மிகுந்த மனபோராட்டத்தின் பின்னரே யாழிசையின் நன்மையை முன்னிட்டு அபூர்வா வேறொருவரின் பண உதவியுடன் மகளுக்குச் சிகிச்சை செய்வதற்கு ஒப்புக் கொண்டாள். சிகிச்சை முடிந்து மகளின் குறை நிவர்த்தியானபிறகு அவள் அடைந்த ஆசுவாசம் அளப்பரியது.
இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கிளம்பலாம் என்ற நிலையில், செவிலியர் யாழிசைக்குச் சிகிச்சை செய்யப்பட்ட மேல் உதட்டின் மேல் கிரீமை பூசியபடி, “தினமும் ரெண்டு, மூணு தடவை பூசி விடுங்க மேடம். சீக்கிரமே ஆபரேஷன் செஞ்ச தடமும், தழும்பும் மறைஞ்சிடும்” என சொல்ல, மகளைப் பரிவாக நோக்கியபடி தலையசைத்தாள்.
அவளின் உடல் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்தாயிற்று என எண்ணியவளுக்கு நீண்டதாய் ஒரு பெருமூச்சு எழுந்தது. மகளின் மனதில் புதிதாகத் தந்தையை எண்ணி ஏக்கம் எழுந்திருக்கிறதே! அதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்ற இயலாமையும் வேதனையுமாகக் கண்ணில் கரைகட்டிய நீருடன் உறங்கும் மகளையே பார்த்தபடி அவள் நின்றிருந்த நேரம், யாரோ அவர்கள் இருந்த மருத்துவமனையின் அறைக்குள் நுழையும் அரவம் கேட்டு வாசல் நோக்கித் திரும்ப, அங்கே சக்திவரதன் நின்றிருந்தான்.
ஒளியற்ற முகம், ஜீவனைத் தொலைத்த விழிகள், ஒட்டிய கன்னங்கள், என்மேலேயே எனக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டும் விதமாக சரியாக வாரப்படாத தலை, ஒழுங்கற்ற தாடி, நன்கு இளைத்து வேறு இருந்தான். அவன் தோற்றத்தில் பெரும் மாற்றம். எதுவுமே அவள் கண்ணிலோ, கருத்திலோ படவில்லை.
கண்ணில் தேங்கி நின்றிருந்த கண்ணீர் அவனைக் கண்டதும் தன்னையுமறியாமல் சிந்திச் சிதற, இவனை ஏன் கண்ணில் காட்டினாய் கடவுளே என மனதிற்குள் துடித்தபடி, அவசரமாக அவனுக்கு எதிர்புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவனைக் காண்பது கூட பாவமாய் தோன்றியது அவளுக்கு.
சக்திவரதனின் நிலையோ இன்னமும் மோசம். மன்னிப்புடன் பேச்சைத் தொடங்குவதா… இல்லை பெரும் துன்பத்தில் தத்தளிக்கிறாள் எனத் தெரிந்திருந்தும் நலம் விசாரித்து பேச்சைத் தொடங்குவதா… என அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் அவன் விழிகளோ மகளையும் மனைவியையும் முழுதாக தழுவி, தன்னுள் நிரப்பிக்கொண்டு, குற்றவுணர்வில் தத்தளித்தது. அந்த ஒரு நாள் மட்டும் நான் என் நாவை அடக்கியிருந்தால், இவர்கள் இத்தனை வேதனை அடைந்திருக்க வேண்டியதில்லையே! நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன் என தன்னைத்தானே நொந்து கொண்டான்.
ஒன்று அபூர்வாவை ஏறெடுத்தும் பார்த்திருக்க கூடாது. அதுவும் இல்லையா அவளை மணந்த பிறகுத் தன் மனதின் கசப்புகளை எண்ணியும் பார்த்திருக்கக் கூடாது. இரண்டும் இல்லாமல் கடைசியில் சிரமப்படுத்தியது என் உயிரான உறவுகளை அல்லவா! ஒவ்வொரு நொடியும் அனலில் தத்தளிப்பது போலத் துடிப்பது தன் நெஞ்சம் அல்லவா!
எத்தனை நேரம் அப்படியே நின்றானோ தெரியவில்லை… செவிலிய பெண் கூட யாழிசையைப் பார்க்க வந்திருப்பவன் போல என எண்ணி அவனைக் கடந்து எப்போதோ சென்றிருந்தாள். மருத்துவர் ரௌண்ட்ஸ் வரும் நேரம் என்பதால், சுபாஷ் மருத்துவர் வாயிலில் நின்றிருந்தவனைப் பார்த்து, “ஹலோ சார் எப்ப வந்தீங்க?” என்று கேட்ட பின்பே, சக்தி தன் சிந்தனையிலிருந்து கலைந்தான்.
“ஜஸ்ட் நௌ சார்…” என முயன்று வரவழைத்த புன்னகையுடன் கூறியவன், அவர் உள்ளே நுழைய வழியையும் விட, இவன் எப்படி இங்கே வந்தான் என்ற யோசனையில் அவர் பார்க்க,
மெலிதாக தடுமாறியவன், “ரிஷப்ஷன்ல விசாரிச்சேன். ஜஸ்ட் இந்த குழந்தையை பார்க்கணும்ன்னு தோணிச்சு” என்றான் மெல்லிய குரலில்.
அவனது பதிலில் சமாதானமாகாத போதும், அவ்விடத்தில் நின்று மேற்கொண்டு எதையும் விசாரிக்கத் தோன்றாமல், “பார்த்துட்டீங்களா?” என இயல்பான குரலில் சிறு புன்னகையுடன் கேட்டார்.
“இப்பதான் உள்ளே போக தயங்கிட்டு நின்னுட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்றான் சமாளிக்கும் விதமாக.
அவனது சமாளிப்பை மருத்துவர் வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொண்டார். சிகிச்சைக்குப் பணம் தந்தவன், ஒருவேளை நம் மேல் முழு நம்பிக்கை இல்லாமல், பணம் உண்மையாகவே சிகிச்சைக்குத் தான் செலவாகிறதா என்று சரி பார்க்கவும் வந்திருக்கலாம் என நினைத்து அவனிடம் “சரி வாங்க குழந்தையை பாருங்க…” என்றபடி உள்ளே நுழைந்தார். ஏனென்றால் முழு நம்பிக்கை வந்தால் தானே மேற்கொண்டு இந்த மருத்துவமனைக்கு உதவி செய்யத் தோன்றும்போது தயக்கம் தோன்றாது!
உள்ளே நுழைந்த மருத்துவர், அபூர்வாவின் கலங்கிய விழிகளைப் பார்த்து, “இன்னும் இப்படி அழுதா எப்படிம்மா? இனி மகளை முழுசா குணப்படுத்தின திருப்தியோட சந்தோஷமா இருக்க வேண்டாமா? என்னடா யாரோ ஒருத்தங்க பணத்துல மகளுக்குச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சேன்னு கலங்கிட்டே இருக்காதீங்க. உங்களுக்கு முடியறப்ப நீங்க இல்லாதவங்களோட சிகிச்சைக்கு உதவிடுங்க. அதது உரிய காலத்தில் கிடைச்சா தான் மதிப்பு” என மென்மையாக எடுத்துச் சொல்லத் தலையசைத்துக் கொண்டாள்.
உள்ளே நுழைந்த சக்தி, ஓர் ஓரமாய் நின்றுகொண்டு பார்வையாளனாகப் பார்த்ததோடு சரி! மனதின் ரணத்தை, தவிப்பை இம்மிகூட முகத்தில் காட்டாமல் சாதித்திருந்தான். அபூர்வா அவன்புறம் திரும்பக் கூட இல்லை. மீண்டும் தன் துக்கத்தை, இவனால் அவள் வாழ்வையே தொலைத்த அவலத்தை, அவனைப் பார்த்து தனக்குள் கிளற விரும்பாமல் அவன் எப்பொழுது வெளியேறுவான் எனத் தவிப்போடு நின்றிருந்தாள்.
சக்திக்கும் அவளிடம் பேசும் எண்ணம் எழவில்லை. தொண்டையில் என்னவோ கனமாக அடைத்துக் கொண்டிருந்ததை போல உணர்ந்தான். அவளிடம் பேசிவிட முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறுத்து கொண்டேயிருந்தது. அவள் பார்வையை நேருக்கு நேர் சந்திக்கும் திராணியே இல்லாதபோது, எங்கிருந்து பேசுவது?
மருத்துவர் அந்த அறையிலிருக்கும் வரை அங்கேயே இருந்தவன், அவர் வெளியேறியபோது அவரோடே வெளியேறியும் இருந்தான். மருத்துவரிடம் மகளின் உடல்நிலையைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட பின்னுக்குப் போய்விட்டது.
தான் தங்கியிருந்த அறைக்கு வந்தபிறகும் உணவு, உறக்கம், தொழில் என்று எந்த நினைவும் இல்லாமல், மகளையும், மனைவியையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவனின் உள்ளம் பாரமாகக் கிடந்தது. தன்னை நேருக்கு நேராக பார்த்ததும், கலங்கி கண்ணீர் சிந்திய விழிகள் அவனை வெகுவாக இம்சித்தன. அவள் வாழ்வில் ஆலமரமாய் இருந்திருக்க வேண்டியவன் ஒரு கள்ளிச்செடியாய் இருந்திருக்கிறான். துக்கம் தொண்டையை அடைத்தது. தவறைத் திருத்திக்கொள்ள ஒரே ஒரு சந்தர்ப்பம் கிடைத்திடாதா என அவன் நெஞ்சம் ஏங்கித் தவித்தது.
சக்திவரதனை அன்றையதினம் பார்த்த அதிர்ச்சியைக் காட்டிலும், அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்குச் சற்று நேரம் முன்பு, மூத்த செவிலியர் ஒருவர் சக்திவரதன் தான் சிகிச்சைக்குப் பணம் செலுத்தினான் என்ற விவரத்தைப் பகிர்ந்த போதுதான் அபூர்வாவிற்குப் பலத்த அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ கனமான பாறை மேலே விழுந்த உணர்வில் மூச்சடைத்து நின்றாள்.
அவளுக்கு ஆறவே இல்லை. போயும் போயும் அவனது பணத்தில் அவளின் மகளது சிகிச்சை நடந்ததா? என்ன தைரியம்! எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்படி வந்து நிற்கிறான்? அப்படியுமா ரோசமற்று அவள் இருப்பாள் என்றா அவன் நினைக்கிறான்.
அவனைக் காணவே கூடாது என்றிருந்தவள், இந்த விஷயம் கேள்விப்பட்டதும் அவனை நொடியும் தாமதிக்காது அழைத்து விட்டாள். ஒரு பொது தொலைப்பேசியிலிருந்து அவனுடைய கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தவள், ஒரு கோயிலின் பெயரைச் சொல்லி, மறுநாள் காலை அங்கு வருமாறு சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தாள்.
அபூர்வா பேசிய பாவனையிலேயே அவளுக்கு உண்மை தெரிந்து விட்டது எனப் புரிந்து கொண்டவன், அவளை எப்படிச் சமாளிக்க என யோசித்த வண்ணம் அவள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தான்.