சங்கீத சக்தி – 9

காதல் சூழ் உலகில் உலவிக் கொண்டிருந்தனர் சக்தியும், சங்கீதாவும்! முதல் அடியை எடுத்து வைக்கத்தான் தயக்கம் என்பது இருக்கும். அதன்பிறகு எவ்வித தயக்கமும் இருக்காது.

இதற்கும், சக்தி முதல் அடியை எடுத்து வைப்பது குறித்து அதுநாள் வரையிலும் யோசித்ததே இல்லை! தன்னையும் மீறி தொடங்கிவிட்ட வாழ்வு தந்த தித்திப்பில், அதிலேயே அமிழ்ந்து போனான். அடுத்தடுத்த அடிகள் எடுத்து வைக்க அவனுள் எந்தவித தயக்கமும் தடுமாற்றமும் இல்லை.

சங்கீதாவால் தன் வாழ்வு முழுமையடைந்து விட்டதாக அவனுக்குத் தோன்றிற்று! அவளோடு கழிக்கும் பொழுதுகள் அவனை மேகக்கூட்டத்திற்குள் உலவவிடும் உணர்வைத் தந்தது.

அவள் எப்படி சகலமும் பாடல்கள் என கழிக்கும் ரகமோ… சக்தியும் அவளுக்குத் துளியும் சளைத்தவன் இல்லை. பாடல்கள் என்றால்… இசை என்றால்… அவனுக்கு அப்படி ஒரு பிரேமை!

இருவரையும் ஒன்றிணைக்கும் வலுவான பாலமாய் இசை இருக்க, இருவரின் அன்பும் மேலும் மேலும் பெருகி இறுகியது.

அன்றும் அப்படித்தான் மனைவியை கையணைவில் வைத்துக்கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருந்தான் சக்திவரதன். பாடல் ஒலிக்கும்போது கூடவே சேர்ந்து பாடியபடியும்… அவளையும் பாட வைத்து அதில் மூழ்கியபடியும்…

அன்று காதல் பண்ணியதுஉந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது

அவன் குரலில் காதல் சொட்டியது. கைகள் அவளின் கன்னத்தைக் கிள்ள முயற்சித்து வருடிக் கொடுத்தது.

அங்குப் பட்டுச் சேலைகளும்நகை நட்டு பாத்திரமும்

உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது

அவனுக்கு இணையான காந்த குரல் அபூர்வாவுடையது. கூடவே அவள் குரலில் நிறைய நளினமும், கொள்ளை கொள்ளையாய் வெட்கமும்! அதனோடு அவன் நெருக்கமும் வருடலும் தந்த தித்திப்பும்!

ஜாதிமல்லிப் பூவேதங்க வெண்ணிலாவே

ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

என்று பாடியவன் அவளின் இடையை இறுக வளைத்து, “முதல் நாள் பகலா தானே இருந்தது பூக்குட்டி” என்று அவளின் காதில் கிசுகிசுக்க, “அச்சோ!” என்றாள் லஜ்ஜையோடு.

அபூர்வா இந்தளவு சிணுங்கும் ரகம் எல்லாம் இல்லை. வெட்கம் வரும் தான் என்றாலும் இந்தளவு எல்லாம் இருந்ததே இல்லை. முழுதாக தன்னை மாற்றி அவனுள் நிரப்பிக் கொள்கிறானே என்றிருந்தது அவளுக்கு.

சக்தி நிகழ்காலத்தை மிகவும் நேசித்தான். ஷர்மிளாவிடம் தன்னிலையை எடுத்து சொல்லி, அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டிருக்கிறான். என்ன அதற்கான துணிவு மட்டும் வருவேனா என்று அலைக்கழித்தது. அவள் தன் துரோகத்தை என்றேனும் மன்னிப்பாளா என்ற குற்றவுணர்வு அவனை பாரமாய் அழுத்தும். கூடவே, தன் குடும்பத்தினரிடம் எப்படி சேர்வது என்ற யோசனை எழும்போது எல்லாம் மனம் வெகுவாக சோர்ந்து போகும்.

அவனுக்கு இப்போதிருக்கும் ஒரே ஆறுதல், ஆசுவாசம் அபூர்வசங்கீதா மட்டுமே! எங்கே அது பறிபோய்விடுமோ என்ற அச்சமும் அவனுள் நிரம்பி வழிகிறது.

‘நிகழ்கால வாழ்வாவது நிரந்தரமாக இருக்குமா? அப்படி ஒன்றும் முழுமனதோடு சங்கீதாவை நான் தேர்ந்தெடுக்கவில்லையே? அவளுக்கு என்றேனும் ஏதாவது தெரிந்துவிட்டால், அப்பொழுது நிலைமையை தன்னால் சமாளிக்க முடியுமா?’ என்றெல்லாம் யோசிப்பவனுக்கு பெரும் கவலையாக இருக்கும்.

யோசித்துப் பார்த்தால், தான் யாருக்குமே உண்மையானவனாக இருக்கவில்லை என்று அவனுக்குத் தோன்றிற்று. அதில் மனதளவில் வெகுவாக காயப்பட்டான்.

எல்லாவித அலைப்புறுதல்களும் சில நிமிடங்கள் தான்! அதன்பிறகு சங்கீதாவின் காதல் அவனை சுகமாய் ஆக்கிரமித்துக் கொள்ளும். அவள் அவனின் பெயரை உச்சரிக்கும் விதத்தில் கூட அவன் கரைந்து போவான்.

“சக்தி…” என்று அவள் உச்சரிக்கும் பாங்கில் அந்த பெயருக்கே சக்தி வந்துவிடும். காதலை விட சக்தி தருவது ஏதேனும் உண்டா? காதலைப் பெயரை உச்சரிக்கும்போதே கடத்துவதில் அபூர்வா கெட்டிக்காரி!

அபூர்வாவின் நிலையும் சக்தியைப் போலவே தான்! அவனது குரல் அவளை அத்தனை வசியம் செய்யும்! அவன் குரல் கேட்டால், இவள் உருகி கரைவாள். அதிலிருந்து மீளும் வழியை அவள் அறிந்ததில்லை! மீள்வதற்கான தைரியமும் அவளிடம் இல்லை. அவனுள்ளேயே தொலைந்து போவதும் அவளுக்கு சுகமே!

காதல் பறவைகளாய் வானில் உலாவிக் கொண்டிருந்தனர் இருவருமே!

சக்திக்கு இவள் தன்னை தவறாக நினைத்து விடக் கூடாதே என்ற உறுத்தல் படுத்த, ஒருநாள் தன்னருகில் அமர்த்தி, அவளின் இரு கரங்களையும் தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி இருந்தான். அவனின் மனம் வெகுவாக அலைப்பாய்ந்து கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் தொடர்ந்த மௌனத்தை அடுத்து, “என்ன விஷயம் சக்தி?” என்ற அபூர்வாவின் குரல் இடையிட்டது. அப்பொழுதும் சில நிமிடங்கள் அவனால் பேச முடியவில்லை. அவனை அவள் வித்தியாசமாக நோக்கினாள். எதுவும் பிரச்சினை இருக்குமோ எனக் கவலை கொண்டாள்.

சிறிது நேரத்தில் ஆழ்ந்த பெருமூச்சுடன், “மனுநீதி சோழன் கதை தெரியுமா அபூ?” என்றான் மௌனத்தைக் கலைத்து. கதையைப் பற்றிப் பேசவும் என்னவோ ஏதோ என்று அலைப்பாய்ந்து கொண்டிருந்த அபூர்வாவின் அச்சம் சற்று மட்டுப்பட்டது.

உண்மையில் அபூர்வாவிற்கு நினைவுத்திறன் நன்றாக இருக்காது. அதனாலேயே படிப்பிலும் அவள் அத்தனை சூட்டிப்பு இல்லை. எதுவுமே பெரிதாக ஏறாது. அவளின் தேர்ச்சி கூட அவள் எடுத்த பெருமுயற்சியின் பலனால் மாத்திரமே!

இப்பொழுது அவன் கேட்ட கதையை என்ன யோசித்தும் நினைவிற்கு வராமல் போகவே, அவள் திருதிருவென விழிக்க, அவன் அவளின் பாவனையில் சிரித்து விட்டான். “என்னடி ரியாக்ஷன் இது?” என்றான் சிரிப்போடே.

“இல்லைங்க… ஏதோ கதை சொன்னீங்க… அது… அது…”

அந்த கதை நினைவில் வராமலா இப்படி முழிக்கிறாளென அவனுக்கு மேலும் சிரிப்பு பொங்கியது. அவளது மறதியை அந்தநேரம் அவன் தவறாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆக, அவனே கதையை அவளுக்கு நினைவுபடுத்தத் தொடங்கினான்.

“அரசர் நகர் வலம் வரும்போது சக்கரத்துல மாட்டி கன்னுக்குட்டி இறந்திடும். நீதி கேட்க அம்மா மாடு வரும்… மணி அடிக்கும்… ராஜா வந்து பசுவுக்கு நீதி வழங்க தன்னோட மகனையே தேர் ஏத்திக் கொல்லுவாரே…” என அவன் கதை மொத்தத்தையும் இரத்தின சுருக்கமாக எடுத்துக் கொடுக்க, அப்பொழுதும் நினைவடுக்கில் சில நொடிகள் யோசித்துவிட்டே, “ஹான் சக்தி… ஞாபகம் வந்துடுச்சு…” என்று ஆர்ப்பரித்தாள்.

அவளின் தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு, “இவர் செய்த தப்புக்கு ஒரு பாவமும் அறியாத அவரோட பிள்ளை தண்டனை அனுபவிக்கிறது சரியா அபூ?” என்றான் ஆழ்ந்த குரலில்.

‘அதுதானே!’ என்று அவளுக்கும் உடனேயே தோன்றியது. கொஞ்சம் நிதானித்து யோசித்தாள். எதுவோ புரிபடுவது போல இருக்கவும், “பிள்ளைக்கு இருக்கும் வலியை விட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு வேதனை பெத்தவருக்கு தானே! அப்ப அங்கே அதுதானே நீதி சக்தி…” என்றாள் மனதில் பட்டதை!

“அப்ப அந்த பிள்ளை? அவனுக்கு ஏன் அந்த தண்டனை? எந்த தப்பும் செய்யாம உயிரை இழக்கணுமே…” அவன் விழிகள் அலைப்புறுதலுடன் அவளில் நிலைத்தது.

“எல்லாமே நம்ம சிற்றறிவுக்கு புரியணும்ன்னு இல்லைங்க. சில விஷயங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டதா இருக்கலாம். இதுவும் அந்த மாதிரின்னு தோணுது…” என்றாள் நிதானமாக.

இதோ! இது நிச்சயம் வளர்மதியின் சாயலே! எத்தனை பக்குவமாய், நிதானமாய் பேசினாள். அப்படியே அவளின் அம்மாவைப் போலவே!

பெருமிதமும் ஆசுவாசமும் மகிழ்ச்சியும் ஆர்ப்பரிக்க, சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவன் அணைப்பில் அடங்கியவள், மெல்ல, “என்னாச்சு சக்தி?” என விசாரித்தாள். இன்று அவன் சரியாக இல்லாதது போலத் தோன்றியது.

என்னவென்று சொல்வான்? உன் தந்தையைத் தண்டிக்க எண்ணி உன்னோடு பழகி ஏமாற்ற நினைத்தேன் என்றா? இல்லை அதையும் முழுதாக செய்ய முடியாமல், உன்னைவிட்டு விலகவும் முடியாமல் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன் என்றா? இல்லை இதெல்லாம் உன்னிடம் மறைக்கிறேனே இது தெரிய வரும்போது, நீ என்னை என்னமாதிரி நினைப்பாய் என்று யோசிக்கவே முடியாமல் கலக்கமாக இருக்கிறது என்றா? இல்லை ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியவன் என்றா?

மெலிதாக நடுக்கம் கண்ட அவன் உடலை வித்தியாசமாகப் பார்த்தபடி, அவனது முதுகை நீவி கொடுத்தாள்.

ஆரம்பத்தில் சுமுகமாகத் தொடங்கிய உறவு சக்தியின் மனபாரங்களாலும், அவனுள் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவும் மெல்ல மெல்ல விலகல் கண்டது. திருமணம் முடிந்த புதிதில் அவனின் விலகலை ஏற்றுக்கொள்ள முடிந்த சங்கீதாவால், இணக்கமான ஒரு காதல் வாழ்வின் பிறகு, அவன் காட்டும் விலகலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள்.

சக்தி நாளுக்கு நாள் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டிருந்தான். பெற்றோர், நண்பன், முன்னாள் காதலி, மனைவி என ஒவ்வொருவர் குறித்தும் நிறைய யோசனைகள், அச்சங்கள், பரிதவிப்புகள். நாளுக்கு நாள் குற்றவுணர்வில் தவிப்பவனுக்கு எந்த பிரச்சினையையும் அணுகவே தைரியம் இல்லாதபோது, தீர்வு எப்படிக் கிடைக்கும்?

ஆக, அவன் சுய அலசலில் மீண்டும் மனைவியிடம் விலகல் காட்ட நொந்துபோனது என்னவோ சங்கீதா தான்!

இந்த நிலையில் தான் ஷர்மிளா அவன் வாழ்வில் மீண்டும் வந்தாள். இத்தனை நாட்களும் ஊடல் கொண்டு அவனிடம் பேசாதிருந்தவள், எதேர்ச்சையாக அவனது திருமண விவரத்தை அறிந்து கொள்ள நேர்ந்ததும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள்.

கல்லூரியில் எல்லாருக்கும் காதல் இருக்கிறது நமக்கு வேண்டாமா என்று ஷர்மிளா தொடங்கிய காதல் ஒன்று ஒருசில வருடங்களிலேயே பலமான சறுக்கல் கண்டிருந்த சமயம் தான் அவள் சக்திவரதனை அலுவலகத்தில் சந்தித்தது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் அது.

சக்தி மிகவும் பொறுப்பானவனாகத் தோன்றினான். அவனிடம் நல்ல திறமைகள் இருந்தது. அதை அழகாக வெளிப்படுத்தவும், அதைக்கொண்டு அருமையாக முன்னேறவும் தெரிந்திருந்தான். நண்பர்களின் தேவைக்குப் பணம் தருவதற்கு அவன் தயக்கம் காட்டுவதே இல்லை என்பதில் அவன்மீது இவள் பார்வை நன்றாகவே விழுந்தது. அதாவது பணம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல! சேமிப்பும் பலமாக இருக்கிறது என்பதை எதிர்பாராமல் அவர்களின் பேச்சைக் கேட்க நேர்ந்தபோது தெரிந்து கொள்ள முடிந்தது.

சொந்த ஊரிலும் சற்று வளமான குடும்பம், வீட்டுக்கும் ஒரே பிள்ளை என்பது போன்ற செய்திகள் அவளுக்குப் பொருந்திப் போவதாக இருக்கவே, எல்லா பெண்களும் எதிர்கால வாழ்வு குறித்து ஒரு நம்பிக்கையை எதிர்பார்ப்பார்களே! அந்த எதிர்பார்ப்பை முழுக்க பூர்த்தி செய்பவனை எப்படி கை நழுவ விடத் தோன்றும்! கொஞ்சம் மெனக்கெட்டால் தான் என்றபோதிலும், சக்தியின் காதலை வெல்வதில் அவள் சாதித்துக் கொண்டாள்.

அவள் அப்படி பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த சக்தி, ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது வேண்டாம் என்று உதறியபோது ஆத்திரம் பெருகியது. அதைவிட முட்டாள்த்தனமாக சென்னையில் இருக்கும் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரில் சென்று தொழில் செய்யப் போகிறேன் என்று நின்ற போது அவன்மீது வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை!

உண்மையில் காதல் என்று சக்தியிடம் சொல்லி, அவனின் பின்னால் சுற்றி, அவனைத் தன்னை மணந்தே ஆக வேண்டும் என்று ஷர்மிளா நிர்பந்தித்து அவனை வழிக்குக் கொண்டு வந்தாளே தவிர, காதல் என்ற ஒன்றை அவனுக்கு அவள் உணர்த்தியதே இல்லை. நேசம், அதனால் அடையும் பேரின்பம், அது தரும் மயக்கம் இப்படி எதையுமே உணர்த்தாமல், ஒரு மாதிரி ஆளுகைக்குள்ளேயே அவனை வைத்திருக்க அவள் முயன்றதினால் தானோ என்னவோ… இன்று வரையிலும் அவளுக்குத் துரோகம் செய்தோம் என்ற உறுத்தல் இருந்தபோதும், அது தவறு என்று மனதிற்குப் பட்டபோதும், அவளைத் திருமணம் செய்யாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் சக்திவரதனுக்கு வரவே இல்லை.

சக்தி ஆன்சைட் செல்லும் வாய்ப்பை நிராகரித்தபோது ஷர்மிளா கோபம் கொண்டாள் என்றால், சொந்த ஊருக்குப் போகிறேன் என்று நின்றபோது போகவே கூடாது என அத்தனை பிடிவாதம் பிடித்தாள்.

சக்தி துளிகூட அசைந்து கொடுக்கவே இல்லை என்றபோது தான் அவன் எத்தனை உறுதியானவன் என்று புரிந்தது. தன் விருப்பம்போல அவன் வளைந்து கொடுக்கும் ரகம் இல்லை என்றும் அப்பொழுது தெளிவாகப் புரிய வைத்தான். ஊரில் சென்று சொந்த தொழிலில் பரபரப்பாகச் சுற்றித்திரிந்த போது, திடீரென சங்கீதா குறித்துச் சொல்லி, வெறுமனே அவளிடம் காதல் என்று சொல்லி ஏமாற்ற நினைக்கிறேன் என்று அவன் சொன்ன போது ஆடி தீர்த்து விட்டாள். எத்தனை தைரியம் இருந்தால் இப்படி எல்லாம் சொல்வான் எனக் கோபம் பொங்க, அவனிடம் பேசுவதை நிறுத்திக் கூட பார்த்தாள். அதற்கும் அவன் அசைந்து கொடுக்கவே இல்லை.

சிலமுறை அவளுக்குத் தொடர்ந்து அழைத்துப் பார்த்தவன் அவள் அழைப்பே ஏற்கவே போவதில்லை என்று ஒருவழியாகப் புரிந்து, “உனக்குக் கோபம் தீர்ந்ததும் கூப்பிடு” என்ற குறுஞ்செய்தியோடு முடித்து விட்டான். அதன்பிறகு கண்டு கொள்ளாதவனின் அலட்சியத்தில் அவளின் சினம் பெருகியது. எப்படியும் தன்னிடம் தானே வந்தாக வேண்டும் என்று இறுமாப்பு வேறு அவளை அசைந்து கொடுக்க விடவில்லை.

இதற்கிடையில் அவளுக்கு வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்க, பாரின் மாப்பிள்ளை என்றால் சரி என்று வீட்டிலும் சொல்லி விட்டாள். வரன் அமைந்து வந்தால், இருக்கும் சண்டையைப் பெரிதுபடுத்தி, சக்தியிடம் விலகிவிட வேண்டும் என்பது அவளின் திட்டம்.

ஆனால், அவளின் நேரமோ என்னவோ… வந்த மாப்பிள்ளைகள் அவளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இல்லை. அப்படி பூர்த்தியாகும்படி வரும் வரன்கள் குடும்பம் சரியில்லாமலோ, ஜாதகம் சரியில்லாமலோ, அழகு குறைவினாலோ தட்டி போய்க்கொண்டே இருந்தது. ஒருசில வருட தேடலின் முடிவில், அவளும் பாரின் மாப்பிள்ளை என்பதிலிருந்து நல்ல வசதியான குடும்பம் என இறங்கியும் வந்திருந்தாள். முன்பு அப்படி நிறைய வரன்கள் வந்திருந்தது. இப்பொழுது அவர்கள் அதுபோல தேடும் சமயம் ஒன்றுமே அமைந்து வரவில்லை. தொடர்ந்து வரன் அமையாமல் தட்டி போய்க்கொண்டே இருந்தது.

இப்படி அவள் கடுப்பின் உச்சத்தில் இருக்கும் சமயம், அவளுக்குச் சக்தியின் திருமணம் குறித்துத் தெரிய வரவும் கொதித்துப் போனாள்.