எதிரில் வந்து நின்றவனை சின்னஞ்சிறு விழிகளால் உறுத்து விழித்தாளே தவிர எந்த கேள்வியையும் கேட்கவில்லை. அவளைப் பார்ப்பதும், அந்த கோயில் வளாகத்தில் தாயுக்கு எந்த சிரமமும் தராமல் விளையாடும் மகளைக் கள்ளத்தனமாகப் பார்ப்பதுமாக நின்றிருந்தவனை, “இந்தாங்க…” என்ற அவளின் குரல் கலைத்தது.

அவளிடமிருந்த கைக்குட்டை சுருளை அவனிடம் தந்திருந்தாள். யோசனையோடு அதைப் பிரிக்க, உள்ளே கம்மல், மோதிரம், மெட்டி போன்ற சிறுசிறு நகைகளும், லப்பர் பேண்டினுள் சுருட்டப்பட்ட பணச்சுருளும் இருந்தது. சுள்ளென்ற கோபம் தான் கிளர்ந்தெழுந்தது முதலில். அவனைப் பார்த்தால் வட்டிக்கடைக்காரன் போலவா தெரிகிறது இப்படி கணக்கு பார்த்துத் திருப்பி தருவதற்கு!

பார்வையை கோயிலைச் சுற்றிலும் படர விட்டவன் தன்னை ஆசுவாசப்படுத்த முயன்று தோற்றான். இப்பொழுது கோபப்பட்டு என்ன சாதிக்கப் போகிறோம் ஏற்கனவே செய்து வைத்த குளறுபடிகள் போதாதா எனத் தன்னை தானே கடிந்து, தன் சினத்தை கட்டுப்படுத்தியவன், பேச அரிதாகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நல்லவிதமாக பயன்படுத்த நினைத்தான். மெல்லக் குரலை செருமி, “மன்னிப்பே கேட்க முடியாதளவு பெரிய தப்பைத் தான் பண்ணியிருக்கேன் அபூ. ஆனா நான் உணர்ந்து, தெரிஞ்சு எதுவும் பண்ணலை. அன்னைக்கு என்னையும் மீறி வந்த வார்த்தைகள் அது! பழசை எல்லாம் தயவுசெஞ்சு மறந்திடு. நீ எனக்கு என்ன தண்டனை தந்தாலும் ஏத்துக்க தயாரா இருக்கேன். எனக்கு இன்னும் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு… பிளீஸ் அபூ…” என்றான் கெஞ்சலாக.

அபூர்வாவின் சின்னஞ்சிறிய முகம் சீற்றமானது. விழிகளாலேயே அவனை எரித்து விடுபவள் போலப் பார்த்தாள். திடீரென்று அதற்கு சம்பந்தமே இல்லாதவள் போல சிரித்தாள். அந்த சிரிப்பில் இருந்த வன்மம், முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அவனை மிரள வைத்தது. மலர் போன்று மென்மையாக இருந்தவளை, இப்படி மாற்றியது அவன் தானே!

கலவரத்தோடு அபூர்வாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் நக்கலான குரலில், “எனக்கென்ன போக்கிடமா இருக்கு போக? நீங்க வந்து கூப்பிட்டா வாழ ஒரு வழி கிடைச்சதேன்னு உங்க பின்னாடி தான் வரணும். என் நிலைமைக்கு அதுதான் சரி… ஆனா பாருங்களேன் வெட்டி ரோஷம். ஒன்னுக்கும் உதவாத சூடு சொரணை பாக்கற புத்தி…” என்றவள் தன் பேச்சை நிறுத்தி, அவனை ஊன்றிப் பார்த்தபடி, “ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இவளுக்கான்னு தோணுதாக்கும்” என்றாள் படு நக்கலாக.

பேச்சற்று சில நொடிகள் மௌனித்தவன் மெல்லிய குரலில், “உன் வலி எனக்கு புரியுது அபூ. உன் கோபம் நியாயமானது தான்… அதுவும் உன்மேல எந்த தப்பும் இல்லாதப்ப நான் நடந்துக்கிட்ட விதம் ரொம்பவும் மோசம் தான்… நான் மனசறிஞ்சு எதுவும் செய்யலை. என்னையும்மீறி நடந்த விஷயம் அது! நான் சொன்னா நீ நம்புவியான்னு தெரியலை… உண்மையிலேயே உன்னை பிரிஞ்சு நான் படற வேதனை என்னை உயிரோட எரிக்குது அபூ. ஒவ்வொரு நிமிஷமும் நீ எங்கே இருக்கேன்னு தெரியாம தவியா தவிச்சேன். டாக்டர் வஞ்சுளா மூலம் எனக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சப்ப நான் எப்படி துடிச்சு போனேன் தெரியுமா? உண்மை எல்லாத்தையும் தெரிஞ்சிருந்தும் நீ என்னைவிட்டு விலகி போனேன்னா உன்னை எத்தனை தூரம் நான் கஷ்டப்படுத்தி இருக்கணும்? என் தப்புக்கு மன்னிப்பே இல்லைன்னு புரியுது. ஆனா உண்மையிலேயே அன்னைக்கு நடந்தது தெரியாம நடந்த தப்பு, அதை முடிஞ்சா மறந்து என்னை மன்னிச்சுடேன் பிளீஸ்… என்னை நம்பு அபூ நான் உன்மேல வெச்ச பாசம் நிஜம்மா… அன்னைக்கு ஏதோ கோபத்துல தான் அப்படி பேசிட்டேன். மத்தபடி எனக்கு உன்மேல கோபமோ, வெறுப்போ எதுவும் இல்லை…” என்றவனைக் கையுயர்த்தி இடைமறித்தாள்.

உண்மையெல்லாம் தெரிந்து விட்டதா ரொம்ப சந்தோஷம். வருத்தமா படுகிறாய்? அதுவும் நீயா அதுதான் நம்பும்படி இல்லை என உள்ளுக்குள் கனன்றபடி, “உங்களை நம்பறதா? இனியும் உங்களை நம்ப நான் என்ன முட்டாளா? முதல்ல எந்த அடிப்படையில உங்களை நம்ப சொல்லறீங்க? ஒருவேளை எங்க அம்மா மாதிரி…” என்றவள் சிலநொடி மௌனித்து எச்சிலை விழுங்கிக் கொண்டு, “பெத்த அம்மாவை தான் சொல்லறேன். அவங்களை மாதிரி எனக்கும் அல்பாயுசா இருந்தா கூட, எனக்கடுத்து என் மகளைப் பார்க்கும் பொறுப்புக்கு ஒரு ஆசிரமத்துல தான் கேட்டிருக்கேனே தவிர, உண்மையை எல்லாம் உங்களுக்கு விளக்கிச் சொல்லி என் மகளை உங்ககிட்ட ஒப்படைக்கணும்ன்னு எனக்கு இதுவரை தோணியது கூட இல்லை.

என்னோட அப்பா, அம்மா… இந்தமுறை என்னை வளர்த்த அம்மாவை சொல்லறேன்” என்றவள் விரக்தியாகச் சிரித்துவிட்டு, “நல்லவேளை அவங்க உயிர் பிரியும்வரை அவங்க என்னை பெத்தவங்க இல்லைங்கிற உண்மையை நான் தெரிஞ்சுக்கலை… அந்த மகராசிக்கு அப்படி ஒரு நல்லதையாச்சும் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்சு வெச்சிருக்கேனே… இப்ப அவங்களை வளர்த்த அம்மான்னு நான் சொன்னதை கேட்டா அவங்க எவ்வளவு துடிச்சிருப்பாங்க” என கண்ணில் பொங்கிய நீருடன் சொன்னவள்,

ஒரு விசும்பலின் பின்னர் தொடர்ந்து, “எனக்கு எப்படி எங்க அப்பா, அம்மா இப்ப இல்லையோ… அதுமாதிரி என் பொண்ணுக்கும் அப்பா இல்லை. அவ அப்படித்தான் இதுவரை வளர்ந்தா, வாழ்ந்தா… இனியும் கடவுள் அருளால அதுவே தொடரணும்…

அவ ஏன் கஷ்டப்படணும்ன்னு உங்களுக்கு தோணும்? காதல்ன்னு ஒருத்தன் ஒருமுறை சொன்னதுக்கே பைத்தியமா சுத்தின ஒருத்திக்கு மகளா பிறந்தா இதை கூட அனுபவிக்காட்டி எப்படி? உங்களுக்குத் தெரியாதா மனுநீதி சோழன் கதை? அவரோட மகன் மட்டும் தான் அப்பா தப்புக்குத் தியாகம் செய்யணுமா? என் பொண்ணு செய்ய கூடாதா?

அதோட இதுதான் அவளோட வாழ்க்கைக்கு நல்லது. இல்லாட்டி ஆகாசத்துல கோட்டை கட்டறேன்னு கிளி பறந்து போனா அது அந்த கிளிக்கு தானே வாழ்நாள் மொத்தத்துக்கும் வலியும், வேதனையும். என் பொண்ணும் என்னை மாதிரி ஏமாந்து கஷ்டப்பட வேண்டாம். அது அப்பன்னு சொல்லிட்டு திரியறவன் பின்னாடியும்”

இன்னது தான் பேச வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் அவனின் இதயத்தைக் குத்தி கிழிக்க, ரணமாகும் வார்த்தைகளை அவனை நோக்கி வீசிக்கொண்டே இருந்தவளை விரக்தியும் வேதனையுமாகப் பார்த்தான். அதிலும் வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணு… என் பொண்ணு என்று மீண்டும் மீண்டும் அவள் அழுத்திச் சொல்லும்போது அவன் தேகம் மொத்தமும் பற்றி எறியும் உணர்வு! இறக்கமேயில்லாமல் நமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னவனுக்கு இந்த தண்டனை அவசியம் தான்!

குரல் அடைக்க, “எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. எதையும் அழிக்கிறது சுலபம். உருவாக்கிறது தான் ரொம்ப கஷ்டம்ன்னு. உனக்குள்ள இருந்த எனக்கான அன்பை அழிக்கும்போது எனக்கு சத்தியமா எதுவும் தெரியலை. இப்ப ஒவ்வொரு நொடியும் நான் வேதனை படறேன் அபூ. உன் சந்தோஷத்தையும், சிரிப்பையும், உனக்குள்ள இருந்த எனக்கான அன்பை மீட்டெடுக்கவும்… ஒவ்வொரு நொடியும் என்ன செய்யன்னு கூட புரியாம எனக்குள்ளேயே போராடி தோத்து போறேன்.

நான் செஞ்சது தப்பு தான். மிகப்பெரிய பாவம் தான். அதுக்கு என்னைத் தண்டிக்கலாம். குழந்தை என்ன பண்ணுச்சு அபூ… அப்பா இருந்தும் இல்லாம வளர வேண்டிய வயசா அவளுக்கு?” நியாயம் என்றால் என்ன விலை என்பவன் அழகாக நியாயம் கேட்க அவள் புருவங்கள் வியப்பில் உயர்ந்து இதழ்கள் இகழ்ச்சியாக நெளிந்தது.

“அதாவது எங்க அப்பா செய்யாத ஒரு தப்புக்காக அவர் பெத்த பொண்ணு எனக்கு நீங்க தண்டனை தந்த மாதிரி, நான் என் பொண்ணுக்கு தண்டனை தரேன் அப்படித்தானே…” கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டவள், “ச்சீ ச்சீ…” என்று அருவருப்பில் முகம் சுளித்து, அவன் அழைக்க அழைக்க நிற்காமல் மகளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று மறைந்தாள்.

தன்னை இம்மி அளவேணும் புரிந்து வைத்திருந்தால் இது போன்ற பேச்சு எழுந்திருக்குமா? நான் என்ன இவனைப்போலவா? இவன் செய்த பிழை என்ன? அதைக்கண்டு நான் ஒதுங்கி விலகி வந்தால், அது என் மகளுக்குத் தண்டனையா? குழந்தையே வேண்டாம் என்றவனோடு இணைந்து வாழ்வது நல்லதா? என் மகளை முதலில் என்னால் தண்டிக்க முடியுமா? அப்படி நான் செய்வேனா என யோசிக்க வேண்டாமா? என்ன தான் செய்தான் என்னுடன் வாழ்ந்த போது… மனமே இல்லாமல் அவனால் எப்படி என்னோடு குடும்பம் நடத்த முடிந்தது? வெறும் பழிவாங்கும் வெறி மட்டும் தானா அவனுக்கு இருந்தது?

அதைவிடக் கேவலம் அது கூட புரியாமல் அவனோடு குடும்பம் நடத்தியது. சிறு சிறு தேவைக்கும், அனுமதிக்கும் ஆசையாய் அவன் முகம் பார்த்து நிற்பேனே… அப்பொழுதெல்லாம் அவனுக்கு உள்ளுக்குள் எத்தனை கொண்டாட்டமாக இருந்திருக்கும்?

தன் இஷ்டம் போல ஆட ஒரு மடையச்சி கிடைத்து விட்டாள் என்று தானே நினத்திருப்பான்? இப்படியுமா ஒருத்தி ஏமாந்து போய் இருப்பாள் என எப்படி எல்லாம் எண்ணிச் சிரித்தானோ?

இந்த கண்ணீர் மட்டும் வற்றவே போவதில்லை போலும்! ம் என்றால் பெருகி பெருகி வரத் தொடங்கி விடுகிறது. ‘உனக்கொரு மகிழ்வான சூழலை ஏற்படுத்தித் தர எனக்கு முடியவே முடியாது போலடா தங்கம்… முடிந்தவரை இந்த கசடுகளை எல்லாம் நினைக்காமல் இருக்கிறேன்” உறங்கும் மகளை ஆறுதலாகத் தடவிப் பேசியபடியே நடந்தவளுக்கு, முயன்றவரை மன அமைதியோடும், நிம்மதியோடும் இருக்க வேண்டும் என்று அவளுக்கிருக்கும் எண்ணம், அவன் கண் எதிரில் நாம் இருக்கும்வரை நமக்கு கிடைக்காது என்று ஆணித்தரமாக நம்பினாள்.

இந்த யோசனைகளின் பயன் மறுநாளே மூட்டை, முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு, மீண்டும் அவன் கண்ணில் படாத தூரம் அந்த ஊரைவிட்டே புறப்படத் தயாராயிருந்தாள்.