சங்கீத சக்தி – 5

கீழே விழுந்த அபூர்வா எப்படி விழுந்தோம் என திருதிருக்க, சக்தியின் புன்னகையில் அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது.

ஒற்றை நாளில் எத்தனை அதிசயத்தைத் தான் அவளும் தாங்குவாள்? எப்பொழுதும் இவள்புறம் அவனது பார்வையே திரும்பாது, இன்றானால் வெகு உரிமையாக ரசித்துப் பார்க்கிறான். அசராமல் நெருங்கி வருகிறான். தயக்கமேயின்றி அணைத்துப் பிடிக்கிறான். எல்லாவற்றிக்கும் மேலாக எளிதாக முத்தமிடுகிறான். அதற்கே இவள் இவனுக்கு என்னவானதோ என நினைக்க, இப்படி அழகாகப் புன்னகைத்து அடியோடு சாய்க்கப் பார்க்கிறான்.

அபூர்வாவின் உணர்வுகள் ஒருவிதம் என்றால், சக்திவரதனின் உணர்வுகள் மற்றொரு விதம்!

மீன்குஞ்சு போல வாயைப் பிளந்து, அப்பட்டமாய் அவன் புன்னகையை ரசித்துப் பார்ப்பவள் அபாயகரமானவளே! அதைவிட அபாயம் அவளோடு தனித்திருப்பது என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தது சக்திவரதனின் உள்ளுணர்வு.

அவனின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “அம்ம்மே….” என்ற மழலையின் அழுகுரல் அந்த வீட்டை நிறைத்துக் கேட்க, அவளோ பதறி எழுந்து அருகிலிருந்த படுக்கை அறைக்குள் ஓடினாள்.

அறைக்குள் இருந்த சின்ன சிட்டோ வீறிட்டு அழ தொடங்கியிருந்தது. “ஸ்ஸ்ஸ்… இருடா நான் இங்கேயே தான் படுத்துட்டு இருந்தேன். உனக்குப் பால் காய்ச்சத் தான் வெளிய போனேன்” என அவள் சொன்ன சமாதானங்கள் எல்லாம் எடுபடவில்லை போலும். குழந்தையின் அழுகை குறைந்த பாடில்லை.

“பால் குடிப்பியாம்… அழாத அழாத… நந்தா குட்டி நல்ல பையன் தானே…” என அவள் குழந்தையை அள்ளி எடுக்க முயல, அதுவோ கை, காலை உதைத்து சமாதானமாக மறுத்து கொண்டிருந்தது. அவளின் குரலிலேயே சூழலை ஊகித்து அடுப்பங்கரையில் இருந்த பால் பாட்டிலோடு சக்தி உள்நுழைய, அதற்குள் பிள்ளையோடு போராடி அள்ளி எடுத்திருந்தாள்.

இவன் வேகமாக வந்து, அமிர்தாவிடம் பால் புட்டியை நீட்ட, நன்றியாக நோக்கிவிட்டு, அந்த பிள்ளைக்குப் பாலை புகட்ட, நல்ல பசி போலும். தேம்பலோடு உச்சுகொட்டி பாலை குடிக்கத் தொடங்கியது.

ஆசுவாசமாக மூச்சு விட்டவளின், முகத்தை மறைத்திருந்த முடிகளை எல்லாம் காதோரம் ஒதுக்கி விட்டான் சக்திவரதன். அவள் கூச்சப்பட, வேண்டுமென்றே அவளின் முகவடிவை விரல்களால் அளந்து சீண்டினான். கையில் பிள்ளை வேறு, அவளுக்கு அவனைத் தடுக்க முடியவில்லை என்பது ஒருபுறம் என்றால், உண்மையில் தடுக்கும் எண்ணமும் தோன்றவில்லை என்பது அவளது காதல் ரகசியம்!

கையில் ஒரு சின்ன சிட்டோடு அவளைக் காணக் காண அவனுக்குத் தெவிட்டவே இல்லை! அவனுள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் முற்றிலும் வேறானவை! காதலில் பொய்மை சாத்தியம் இல்லை! பொய்மையைப் புகுத்த நினைத்தவன், அதைப் பலநேரம் மறந்தும் போய்விடுகிறான். அதிலும் இன்றோ சுத்த மோசம்.

இதுபோன்றதொரு திட்டம் அவனுள் உதயமாகி இருக்கவே கூடாது! என்ன செய்ய விதி வலியது போலும்! எத்தனையோ விஷயங்களில் முழுக்க முழுக்க நல்லவனாக இருப்பவன், இந்த விஷயத்தில் மட்டும் கண்டதையும் யோசித்து வெகுவாக குழப்பிக் கொண்டு இதுபோல யோசித்து விட்டான். எல்லாருமே தன் வாழ்வில் சறுக்கும் தருணம் என்று இருக்குமல்லவா! சக்தியின் விஷயத்தில் அது அபூர்வா!

இன்று அவன் தன் திட்டத்தையும் மறந்து அவளில் லயித்துப் போனான்! அது நிச்சயம் தனிமை தந்த தைரியம் இல்லை. அவளது எல்லையற்ற நேசம் தந்த தடுமாற்றம்! அவள் தனித்து இருக்கும் இந்த நேரத்திலும், அவளோடு அவன் இருந்தால், என்ன விதமான பேச்சு வேண்டுமானாலும் எழலாம் என்ற போதிலும், அவளுக்கு அவனின் நலன் தானே முக்கியமாக இருக்கிறது! இதற்கும் இதுநாள் வரையிலும் நல்ல முறையில் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை அவளிடம்! காதலை மட்டும் சொல்லியதோடு சரி! அதன்பிறகு அவளைக் கண்டு கொண்டது கூட இல்லை. ஆனால், தன் வார்த்தைகளை வேதம் போலப் பின்பற்றும் அபூர்வா அதிசயானவளே! இவளின் காதலுக்குப் பாதகம் செய்ய தன்னால் முடியுமா அவன் இதயம் சில நொடிகள் கனத்தது. வேகமாகத் தன்னை மீட்டுக் கொண்டான். இப்பொழுது கண்டதையும் யோசியாதே மனமே என தன்னைத்தானே கடிந்தும் கொண்டான்.

முகத்திலிருந்து விலகாத அவன் கரத்தினால் அவள் பரிதவிக்க, அது அவனுக்கு ரசனையாய் இருந்தது!

பாதி உறக்கத்தில் பாலுக்குச் சிணுங்கிய குழந்தை, மீண்டும் உறக்க நிலைக்குச் செல்ல, மடியில் கிடத்தித் தட்டிக்கொடுத்துக் கொண்டே இருந்தாள். அவனோ கட்டிலில் அவளருகே நெருங்கி அமர்ந்து அவளின் தோளைச்சுற்றி கைகளைப் போட்டு அணைத்துக் கொண்டான்.

உண்மையில் அவளைச் சீண்டும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால், அவளின் பரிதவிப்பு ரசனையாக இருக்க, வேண்டுமென்றே விளையாட்டு காட்டினான்.

அவள் பாவமாக ஏறிட, அவளின் நெற்றி முட்டி, “இந்த வாண்டு யாரு?” என மெல்லிய குரலில் கேட்டான்.

அவளும் அதே மெல்லிய குரலில், “பக்கத்து வீட்டுக் குழந்தை… அவங்க அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதுதான் நான் பார்த்துக்கிறேன்னு கொண்டு வந்தேன்” என்றாள்.

“நல்லா தான் பார்த்துக்கிற…” என்றவன் அவளின் கன்னத்தில் மீசை முடியால் உரசினான். இவன் அவஸ்தை தாங்காமல் அவள் சிலிர்க்க, “நீ இவ்வளவு பொறுப்பா இருக்கிறதைப் பார்த்தா… கல்யாணம் முடிஞ்ச கையோட பிள்ளை பெத்துக்கலாம் போலவே…” என்றும் சொல்ல, சிலிர்த்த மேனி சிவந்து போனது.

மிகவும் கெடுபிடியானவன், உரசல், வழிசல் எல்லாம் இவனுக்கு ஆகவே ஆகாது என்று நினைத்தவன், ஒற்றை நாளில் இத்தனை பேசுகிறான் அதுவும் கூச்சம் கொள்ளுமளவு என அபூர்வா அயர்ந்து தான் போனாள். உண்மையில் அவனுக்கு என்னவானது என அவனே அறியவில்லை! என்னவோ அவனை வெகுவாக தடுமாற வைத்தது. தன் தடுமாற்றத்தை அவன் உணர்ந்தாலும், அவனால் அவனையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

திருமணம் நடக்கப் போகிறது. ஆக ஒதுங்கி இருந்தால் வீண் சந்தேகம் வரும் என அவனுக்கு அவனே காரணம் சொல்லி சமாளித்தும் கொண்டான். அது உண்மையில்லை என அவன் ஆழ்மனம் அறியாமல் இருக்குமா என்ன?

நிறையவே சீண்டுகிறோம் பாவம் என நினைத்தவன், சற்று விலகி அமர, அப்பொழுதே அபூர்வா சற்று ஆசுவாசமாய் மூச்சு விட்டாள். அதைப் பார்த்தும் அவன் கேலியாக சிரித்து எதுவோ சொல்ல வர, மிரண்ட பார்வையால் அவனை நோக்கியவள், அவசரமாக கையெடுத்துக் கும்பிட்டாள். அதற்கும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்.

ஒருவழியாக பிள்ளை நன்கு உறங்கிவிட, அதை மீண்டும் படுக்கையில் கிடத்தி விட்டு வெளியேற அவனும் வெளியேறினான். அவள் கதவைச் சாற்றி விட்டு வந்து சோபாவில் அமர, இவன் நல்ல பிள்ளையாய் அவளுக்கு நேர் எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.

“உங்க அம்மா அப்பா இல்லாம நாம மட்டும் தனியா வீட்டுல இருக்கிறது சரியில்லை அபூ… நான் கிளம்பறேன்” மீண்டும் பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

அவள் மறுத்து பிடிவாதம் செய்தாள். “ம்ப்ச்… உனக்கு புரியுதா இல்லையாடி…” என அவன் சலிக்க, அவள் பிடிவாதம் குறைவதாகவே இல்லை.

“எனக்கே என் மேல நம்பிக்கை இல்லை… அப்பறம் உன் இஷ்டம்…” என அவன் தோள்களைக் குலுக்க, அவள் அவனை முறைத்தாள்.

“என்ன?” அவள் பாவனையில் சிறு சிரிப்புடன் வினவினான்.

“சேட்டை செய்ய நினைச்சீங்கன்னா கயிறு வெச்சு உங்களைக் கட்டி வெச்சுடுவேன் பார்த்துக்கங்க” அவள் சொல்லி முடிக்கவும், “அடிங்க… அதையும் நான் பார்க்கிறேன்” என அவன் வர, அவன் வருவான் எனப் புரிந்து அவளும் ஓட தொடங்கியிருந்தாள்.

வேண்டுமென்றே அவளைப் பிடிப்பது போல அவன் செல்வதும், பிறகு கைக்கெட்டும் தூரத்தில் அவளைத் தவற விடுவதும் என அந்த அறையைச் சுற்றி இருவரும் வட்டமடிக்க, கொஞ்ச நேரத்தில் மூச்சு வாங்க நின்றிருந்தார்கள்.

“என்னைக் கட்டி வைக்குமளவு நீ இன்னும் வளரலை சரியா” என்றவன், “இன்னும் எவ்வளவு நேரம்டி” என்றான் கடிகாரத்தைப் பார்த்தபடி.

“இன்னும் மூன்றரை மணி நேரம் தான்…”

“ம்ப்ச் விளையாடாத… அது வரைக்கும் எல்லாம் நான் இங்கே இருந்தா உனக்குத் தான் ரொம்ப டேஞ்சர்” என்றான் மீண்டும்.

“சரி உட்காருங்க. ஏதாவது மூவி பார்க்கலாம் நேரம் போயிடும்” என அவள் ஐடியா கொடுக்க, மொத்தத்தில் இவள் தன்னை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டாள் என்பது மாத்திரம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அது மனதிற்கு இதமும் சேர்த்தது.

வேறு வழியின்றி அவனும் திரைப்படம் பார்ப்பதற்கு அவளோடு அமர, திரைப்படம் அவனுடைய சாய்ஸ் தான் விட்டாள். “நீயே போடு இதுல என்ன?” அவன் சொன்னதற்கும் அவள் ஒப்பவில்லை. அவனது ரசனையைப் பற்றி அவள் அறிந்துகொள்ள வேண்டி கள்ளத்தனம் செய்தாள்.

பொதுவாகத் திரைப்படங்களில் எல்லாம் சக்திக்கு சமீபமாய் ஆர்வம் குறைந்து விட்டிருந்தது. அவன் வேலையே சரியாக இருக்க, அதற்கு எங்கே நேரம்? ஆக முன் வரிசையில் காட்டிய நகைச்சுவை படம் ஒன்றை போட்டுவிட்டு இருவரும் பார்த்தனர். ஒரு மணி நேரம் கடந்த நிலையில் நந்தா குட்டி விழித்து விட்டான். அவனையும் சுத்தப்படுத்திக் கொண்டுவந்து மீண்டும் சக்தியோடு படம் பார்க்க அமர்ந்தாள்.

“எப்பவும் இப்படி அழுதுட்டே இருக்க மாட்டான். இன்னைக்கு ஜன்னல், கதவு எல்லாம் மூடி இருக்கவும் பயப்படறான் போல…” என்றாள் சக்தியிடம்.

அவனும், “ஆமா நீயும் வீட்டை இப்படி இருட்டடிச்சு தான் வைக்கணுமா?” என மீண்டும் சிரித்தான்.

அவள் முறைத்துக்கொண்டே அவனுக்குப் பதில் தந்தாள். அதற்கும் சீண்டுவதை அவன் விடவில்லை. மீண்டும் இருவருக்குள்ளும் பேச்சு அதிகமாகி, பிள்ளையோடு விளையாடி என நேரம் போனதில், ஓடிக்கொண்டிருந்த படத்தில் இருவருக்குமே கவனம் இல்லை.

வேண்டுமென்றே நிறைய நிறைய சீண்டினான். ஓரவிழியால் அவளை அளந்து சிவக்க வைப்பதும், பூடகமாக எதையாவது சொல்வதும் என அவன் சேட்டைகளை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இவனா இத்தனை நாட்களும் கண்டும் காணாமலும் இருந்தான் என அதிசயிக்க வைத்தான்.

படம் அது பாட்டிற்கு ஓடி முடிந்திருக்க, “என்னங்க படம் எப்ப முடிஞ்சது?” என்றாள் டீவி திரையைப் பார்த்து.

“ஹ்ம்ம் நீ என்னை சைட் அடிச்சிட்டு இருந்தப்ப…” என அவளை மீண்டும் சீண்டியவன், “அப்படி தானே நந்தா குட்டி” எனப் பிள்ளையிடமும் நியாயம் கேட்டான். சின்ன குட்டியோ இவன் மீசையைப் பிடித்திழுத்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

“எவ்வளவு நேரம்டி… எனக்கு பசிக்குது… டீயாச்சும் குடேன்…” என்றான் பாவமாக.

“ஸ்ஸ்ஸ்… இன்னும் அரை மணி நேரம் தான். கொஞ்சம் சும்மா இருங்க. அப்பறம் சாப்பிட்டுக்கலாம்” என சின்ன பிள்ளைக்குச் சமாதானம் சொல்வது போலச் சிறு கண்டிப்போடு சொன்னாள்.

“ஆமா குழந்தைக்கு மட்டும் பால் குடுத்த…”

“அவனும் உங்களை மாதிரி அடம் தான். தூங்கும் முன்னவே தந்தேன். குடிச்சா தானே? பாதி தூக்கத்துல எழுந்து குடிக்கிறான். குழந்தைக்குப் புரியுமா அதுதான் குடுக்க வேண்டியதா போச்சு…”

“எனக்கும் புரியலைன்னு நினைச்சு கொஞ்சம் டீ கொடு பார்க்கலாம்” தூண்டில் வீசியவனைச் சட்டையே செய்யாமல், “அதெல்லாம் கிடையாது” என்று சிலுப்பினாள்.

இருவருக்கும் இடையே கிடைத்த நேரங்கள் இப்படித்தான் செலவானது. காதல் அத்தியாயங்களே இல்லாத வெறுமையான அவளின் காதல் கதையை ஒற்றை நாளில் மொத்தமும் மாற்றியிருந்தான் சக்திவரதன். அவன் கொட்டிய காதல் அடைமழையில் அவள் சுகமாய் நனைந்திருந்தாள். ஓர விழிப்பார்வைகளும், கள்ளச்சிரிப்பும், முகத்தைச் சிவக்க வைக்கும் பேச்சும், ஏக்க முணுமுணுப்புகளும், செல்ல மிரட்டல்களும்… காலத்திற்கும் பொக்கிஷமாய் சேர்த்து வைக்கப் பல கதைகளை ஒற்றை நாளில் கொடுத்தவனை எண்ணி எண்ணி அவள் மனம் தித்தித்தாள்.

கிரகண நேரம் முடிந்த பிறகே அவனுக்குத் தேநீர் கிடைத்தது. அவன் தேநீரை குடித்துக் கொண்டிருந்த போது, அபூர்வாவின் கைப்பேசி அவளது தந்தை பெயர் தாங்கி சிணுங்கியது.

“சொல்லுங்கப்பா…” எனச் சிறு சிரிப்போடு தொடங்கியவள், தந்தை பேசியதைக் கேட்டு பதற்றம் அடைந்தாள்.

முகம் வெளிறி, கண்கள் கலங்கிவிட, “உண்மையை சொல்லுங்க… அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்றாள் அழுகையோடே. எதிர்புறம் தாய், தந்தை இருவரும் மாற்றி மாற்றி சொன்ன சமாதானங்களில் அவள் தெளியவே இல்லை.