்தவள் இப்போது தான் அறைக்கு வந்திருந்தாள். வந்ததும் குளிக்க சென்றிருக்க, அந்த நேரத்தில் தான் மொபைல் அடித்து ஓய்ந்திருந்தது. யார் என்று யோசித்துக் கொண்டே அவள் வேகமாக உடைமாற்றி கொண்டு வந்து எடுத்து பார்க்க வேந்தன் அழைத்திருந்தான்.
என்னவோ மதியம் அத்தனை திட்டு வாங்கி இருக்க அந்த நொடி அவளுக்கு “ஐயோ ” என்று தான் இருந்தது. இப்போது எடுக்காவிட்டால் இன்னும் பேசுவானோ என்று யோசித்தவள் உடனே அழைப்பை ஏற்றிருந்தாள். காதில் வைத்தி அமைதியாக இருக்க அவனோ ” செல்வி” என்றான் எடுத்தவுடன்.
அந்த குரலில் காதல் வழிந்தது என்று எதிர்பார்த்தால் நிச்சயம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு மாறுபாடு அவன் குரலில் அவ்வளவே. தாமரைக்கு இந்த செல்வி எப்போதும் போல் சிறிது மகிழ்ச்சியை கொடுக்க அவளையும் அறியாமல் எதிர்வினையாக “ம்ம்ம் ” என்றிருந்தாள்.
அவனோ “என்ன பண்ற ” என்று கேட்க
” என்ன.. என்ன பண்றே..ஒன்னும் இல்லையே ” என்று அவள் பதில் கொடுக்க அவள் தடுமாறிய விதமே சொல்லியது அவள் நிலையை. பயந்து பொய் இருந்தாள் அவள். மதியம் அவன் பேசிய வார்த்தைகள் அவனின் இன்னொரு பரிமாணத்தை காட்டி இருக்க, எப்போதும் தன்னை சுற்றி வந்து காதல் மட்டுமே கொடுத்தவனின் கோபத்தை அவளால் தாங்க முடியாமல் போனது. அதன் வெளிப்பாடே இந்த தடுமாற்றமாக இருக்க
வேந்தன் புன்னகைத்துக் கொண்டவன் ” செல்வி. தனியா இருக்கியா ? பேச முடியுமா ” எனவும் மீண்டும் “ம்ம்” என்றாள். இப்போது வெளிப்படையாகவே சிரித்தவன்
” இந்த ம்ம் தவிர ஏதாச்சும் சொல்லு ” என்றான் சத்தமாக.
தாமரைக்கு என்ன சொல்வது என்று புரியாமல் போக ” கோபம் போய்டுச்சா” என்று கேட்க
“கோபமா. கொலைவெறில இருந்தேன் உன்மேல. அதென்னடி எப்போ பார்த்தாலும் அவளை கட்டிக்க, இவளை கட்டிக்க ன்னு சொல்ற.” என்று விட்டிருந்தான்.
அவ்வளவுதான் “கடவுளே மீண்டும் அவன் கோபத்தை கிளறிவிட்டோமா ” என்று பயந்து போனவள் இம்முறை வாயை திறக்கவே இல்லை.
அதற்கும் ” நான் கேள்வி கேட்டா வாயை திறந்து பதில் சொல்லி பழகு தாமரை. நீ அமைதியா இருந்தா நான் இன்னும் இன்னும் பேசிட்டே போவேன். கோபம் வந்தா என் வார்த்தை என் கண்ட்ரோல்ல இருக்காது. சோ நீயே என்னை பேசவைக்காத ” என்று கூற
“என்ன பேசுறது ” என்று அவள் கேட்க
” ஒண்ணுமே இல்லையா என்கிட்ட பேச ”
” ம்ம்ம். தெரியல. ஆனா இப்போ அழுகைதான் வருது. பேசமுடியல ” எனும்போதே அவள் குரலில் லேசான விசும்பல் தெரிய
“ஹேய் அழறியா..” என்று பதறியவன் ” சரி அழுது முடிச்சு கால் பண்ணு. பேசுவோம் ” என்றுவிட
அவ்வளவுதான் ” நான் அழுதா என்னனு கேக்கமாட்டிங்களா.அப்படியே அழுன்னு விட்டுடுவீங்களா ” என்று கோபமாக தாமரை கேட்க
” இப்போதான் என் ரவுடி வெளிய வரா ”
” நான் ரவுடியா “
” இல்லையா “
” இல்லை. நீங்கதான்.”
” நான் ரவுடிதாண்டி. அப்போ என்னோட பொண்டாட்டி நீயும் ரவுடி தான ” என்று வேந்தன் விடாமல் கேட்க
” நான் ரவுடி எல்லாம் இல்லை.” என்று இருந்தாள் அவள்.
” சரி ஓகே விடு இனி ரவுடி பொண்டாட்டின்னு கூப்பிடுறேன் “
” கடவுளே! இதுக்கு அதுவே பரவாயில்ல. இப்படி கூப்பிட்டு வைக்காதிங்க ” என்றதும்
“சரிடி ரவுடி பொண்டாட்டி ” என்றவன் “இப்போ அழுகை போய்டுச்சா ” என்று கேட்க
நிஜமாகவே தாமரை அழுகையை மறந்திருந்தாள். தன்னை திசை திருப்பவே அவன் இவ்வாறு பேசி இருக்கிறான் என்று உணர்ந்தவளுக்கு இதமாக இருக்க,ஆமென்று தலையாட்டி இருந்தாள்.
அவள் செய்கையை உணர்ந்தவன் போன்று “வாய திறந்து பதில் சொல்லுடி” என்று கூற, புன்னகைத்துக் கொண்டவள் ” போச்சு போச்சு ” என்றாள். அவள் பதிலில் சிரித்துக் கொண்டவன்
“இன்னைக்கு அழுது ஏமாத்திட்ட. ஆனா நிச்சயம் பதில் சொல்லணும் நீ” என்று அழுத்தமாக கூற
சற்று பயம் வந்தாலும், அவன் தன்னை தேற்றியது நினைவில் வர “பார்க்கலாம் பார்க்கலாம்” என்று கூறி சுலபமாகவே அந்த பேச்சை தவிர்த்தாள். இப்போதிருக்கும் இலகுவான மனநிலையை கெடுத்துக் கொள்ள அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை.
வேந்தன் மீண்டும் “செல்வி. உன் அண்ணன் மதி கல்யாணம் எப்படி பேசினாங்கன்னு எனக்கு தெரியல. ஆனா உன் அண்ணன் என்ன சொல்றான்.” என்று கேட்க
” என்ன சொல்வான் ? அப்பா கேட்டாங்க சரின்னு சொல்லிட்டான்“
” ஹேய் உனக்கு புரியுதா. அவன் பண்ண காரியத்துக்கு பரிகாரமா என் தங்கச்சிய அவன் கட்டிக்க கூடாது.அப்படி ஒரு வாழ்க்கை என் தங்கச்சிக்கு வேண்டாம். உனக்கு புரியுதா ” என்று மீண்டும் அவன் கூறவும்
” ஏன் நீங்களும் அதையே பண்ணீங்க தானே. அப்போ அதுக்காக தான் என்னை கட்டிகிறிங்களா ” என்று வேண்டுமென்றே அவள் கேட்க
” நம்ம கதை வேற.அவங்க வேற. அவங்க ஒத்துக்கலைன்னாலும் மறுபடியும் உன்னை தூக்கிட்டு போய் இருக்க என்னால முடியும். ஏன் கண்டிப்பா செஞ்சிருப்பேன் ” என்று அடித்துக் கூறவும்
“செய்விங்க செய்விங்க. தாமரை ஏமாந்தா எல்லாம் செய்விங்க. தூக்குவாராம். பேச்சை பாரு” என்று அவள் நொடித்துக் கொள்ள “கண்டிப்பா தூக்கி இருப்பேன். ஏன் தாமரை ஏமாற மாட்டாளா” என்று கேட்டான் அவன்.
“மாட்டா. இனி உங்களை நம்பி வருவேனா நான்”
“அப்போ இன்னிக்கு யார் வந்தது, தமரையோட தங்கச்சியா”
“அது உங்களுக்கு உடம்பு சரி இல்லன்னு வந்தேன்”
“ஏன் மாமாவுக்கு திரும்ப உடம்பு சரி இல்லாம போகாதா” என்று அவன் கேட்க,”அடப்பாவி” என்று நினைத்தவள் அமைதியாகி விட ஆர்ப்பாட்டமாக சிரித்தான் வேந்தன்.
பின் அவனே “நம்ம கதை இப்பவும் வேறுதான். ஆனால் உன் அண்ணன் என்ன சொல்றான் கேளு. கட்டாயத்துல கல்யாணம் பண்ணக்கூடாது செல்வி. அது உன் அண்ணனோட வாழ்க்கைக்கும் நல்லது இல்லை” என்றுபொறுமையாக கூற
“அண்ணாகிட்ட ஏற்கனவே பேசிட்டேன். அவனுக்கு மதிய பிடிச்சு இருக்கு. நம்ம விஷயமும் அவனுக்கு தெரியும். நான் எல்லாம் சொல்லிட்டேன் அவன்கிட்ட” என்று கூற
“எப்போ சொன்ன, என்ன சொன்னான் திட்டினானா உன்னை” என்று அவன் வேகமாக கேட்க
“அண்ணா என்னை எப்பவும் திட்டாது. அன்னிக்கு அந்த விஷயம் நடந்த அடுத்தநாள் அண்ணா வீட்டுக்கு வரவும் எல்லாம் சொல்லிட்டேன்” என்று கூறினாள் அவள்.
“சரி சரி.” என்று கூறியவனுக்கு இப்போது புரிந்தது தனஞ்செயன் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது எதனால் என்று. அதை தன்னோடே வைத்துக் கொண்டவன் தாமரையிடம் எதுவும் சொல்லவில்லை. வேறு ஏதோ பேசி அவன் பேச்சை வளர்க்க கிட்டத்தட்ட நள்ளிரவுவரை நீடித்தது அவர்களின் இந்த உரையாடல். அதன் பின்பே ஒருவழியாக உறங்கச் சென்றனர் இருவரும்.
பிரம்மனின் கையமர்ந்த தாமரை
இன்று பிரம்மனை படைக்கிறதோ !!!!
Advertisement