முதலில் முந்திக்கொண்டு போய் இந்த கைக்குட்டை சுருளை அவனிடம் தராதிருந்திருக்க வேண்டும். அவன் எப்படிப் பணம் கட்டலாம் என்கிற வீம்புடன் அவசர அவசரமாக இருந்ததை எல்லாம் வாரி எடுத்துக்கொண்டு போய் அவனிடம் கொடுத்ததால் தானே, அவன் தன்னைத் தேடிக்கொண்டு வீடு வரைக்கும் வந்திருக்கிறான்? தன் முட்டாள்தனத்தைக் கண்டு நொந்தவள், கீழுதட்டைப் பற்றிக்கொண்டு எரிச்சலோடு நின்றிருந்தாள்.
இப்பொழுது தன்னை விடாமல் இழுத்து பிடித்து இவன் என்ன சாதிப்பானாம்? அதுதான் காதல், கத்திரிக்காய் என்று கதை விட்டானே அவளோடு போய் குடும்பம் நடத்த வேண்டியது தானே? எனக்குக் காவல் காத்து என்ன செய்யப் போகிறானாம்?
அவளின் தீப்பார்வையை எதிர்பார்த்தவன், இந்த மௌனத்தைப் புரியாமல் பார்த்தபடி, குரலை செருமி, “என் கூட ஊருக்குப் புறப்படு அபூர்வா” என்றான் கறார் குரலில். இவன் தன்னை விடப்போவதில்லை என்பது புரிந்து கொஞ்சம் மிரண்டு போனாள்.
“என்னால எங்கேயும் வர முடியாது. நீங்க முதல்ல இங்கிருந்து வெளிய போங்க பிளீஸ்” என்றாள் கெஞ்சலாக. அவனை எதிர்க்க அவளிடம் வலுவே இல்லை. அதுவும் இப்படி பிடிவாதம் பிடிப்பவனிடம் அவள் எப்படி போராட முடியும்?
“நான் செஞ்சது பெரிய தப்பு தான். அதுக்கு தண்டனையா இவ்வளவு காலமும் உன்னை பிரிஞ்சு இருந்துட்டேன். நம்ம குழந்தையோட கழிக்க வேண்டிய பொழுதுகளை இழந்துட்டேன். உன்னைத் தேடிக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருந்தும் என் தப்புக்கு தண்டனையா தான் தனிமையில தவிச்சேன். ஆனா இனி அது சாத்தியமில்லை. உன்னை நானா தேடி வரலை. ஆனா நீ என் கண்ணுல பட்டுட்ட. இத்தனை காலமும் நீ எங்கேயோ சுகமா இருக்கணும்ன்னு விலகி இருக்க முடிஞ்ச நான்… இனி நானும் உன்னோட சேர்ந்து இருக்கணும்ன்னு நினைக்கிறேன். இதுவரை நான் அனுபவிச்ச தண்டனை போதும். இனி எந்த தண்டனையா இருந்தாலும் என்கூடவே இருந்து எனக்கு கொடு. தாராளமா ஏத்துக்கிறேன்” என்றான் இறங்கிய குரலில்.
அவள் கண்கள் கலங்கியது. இவன் வேண்டாம் எனக்கு என நெஞ்சம் கூப்பாடு போட்டுக் கதறி அழுதது.
“இத்தனை காலமும் நான் விலகி இருந்ததுல உன் மனக்காயம் ஆறவே இல்லையா அபூ. நான் உனக்கு என்மேல இருக்கும் கோபம் குறையத் தான் விலகி இருந்தேன். இன்னும் விலகி இருந்திருப்பேன். ஆனா எதிர்பாராம உன்னை சந்திச்ச பிறகு என்னால உன்னைத் தாண்டி போக முடியலைடி. மகளை இத்தனை வருஷம் அப்பறம் பார்க்கிறேன். கண்ணார மட்டும் தான் விலகி நின்னு பார்க்க முடியுதுங்கிற வலி உனக்கு என் இடத்துல இருந்து பார்த்தா மட்டும் தான் புரியும் அபூ… இதைவிட மோசமான தண்டனை எதுவும் இல்லை. இனியும் உன்னை, நம்ம குழந்தையை என்னால பிரிய முடியாது. இத்தனை காலமும் நான் நடைபிணமா அலைஞ்சது போதாதா? இனியும் நான் தண்டனை அனுபவிக்கணும்ன்னு நினைக்கிறியா நீ? உனக்கு நான் தேவையில்லாமல் இருக்கலாம் அபூ. ஆனா எனக்கு நீயும் பிள்ளையும் கண்டிப்பா வேணும். இந்த விஷயத்துல இனி யாராலும் என்னைத் தடுக்க முடியாது” என்றான் தவிப்பும், உறுதியாக.
இரு கைகளாலும் முகத்தை மூடியபடி, “என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா” என்று அரற்ற, “என்னை பிரிஞ்சு நீ நிம்மதியா இருந்தியா பூக்குட்டி” என்றான் குரல் கரகரக்க.
“என்னோட துரோகம் உன்னைத் தூங்க விட்டிருக்காது. என்னோட காதல் பொய்யானதுன்னு நினைச்சிருப்ப. அதை நம்பி நீ ஏமாந்துட்டதா நினைச்சு தினம் தினம் கலங்கிப் போயிருப்ப…” அவளின் அப்போதைய மனநிலையைத் துல்லியமாகக் கணித்துச் சொன்னவனை எந்த விதத்தில் சேர்க்க எனப் புரியாமல் கலங்கிய விழிகளோடு பார்த்தாள்.
தான் முதலில் கேட்ட கேள்விக்கே அம்மா பதில் சொல்லவில்லை. இப்பொழுது அழ வேறு செய்யவும், “அம்மா ஏன் அழற?” என்று காலை கட்டிக்கொண்டு யாழியும் அழுதாள்.
“இல்லை பட்டு ஒன்னும் இல்லை…” என தன் கண்களைத் துடைத்துக்கொண்டு மகளையும் வாரி அணைத்து சமாதானம் செய்யவும், “இவங்க யாரும்மா?” என்றாள் மீண்டும்.
அபூர்வா என்ன சொல்வது என்று தடுமாற, அவளின் தடுமாற்றம் புரிந்து, “நான் உங்க அம்மாவோட சொந்தக்காரன் குட்டி” என்றிருந்தான் சக்திவரதன். அவன் சொந்தக்காரன் என்று அழுத்திச் சொன்னதை அபூர்வா கவனிக்கவில்லை.
அவனின் பதில் அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. வெறும் சொந்தக்காரன் மட்டும் தானா இவன் என உள்ளம் துடிக்க, கண்களை இறுக மூடிக்கொண்டாள். “ஓ… உங்களை எப்படி கூப்பிடணும். மாமான்னு கூப்பிடவா?” என்றாள் யாழிசை மீண்டும் மழலை குரலில்.
திக்கென்றது சக்திக்கு. வேகமாகத் தன்னை சமாளித்து, கூடவே அபூர்வாவின் சுணக்கத்தையும் புரிந்து கொண்டு, “அது எப்படி கூப்பிடணும்ன்னு அம்மா மெதுவா சொல்லி தருவாங்க. அதுவரை நான் உனக்கு பிரண்டா இருக்கேன். நீ என்னை சக்தின்னு பேரு சொல்லியே கூப்பிடு” என்க, அபூர்வாவிற்கு அவனின் எதிர்பார்ப்பு புரிந்து விட்டது.
ஆக, நான் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறானா என்று யோசித்ததும், தன்னைப்போல மனம் ஆசுவாசமடைய, மீண்டும் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“ஹை! சக்தி சூப்பர்… எனக்கு பிரண்ட்ஸ் இல்லை தெரியுமா? நீ தான் என்னோட பர்ஸ்ட் பிரண்ட்” என்றாள் குதூகலமாக.
“யாழி குட்டி… நீயும் அம்மாவும் என்னோட ஊருக்கு வரீங்களா? பிளீஸ்… எனக்கும் பிரண்ட்ஸ் இல்லை. நான் தனியா தான் இருக்கேன்” எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும்,
“ஓ… நாங்க ரெண்டு பேரு இருக்கோமே… நீங்க தனியாவா இருக்கீங்க… பாவம்” சின்னவள் இத்தனை வாயடிப்பாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. கொஞ்சம் பூரிப்பாகவும், தன் மகள் என்று பெருமையாகவும் இருந்தது.
உண்மையில் பார்க்கையில் ஈர்க்குமளவு தோற்றம் கொண்ட குழந்தையில்லை யாழிசை. சற்றே வறண்ட குழந்தை. கொழுக் மொழுக் தோற்றம் இருக்காது. ஆனால், அந்த தந்தையின் கண்களுக்குப் பேரழகியாக தெரிந்தாள். அள்ளி அணைத்துக் கொஞ்சி குலாவ வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டினாள். இவள் பிறக்கும்போது கையில் ஏந்தவில்லையே… இவளை கண்ணார பார்த்து வளர்க்கவில்லையே என்ற ஏக்கம் கண்களைக் குளமாக்கியது.
அபூர்வா செய்வதறியாது திகைத்தாள். பேச்சின் திசை போவது பிடிக்காமல், “நான் இந்த ஊரைவிட்டுப் போக மாட்டேன். நீங்க கிளம்பலாம்” என்றாள் வாயிலை நோக்கிக் கைகாட்டி. தான் ஊரைவிட்டுப் போகும் கோபத்தில் தானே இந்த அடாவடித்தனம். தான் போகவில்லை என்றால் அமைதியாக ஒதுங்கி இருப்பான் என தப்புக் கணக்குப் போட்டாள்.
அவளின் கரங்களும் குரலும் நடுங்கியது. அவனோ, “ஒன்னு என்கூட ஊருக்கு வா… இல்லைன்னா நானும் உங்களோட இங்கேயே தான் தங்க போறேன்” என்றான் சட்டமாக.
“உங்களோட தங்க எனக்கு இஷ்டமில்லை. உங்க பணத்தை பத்து நாளுல திருப்பி தரேன்” என்றாள் கறார் குரலில்.
“அபூ… பிளீஸ்…” என்றான் கெஞ்சலாக. “நிஜமாலுமே எனக்கு உன்னைத்தவிர இந்த உலகத்துல எதுவுமே முக்கியம் இல்லைடி. என் போதாத காலம் ஏதேதோ நடந்துடுச்சு. நீ கொஞ்சம் எனக்காக, நம்ம குழந்தைக்காக யோசிக்கக் கூடாதா? பிளீஸ்” என்று கெஞ்சினான்.
என்ன கெஞ்சினாலும் மிரட்டினாலும் அசையாமல் இருந்தவளிடம், மகளைச் சுட்டிக்காட்டி, “அவளுக்கு நான் யாருன்னு சொல்ல அதிக நேரம் ஆகாது. என்னை ரொம்ப பிடிவாதம் பிடிக்க வைக்காத…” என்றான் திமிராக.
அவனையே ஊன்றிப் பார்த்தாள். “ஏன் உங்க புது பொண்டாட்டி என்ன ஆனா?” என்றாள் நக்கலாக.
“புது பொண்டாட்டி, பழைய பொண்டாட்டி எல்லாம் நீ மட்டும் தான்… கண்டதையும் உளறிட்டு இருக்காத… அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்ப மட்டுமில்லை நான் உன்கிட்ட காதலை சொன்னப்ப இருந்தே அப்படித்தான்… திடீர்ன்னு அவ முளைச்சது நானே எதிர்பார்க்காதது. அவ வந்த கையோட அவளை மூட்டை கட்டி அனுப்பியும் விட்டுட்டேன். இப்ப அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சு குடும்பம், குழந்தைன்னு இருக்கா… நம்ம வாழ்க்கையில இன்னொரு முறை அவளைப்பத்தி பேசாத…” என்றான் என்னவோ அவள் குற்றம் செய்தது போல!
அவளின் மனதிற்குள் ஆசுவாசம் பரவியது. ஷர்மிளா அவர்கள் வாழ்வில் இல்லை என்பதை எண்ணி அவள் சற்று தளர்ந்தாள். அவ்வாறு ஆசுவாசப்படுவதற்கும் அவள் தன்னையே கோபித்துக் கொண்டாள். நீயெல்லாம் திருந்தாத ஜென்மம் என்பது போல!
கூடவே அவன்மீது சுறுசுறுவென கோபமும். ‘ஆமாம் இவன் காதலிப்பான். எனக்காக ஒருத்தி இருக்கான்னு என்கிட்டேயே சொல்லுவான். இப்ப வந்து அவளை நான் கழட்டி விட்டுட்டேன்னு சொல்லுவான். இவன் சொல்லறதுக்கெல்லாம் நான் மண்டையை ஆட்டணும் பாரு…’ என்று அவள் கடுப்போடு நிற்க, அவள் மனதிலிருப்பதைப் படித்தவன் போல, “அது உன் தலைவிதி…” என்றான் சக்தி.
அவனின் பிடிவாதம் வலுக்க வலுக்க, அபூர்வா வேறு வாய்ப்புகளே இல்லாததாக உணர்ந்தாள். எத்தனை கோபத்திற்கும், வசவிற்கும் அசையாதவனை மேற்கொண்டு என்ன செய்ய என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் இங்கேயே இருப்பது எப்படி சரி வரும்? இந்த சின்னஞ்சிறு வீட்டில் இருக்கும் நேரம் மொத்தமும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை விட, அவன் வீட்டிற்குப் போவது எவ்வளவோ மேலானது என்று அவளுக்கு தோன்றியது. தன்னை இப்படி ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டானே என்ற ஆத்திரம் பொங்க அவனோட வேறு வழியே இல்லாமல் புறப்பட்டிருந்தாள்.
மிரட்டி, கெஞ்சி, பயப்படுத்தி ஒருவழியாக அபூர்வாவை சக்திவரதன் தங்கள் ஊருக்கு பார்சல் கட்டியிருந்தான். வேண்டா வெறுப்போடு மீண்டும் தன் பிறந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தாள் அபூர்வா.