சங்கீத சக்தி

சுகமதி

சங்கீத சக்தி – 20

சக்திவரதன் அபூர்வாவின் தோற்றத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். சிறு பெருமூச்சுடன் அவள் அருகில் சென்று அவளைப் போலவே சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தவன், “சாரி… அண்ட் தேங்க்ஸ் அ லாட்” என்றான் தழுதழுத்த குரலில்.

இவனது குரலில் களைந்தவள் எழுந்து செல்ல பார்த்தாள். அது புரியவும் அவளின் கையைப்பற்றிப் போகவிடாமல் செய்தவன், அவள் சுதாரித்து விலகுவதற்குள் அவளைக் கட்டியணைத்து அவளின் தோளில் சாய்ந்து, “ரொம்ப கஷ்டமா இருக்கு அபூ” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

அவன் குரலா, கண்ணீரா என்று தெரியவில்லை. ஆனால், திமிராமல் கட்டுப்பட்டுக் கிடந்தாள். “அம்மாவோட கடைசி நேரத்துல நான் கூட இல்லை அபூ… இப்ப அப்பா… அப்பா…” என தேம்பியவன், “அப்பா அத்தைக்குச் செஞ்ச கொடுமைக்கு எனக்கு நிறையக் கோபம் இருக்கு அபூ… தன் வீட்டு பொண்ணு நிலைமையை தெரிஞ்சுக்காம.. அவங்க கஷ்ட காலத்துல கூட இருக்காம… இவங்களை பார்த்தாலே பயந்து போற அளவு அத்தையோட மனநிலையை வெச்சிருக்காங்க. அத்தையோட குறைக்காக அவங்களை தன் தங்கையாவே இவர் பார்த்ததில்லை. எவ்வளவு குரூர மனம் இருந்திருந்தா இப்படிச் செய்ய முடியும்?

அவர் ஏத்துப்பாரு, சப்போர்ட் செய்வாருன்னு தைரியம் மாமாக்கு இருந்திருந்தா கூட மாமா உன் பிறப்பை மறைச்சிருக்க மாட்டாரு… வசதியான இவரை எதிர்த்து ஊருல யாரு என்ன சொல்லிட போறாங்க? இத்தனை வசதி வாய்ப்பு இருந்தும் சொந்த தங்கச்சியையே கவனிக்கலையேன்னு அப்பா மேல இருந்த கோபத்துல அம்மாவையும் ஒதுக்கி வெச்சுட்டேன்.

நீங்களாவது அத்தையை கவனிச்சிருந்திருக்க கூடாதாம்மா… உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தாலும் இதேதான் செய்வீங்களான்னு அவங்க முகத்துக்கு நேரா கேட்டது தான் அவங்களை பார்த்து நான் கடைசியா பேசினது. அதுக்கப்பறம் அப்பாவும், அம்மாவும் என்னை சமாதானம் செய்ய எவ்வளவோ தேடி வந்தும், உன்னை தொலைச்ச கோபத்துல அவங்களை சுத்தமா ஒதுக்கி வெச்சேன்.

அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னு அப்பா வந்து கெஞ்சியும் நான் பார்க்கப் போகலை. ரெண்டே நாளுல அவங்க தவறிட்டாங்க. அப்ப எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா? இப்ப அப்பா… அப்பா…” எனக் கண்ணீரைச் சிந்தியவன்,

“அபூ என்னால முடியலைடி. அவங்க செஞ்ச தப்பை மன்னிக்க முடியலை. ஆனா இப்படி அவங்க கடைசி காலத்துல தனியா தவிக்க விடவும் மனசு வரலை. அபூ… அப்பாவுக்கும் ஏதாவது ஆயிட்டா… ஐயோ! கடவுளே! என்னால என்னையே மன்னிக்கவே முடியாதுடி… நான் இப்ப என்ன செய்யன்னு சொல்லு… எனக்கு மண்டையே வெடிக்கிற மாதிரி இருக்கு” என்று தன் தலையை முரட்டுத்தனமாக அவள் தோளில் இடித்து அரற்றியவனை சமாதானம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் அபூர்வா.

“என்ன செய்யறீங்க… பிளீஸ் அமைதியா இருங்க…” என்றவளின் கரங்கள் அவனின் முதுகை வளைத்து, அவனை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தது.

ச்சே! கஷ்ட காலம் என்பது எல்லாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் வரும் போல! தங்களின் விதியை சபித்தாள்.

அவனின் அலைப்புறுதல் புரிந்தது. தனக்காக இத்தனை ஆண்டுகளாகப் பெற்றோரை ஒதுக்கி வைக்க இவனால் எப்படி முடிந்தது என ஆச்சரியமாக இருந்தது. இதற்கும் இவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. அம்மாவின் இறுதிக் காலத்தில் கூடப் போகாமல் இருந்தான் என்றால் எவ்வளவு உள்ளுக்குள் துடித்திருப்பான்.

அவனின் முதுகைத் தட்டி தந்தவள், மென்குரலில், “உங்க அப்பாவைப் போய் பார்த்துட்டு வாங்க…” என்றாள். ம்ம் ஹ்ம்ம் என வேகமாகத் தலையசைத்தான். அவன் அசைத்த வேகத்தில் அவளின் தோள்பட்டையே வலித்தது.

அவனை மெல்ல விலக்கி, “ம்ப்ச் கிளம்புங்க சீக்கிரம்” என்றாள் அதிகாரமாக. அதற்கு கட்டுப்பட்டவன் போல, “போறேன். ஆனா… எனக்கு அவரை பிடிக்காது. இது பெத்த கடமைக்காக மட்டும் தான்” என்றான் சிறுபிள்ளை போல!

அவன் சொன்ன பாவனையில் புன்னகை அரும்ப, அதை மறைத்து, “ஹ்ம்ம்… சரி” என்றாள் மிடுக்காக.

சக்தி அப்பொழுதே மருத்துவமனைக்கு விரைந்தான். அவன் மீண்டும் வந்தபோது மறுநாள் முற்பகல் பதினோரு மணியானது. குளித்து, உடைமாற்றி மீண்டும் மருத்துவமனைக்கு கிளம்பி நின்றவனுக்கு உணவு பரிமாறினாள். “உனக்கு ஏன் சிரமம்? நான் வழியில பாத்துக்கிறேன்” என்றான் தயங்கித் தயங்கி.

“ஏன் ஊருல இருக்கவங்க எல்லாம் உன் புருஷனுக்கு சாப்பாடு போடுவியா இல்லையான்னு கேட்கிறதுக்கா…” என்றாள் கடுப்பாக. உண்மையில் சமீபத்தில் யாரும் அப்படிக் கேட்கவில்லை தான்! இவள் வந்த புதிதில், “உனக்கு அம்மா அப்பா நியாபாகமாவே இருக்கும்ன்னு உன்னை வெளியூருக்கு அனுப்பி இருக்கேன்னு உன் புருஷன் சொன்னான். இப்ப நல்லாயிருக்கியா தாயி” என பக்கத்து வீட்டுப் பாட்டி விசாரிக்க வந்தவர், “இவளது, மகளது மெலிவுக்காக வருந்தி, கண்டித்து, சக்தியும் மெலிந்து விட்டான் பாவம். இனி நீதான் உன்னையும் தேத்தி, உன் புருஷன் புள்ளையையும் தேத்தணும்” என இலவச ஆலோசனையைக் கண்டிப்புடன் சொல்லி சென்றிருந்தார்.

இவள் வந்தது அறிந்து விசாரிக்க வந்தவர்கள் பலரும் அதே பல்லவி தான்!

“நீ நல்லா சாப்பிடு… புள்ளைக்கு சாப்பாடு போடு… புருஷனுக்குச் சாப்பாடு போடு…” இதையே எல்லாரும் மாற்றி மாற்றிச் சொல்லிச் சென்றிருக்க, இப்பொழுது அதை நினைவில் வைத்து வேண்டுமென்றே இப்படிக் கேட்டாள்.

சக்தி எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்து உண்டான். அடிக்கடி அவளின் முகத்தைத் தயக்கமாக ஏறிட்டுப் பார்த்தான்.

ஒருகட்டத்திற்கும் மேல், “என்ன?” என்றாள் புரியாமல்.

தயங்கி, தயங்கி, “அவருக்கு உன்னையும், பாப்பாவையும் பார்க்கணுமாம்” என்றான் வறண்ட குரலில். அவள் முகம் கடுக்கவும், “உனக்கு விருப்பம் இல்லாட்டி வேண்டாம்” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

என்ன நினைத்தாளோ, “கிளம்பி வறோம்” என்றிருந்தாள். அவனது கண்கள் வியப்பில் விரிந்து போனது. அவனால் நம்பவே முடியவில்லை.

உண்மையில் அபூர்வாவிற்கு சக்தியிடம் நன்றிக்கடன் இருந்தது. அவளின் பெற்றோர்கள் தங்களது இறுதிக் காலத்தில் மகளைப்பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இருந்ததன் மூல காரணம் திருமதி சக்தி என்ற அடையாளம் அல்லவா! அதற்குக் கைமாறு செய்யவே ஒப்புக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.

ஆனால், அருணகிரியைப் பார்த்ததும், அவர் தழுதழுத்த குரலில் மன்னிப்பை யாசித்ததும் நன்றிக்கடனுக்காக வந்தோம் என்பதே அவளுக்கு மறந்து போயிற்று! தாய் மாமனில் அவள் தாயைக் கண்டாளோ என்னவோ தெரியவில்லை… அவர்மீது கோபம் என்ற உணர்வே எழ மறுத்தது. அருணகிரியும் தாய் மாமன் பாசத்தைப் பலமடங்கு அவளின் மீது  கொட்டினார். தங்கைக்குத் தர மறுத்ததை அவர் மகளுக்குத் தர நினைத்தாரோ என்னவோ!

“உங்களுக்கு ஒன்னும் ஆகாது மாமா” என்று ஆறுதல் பேசிய தேவதைப்பெண்ணை இமைக்க மறந்து பார்த்திருந்தான் சக்திவரதன்.

அவர்கள் மூவரும் சிறிது நேரம் உள்ளே இருந்துவிட்டு வெளியே வர, மருத்துவரைப் பார்க்க போயிருந்த ஸ்ரீவத்சன் இவர்களைப் பார்த்ததும் மீண்டும் கண்டபடி வார்த்தையை விட்டான்.

சக்தி கண்டுகொள்ளாமல் நிற்க, அபூர்வா யாழிசையை சக்தியிடம் நீட்டியவள், “பாப்பாவோட வெளிய இருங்க. வந்துடறேன்” என சொன்னாள். எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் அவன் போயிருந்தான்.

‘பொண்டாட்டி தாசன்’ என ஸ்ரீ முணுமுணுக்க, சொடக்கிட்டு அவனை அழைத்தவள், “நீ என்னவோ உங்க அப்பாவோட கடைசி காலத்துல கூடவே இருந்து சேவகம் பண்ணுன மாதிரி என் புருஷனை பேச வந்துட்ட…” என நக்கலாகக் கேட்க, ஸ்ரீவத்சனுக்கு என்னவோ நாக்கில் சனி போல… நன்றாகவே வார்த்தையை விட்டான்.

“புருஷனை முந்தானையில முடிஞ்சு வெக்கறதுல உங்க அம்மாவுக்கு சலைச்சவ இல்லை நீ…” என்று இறுதியாகச் சொல்ல, கோணல் சிரிப்புடன், “சொந்த அம்மாவை கேவலமா பேசறவனை எல்லாம் என்னன்னு சொல்லறது. உனக்கெல்லாம் உண்மையைச் சொல்ல எனக்கு இஷ்டமே இல்லை தான்… ஆனா உன்னோட பாம்பு நாக்கு விஷம் கக்கிட்டே இருக்கே… அதை நிறுத்த வேண்டாம்…” என்றவள், அவளுடைய அன்னை யார்… எப்படி வளர்மதி இங்கு வந்தார் என்றெல்லாம் போட்டுடைக்க, ஸ்ரீயின் முகம் வெளிறி போனது.

அதைத் திருப்தியோடு பார்த்தபடி வீட்டிற்குச் சென்றாள். அதன்பிறகு, எத்தனையோ நாட்கள் ஸ்ரீவத்சன் இல்லம் தேடி வந்தும் மன்னிக்கும் மனநிலை அவளுக்கு இல்லை. அவனும் குற்றவுணர்வால் சிலமுறைக்கு மேல் மீண்டும் முயற்சி செய்யவில்லை.

அருணகிரியை ஏன் மன்னிக்கத் தோன்றியதோ தெரியவில்லை. மன்னித்து விட்டிருந்தாள். அவரை கவனித்துக்கொள்ள மாமியார் வீட்டிற்கே குடி பெயர்ந்திருந்தனர். யாழிசை தகப்பனை விடுவதே இல்லை ஊட்டி விட, தூங்க வைக்க, கதை சொல்ல என எல்லாவற்றிற்கும் அவன் வேண்டும். ஜாகை கூட மூவருக்கும் ஒரே அறையில், ஒரே கட்டிலில் தான்.