Advertisement
அத்தியாயம் 1
“ஹேய் மகா என்ன பண்ற. நேரமாச்சு பாரு. சீக்கிரம் டிபன் கொண்டு வாமா. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. “. வீட்டின் குடும்ப தலைவரான ரகுவின் குரல் அவ்வீட்டில் ஓங்கி ஒலித்தது.
“வரேங்க. ஏன் கத்தறீங்க. அவ அவ மருமக எடுத்துட்டா ஓஞ்சு உட்காரலாம்னு சொல்றாங்க. இங்க என்னடான மருமகளுக்கும் சேர்த்து நாம் வேல செய்ய வேண்டி இருக்கு. ரெண்டு மகன், ரெண்டு மருமக, ஆசப் பொண்ணுனு எல்லாருக்கும் சேர்த்து இந்த வயசான காலத்துல நா கஷ்டப்படுறேன். இதுல இவரு வேற. பொண்டாட்டிக்கு உதவியா ஒரு வெங்காயம் உரிப்போம் , பூண்டு உரிப்போம்னு இல்லாம தினமும் நம்மள உரிக்குறாரு” வழக்கமான இல்லத்தரசியாக மகா சமையலறையில் புலம்பிக் கொண்டிருந்தார்.
” என்னடி அங்க சத்தம். “
” சுப்ரபாதம் பாடுறேங்க. அந்த சத்தம் தான். இதோ வந்துட்டேன். அப்பா கிழவனுக்கு காது செம ஷார்ப்“
மேஜையில் உணவு பதார்த்தங்களை அடுக்கி வைத்து விட்டு கணவருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் மகா.
“என்ன மகா இன்னும் யாரும் சாப்ட வரல. டைம் ஆச்சுல.”
“வருவாங்கங்க. அடேய் சீக்கிரம் வந்து தொலைச்கடா. இந்த மனுஷன் இம்சைலேர்ந்து என்ன காப்பாத்துங்க டா” மனதுக்குள் புலம்பினார் மகா. அன்னையின் குரல் கேட்டதோ என்னவோ அவர்களது இரு மகன்களும் தத்தமது துணைவிகளோடு உணவருந்த வந்தனர்.
ஒரு சிறிய அறிமுகம் இக்குடும்பத்தைப் பற்றி.
மகா: நம்மை போல இல்லத்தரசி. காய்கறி வாங்க சென்று அந்த ஏரியாவின் மொத்த தகவல்களையும் சேகரித்து அதை இன்னும் பலரிடம் பரப்பிவிடும் ஒரு பெண்மணி. தனது கணவர், பிள்ளைகளுக்கு அன்பானவர், மருமகள்களுக்கு புரியாத மாமியார். மகளிற்கு பாசமான கண்டிப்பு நிறைந்த அம்மா.
ரகு: குடும்ப தலைவர். கண்டிப்பு எனும் வார்த்தையின் அர்த்தம் கூட அறியாதவர். பெண்ணின் மீது உயிரையே வைத்திருப்பவர். இன்றைய காலத்தின் பணம் கொட்டும் தொழில் கல்வி நிறுவனங்களே. ஆர்.என் குரூப்ஸ் தமிழ்நாட்டில் முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று. மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகளையும், ஒரு கல்லூரியையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் சென்னை மாவட்ட தலைமை அதிகாரியாக இருக்கிறார் ரகு.
ராஜ் குமார்:
இக்குடும்பத்தின் மூத்த வாரிசு. குடும்பத்தின் மீது உயிரையே வைத்திருப்பவன். ஆர்.என் நிறுவனத்தின் சென்னை கல்லூரி கிளையில் கணித பேராசிரியராக இருக்கிறான். அவனது மனைவி பானுமதி. அந்த கால நடிகை பானுமதியின் தீவிர ரசிகருக்கு பெண்ணாய் பிறந்ததால் அந்த பெயர். ராஜ் குமாரை திருமணம் செய்தது முதல் தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தி கொண்டிருப்பவள். ஊதாரித்தனமாக செலவுகள் மட்டுமே செய்ய தெரியும். சேமிப்பு என்றால் என்ன என்று கேட்பவள். உடல் வளையாது மாமியாரின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி. நாத்தனார் என்றால் வேப்பங்காய் போல கசக்கும் இவளுக்கு. இத்தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகன் நிரவ். அத்தையின் செல்ல பிள்ளை இவன்.
ரவிக்குமார்:
இக்குடும்பத்தின் இரண்டாம் வாரிசு. அண்ணணைப் போலவே இவனும். ஆர்.என் பள்ளி ஒன்றில் ஆசிரியராக யஉள்ளான். இவனது மனைவி ராகவி. பானுவைப் போல அல்ல இவள். தானுண்டு தன்வேலையுண்டு என இருப்பவள். மூத்தவள் பொறுப்பெடுக்காத போது நமக்கென்ன என்று நழுவிக் கொள்பவள். இவர்களின் புதல்வன் நிகில். இரண்டு வயதாகும் குட்டி குறும்பன்.
நிவேதிதா:
இருபது வயது இளம் மங்கை.இப்போது இவர்கள் இருக்கும் இந்த மூன்று மாடிக் குடியிருப்பு முதல் இன்னும் பல சொத்துகளுக்கு அதிபதி. சரியான வேலை இல்லாமல் இருந்த ரகுவிற்கு இவள் பிறந்த பின்னால் தான் ஆர்
என் குரூப்ஸ்ல் வேலை கிடைத்தது. இவளால் வந்த அதிர்ஷ்டம் என நினைத்து இருக்கும் சொத்துக்கள் எல்லாம் இவள் பெயரிலே. அதுவே பல கோடி வரும்.வீட்டில் துரும்பை அசைப்பதென்றாலும் இவள் அனுமதியை கேட்டு தான் செய்வார்கள். அவளுடைய 22 வது வயதில் அவளாய் பார்த்து யாருக்கு வேண்டுமானாலும் அவளுடைய சொத்துக்களை தரலாம்.
அத்தனைப் பேரும் உணவருந்த வந்தாலும் நிவேதிதாவைக் காணாமல் ரகுவால் உண்ண முடியவில்லை.
“மகா எங்க நிவே. சாப்ட வரல“
” அவ காலைலயே கிளம்பி கோயிலுக்கு போய்ட்டா “
” என்னம்மா சொல்றீங்க. இவ்ளோ சீக்கிரமாவா. குட்டிமாக்கு பசிக்குமே“பதறினான் ராஜ்
“க்கும்… உலகத்துல ஹோட்டலே இல்ல அதனால எங்கயும் சோறு கிடைக்காது பாரு. இவர் போட்ட குட்டி இன்னும் சாப்டல. அது யோசிக்கல மனுஷன். குட்டிமா சாப்டலயாம்” மனதுக்குள் கருவினாள் பானு.
“தனியாப் போனாளா அம்மா“
“ஆமாம் ரவி“
” அம்மா எத்தன தடவ சொல்லிருக்கேன் அவள தனியா அனுப்பாதீங்கனு‘
“இல்லடா பக்கம் தானே“
“ம்மா… அவளுக்கு தான் புரியலனா நீங்களும் ஏன் இப்படி இருக்கீங்க.சின்னப் பொண்ணு மா அவ. காலம் கெட்டு கிடக்குது. நாம் நான் ஜாக்கிரதையா இருந்துக்கணும்.”
” ஏன்டா.. அபசகுணமா பேசுற. அவ பக்கத்துல இருக்குற கங்கையம்மன் கோவிலுக்கு தான் போன. இப்போ வந்துடுவா“
“சரிம்மா நீங்க எல்லாரும் சாப்டுங்க. அவ வரட்டும் நா அவக் கூட சாப்டுறென்” ராஜ்
அதே நேரம் கங்கையம்மன் கோவிலில் தரிசனம் முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிவேதிதா தன்னுடைய வண்டியில் மோதும்படி வந்து கொண்டீருந்த வழியிலே ரெனால்டு க்குவிட்டிடமிருந்து தப்பிக்க சாலையோரகக் கம்பிகளில் வண்டியைத் திருப்பினாள். அந்த நாலுச் சக்கர வாகனமோ வளைவில் மோதியது, சிறு சிறு காயங்களுடன் தப்பித்து விட்டாள்.
ஆனால் ஸ்கூட்டி அங்காங்கே ஒடுங்கி விட்டது. அதைப் பார்த்ததும் கோபம் வர கார்க்காரனை திட்ட திரும்பியவள் கார் வளைவில் உள்ள மரத்தின் மீது மோதி இருப்பதை பார்த்தவள் வேகமாக அங்கு ஓடினாள்.
காரின் உள்ளே முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பது தெரியவும் கத்திக் கூச்சலிட்டாள். அவளது குரல் கேட்டு அக்கம் பக்கத்து மனிதர்கள் ஓடி வந்து கார்க் கண்ணாடியை உடைத்து அப்பெண்ணை வெளியே எடுத்தனர்.
கூட்டத்தில் இருந்த ஒரு நல்ல உள்ளம் விபத்தை காணொளி பதிவு செய்து நேரத்தை வீணாக்கமல் உயிரின் மதிப்பு தெரிந்து அவசர ஊர்தியை அழைத்தார். அதற்குள் நிவேதிதா தனது துப்பட்டாவை அந்த பெண்ணின் தலையில் கட்டி இரத்தம் வராமல் தடுக்க பார்த்தாள்.
” ஒன்னுமில்ல அக்கா. பயப்படாதீங்க ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணியாச்சு. இப்ப வந்துடும்” இரத்தம் வழியும் விழிகள் ஓடு தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சொன்னாள் நிவி.
அதன் பின்னர் ஆம்புலன்ஸில் அப்பெண்ணோடு சென்று அவளுக்கு இரத்தம் தேவைப்பட்ட போது தனது இரத்தமும் அதே வகை என்பதால் இரத்தம் வழங்கியது எனத் தன்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு தனது பெயரைக் கூட சொல்லலாமல் ஙிளம்பி விட்டாள் நிவி.ஆனாலும் நிவியால் இரத்தம் வழிந்த அந்த விழிகளை மறக்க முடியவில்லை.
இந்த சம்பவம் நடந்து ஒருவருடம் கடந்து விட்டது. அன்று போல ஒரு காலை வேளையில் நிவி கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“ஏன் நிவிமா சொன்னக் கேட்க மாட்டேனு செய்யுற. நீ தனியா கோவிலுக்கு போனா உங்க அண்ண , அப்பா எல்லாரும் என்ன திட்டுவாங்க டா. வேணும்னா ராகவிய கூட்டிட்டு போடா“
“ம்மா… அரைமணி நேரத்தில வந்துடுவேன். ப்ளீஸ் மா.. நா போய்ட்டு வரேன் ” என அன்னையின் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பினாள் நிவி.
அரை மணி நேரத்தில் வருகிறேன் என்றவள் அரை நாள் ஆகியும் வரவில்லை. அவளுக்கு பதிலாக அவளுடைய தொலைபேசியில் இருந்து தகவல் மட்டுமே வந்திருந்தது. “சாரி அம்மா. லேட் ஆகிடுச்சு . வந்துடுறேன். எல்லாரையும் சமாளி”
வருவாளா அவள்???
Advertisement