சங்கீத சக்தி – 6

உள்ளத்தைத் திடமாக வைக்க நினைத்தாலும் அபூர்வாவால் வைக்க முடிய வேண்டுமே! தந்தையின் சுகவீனத்தை நினைத்தே தினமும் மறுகுபவள், இப்பொழுது தாயுக்கும் உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டதும் ஒடிந்து போனாள்.

சக்திவரதன் கிளம்புவதற்குத் தயாராக இருந்தவன், அவளின் கலங்கிய தோற்றத்தையும் பதற்ற குரலையும் கேட்டதும் தன்னையும் மீறித் தேங்கிவிட, அவள் அழைப்பைத் துண்டித்ததும் என்ன ஏதென்று விசாரித்தான்.

அவளிடம் விசாரித்து தெரிந்துகொண்ட விஷயம், இதில் பயப்பட என்ன இருக்கிறது என்ற எண்ணத்தைத் தான் அவனுக்குக் கொடுத்தது. இவள் என்ன இந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் இப்படி கலங்குகிறாள் என அவளது தைரியமற்ற தன்மை கடுப்பாகக் கூட வந்தது.

சக்தியும் ஒன்றும் சங்கீதா பற்றி ஆற அமர நன்கு தெரிந்துகொண்டு காதலிக்கிறேன் என்று சொன்னவனில்லையே! அவனுள் ஒரு கணக்குப் போட்டான். அந்த திட்டத்தின்படி சங்கீதாவிடம் பேசினான். அதைக் கேட்ட நொடி முதல் இம்மி பிசகாமல் காதலை பற்றிக்கொண்ட இளம் மங்கை அவனுக்கு இன்று வரையிலும் அதிசயமாகத்தான் தெரிகிறாள்.

அதெப்படி நான் கேட்டதுமே அவள் மனதில் பதிந்து விட்டது. அப்படியென்றால் முன்பே என்னைப் பிடிக்குமா என்று கூட யோசித்திருக்கிறான். அப்படி எந்த நொடியிலும் அவனுக்குத் தோன்றியதும் இல்லை. இருந்தும் இது எப்படிச் சாத்தியப்பட்டது என அவனுக்கு இன்று வரையிலும் புரிபடாத ரகசியம்! அவளின் காதல் மீது ஒருவித பிரமிப்பு கூட எழுந்தது மறுக்க முடியாத நிஜம்!

சரி காதல் என்று கதை சொன்னானே அதன்பிறகேனும் அவளைப்பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி எடுத்தானா என்றால், அதுவும் இல்லை. ஆக, அவளின் காதல் பிரமிப்பு தந்தது போல, அவளின் குறைகளும் பூதாகரமாக தோன்றியது. உண்மை நேசம் என்றால் இந்த குறைகளெல்லாம் பெரிதாக தோன்றியிருக்காதோ என்னவோ!

எரிச்சலாக வந்தபோதும், கலங்கி நின்றவளைத் தனியே விட்டுச் செல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. “வா நானே உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி அவனது பைக்கிலேயே அழைத்து போனான். அது ஊரார் பார்வைக்கு விருந்தானது. இவர்களது விஷயம் இவனது வீட்டிற்கும் தெரிய வந்து, அது பூகம்பமாய் வெடிப்பதற்காகத் தயாராக இருந்தது.

வழக்கமாக கருணாகரனுக்குச் செய்யும் மருத்துவ பரிசோதனைக்குத் தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர் மூத்த தம்பதியினர். வளர்மதிக்கும் அவ்வப்பொழுது வயிற்றில் வலி இருந்து வந்ததால், அதையும் காட்டி விடலாம் என விசாரிக்க, கருப்பையில் பிரச்சினை என்றும், எவ்வளவு சீக்கிரம் அதை எடுக்கிறோமோ அது நல்லது என்றும் மருத்துவர் சொல்லிவிட, உடனே அதை எடுத்துவிடும் முடிவுக்குக் கருணாகரன் வந்துவிட்டார்.

அவர் எண்ணியது, எப்படியும் நான் இருக்கப்போவதில்லை, வருங்காலத்தில் மகளும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கொள்ளட்டும் என்று! இப்பொழுது மனைவியின் உடல்நிலையில் கோளாறு எனவும், அவர் புத்திக்குள் எதுவுமே ஓட மறுத்தது. உடனே சிகிச்சையை தொடங்கி விடுங்கள் என்று சொல்லி விட்டார்.

வளர்மதி கூட வீட்டிற்குப் போவோம். தேவையான பொருட்களைக் கொண்டு வந்தபிறகு அட்மிட் ஆகிவிடலாம் என்று சொல்லிப் பார்த்தும் மனிதர் அசையக் காணோம். அதெல்லாம் சங்கீதாவிடம் சொல்லி விடலாம். அவள் கொண்டு வந்துவிடுவாள் என சொல்லி பயங்கர பிடிவாதம்!

அவளுக்கு அழைத்து தேவையானதை எடுத்து வரச்சொல்லி, இது ரொம்பவும் சின்ன ஆபரேஷன் தான் எனத் தைரியம் தந்து வைப்பதற்குள் வளர்மதிக்குத் தான் போதும் போதும் என்றாகிவிட்டது.

கணவரின் கவலையை வளர்மதியால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், மகள் கணவருக்கும் மேலாக இருக்கவும் அன்னையாக பெரும் கவலை கொண்டார். எவ்வளவோ நல்ல முறையில், தைரியம் ஊட்டி வளர்க்க அவர் பெரும் முயற்சி செய்தபோதும், சங்கீதா மனோதிடம் இல்லாமல் தான் வளர்ந்து நின்றாள்.

தன் கவலையை வெளியே சொல்லக்கூட முடியாது. கணவர் இன்னும் பயந்து போவார். ஏற்கனவே அவருக்குள் இருக்கும் பயம் தானே! மகள் யாரும் குறைசொல்லும் அளவில் இருந்திடக் கூடாதென்பது! அதற்குக் காரணமும் இருந்தது.

கருணாகரனின் முதல் மனைவி மகாலட்சுமி, தன் சிறுசிறு குறையால் அனுபவித்த வேதனை தான் அவரின் அச்சத்திற்குக் காரணம்! மகாலட்சுமி அடைந்த வேதனை தன் மகளையும் தொடர்ந்து விடக்கூடாது என்ற தவிப்பு அவருள் அதிகம் என்பதாலேயே வளர்மதி மகளின் பலவீனங்களைக் கணவரிடம் சொல்லவே மாட்டார்.

சங்கீதா நல்ல அழகி, அருமையான குரல்வளம் கொண்ட குரலரசி, கருணையின் சிகரம், யார் சொல்லையும் தட்டிப் பேசாமல் பக்குவமாக நடந்து கொள்ளும் பெண்… இத்தனை நல்ல குணங்கள் கொட்டி கிடந்தும் அவளது மந்த புத்தியும், தைரியமற்ற பாங்கும் அன்னைக்கு பெரும் கலக்கத்தைத் தரும்.

வழக்கம்போல மனதோடு தன் கவலையை அசைப்போட்டபடி அவர் இருந்த நேரம், சக்திவரதனும், அபூர்வாவும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். இருவரையும் ஒருசேர பார்த்ததும், இவர்கள் இருவரும் எப்படி ஒன்றாக என்று அதிர்ச்சியாக இருந்தது. மருத்துவரும் அப்பொழுது அறையினில் தான் செக்கப்பிற்காக இருந்தார். அவர் முன் எதுவும் கேட்க முடியாமல், “என் பொண்ணும், அண்ணன் பையனும் டாக்டர்…” என வளர்மதி அறிமுகமாக மட்டும் சொன்னார்.

“என்னது?” என அந்த மருத்துவர் வஞ்சுளா கேட்ட தொனியே மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதிர்ச்சி! இது எப்படி என்பது போலக் குழப்பம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிய, அபூர்வாவின் முகத்திலேயே அவரது பார்வை தன்னையும் அறியாமல் சில கணங்கள் தேங்கிக் கூட விட்டது.

தன்னையும் மீறி, “அதெப்படி?” என ஏதோ வேகத்தில் கேட்டு விட்டவர், பின்னர் என்ன நினைத்தாரோ “அதாவது… நான் இப்பத்தானே பார்க்கிறேன். அதுதான் தெரியலை போல” என்று சொன்னவர் எதையோ மறைத்துச் சமாளிக்கிறார் என சக்திக்குத் தோன்றியது. என்ன என்றும் புரிபடவில்லை. அவரையே உன்னிப்பாக கவனிக்கலானான். ஆனால், அதன்பிறகு அவர் இயல்பாகத் தான் இருந்தார். சக்தியின் குழப்பத்திற்கு விடை கிடைக்கவில்லை. கிடைத்திருக்க வேண்டுமோ?

வளர்மதியிடமும் கருணாகரனிடமும் பெயருக்கு விசாரித்து விட்டு, அபூர்வாவிடம் சிறு தலையசைப்பில் விடை பெற்றவன், நேராக வீட்டிற்குத் தான் வந்தான். வீட்டிற்கு வந்ததும், அவன் தந்தை அருணகிரியின் பார்வை அவனைச் சுட்டுப் பொசுக்காத குறை தான்!

செய்துகொண்டிருந்த வேலையை வேண்டாம் என்று விட்டு வந்தபோது முறுக்கிக் கொண்டார் தான்! அதன்பிறகு இவன் மியூசிக் பேண்ட்டை நல்லபடியாக நடத்தி, தங்கள் நிறுவனத்தோடே கேட்டரிங் சர்வீஸ், மேடை அலங்காரம் என்றெல்லாம் தொழிலை விரிவாக்கி நல்ல லாபம் காட்டவும், மகன் என்ன செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கைக்கு வந்திருந்தவர், மீண்டும் இப்படி முறைப்பதற்கான காரணம் விளங்காமல், “என்னப்பா?” என்றான் அவரருகே நெருங்கி.

“உனக்கு மான, ரோஷம் எல்லாம் இருக்கும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்” என்றார் அவர் சூடாக.

“அப்பா…” என்றவனின் குரலில் ஆத்திரம் நிறைந்திருந்தது.

“என்னடா அப்பா? இல்லை என்னன்னு கேட்கிறேன். அப்படி ஒரு எண்ணம் இருக்கிறவன் நம்ம குடும்பத்துக்கு ஆகாதவனோட சகவாசம் வைக்க நினைப்பானா? ச்சே! போயும் போயும் அவன் பொண்ணு தான் உனக்கு கிடைச்சாளா? பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தா கூட அழகுல மயங்கிட்டேன்னு நம்பிடலாம். அவளும் அவ முகமும்… ச்சீ…” என்றவரின் முகம் அருவருப்பைக் காட்டியது.

‘அவ அழகுக்கு என்ன குறை?’ அவன் மனம் சம்பந்தமே இல்லாமல் கனன்றது.

சாவித்திரியோ, “என்னங்க பேசிட்டு இருக்கீங்க… அழகா இருந்தா மட்டும் அந்த வீட்டு பொண்ணை காதலிப்பானா? ஆகாதுன்னு ஆன பிறகு என்ன சகவாசம் வேண்டி கிடக்கு…” என ஆத்திரத்தில் முகம் சிவக்கக் கத்திக் கொண்டிருந்தார்.

இந்த எதிர்ப்புகள் எல்லாம் சக்திவரதன் ஓரளவு எதிர்பார்த்தது தான்! ஆக அலட்சிய பாவனத்தோடே நின்றிருந்தான்.

“இனியொருமுறை அந்த பொண்ணோட உன்னைப் பார்த்தேன். நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என அருணகிரி கர்ஜிக்க, சக்தியோ வெகு நிதானமாக, “நான் அவளைத் தான் கல்யாணம் செய்துக்க போறேன்” எனத் திட்டவட்டமாக அறிவித்தான்.

பெற்றவர்கள் இருவரும் சில நொடிகள் வாயடைத்து நின்றிருந்தனர். “என்னடா தொழிலை எடுத்து நடந்த்தறோம். சம்பாதிக்கிறோம்ன்னு திமிரா?” என அருணகிரி கத்திய கத்தல் அவனை அசைத்ததாகவே தெரியவில்லை.

“ஏன்டா அவன் செஞ்ச துரோகம் மறந்துடுச்சா? அந்த கொலைகாரனோட சகவாசம் வெச்சுக்க இப்படி அலையுற… நீயெல்லாம் சுய புத்தியோட தான் இருக்கியா?”

சாவித்திரிக்கு எரிச்சல் வந்தது. ‘அப்படி ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து எதுக்கு இவரோட தங்கச்சியை கட்டி வைக்கணும். முதல்ல சகவாசத்தைத் தொடங்கி வெச்சதே இவரும், இவரோட அம்மாவும் தான். இப்ப என் மகன் தலையில வந்து விடியுது…’ வெளியில் சொல்ல முடியாத ஆத்திரத்தில் மனதிற்குள் பொறிந்தவர், “பாரு சக்தி அந்த குடும்பத்துக்கும் நமக்கும் ஒத்து வராது. எல்லா விஷயத்திலேயும் பொறுப்பா இருக்கிறவன், இதுலேயும் இருப்பேன்னு நம்பறேன். வீம்புக்கு எதுவும் பண்ணி வைக்காத… நான் உன் நல்லதுக்குத் தான் சொல்லறேன்” என்றார் இழுத்துப்பிடித்த பொறுமையோடு.

“என் முடிவில் எந்த மாற்றமும் இல்லைம்மா…” என்று உறுதியோடு அறிவித்தவன், அவனது அறைக்குள் புகுந்துவிட, வீட்டுத்தலைவர் வெளிநடப்பு செய்தார்.

சாவித்திரியோ மகனின் பின்னேயே அவனது அறையில் நுழைந்தவர், “இந்த கல்யாணம் உன் விருப்பத்துக்காகவா? இல்லை அவங்க மேல உனக்கிருக்கும் கோபத்துக்காகவா?” என அவன் நாடியைச் சரியாகப் பிடித்து கேட்க,

அம்மா இப்படிக் கேட்பார் என எதிர்பாராதவன் சற்று திணறிப்போனான். நல்லவேளை அம்மாவிற்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தது அவனது உணர்வுகளை மறைப்பதற்கு நல்லதாகப் போயிருந்தது. முயன்று தன் திணறலை கட்டுப்படுத்தி விட்டு, அன்னையை நோக்கியவன், “உங்க கற்பனைக்கு என்னால பதில் சொல்ல முடியாது…” என்றான் அலட்சியமாக.

“என்னவோ எனக்கு சந்தேகமா இருக்கு… அதோட நீ அவளை விரும்பியே கட்டிக்கிட்டாலும் பெத்தவங்க வெறுப்போட தொடங்கும் இந்த பந்தம் நீடிக்கும்ன்னு நினைக்கிறியா?” என்றார் தயவு தாட்சண்யமின்றி குரோதமாக. அன்னையாக அவருக்கு அத்தனை ஆத்திரம். மகன் இப்படிச் சொன்னதைக் கேட்காமல் பிடிவாதம் செய்வதில் அவருக்கு இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று வெறியே வந்திருந்தது.

‘இந்த பந்தம் நீடிச்சா என்ன? நீடிக்காட்டி என்ன? உங்க சாபம் பலிக்கட்டும்மா’ என்று அவன் நினைத்ததை அவர் அறிய வாய்ப்பில்லை.

மகன் எதுவுமே பேசாது இருக்கவும், “ஸ்ரீவத்சனை பத்தி கூட யோசிக்கலையா நீ?” என்று தன் அடுத்த அஸ்திரத்தை எடுத்தார்.

“அவன் ஒத்துக்கிட்டா சந்தோசம். இல்லை உங்களை மாதிரி தான் செய்வான்னா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை… நான் என் முடிவுல ஸ்ட்ராங்கா தான் இருக்கேன்” திரும்பத் திரும்ப தன் உறுதியை வார்த்தையால் வெளிப்படுத்திய மகனை ஆராய்ச்சியாய் நோக்கினார்.

அவரால் எந்த கணிப்புக்கும் வர முடியவில்லை. “இது சரி வராதுன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருந்தும், எதுக்கு இந்த பிடிவாதம்? எனக்கு இன்னும் சந்தேகமா தான் இருக்கு… உன்னோட கோபத்தைக் காட்ட இந்த கல்யாணமோன்னு… உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும். அந்த ஆளும், அவன் பொண்டாட்டியும் செஞ்ச பச்சை துரோகத்துக்கு அந்த குடும்பத்துக்குக் கடவுள் கண்டிப்பா தண்டனை கொடுப்பார். ஆனா அதை நீ தரணும்ன்னு நினைக்காத. கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர்… அது உனக்கும் புரியும்ன்னு நினைக்கிறேன்…” அம்மாவின் வார்த்தைகள் மனதைக் குத்தியபோதும், தன் உறுதியில் பின்வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

அது அவனை ஆபத்பாந்தவனாக நோக்கும் அந்த மூத்த தம்பதியினரின் மீது கோபம் மறந்து தோன்றிய இணக்கம் என்று அப்பொழுது அவனால் கணிக்க முடியவில்லை.