அபூர்வாவிற்குத் தலை பாரமாக இருந்தது. சக்தியின் பிடிவாதத்திற்காக இங்கு வந்திருக்கக் கூடாதோ என லட்சத்துப் பத்தாயிரமாவது முறையாவது யோசித்திருப்பாள். அவன் தான் உலகம் என்று அவள் வாழ்ந்த காலத்தில் எளிதாகத் தூக்கி எறிந்தவன், இன்று அவனில்லாமல் வாழப் பழகிய பின்பு, அவளை அள்ளிக்கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறானாம் என்று எரிச்சலாக வந்தது.
இங்கு வந்த நாள் முதல், ஒவ்வொரு தினமும் அவளுக்கு யுகமாகக் கழிந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் சக்தியின் கண்ணில் படுவதையே தவிர்த்து விடுகிறாள். அவன் இருக்கும் நேரமெல்லாம் முடிந்தவரைத் தனி அறைக்குள்ளேயே முடங்கிக் கொள்வாள். அவன் இல்லை என்றால் மட்டும் தான் கிட்சன், ஹால் என மகளோடு உலாவுவது. அது புரிந்தாற்போல் அவனும் வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வான்.
இருந்தும் எப்பொழுதாவது சக்தியை எதிர்கொள்ளும் நேரத்தில், அவனிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் அவனை வார்த்தையால் குத்தி கிழிக்க அபூர்வா தவறுவதே இல்லை. உண்மையில் அவனோடு வேறு வழியின்றி கிளம்பி வருவதற்கு ஒப்புக்கொண்ட போது, அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவனோடே இருந்தால், அவனை வதைக்க நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பது தான்! அதை வெற்றிகரமாகச் செய்து வந்தபோதும், என்னவோ உள்ளுக்குள் நெருடியது.
அவன் இதயத்தைத் தைக்கும் வார்த்தைகளை வீசிய போதும், முன்பு தன்னை மட்டம் தட்டியது போலப் பதிலுக்கு அவனை மட்டம் தட்டிய போதும், மனைவியை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள வக்கில்லாதவன் என ஏளனமாகச் சீண்டிப் பார்த்த போதும், தனக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கூட தெரியாமல் மூன்றாண்டுக்கும் மேலாக இருந்தவனை எல்லாம் எந்த அகராதியில் சேர்ப்பதோ எனக் குத்திக்காட்டிப் பேசி அவனைத் தலை குனிந்து கூனி குறுகி நிற்க வைத்த போதும் திருப்தி ஏற்பட மறுத்ததோடு மட்டுமல்லாமல், மனதிற்குக் கஷ்டமாகவும் இருந்து தொலைத்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து யாரையும் வருந்தப் பேசி அவளுக்குப் பழக்கமில்லை. வளர்மதியின் வளர்ப்பு அப்படி! இப்பொழுது அவனை இவ்வாறு வதைப்பதால் அவளின் மனமும் சேர்ந்து சோர்ந்து விடுவது தான் மிச்சம்.
அதிலும், இன்றைய பேச்சு சற்று அதிகம் தான். நொடியில் முகம் வாடிப் போனான். இனி பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். இந்த எண்ணமும் அடிக்கடி வருவது தான். ஆனால், அவனை நேரில் பார்த்தால் தன் சுயகட்டுப்ப்பாட்டை மறக்கும் அளவு, அவனால் அவள் அடைந்த வேதனைகள் மேலெழுந்து வந்துவிடுவதால் கண்டதையும் பேசி விடுகிறாள்.
இந்த தொல்லைகள், அவஸ்தைகள் எல்லாம் அவனுக்கு எதற்காம்? உடைந்த கண்ணாடி பாத்திரத்தைக் குப்பையிலும் போட்டுவிட்டு, இப்பொழுது பொறுக்கி எடுத்து வந்து ஒட்டுகிறேன் என கையையும் கிழித்துக் கொள்கிறான். எப்படி ஒட்டும் என்ற அறிவு வேண்டாம்? அப்படியே ஒட்டினாலும் கூட அதை யாரால் உபயோகிக்க முடியும்?
சுத்த விவஸ்தை கெட்டவன் அவனை வசைபாடிக்கொண்டே அமர்ந்திருந்தவள், சமைக்கும் எண்ணமே இல்லாமல் அமர்ந்திருக்க, யாழிசை வந்து அவளின் கவனத்தைக் கலைக்கும் வரையிலும் அவளின் சிந்தனைகள் தொடர்ந்தது. அவசரமாகப் பாலை காய்ச்சி மகளுக்கு கொடுத்துவிட்டு வேகவேகமாக தக்காளி சாதம் வைத்தாள்.
சமையல் இவளுக்கும் குழந்தைக்கும் மட்டுமாக தான் சமைப்பாள். வீட்டில் மளிகை சாமான்களையும், காய்கறி, பழ வகைகளையும், தின்பண்டங்களையும் சக்தி நிறைத்து வைத்து விடுவான். எதற்காக இத்தனை வாங்குவான் என அவளுக்கு எரிச்சலாக வரும். நான்கு வருடங்கள் உணவிற்காகப் பட்ட கஷ்டத்தின் பயனாய் அதை வீணடிப்பதற்கும் அவளுக்கு மனம் வராது. அதன் பயனாய் இப்பொழுது அம்மா, மகள் இருவரது தோற்றத்திலும் நல்ல முன்னேற்றம்.
அதுகூட அவளுக்கு உறுத்தலாக இருக்கும். இவனும் ஏதாவது சமைத்துச் சாப்பிட வேண்டியது தானே? இவன் மட்டும் ஏன் இப்படி வெறுமனே நோஞ்சான் போலச் சுற்றுகிறான்? இருக்க இருக்க அவனின் தோற்றம் மோசமாகிக்கொண்டே போவதை அவளும் உணர்ந்தே இருந்தாள்.
ஏன் அப்படி நடந்து கொண்டு… என்னை வருத்தி, இவனும் வருந்தி… ச்சே சுத்த பைத்தியகாரத்தனம்! இதென்ன சினிமாவா பழிவாங்கிக்கொண்டு திரிய… இல்லையே அதற்கும் அவன் ஒரு விளக்கம் சொன்னானே!
“எங்காவது அநியாயம் நடந்தா அதைத் தட்டி கேட்கணும்ன்னு நமக்கு அந்த நேரத்துல ஒரு கோபம் வருமே அபூ என்னோட கோபமும் அந்தமாதிரி தான்! ஏதோ ஒரு கோபம், ஆத்திரம். அதுவும் என்னைவிட சின்னவன் ஸ்ரீவத்சனுக்கு அம்மாவும் இல்லை. அப்பா இருந்தும் இல்லை. எனக்கு சாதாரணமா கிடைக்கிறது கூட அவனுக்கு இல்லையேன்னு ஒரு ஆதங்கம் இருந்தது. அத்தைக்கு நடந்ததா நான் கேள்விப்பட்ட விஷயத்துலேயும் எனக்கு ரொம்ப கோபம் இருந்தது. ஆனா அதெல்லாம் அந்த நேரத்து கோபம் மட்டும் தான். எனக்கு மாமா மேல பயங்கரமான ஆத்திரம் வந்தாலும், கொஞ்ச நேரத்துல அதை நானே மறந்துடுவேன்.
நான் அந்த சமயத்துல தான் உன்னை ஒருநாள் பார்த்தேன். அது ரத்த பாசமா கூட இருந்திருக்கலாம். ஆனா என்னையும் அறியாம எனக்கு உன்மேல ஒரு ஈர்ப்பு. உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது. உன்னால நம்ப முடியாம இருக்கலாம். ஆனா நான் சொல்லறது தான் நிஜம். உன்னைத்தாண்டி என்னால எதையும் யோசிக்கவே முடியலை. உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு நான் புரிஞ்சிக்கிட்டு இருந்திருந்தா எந்த பிரச்சினையும் வந்திருக்காது.
அதை நான் புரிஞ்சுக்காம, உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்ட உள்மனசையும் புரிஞ்சுக்காம, உன்னை அடைய ஒரு வழி தேடினேன். உண்மையா என்னை நானே சமாதானம் செஞ்சுக்க தான் இந்த பழிவாங்கல் கதையை எனக்கு நானே சொல்லிட்டேன். உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.
அப்பவும் அதை என்னால செயல்படுத்த முடியலை. உன்னை நெருங்க எனக்கு மனசு வரலை. என்னையும் மீறி உன்னை காயப்படுத்திடுவேன்னு தான் நான் உன்னை நெருங்காம தள்ளி இருந்தேன். ஸ்ரீவத்சன் கல்யாணத்துல உன்னை வேற யாரும் பார்க்கிறது எனக்கு பிடிக்காம தான் நான் வந்து அப்படி உன்கிட்ட பேசுனேன். ஆனால் உன்னோட அப்பாவித்தனமான முகத்தைப் பார்க்கும்போது நெஞ்சு பிசையும். இந்த பழிவாங்கல் வேண்டாம்ன்னு நினைப்பேன். என்னை நீ ஆர்வமா பார்க்கும்போது, எனக்காக நீ காத்திருக்கும்போது நான் ரொம்ப தவிச்சிருக்கேன்.
அப்பவும் உன்னை விட்டு விலகிடணும்ன்னு தான் முயற்சி செஞ்சேன். ஆனா என்னால உன்னை விட்டுத் தர முடியவே இல்லை. அதுதான் மறுபடியும் இது பழிவாங்க மட்டும் தான்னு என்னை நானே ஏமாத்திட்டு, உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டு வந்தேன். ஆனா உண்மையில எனக்கு உன்னை பழிவாங்கணும்ன்னு எந்த எண்ணமும் இல்லை.
எங்கேயும் என்னோட காதலை நானே புரிஞ்சுக்கலை. அதுனால தான் இத்தனை குழப்பமும். அதுக்கு தண்டனை அவசியம் தான்… இருந்தாலும் நான் ஏற்கனவே உங்களை பிரிஞ்சு, காணாம தவிச்சு அனுபவிச்ச தண்டனையே அதிகம் இல்லையா? இன்னும் எனக்கு தண்டனை வேணுமா?” அன்றொருநாள் பெரிதாக விளக்கம் சொன்னவன், ஏக்கமாகச் சாத்தியிருந்த அறைக்கதவை பார்த்தான்.
மகள் யாழிசையை உள்ளே உறங்க வைத்திருந்தாள். இவன் கண்ணில் அவளைக் காட்டுவதே இல்லை. அதனால் உண்டான வருத்தத்தில் அவன் பேசியது, அவளின் பழைய ரணங்களைக் கிளறிவிட, கையில் கிடைத்ததைத் தூக்கி அவன்மேல் வீசிவிட்டுப் போயிருந்தாள்.
கோபம் தணிந்து திரும்பி வந்தபோது அங்கிருந்த ரத்தக்கரைகளை பார்த்ததும் அவள் மிகவும் மனம் வருந்தினாள். இன்றும் அன்றைய நினைவில் மனம் கனத்தது.
அன்றைய சம்பவத்தின் பின்பு, கொஞ்சம் அடக்கி வாசித்தாள். அவன் இருக்கும் நேரம் யாழிசையையும் கொஞ்சம் உலாவ விட்டாள். அவர்கள் இருவரும் பேசினாலும் மகளுக்கு தடை சொல்லும் உத்தேசம் அபூர்வாவிடம் இல்லை.
ஆனால், சக்திவரதன் மகளைப் பார்வையால் வருடுவதோடு ஒதுங்கி நின்று கொள்வான். ஏதோ பெரிய வரத்தை அள்ளி தந்தது போல அபூர்வாவை நன்றியோடு நோக்கினான். யாழிசையாக சென்று பேசினாலும், சீக்கிரம் பதில் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்பவனை வித்தியாசமாகப் பார்ப்பாள்.
அவனைப் பொறுத்தவரையில் மகளைப் பார்க்க அனுமதி தந்ததே பெரியது. அவளிடம் பேசுவதற்கெல்லாம் அபூர்வா வாயால் சம்மதம் சொல்ல வேண்டும் அதற்கு முன்பு அதிகபிரசங்கித்தனமாக நடந்துகொண்டு உள்ளதையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என நினைத்தான்.
யாழிசை சென்று அவனிடம் பேசும்போது, அபூர்வாவின் முகத்தை முகத்தை அவன் பார்ப்பதிலேயே அவனது எண்ணம் அவளுக்குப் புரிந்து போயிற்று. இருந்தும் மகள் அவனோடு பேசுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என விழியசைவில் சொல்வதற்குக் கூட அவளுக்கு விருப்பமில்லாததால், அவன் பார்வையைக் கண்டு கொள்ளவே மாட்டாள்.