சங்கீத சக்தி – 18

கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு, இந்த இரவு நேரத்தில் யார் என்ற யோசனையோடே சென்று வாயில் கதவைத் திறந்த அபூர்வா நிச்சயம் அங்கே சக்திவரதனை எதிர்பார்க்கவில்லை.

காலையில் அவளை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்க்க அஞ்சி, பேசத் தயங்கி, ஒவ்வொரு வார்த்தைகளையும் கெஞ்சலும் தவிப்புமாய் வெளியேற்றியதற்கு எதிர்ப்பதமாக இப்பொழுது முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு இறுகிய தோற்றத்துடனும் சீற்றம் மிகுந்த விழிகளுடனும் நின்றிருந்தான்.

அவன் தோற்றத்தில் சில நொடிகள் திடுக்கிட்டவள், சுதாரித்து அவன் முகத்திற்கு நேராகக் கதவடைக்கும் முன்பு, மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்து, அதைவிட வேகமாகக் கதவையும் அடைத்திருந்தான்.

அவன் செய்கையில் அபூர்வா திடுக்கிட்டு போனாள். சின்னதாய் இருந்த வீட்டில், வெகு சொற்பமாய் இருந்த பொருட்களை, அபூர்வா மூட்டை கட்டிக்கொண்டிருந்த நேரம் அது! இனி அவளுக்கு உதவி கேட்க யாரும் இல்லை. ஏற்கனவே நண்பர்கள் நிறைய செய்து விட்டார்கள். இனி மீண்டும் மீண்டும் அவர்களை நாடி தொல்லை தர அவளுக்கு அத்தனை சங்கோஜமாக இருந்தது.

அதோடு முன்பென்றால், அவளுக்கு வெளியுலகம் தெரியாது. குழந்தை வேறு வயிற்றில் இருந்தாள். ஆக, பிறரின் உதவி அவசியமாகத் தேவைப்பட்ட காலம் அது! இப்பொழுது அப்படியில்லையே! அவளுக்கு ஆட்களை ஓரளவு எடைபோடத் தெரியும். கூடவே தையல், பாடல் என்று வேலைகளும் தெரியும். அதைக்கொண்டு வாழ்வாதாரத்திற்கு சம்பாரிக்கவும் தெரியும். மகளுக்கு இருந்த உடல் குறைகளையும் நிவர்த்தி செய்தாயிற்று! அவளை இன்னும் பள்ளியில் கூட சேர்க்கவில்லை என்பதால் வேறொரு ஊருக்குப் போவதற்கு எந்த தடையும் இல்லை.

என்ன கொஞ்ச காலம் ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வரையிலும் சிரமமாக இருக்கும். அதை சமாளிக்க அவளால் முடியும் என்றே தோன்றியது. ஆகக் கிளம்ப வேண்டியது தான் பாக்கி எனப் புறப்பட்டுக் கொண்டிருந்தவள், இப்படி திடுமென முளைத்த சக்திவரதனை கண்டு குழப்பமும் தடுமாற்றமுமாக ஸ்தம்பித்தாள். அவனது செய்கையில் உறைந்து நின்ற அவளுக்கு விரலசைக்கும் எண்ணம் கூட அப்பொழுது எழவில்லை.

“அம்மா யாரு இவங்க?” யாழிசை மழலை குரலில் கேட்டபிறகே, அவளுக்குச் சுற்றுப்புறம் உரைக்க, “முதல்ல வெளிய போங்க…” என்றாள் குரல் நடுங்க.

காலையில் பலபேர் கூடியிருந்ததால், குழந்தை இவனைக் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது வீட்டிற்கே உரிமையாக வந்து நிற்கவும், யார் என விசாரிக்கிறாள். இவளிடம் என்னவென்று சொல்லிச் சமாளிப்பது? இவன்தான் தந்தை என்று என் குழந்தை அறிந்து விடக்கூடாதே என்ற பதற்றத்தில் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது.

சக்தி அவளையே பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தான். “உங்களை வெளிய போகச் சொன்னேன்” இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னாள்.

அழுத்தமாக நின்றிருந்தவனோ இம்மிகூட அசையாமல், “ஏன் மகாராணி ஊரை விட்டு ஓட நேரமாயிடுச்சோ” என்றான் சினம் தொனிக்க.

ஒருநொடி திடுக்கிட்டவள் ஆத்திரம் பொங்க, “அதைகேக்க உங்களுக்கு உரிமையில்லை. முதல்ல இங்கிருந்து வெளிய போங்க…” என்றாள் குரல் நடுங்க. பார்த்த இரண்டு முறையும் அமைதியாகப் போனவன், இப்படி வந்து பிரச்சினை செய்யக்கூடும் என்று அவளென்ன கனவா கண்டாள்?

“என்ன உரிமை? என்ன உரிமை வேணும் உனக்கு? நீ சொன்ன அந்த சோ கால்டு உரிமை இன்னும் என்னைவிட்டு எங்கேயும் போகலை. நான் இன்னும் உன் புருஷன் தான். நீ எனக்குத் தந்த விடுதலைப்பத்திரம் எப்பவோ குப்பைக்குக் காணிக்கை ஆயிடுச்சு” பல்லைக்கடித்துக் கொண்டு அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாகச் சீற்றமாகப் பேசியவனைக் கண்டால் அவளுக்கு நெஞ்சு படபடத்தது. அவனது பார்வை வேறு அவளது கழுத்தில் புதையுண்டு கிடந்த மஞ்சள் கயிற்றில் அழுத்தமாய் இருந்ததைக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. கவனித்திருந்தால், நிச்சயம் சூடாக ஏதேனும் திருப்பி தந்திருப்பாளோ என்னவோ?

சக்திக்கும் மகளிடம் தன் உரிமையைத் தானே நிலைநாட்ட விருப்பம் இல்லை! நான் தான் உன் அப்பாடா தங்கம் என்று வாரியணைத்துக் கொஞ்ச கைகள் பரபரத்த போதும், அவனை அவளிடம் அபூர்வாவே அறிமுகம் செய்ய வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தான்.

எந்த மகளை வேண்டாம் என்று ஆத்திரப்பட்டானோ, அவளை அவளின் குறைகளோடு ஏற்றுக்கொண்டு, ஆதரவிற்கென்று யாரும் இல்லாத போதும் வளர்த்து ஆளாக்கிய அபூர்வாவின் முன்பு, தானெல்லாம் ஒன்றுமே இல்லை என அவன் அறிந்தே இருந்தான். ஆக, அபூர்வாவைச் சமாதானம் செய்து தேற்றி, அவளே தன்னை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை வந்தபிறகு, அவளுக்கு விருப்பம் இருந்தால், அவளாகவே தன்னை குழந்தையிடம் அறிமுகம் செய்யட்டும் என தனக்குள் உறுதி கொண்டான்.

இது நடக்காமலும் போகலாம். அவன் குழந்தை அவனை அறிந்து கொள்ளாமலேயே கூடப் போக வாய்ப்புகள் ஏராளம். அப்படி ஒன்று நடந்தாலும், அது அவனுக்கான தண்டனை என ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கிறான்.

ஆனால், எக்காரணம் கொண்டும் தான் செய்த தவறுக்கான தண்டனையை இனி இவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதில் மட்டும் வெகு உறுதியாக இருந்தான். இனி அவர்களை வறுமையில் வாட விடப்போவதில்லை என்ற தீர்மானம் அவனுள் நிறைந்திருந்தது. இவர்களைத் தனித்து விடும் உத்தேசமும் அவனிடம் இல்லை.

அவன் பேசிய உரிமையில் விக்கித்து நின்றவள், “ஆனா எனக்கு உங்களைப் பார்க்கக் கூட விருப்பம் இல்லை. உங்க முகத்துல முழிக்கிறதையே பாவமா நினைக்கிறேன்” என்றாள் வெறுப்புடன்.

“நீ என்ன வேணா நினைச்சுக்க. எனக்கு என்ன தண்டனை தரணுமோ தந்துக்கோ. உன் கையால கொஞ்சம் விஷம் கொடுத்தா கூட குடிச்சிட்டு சாக தயாரா தான் இருக்கேன். ஆனா இனி நான் உயிரோட இருக்கும்வரை ஒருநாளும் உங்களை பிரிஞ்சு இருக்க போறதில்லை” என்றான் உறுதியாக.

இவளிடம் கெஞ்சினால் வேலைக்கு ஆகாது எனத் தெரியும். இவன் இப்படி நடந்துகொள்வது அவளுக்கு அழுத்தத்தைத் தந்தாலும், அவள் மீண்டும் எங்காவது சென்று, முதலிலிருந்து தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளப் போராடி, இவர்களைக் காணாமல் இவன் தேடித் தவித்து… என மூவரும் சிரமப்படுவதற்கு, இவனின் இந்த அதிரடி பரவாயில்லை என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு அடாவடித்தனம் செய்தான்.

அவனை எதிர்க்கும் வழி தெரியாமல் அவள் வெறித்துப் பார்க்க, “இனி உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கும் உத்தேசம் எனக்கில்லை. உன் கணவனா வேண்டாம். ஒரு காவலனா நான் இருந்துட்டு போறேன். என்னை அதையும் மீறி தடுத்தா…” என்று விரல் நீட்டி எச்சரிக்கையாகக் கூறியவனின் திமிறிய உடலையும், சிவந்த விழிகளையும், இறுகிய தாடையையும் கண்டு அவள் பயத்தில் எச்சில் விழுங்கினாள்.

மிரட்டல் தான்! இதற்கு அடிபணியக் கூடாது தான்! ஆனால், அவள் விக்கித்து நின்றாள். அவன் கண்களில் தெரிந்த அனலில், அவளால் அவனை எதிர்த்துப் பேச முடியவில்லை.

இருந்தும் துணிந்து, “உங்க மிரட்டலுக்கு பயப்படுவேன்னு எப்படி எதிர்பார்க்கறீங்க? உங்களுக்கே இது வேடிக்கையா இல்லை. கண்டிப்பா என்னால உங்களோட இருக்க சம்மதிக்க முடியாது” என்றாள் தடதடக்கும் மனதோடு.

அவனோடு வார்த்தையாடுவதால் அவள் விழிகள் தன்னைப்போல அவனை எடைபோடத் தொடங்கியிருந்தது. வெகு அருகில் நின்றிருந்தவனின் மெலிந்த உடலும், பொலிவற்ற தோற்றமும் அவளின் நெஞ்சை சுருக்கெனத் தைத்தது. இவன் ஏன் இப்படி இருக்கிறான் என தன்னையுமறியாமல் கவலை கொண்டாள். தன் எண்ணம் போகும் திசை அவளுக்கே பிடிக்கவும் இல்லை. அவனை அடிமனதிலிருந்து வெறுக்கிறவளுக்கு அவன் எப்படிப் போனால் என்ன? இந்த மனம் ஏன் இப்படிப் பாடு படுகிறது? தன்னை குறித்துத் தானே நாணினாள். அவன் உன்னை அத்தனை பாடு படுத்தியும் அவனுக்காகத் துடிக்கிறாயா என அவளின் உள்ளம் அவளிடமே சண்டையிட்டது.

இதுவரை பேசிய தொனிக்கும் தன் தோற்றத்தை அவளின் சின்னஞ்சிறு விழிகள் அளவிட்ட பிறகு பேசிய தொனிக்கும் இருக்கும் வித்தியாசம் சக்திவரதனுக்கு நன்றாகவே புரிந்தது. அதில் அவன் மனதில் மெலிதாக நம்பிக்கையும் துளிர்விட்டது. இருந்தும் வெளிப்படையாக இவ்வாறு சொல்பவளைச் சமாளிக்க அவனின் முரட்டு பிடிவாதத்தால் மட்டுமே முடியும் என்று நம்பினான்.

அவள் கோயிலில் தந்துவிட்டுப் போன கைக்குட்டை சுருளை அவள் கையை இழுத்து அவள் மறுக்க மறுக்க வைத்தவன், “நான் உன்கிட்ட பணம் தரலை அதை நீ எனக்கு திருப்பி கொடுக்கிறதுக்கு… அதோட நானே உன்னோட சொத்துங்கிறப்ப, நான் சம்பாரிக்கிறதை அனுபவிக்க உனக்கும் நம்ம குழந்தைக்கும் முழு உரிமையும் இருக்கு…” என்றான் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து.

அவன் பணத்தைத் திருப்பி கொடு என கறார் காட்டியிருந்தால் அவனை இன்னும் இன்னும் வெறுப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கும் என முகம் கசங்க நினைத்தாள். அதை விட்டுவிட்டு உரிமை, அது, இது என பேசுபவன் மீது எரிச்சல் பொங்கியது.