அடுத்த ஆண்டில் யாழிசையைப் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். வாழ்க்கை நல்லபடியாக போனது. கனவில் கூட நினைக்காதளவு சமூக உறவு அமைந்து விட்டதாலோ என்னவோ சக்திக்கு இப்பொழுதெல்லாம் அபூர்வாவின் மீதான பார்வை சற்றே உரிமையோடே பதிந்தது. என்ன முயன்றும் அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

கள்ளப்பார்வைகளை அவள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இவ்வாறான சூழலில் ஒருநாள் யாழிசை உறங்க வைத்துவிட்டு மனைவியை ஓரக்கண்ணால் கவனிக்க, ஒருமாதிரி அரை உறக்க நிலை அவளுக்கு. அவனின் இதழ்கள் பழைய நினைவில் ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ என முணுமுணுத்தது.

முன்பு அவன் அவளை நாடும் சமயங்களில், சில நேரம் அவள் அரை உறக்க நிலையில் இருப்பாள். அப்பொழுதெல்லாம் அவனைத் தடுக்கும் எண்ணம் அவளுக்கு இம்மியும் வந்ததில்லை. அதேசமயம் அவளது உறக்கமும் முழுதாக கலைந்ததில்லை. ஒருமாதிரி போதை ஆசாமி போலத் தான் அந்த சமயத்தில் இருப்பாள். அந்த நேரக்கூடல் அவனுக்கு மிகவும் பிடித்தம்!

அவளின் அரைப்புன்னகை, கண்களை விரிக்கவே முடியாத சோபை, வெட்கம் மறந்து அவனை ஏற்கும் பாங்கு, தன்னிலை மறந்து செய்யும் சின்னஞ்சிறு சேட்டைகள் என எல்லாமே அவனுக்கு அத்தனை பிடித்தம். கூடிக் களைத்ததும் அவனது கழுத்தோடு தாவி அணைத்து, அவனின் கழுத்தடியில் முகம் புதைத்துக் கொள்வாள். அங்கே அவள் முத்தமிட்டால் கூட அத்தனை கூச்சம் எழாதோ என்னவோ… இவளது சூடான மூச்சுக்காற்று தீண்டவும் ஆண்மகன் அவனுக்கே அத்தனை கூச்சமாக இருக்கும். வெகுவாக நெளிவான்.

“ஏய்…” என்ற போலி மிரட்டலோடும், வெட்கப் புன்னகையோடும் அவன் விலக நினைத்தால் கூட, அவள் விலகாது சிறுப்பிள்ளையாய் சேட்டை செய்வாள். நிச்சயம் அவள் தெளிவாக இருக்கும் சமயம் இதையெல்லாம் அவளிடம் இம்மி கூட எதிர்பார்க்க முடியாது.

அவளின் அரை உறக்க போதை நிலை… அவனுக்குமே போதை வஸ்து!

அப்பொழுதெல்லாம் அவளைப்பார்த்து, “ஸ்லீப்பிங் பியூட்டி” என்று சொல்லி கன்னம் வருடுவான். அவன் அப்படிச் சொன்னதும், ஏதோ அவார்ட் வாங்கியவள் போல வாடாத புன்னகையுடனும், பூரித்த முகத்துடனும் தன் உறக்கத்தைத் தொடர்வாள்.

எத்தனை இனிமையான பொழுதுகள் தன் போலப் பெருமூச்சு எழுந்தது சக்திவரதனுக்கு.

அவள்மீது தான் கொண்ட காதல், அப்பொழுது கூடவா தனக்கு உரைக்கவில்லை… யாரை நொந்து என்ன பயன் தன் விதி இப்படி இருக்கும்பொழுது!

இன்றும் அந்நாளின் நினைவுகள் பசுமையாய் எழுந்து அவனை வெகுவாக படுத்தியது. நீண்ட கொடுமையான வருடங்கள் கடந்து தன்னவளை பார்த்து, அவளை ஓரளவு சரிகட்டிய ஆசுவாசமோ என்னவோ அவனுள் உணர்வுகள் ஆர்ப்பரித்தது.

அவள் என்ன செய்கிறாள் என்று மீண்டும் எட்டிப்பார்த்தான். அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். “ஸ்லீப்பிங் பியூட்டி” என மீண்டுமொருமுறை முணுமுணுத்தவன், தன்போல அவள் அருகே எழுந்து சென்று படுத்துக் கொண்டான்.

உறங்கும் அவளை சில நொடிகள் பார்த்தவனின் உணர்வுகள் கட்டுப்பாடுகளை மீறி பொங்கிக் கொண்டிருந்தது.

மெல்ல அவளது இடையோடு அணைத்து கழுத்தில் முகம் புதைக்க, பதறி அடித்துக் கொண்டு அபூர்வா எழுந்தமர்ந்தாள்.

“என்ன அபூ? என்னாச்சு திடீர்ன்னு? எதுவும் கெட்ட கனவா? பயந்துட்டியா?” என புரியாத பாவனையில் அக்கறையோடு விசாரித்தான். அவன் தொட்டதற்குக் கோபமாக ஏதேனும் பேசியிருந்தால் இயல்பாக எடுத்திருப்பானோ என்னவோ… பதறி எழவும் என்னவோ ஏதோ என அவனும் பயந்தான்.

அவன் அறிந்த அபூர்வா ஆழ்ந்து, அமைதியாக உறங்குபவள். டீப் ஸ்லீப் என்பார்களே! அப்படி ஓர் உறக்கம் கொள்வாள். இன்று இப்படிப் பதறி எழவும் என்னவானதோ என்று தான் முதலில் தோன்றியது. தன்னால் என உரைக்கவில்லை.

அவள் தன் ஆழ்ந்த உறக்கத்தைத் தொலைத்துப் பல நாட்கள் ஆனதை சக்தி அறிவானா? அதற்குக் காரணமாகவே சாட்சாத் அவன்தான் என்பதையும் அவன் அறிய வாய்ப்பே இல்லை.

அபூர்வா அவனை வெறித்துப் பார்த்தாள். அவள் கண்ணைக்கூடச் சிமிட்டவில்லை. ஒருமாதிரி வெறித்த பார்வை!

நிச்சயம் ஏதோ பயந்துதான் விட்டாள் என எண்ணியவன், “என்ன அபூ?” என்று தலைமுடியை வருடி ஆதரவாக மீண்டும் கேட்டான்.

“ஓ… என் பொண்ணுக்காக ட்ரீட்மெண்ட், படிப்புன்னு நிறைய பணம் செலவு பண்ணியிருக்கீங்க. அதை இந்த வழியில வசூல் செய்யலாம்ன்னு நினைக்கறீங்க போல…” என இகழ்ச்சியாக இதழ் வளையக் கேவலப்படுத்தும் விதமாய் பேசினாள். அவளுக்கும் அப்படிப்பேச ஆசையில்லை தான்! ஆனால், அவனோடான கூடலைத் தடுக்க இப்படிப் பேசினால் தானே வேலைக்காகும்!

புடவையினுள் புதைந்திருந்த தாலியைத் தூக்கி வெளியில் போட்டவள், “உங்களை விட்டு வந்தும், விவாகரத்துக்கு சம்மதம்ன்னு விடுதலைப்பத்திரம் தந்தும், பிடிக்காட்டியும் இதை சுமந்துட்டு தானே திரியுறேன். இது இல்லாட்டி ஊரு உலகம் தப்பா பேசுமே! இதைச் சுமக்கிறது போல இப்ப நீங்க செலவு பண்ணின பணத்துக்காக உங்களைச் சுமக்க போறேன். அதுல என்ன இருக்கு?” என அவள் கேட்டதுமே அவன் கை கால்கள் நடுங்க எழுந்து நின்று விட்டான்.

பாவி! என்ன வார்த்தை சொல்லி விட்டாள். அவன் முகம் அவமானத்தில் சிவந்து போனது. உள்ளம் குமிறியது.

அவளோ சொன்னதோடு நில்லாமல் தன் ஆடைகளையும் வேகமாகக் களையத் தொடங்க, “அபூ… பிளீஸ்…” எனக் கத்தி விட்டான்.

அவள் புரியாமல் நோக்க, “இப்படி அவமானப்படுத்தினதுக்குப் பதிலா என்னை நீ கொன்னே போட்டிருக்கலாம் அபூ…” என்று கசப்பாக மொழிந்தவன், விறுவிறுவென நடந்து தான் முன்பு படுத்திருந்த இடம் சென்று கூனி குறுகிப் படுத்துக் கொண்டான்.

சாட்டையைச் சுழற்றி அடித்தது போல மனமெங்கும் வலித்தது. ஆக, அபூர்வா பதறி எழுந்தது என் தொடுகையால்… அந்த எண்ணமே அவனைக் கொல்லாமல் கொன்றது.

“பதில் சொல்லாம போயி படுத்துட்டா என்ன அர்த்தம். எழுந்திருங்க” என்றாள் ஆவேசமாக.

அவன் வேறு வழியின்றி எழவும், “இன்னும் எவ்வளவு நாள் இப்படி செஞ்சா உங்க கடன் அடையும்?” என்றாள் நக்கலாக. “அப்பறம் இன்னொன்னு வயித்துல வந்து அதை நீங்க அழிக்கச் சொல்லி… அதெல்லாம் எதுக்கு வீணா? அதுனால கொஞ்சம் சேப்டியா பண்ணிடுங்க. இதுக்காக தான் நான் வந்தே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சு கூட்டிட்டு வந்தீங்க போல” என வார்த்தையால் விலாசினாள்.

சட்டென்று சக்தியின் முகம் இறுகி விட்டது. ஏற்கனவே மனதளவில் பெரும் காயம் கொண்டிருக்கும் அவளிடம் வார்த்தையாட வேண்டாம் என்று அவனுக்கு அவனே போட்டிருந்த விதியை கடைப்பிடிக்க முடியாதளவு வேதனை தொண்டையை அடைக்க, தன்னையும் மீறி, “இப்படிப் பேச என்னை கொன்னே போட்டிருக்கலாம்ன்னு முன்னாடியே சொன்னேனே அபூ. அப்படி வேணாம்ன்னு நினைச்சா வாசல்ல கழட்டி வெச்சிருப்பியே அதைக்கொண்டு என்னை நீ அடிச்சிருக்கலாம். ஆனா இப்படி வார்த்தையாலேயே வதைக்கிறது ரொம்ப வலிக்குது அபூ. நான் தப்பு பண்ணுனவன் தான்! அது என்னையும் மீறி நடந்த தப்பு. என் பக்க விளக்கத்தைக் கூட கேட்காம, எனக்காக கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி வலிக்க வலிக்கக் குத்தி என்ன பண்ண போற சொல்லு? நானும் தவறுகள் செய்யும் சாதாரண மனுஷன் தானேடி! இதுக்காக என் மொத்த வாழ்க்கையையும் பழி கொடுக்கக் கூட நான் தயார் தான். ஆனா எந்த தப்பும் செய்யாத நீயும், பாப்பாவும் ஏன் காலம் முழுக்க கஷ்ட படணும்.

நீ ஏன் இத்தனை சின்ன வயசுல கணவன்கிட்டயே மகளை ஒளிச்சு வெச்சு வாழணும். நம்ம பாப்பா ஏன் அப்பா பாசமும், அரவணைப்பும் இல்லாம வளரணும்? அதுதான் உங்களை என்னோட கூட்டிட்டு வந்தேன். வந்து இத்தனை மாசத்துல இப்படி எதுவும் செஞ்சேனா? இன்னைக்கு என்னையும் மீறி உன்னை நெருங்கிட்டதுக்கு என்ன எல்லாம் பேசிட்ட?

உன்னால என்னை மன்னிக்கவே முடியாதா அபூ? காலம் முழுக்க இப்படி வலிக்க வலிக்க பேச போறியா? யாருமே உலகத்துல தப்பு செஞ்சிருக்க மாட்டாங்களா சொல்லு. இதே மாதிரி ஒரு தப்பை உங்க அப்பா, அம்மாவோ, இல்லை நாளைக்கு நம்ம பாப்பாவோ செஞ்சா கூட இப்படித்தான் மன்னிக்காம இருப்பியா? அதெப்படி இருப்ப அவங்க எல்லாம் உன் ரத்த சொந்தம். ஆனா நான் அப்படியா?” மன விரக்தியில் அவன் பேசிக்கொண்டே போக, அவளுக்கு நெஞ்சடைத்தது.

உண்மைதானே யாழிசை எதுவும் தவறிழைத்தால் இந்தளவு மன்னிக்காமல் அவளை வதைப்பேனா? ஆனால், இவன் செய்தது அப்படி என்ன சாதாரண குற்றமா? அதை எந்த காலத்திலும் மறக்க முடியுமா? அதனால் தானே இவன் சங்காத்தமே வேண்டாம் என்று விலகியிருக்கக் கேட்கிறேன். இப்படி கூடவே வந்து ஒட்டிக்கொண்டு அவனும் கஷ்டப்பட்டு, என் நிம்மதியையும் கெடுத்து… இறுதியில் எல்லா பெண்களையும் போல குழந்தைக்காக, குழந்தையின் நலனுக்காகக் கணவனின் தவறை மன்னிக்கும் நிலைக்கு தான் அவளும் போயாக வேண்டுமோ?

இவனை மன்னித்தால்? நெஞ்சின் படபடப்பு அதிகரிக்க, அமைதியாகப் படுத்துக் கொண்டாள். அன்றிலிருந்து அவளிடம் பெரிய மாறுதல் அவனைக் குத்தி கிழிக்கும், தரம் தாழ்த்தும், மனம் நோகடிக்கும் வார்த்தைகளை அவள் வீசுவதை நிறுத்தியிருந்தாள். அவனும் வெகுவாக நத்தை போல சுருங்கிக் கொண்டான்.

அதுவும் அபூர்வாவிற்கு வலித்தது. மெல்ல மெல்ல தன் கவலைகளை நினைக்காமலிருக்கத் தொடங்கினாள். கணவனை மன்னிக்கும் மனநிலைக்கு மெல்ல மெல்ல வந்திருந்தாள்.

ஆனால், அவன் நிறைய ஒதுக்கம் காட்டினான். பொறுமை இழந்தவள், அவனை இழுத்து நிறுத்தி சண்டை பிடிக்க, சண்டையின் சாராம்சத்தில் அவன் தலை காய்ந்தது.

புரிந்தும் புரியாமலும், நம்ப முடியாமல் அதிசயத்தைக் காண்பவன் போல நின்றிருந்தவனின் தோற்றம் ஈர்க்க, அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு, அவன் கையை எடுத்து தன்னை சுற்றி அவளே போட்டுக் கொண்டாள். அப்பொழுதும் அவன் ஒன்றும் செய்யத் தைரியமற்று இருக்க, “என்ன?” என்றாள் கோபமாக.

“பாரு காஞ்சு போயிருக்கேன்… விளையாடாத… தள்ளிப்போ” என்றான் அவன்.

“ஆமாம் விளையாடறாங்க… ட்யூப்லைட்டு…” என்று முணுமுணுத்தவளை அவன் எலும்புகள் நொறுங்குமளவு இறுக்கிக் கொண்டிருந்தான்.

அதில் அவள் திணறும் போதே அவள் முகமெங்கும் முத்த மழையைப் பொழியத் தொடங்கியிருந்தான்.

இந்த சங்கீதமும் சக்தியும் இணைந்தே இருக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

*** சுபம் ***