சங்கீத சக்தி – 8

ஸ்ரீவத்சனிடம் ஏதேதோ பேசிவிட்டிருந்தாலும் மனதிலிருந்து எதையும் சொல்லியிராததால், இப்பொழுது சக்திக்கு அவன் உதிர்த்துவிட்ட சொற்கள் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சைக் குத்தியது.

திருமணம் என்ற முடிவை எடுத்து விட்டவன், அந்த பந்தத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்வது என்ற தீர்மானத்தோடு தான் எடுத்தான். உண்மையில் அந்த முடிவை எடுத்த அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.

எந்த குடும்பத்தை அவனுக்குப் பிடிக்காதோ… யாரை அவன் வெறுக்கிறானோ… அவர்களுக்கு ஸ்ரீவத்சன் சொன்னதுபோல நல்லதைத் தான் செய்திருக்கிறான். உடல்நிலை நலிவடைந்த கருணாகரனின் ஆயுட்காலம் குறைவே! அவருக்குப் பிறகு வளர்மதியும், சங்கீதாவும் செய்வதறியாது திகைக்கும் நிலை தான். அந்த இக்கட்டிலிருந்து அவர்களை மீட்டிருக்கிறான் என்பது சக்தியின் எண்ணம்!

உண்மையில், சக்தி காதல் என்று அபூர்வாவிடம் இடையிட்டிருக்காவிட்டால், அவளுக்கு நல்லதொரு வரனைப் பார்த்து முடித்து வைத்திருப்பார்கள். இவனே சென்று இடையிட்டு அதைக் கலைத்தான்.

அது புரியாமல், இவனுக்காய் மனது உறுத்த, அதனை சரிகட்ட நடந்த திருமணத்திற்கு இவனே தியாக வண்ணமும் பூசிக் கொள்கிறான். உண்மையில் மனது மங்கையிடம் மயங்கியும் போனதோ?! அது அவன் மட்டுமே அறிந்த ரகசியமோ இல்லை அவனே இன்னும் அறிந்துகொள்ளாத மூடுபனியோ? மொத்தத்தில் விளங்கிவிடும் என்பது போலத்தான் இவனது எண்ணங்கள்.

ஸ்ரீவத்சனிடம் அத்தனை சமாதானம் செய்தும் அவன் இறங்கி வரவில்லை என்பது ஒருபுறம் வருத்தமென்றால், அபூர்வா குறித்து ஏதேதோ பேசிவிட்டது இன்னுமொருபுறம் குற்றவுணர்வு! இந்த அலைக்கழிப்புக்களில் ஷர்மியின் எண்ணம் ஒரு ஓரத்தில் கூட எட்டிப்பார்க்கவில்லை.

பிரயாணம் முழுவதும் மன சஞ்சலத்திலேயே கழித்தவனை, இல்லம் நுழையும்போது இனிய குரலொன்று சுகமாய் நனைத்தது. உடலும் உள்ளமும் குளிரும் வண்ணம், மொத்த பாரமும் சஞ்சலமும் கரைந்து காணாமல் போகும் வண்ணம், இதயத்திற்கு இதம் சேர்க்கும் வண்ணம் ஒலித்த அந்த குரலில் சில நொடிகள் அசைவற்று நின்று விட்டான்.

புது கொள்ளைக்காரன் நீயோ என் நெஞ்சைக் காணவில்லை

நான் உன்னைக்கண்ட பின்னால் என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து இருவரும் இருக்க ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க

ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கிவிட்டாயே

ஹப்பா… என்ன குரல் இது? உடல் மொத்தமும் சிலிர்த்தது சரி. உள்ளம் கூட சிலிர்த்துப் போகுமா என்ன? ஒருவித பரவச மோனநிலை சக்திவரதனுக்கு.

தன்போல அவனின் கால்கள் அந்த குரலால் சுண்டி இழுக்கப்பட்டு, அது வந்த திசையில் முன்னேறி நடந்தது. காலிலிருந்த காலணிகளை எப்பொழுது கழட்டினானோ, கையிலிருந்த பயணிப்பை எப்பொழுது நழுவியதோ என்பதெல்லாம் அவன் கருத்திலேயே இல்லை.

முன்னேறி நடந்தவனின் விழிகளுக்கு விருந்தாக வெளிர் மஞ்சள் நிற காட்டன் சல்வாரில் காதில் இயர் போனுடன் கண்கள் மூடி பாடிக்கொண்டிருந்த அவன் மனையாளே காண கிடைத்தாள்.

நிர்மலமான சின்ன நீள்வட்ட முகம். ஒடிசலான தேகம். முடிகளை எல்லாம் தூக்கி கொண்டையிட்ட அழகு கூட அவனை மொத்தமாக அள்ளியது. பாடும் இதழ்கள்… ஹப்பா… இதென்ன இப்படி ஒரு பிங்க் வண்ணம்! குரலைக் கடத்தி வரும் நீள கழுத்தோ… இன்னும் மூச்சடைக்க வைத்தது. இத்தனை ஆண்டு காலத்தில் சங்கீதாவை இதுபோல அவன் ரசித்ததில்லை. அவன் தன்னை காண வேண்டுமே என்ற ஆவலுடன் அவள் விதவிதமாய் அலங்கரித்து நின்றபோது கூட அவன் பார்வை அவளை ஏறிட்டுப் பார்த்ததில்லை! இன்றோ… அமிர்தத்தை இத்தனை நாளும் கண்கொண்டு பாராதவன், திடீரென்று கிடைக்கப்பெற்ற ஞானோதயத்தால் அள்ளி அள்ளி பருகுவது போல… அவளின் மொத்த அழகினையும் விழிகளால் அள்ளி அள்ளி பருகிக்கொண்டிருந்தான்.

குரலும், மங்கையின் அழகும் மயக்க, தாக்குப்பிடிக்க முடியா ஏதோ ஓர் அலையில் சிக்குண்டவன், தன்னை மறந்து அவளை நெருங்கினான். அரவம் உணர்ந்து அவள் சுதாரித்துத் திரும்பும் முன், அவளை நெருங்கி அமர்ந்து, அவளின் கழுத்தில், அந்த குரல் உதிக்கும் குரல்வளையில், நீண்டு தனித்துத் தெரிந்த மூச்சுக்குழாயில் தாபம் வழிய முத்தமிடத் தொடங்கினான்.

சக்திவரதன் அவன் வசத்திலே இல்லை என்றால், அபூர்வாவோ அதிர்ந்து, சிலிர்த்து, சிணுங்கி, ஏதோ நினைவு வரவும் வேகமாகத் துள்ளி விலக முயன்றாள்.

அவளின் துள்ளலைச் சக்தி எளிதாக முறியடித்தபோதும், அவளின் இயர் போனின் மறுமுனை லேப்டாப்பிலிருந்து விலகியிருக்க, “ஐயய்யோ! நாங்க கிளம்பறோம்” என்ற அலறல் குரல்களும் அதைத்தொடர்ந்து கால் டிஸ்கனெட் செய்யும் பீப் ஒலிகளும் கேட்க, சக்தி பதறி விலகி எதிரிலிருந்த கணினித் திரையைப் பார்த்து விழித்தான்.

நட்பு வட்டத்தினரோடு வீடியோ காலில் இருந்திருப்பாள் போலும்! அவர்கள் எல்லாம் இவனின் காதல் லீலைகளைக் கண்டுவிட்டு அலறியடித்துத் தெறித்துக் கொண்டிருந்தனர். சங்கடத்தில் பிடரியைக் கோதியவனுக்கு முகத்தை எங்கு வைத்துக்கொள்ள என்றே புரியவில்லை. காரணமற்ற சிரிப்பு வேறு இதழோரம் அரும்ப, கீழுதடை கடித்து நிறுத்த முயற்சித்தாலும், அவன் கண்கள் சிரிப்பில் மினுமினுத்தது. வெட்கம்! லஜ்ஜை! இதுவரை அவன் வெளிப்படுத்திடாத ஃபாவங்கள்!

அவசரமாகத் திரும்பி அபூர்வாவைப் பார்க்க, அவளோ தவிப்பும் தடுமாற்றமும் படப்படப்புமாக அமர்ந்திருந்தாள். வீட்டில் தானே இருக்கிறோம் எனத் துப்பட்டாவை போடவில்லை போலும்! படப்படப்பில் ஏறி இறங்கும் நெஞ்சுக்குழி, லேசாக வியர்த்துப் போன முகம், அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத வெட்கம் என அவனை அவளே அறியாமல் போதை ஏற்றிக் கொண்டிருந்தாள்.

சக்தியின் மூச்சுக்காற்று அனலாய் தகித்தது. அவன் வசத்தில் அவன் சுத்தமாக இல்லை. அவளை மொத்தமாய் கொள்ளையிடும் வேட்கை அவனைத் திட்டமிட்டுத் திணறடித்தது. அவளின் மிரட்சியைக் கண்டுகொள்ளாமல் ஏதோ ஒரு வேகத்தில் அவளை அள்ளி அணைத்தான். அவள் பதறி விலக, அவனின் அணைப்பு மேலும் இறுகியது. அவனின் ஒவ்வொரு அணுவும் அவளைத்தேட அதற்கு மறுப்பு சொல்லும் நிலையில் இல்லாதவனும் அவளை முழுதாக ஆள தொடங்கி விட்டான்.

இந்த அனுபவங்கள் புதிது! கூச்சம் தடுத்தது பெண்ணவளை! அதைக்காட்டிலும் இந்த வெளிச்சம்… அவளின் சங்கடங்களை அவன் உணர்ந்தானா என்பதுகூட புரியாதளவு இருந்தது அவனின் வேகம்.

எப்பொழுது களைத்து உறங்கினாளோ அவளே அறியாள்! அவனும் உறங்கி விட்டிருந்தான்.

முதலில் விழித்தது சக்திவரதனே! போர்வைக்குள் பொதிந்து கிடந்த அபூர்வாவைக் கண்டு புன்னகைத்துக் கொண்டான். அப்படி என்ன வெட்கமாம்? நான்தானே! என்னிடம் எதற்கு வெட்கமாம்? காலம் காலமாய் காதலித்துக் கைப்பிடித்தவனைப் போல மனைவியைச் செல்லமாக மனதிற்குள் கடிந்து கொண்டான்.

மனைவியை மீண்டும் நாடும் ஆசை வந்தது. சோர்ந்து களைத்து கிடந்தவளை மேலும் தொந்தரவும் செய்யவும் மனம் வரவில்லை. ‘உஃப்’ என்று பெருமூச்சு விட்டு, தலையை இடவலமாக உலுக்கி தன்னை நிதானப்படுத்த முயன்றான். அவளின் தலைமுடியை மட்டும் காதோரம் ஒதுக்கிவிட்டு மீண்டும் ஒரு பெருமூச்சைத் தாராளமாக வெளியேற்றி விட்டுக் குளிக்கச் சென்றான்.

என்னவோ பரவசம்! சொல்லத்தெரியாத பேரின்பம்! அவனது வாழ்வின் மொத்த பாரங்களும் விலகியது போல, அவன் பூந்தோட்டம் வண்ண மலர்களால் நிறைந்தது போல, இனி யாதொரு துன்பமும் அவனை அண்டாதது போல மாய மயக்கும் எண்ணங்கள் அவனைக் கதகதப்பாய் சூழ்ந்திருந்தது.

வெகு நிதானமாகக் குளித்துவிட்டு வந்தபிறகும் அபூர்வா இன்னமும் விழித்திருக்கவில்லை. அடித்துப் போட்டது போல அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். “பூக்குட்டி…” அவன் இதழ்கள் ஆசையோடு முணுமுணுத்தது.

பூக்குவியலை மீண்டும் சேதாரப்படுத்தி விடாதே என தனக்குத்தானே கடிவாளமிட்டபடி விரைவாக வெளியேறினான்.

அவளை அள்ளிக்கொண்டு சென்றபோது படுக்கை அறையை மட்டும் மூடி இருந்திருக்கிறான். வெளி வாசல் கதவு திறந்தபடி தான் இருந்தது. அவனது பயணப்பையோ அனாமத்தாக இடையில் கிடந்தது. மணி மாலை ஐந்து தான். பட்டப்பகலில் செய்யும் வேலையா இது? பாவம் மிரண்டு போயிருப்பாள். தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

லேப்டாப் வேறு பாவமாய் வீற்றிருக்க, அதை பிராப்பராக ஷட்டவுன் செய்து ஓரமாக எடுத்து வைத்தான். வயிறு வேறு ஒருபக்கம் அதன் இருப்பை உணர்த்த, சமையலறை சென்று பாத்திரங்களை உருட்டியவனுக்கு அதிர்ச்சி! சமைத்ததற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை.

காலையில் என்ன சாப்பிட்டிருப்பாள் மீண்டும் அலசியதில், பிரெட் பாக்கெட் இருந்தது. இது எதற்கு போதுமாம்? தனியாக இருந்ததால் இவள் சமைக்கவில்லையோ மனம் வலித்தது. ஆனால், ஒருமுறை இவளின் வீடு சென்றபோது, அப்பொழுதும் இவள் ஒருத்தி மட்டும் தானே இருந்தாள்? அப்பொழுது எத்தனை அருமையாய் இரண்டு கலவை சாதங்கள் செய்திருந்தாள். இதற்கும் கிரகணம் என்று நேரமாகவே உண்டுவிட வேண்டும் என்றபோதிலும் துரித உணவையோ, அவசர உணவையோ அவள் தேர்ந்தெடுக்கவில்லையே!

அப்படி இருந்தவள் இப்பொழுது உணவில் அக்கறையற்று இருப்பது தன்னால் தானா குற்றவுணர்ச்சியில் குன்றிப் போனான்.

முன்பு அவள் எந்தளவில் கலகலப்பானவள், எவ்வளவு பேசுவாள் என்பதெல்லாம் அவனுக்கு தெரியாதபோதும், திருமணமான இந்த ஒன்றரை மாதங்களில் அவளின் பேச்சு சத்தம் இந்த வீட்டில் ஒலித்ததா என்பதே சந்தேகம்!

இல்லை மாற்றிச் சொல்ல வேண்டும் அவளுக்குப் பேசும் வாய்ப்பை இவன் தந்ததே கிடையாது என்பதுதான் மிகவும் சரியானது. அவள் ஒருத்தி இருப்பதுபோலவே கண்டு கொள்ளாமல், தன் இஷ்டம் போல இந்த வீட்டை உண்பதற்கும் உறங்குவதற்கும் மாத்திரமே பயன்படுத்துவது இவன் தானே!

வாய்ப்பே தராதபோது அவள் பேசுவது எப்படி? தயங்கி தயங்கி தன்னிடம் ஒவ்வொன்றையும் பேசுகிறாளே இதற்காகவா இப்படி அடம் செய்து திருமணம் செய்து கொண்டேன்? அவளுக்காக ஒரு துரும்பை அசைத்ததாகக் கூட அவனுக்கு நினைவில்லை. மனம் சொல்லிலடங்கா வேதனை கொண்டது. இனியேனும் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதார நினைத்தான்.

அவன் சஞ்சலங்கள் மறையும் வண்ணம், உள்ளே அரவம் கேட்டது. எழுந்து விட்டாள் போலும்! சிந்தனைகளெல்லாம் மறைந்து மீண்டும் முறுவல் அரும்பியது. அவள் குளித்து வெளியே வர மீண்டும் அரைமணி நேரம் பிடித்தது. தயங்கித் தயங்கி அவள் வெளியே எட்டிப்பார்க்கும் அழகில் அள்ளிக்கொள்ளலாம் போலத் தோன்றினாள்.

கண்கள் பளபளக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சங்கோஜத்தில் அவளால் அவனைக்கடந்து செல்லவே முடியவில்லை.

அவள் நகரவே போவதில்லை என்பது புரிய, இவனே எழுந்து சென்று அவளின் தலை முடியில் சுற்றியிருந்த டவலை கழட்டி, தலைமுடியைத் துவட்டியவாறே, “ரொம்ப தொல்லை பண்ணிட்டேனா?” என்றான் கிசுகிசுப்பாக.

அதிர்ந்து விழித்தவள், அவசரமாக இல்லை என்று தலையசைத்தாள். அவளின் பார்வை அவனை சந்திப்பேனா என அழிச்சாட்டியம் செய்தது.

அவளின் இடையே அணைத்து தனை நோக்கி இழுத்து, “சாரி… ஐ வாஸ் அவுட் ஆஃப் கண்ட்ரோல்” என்றான் அவளின் காதில் மீசை முடி உராய. சங்கீதா அவசரமாக விழிகளை மூடிக்கொண்டாள்.

இதயம் மத்தளம் கொட்ட, ‘இதென்ன அவஸ்தையான உணர்வு?’ புரியாமல் நெளிந்தாள்.

“கிளம்பறியா வெளியில போலாம்…” என்றவன் இம்முறை அவள் கழுத்தில் இதழ்கள் கொண்டு தவழ்ந்து கொண்டிருந்தான்.

‘அச்சோ!’ என்றிருந்தது அவளுக்கு! இவன் இப்படிச் சீண்டினால் அவளுக்கும் தான் குரல் எங்கிருந்து எழும்பும்? காதல் அவர்களின் வாழ்க்கை பக்கங்களில் அழகாக நிரம்பிக் கொண்டிருந்தது.